என் மலர்
நீங்கள் தேடியது "தீபாவளி"
- சனி, ஞாயிறு உட்பட 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொது விடுமுறை நாட்கள், மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
2026-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தொடர்பான அரசாணையை தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டார். அதில் சனி, ஞாயிறு உட்பட 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறை நாட்கள், மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விடுமுறை நாட்கள் வருமாறு:-
| எண் | விடுமுறை நாட்கள் | தேதி | கிழமை |
| 1 | ஆங்கில புத்தாண்டு | 1.1.2026 | வியாழன் |
| 2 | பொங்கல் | 15.1.2026 | வியாழன் |
| 3 | திருவள்ளுவர் தினம் | 16.1.2026 | வெள்ளி |
| 4 | உழவர் திருநாள் | 17.1.2026 | சனி |
| 5 | குடியரசு தினம் | 26.1.2026 | திங்கள் |
| 6 | தைப்பூசம் | 1.2.2026 | ஞாயிறு |
| 7 | தெலுங்கு வருட பிறப்பு | 19.3.2026 | வியாழன் |
| 8 | ரம்ஜான் | 21.3.2026 | சனி |
| 9 | மகாவீர் ஜெயந்தி | 31.3.2026 | செவ்வாய் |
| 10 | ஆண்டு வருட கணக்கு | 1.4.2026 | புதன் |
| 11 | புனித வெள்ளி | 3.4.2026 | வெள்ளி |
| 12 | தமிழ் புத்தாண்டு /அம்பேத்கர் பிறந்தநாள் | 14.4.2026 | செவ்வாய் |
| 13 | மே தினம் | 1.5.2026 | வெள்ளி |
| 14 | பக்ரீத் | 28.5.2026 | வியாழன் |
| 15 | முகரம் பண்டிகை | 26.6.2026 | வெள்ளி |
| 16 | சுதந்திர தினம் | 15.8.2026 | சனி |
| 17 | மிலாது நபி | 26.8.2026 | புதன் |
| 18 | கிருஷ்ண ஜெயந்தி | 4.9.2026 | வெள்ளி |
| 19 | விநாயகர் சதுர்த்தி | 14.9.2026 | திங்கள் |
| 20 | காந்தி ஜெயந்தி | 2.10.2026 | வெள்ளி |
| 21 | ஆயுத பூஜை | 19.10.2026 | திங்கள் |
| 22 | விஜய தசமி | 20.10.2026 | செவ்வாய் |
| 23 | தீபாவளி | 8.11.2026 | ஞாயிறு |
| 24 | கிறிஸ்துமஸ் | 25.12.2026 | வெள்ளி |
- பீகாரின் சிவன் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்றார்.
- ஊடுருவல்காரர் ஒருவர் கூட பீகாரில் அனுமதிக்கப்பட மாட்டார் என தெரிவித்தார்.
பாட்னா:
பீகாரில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசார வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் ரவுடியான சகாபுதீனின் மகனை ராஷ்ட்ரீய ஜனதா தளம் களமிறக்கி உள்ளது.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா நேற்று பீகாரின் சிவன் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அமித்ஷா பேசியதாவது:
சகாபுதீனின் மகன் படுதோல்வி அடைவதை இங்குள்ள மக்கள் உறுதிசெய்ய வேண்டும்.
லாலு பிரசாத் மற்றும் ரப்ரி தேவியின் காட்டாட்சியை மக்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்து உள்ளனர்.
பீகார் மக்கள் தேர்தல் முடிவு வெளியாகும் நவம்பர் 14-ம் தேதிதான் உண்மையான தீபாவளியை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.
ராஷ்டிரீய ஜனதா தளமும், அதன் கூட்டணி கட்சிகளும் அவமானகரமான தோல்வியைச் சந்திக்கும்.
ஊடுருவல்காரர்கள் இங்கேதான் இருக்கவேண்டும் என்கிறார் ராகுல் காந்தி.
ஆனால் ஊடுருவல்காரர் ஒருவர் கூட பீகாரில் அனுமதிக்கப்பட மாட்டார் என தெரிவித்தார்.
- மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் `மண்டாடி' என்ற படத்தில் சூரி நடித்து வருகிறார்.
- தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய வீடியோவை சூரி பகிர்ந்திருந்தார்
நடிகர் சூரி நடிப்பில் அண்மையில் வெளியான 'மாமன்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் `மண்டாடி' என்ற படத்தில் சூரி நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய வீடியோவை சூரி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், "எங்கள் ராஜாக்கூர் மண்ணின் மகிழ்ச்சியில், குடும்பத்தோடு தீபாவளி" என்று அவர் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவில் ஒருவர், "திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை" என்று கிண்டல் அடித்திருந்தார்.
அவருக்கு பதில் அளித்த சூரி, " திண்ணையில் இல்லை நண்பா. பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்…அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது.
நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்" என்று அவருக்கு அறிவுரை கூறியுள்ளார். சூரியின் இந்த பதில் இணையத்தில் வைரலாகியுள்ளது.
- பன்னீரை கடையில் வாங்காமல், வீட்டில் நாமே செய்தால் கலாகண்ட் நன்றாக வரும்.
- 1947-ல் பாபா தாக்கூர் தாஸ் என்பவரால் கலாகண்ட் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்!
தீபாவளிக்கு முறுக்கு, அதிரசம், குலாப் ஜாமூன், லட்டு என எண்ணெய் பலகாரங்கள் நிறைய செய்திருப்போம், சாப்பிடிருப்போம். ஆனால் பலரும் இந்தியாவின் பிரபலமான இந்த இனிப்பை மறந்திருப்போம். அப்படி தீபாவளிக்கு கலாகண்ட் செய்ய மறந்தவர்களுக்கான பதிவுதான் இது. சுவையான கலாகண்ட் செய்வது எப்படி என பார்ப்போம். கலாகண்ட் செய்வதற்கு பால், பன்னீர், நெய், சர்க்கரை, ஏலக்காய் உள்ளிட்டவை அவசியம். இதில் பன்னீரை கடையில் வாங்கமல், வீட்டில் இருக்கும் பாலை வைத்து நாமே செய்தால் கலாகண்ட் நன்றாக வரும்.
தேவையான பொருட்கள்...
பால் - 1 லிட்டர்
நெய் - 1/2 கப்
சர்க்கரை - 1 கப்
குங்குமப்பூ - (வேண்டுமென்றால்)
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
பிஸ்தா - (வேண்டுமென்றால்)
பாதாம் - (வேண்டுமென்றால்)
எலுமிச்சை பழச்சாறு - 1 பழம்

ருசிக்க தயாராக கலாகண்ட் இனிப்பு
செய்முறை
முதலில் பன்னீர் செய்வது எப்படி என பார்ப்போம். பன்னீர் செய்வதற்கு 500மிலி பால் எடுத்துக்கொள்வோம். பாலை நன்கு காய்ச்சவேண்டும். பால் நன்கு கொதித்தபின்பு, அதில் ஒரு எலுமிச்சைப்பழத்தை பிழிந்து விடவேண்டும். பால் முழுவதுமாக திரிந்து வரும்வரையில் அடுப்பை நிறுத்தவேண்டாம். பின்னர் தண்ணீர் தனியாக பிரிந்த உடன், அதனை எடுத்து வடிகட்டி கொள்ளலாம். பின்னர் பன்னீர் மீது தண்ணீர் ஊற்றவேண்டும். அப்போதுதான் பன்னீரில் எலுமிச்சைப் பழத்தின் புளிப்பு தெரியாது.
பின்னர் ஒரு லிட்டர் பால் எடுத்துக்கொண்டு, அதனை நன்கு கொதிக்கவிடவேண்டும். கொதிக்கும்போது கிண்டிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் பாத்திரத்தில் அடிபிடிக்காது. பால் நன்கு வற்றி, க்ரீம் பதத்திற்கு வரும்வரை கிண்டவேண்டும். இந்தப்பதம் வரும்போதே பாலில், செய்துவைத்த பன்னீரை எடுத்துக்கொட்டி கிண்டுங்கள். தொடர்ந்து கிண்டியபிறகு பாலில் உள்ள ஈரம் வற்றியபிறகு, அதில் அரை கப் நெய் ஊற்றவேண்டும். நெய் ஊற்றி 5 நிமிடம் நன்றாக கிண்டியபின், 1 கப் வெள்ளை சர்க்கரையை சேர்க்கவேண்டும். இனிப்பு கூடுதலாக வேண்டுமென்றால், கூடுதல் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.
கடைசியில் ஏலக்காய்தூள் போட்டு கிண்டவேண்டும். பின்னர் கலாகண்ட் நன்கு கெட்டி பதத்திற்கு வந்தபின் இறக்கிக்கொள்ளலாம். நன்கு நிறம்வேண்டும் என்பவர்கள் கூடுதல் நேரம்வைத்து கிண்டலாம். பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய்தடவி, கலாகண்ட் கலவை சூடாக இருக்கும்போதே அதனை கொட்டி அழுத்திவிடவேண்டும். வேண்டுமானால் அதன்மேல் முந்திரி, பாதாம், என உங்களுக்கு பிடித்த பருப்பு வகைகளை சேர்த்துக்கொள்ளலாம். ஒரு இரண்டுமணிநேரம் கழித்து கலாகண்ட் கலவையை எடுத்துப்பார்த்தால் நன்கு ஆறி, கெட்டியாக இருக்கும். அருமையான கலாகண்ட் இனிப்பு தயார்.
- புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த வாரம் பெருமளவில் குறைந்தது.
- பிரீமியம் மதுபானங்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்ததால் அதை வாங்க யாரும் முன் வரவில்லை.
புதுச்சேரி:
புதுவையில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனை அதிகளவில் நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டைவிட தீபாவளி மது விற்பனை அதிகரித்து வந்துள்ளது. இந்த ஆண்டு வார விடுமுறையையொட்டி தீபாவளி பண்டிகை வந்தது. இதனால் மது விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடந்த ஆண்டைவிட மது விற்பனை 5 முதல் 10 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதற்கு கடந்த 3 மாதம் முன்பு அரசின் வருவாயை உயர்த்த மதுபானங்களின் வரியை உயர்த்தியதே காரணம் என தெரிய வந்துள்ளது.
அதோடு வழக்கமாக தீபாவளியை கொண்டாட புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த வாரம் பெருமளவில் குறைந்தது. இதற்கு கனமழை எச்சரிக்கையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.
வழக்கமாக சுற்றுப்புறங்களான தமிழக மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் புதுவைக்கு வந்து மதுபானங்களை வாங்கி செல்வார்கள். ஆனால் பிரீமியம் மதுபானங்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்ததால் அதை வாங்க யாரும் முன் வரவில்லை. அதேநேரத்தில் குறைந்த விலையில் உள்ள உள்ளூர் மதுபானங்கள் அதிகளவில் விற்பனையாகி உள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் மட்டுமே மதுபான விற்பனை நடக்கிறது. இதனால் மாவட்ட வாரியாகவும், ஒட்டுமொத்தமாகவும் எத்தனை கோடிக்கு மதுபானம் விற்பனையானது என உடனடியாக தெரிந்து விடும். ஆனால் புதுவையில் தனியார் மொத்த மதுபான விற்பனை நிலையம், சில்லரை விற்பனை நிலையம், சுற்றுலா மதுபான விடுதிகள், ரெஸ்டோ பார்கள் என பல விதமாக விற்பனை நடப்பதால் ஒட்டுமொத்த விற்பனை தொகையை கண்டறிய முடியவில்லை.
இருப்பினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மதுவிற்பனை வெகுவாக குறைந்துள்ளது என மதுபான விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- மாருதி சுசுகி நிறுவனம் பண்டிகை காலத்தில் 4,50,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது.
- டாடா மோட்டர்ஸ் ஒரு லட்சம் வாகனங்களை டெலிவரி செய்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 33 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 22ஆம் தேதி அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் காரணமாக இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் பண்டிகை காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விற்பனையை பதிவு செய்துள்ளனர்.
நவராத்திரி முதல் தீபாவளி வரையிலான பண்டிகை காலத்தில் பயணிகள்-வாகன தயாரிப்பாளர்கள் 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை விற்பனை வளர்ச்சியைக் கண்டுள்ளனர்.
மாருதி சுசுகி நிறுவனம் பண்டிகை காலத்தில் 4,50,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது. மேலும் சில்லறை விற்பனை 3,25,000 யூனிட்களை தொட்டுள்ளது. டாடா மோட்டர்ஸ் ஒரு லட்சம் வாகனங்களை டெலிவரி செய்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 33 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் சில்லறை விற்பனை வருடாந்திர அடிப்படையில் (YoY) 30 சதவீதம் உயர்ந்து, ஒரு நாளைக்கு சராசரியாக 2,500 கார்களை விற்பனை செய்துள்ளது.
செப்டம்பர் 22 ஆம் தேதி அமலான ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்குப் பிறகு விற்பனை அதிகரிக்கத் தொடங்கியதால், கடந்த 50 நாட்களில் இந்த துறை சராசரி விற்பனையைக் கண்டுள்ளதாக ஆட்டோமோடிவ் திறன் மேம்பாட்டு கவுன்சில் தலைவரும், முன்னாள் ஃபாடா தலைவருமான வின்கேஷ் குலாட்டி தெரிவித்தார்.
- உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை அந்தந்த நாடுகளில் கொண்டாடினர்.
- கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி பண்டிகைக்கு இந்தாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது.
கடந்த 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலகமாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் புத்தாடை அணிந்து கோயில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுவரும் மக்கள், பட்டாசுகளை வெடித்து பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை அந்தந்த நாடுகளில் கொண்டாடினர்.
இந்தியர்கள் அதிகளவில் வாழும் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி பண்டிகைக்கு இந்தாண்டு அதிகாரபூர்வ விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடினார். இது தொடர்பான வீடியோவை வெள்ளை மாளிகை பகிர்ந்துள்ளது.
தீபாவளி விழாவில் FBI இயக்குநர் காஷ் படேல், தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், வெள்ளை மாளிகை துணை பத்திரிகை செயலாளர் குஷ் தேசாய், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாட்ரா மற்றும் டெல்லிக்கான வாஷிங்டன் தூதர் செர்ஜியோ கோர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கடந்த ஆண்டு தீபாவளியின் போது ரூ.438 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.
- தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 18-ந் தேதி ரூ.230 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி அக்டோபர் 18-ந் தேதி ரூ.230 கோடி, 19-ந் தேதி ரூ.293 கோடி, 20-ந் தேதி ரூ.266 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் சென்னை ரூ.158 கோடி, திருச்சி ரூ. 157 கோடி, சேலம் ரூ,153 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளியின் போது ரூ.438 கோடியாக இருந்த மது விற்பனை இந்த ஆண்டு ரூ.790 கோடியாக அதிகரித்துள்ளது.
- தண்டையார்பேட்டை மண்டலத்தில் 17 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்.
- ஆலந்தூரில் 13 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாளில் மழை இல்லாததால் பட்டாசு விற்பனை அமோகமாக நடந்தது.
சென்னை தீவுத்திடலில் குடும்பம் குடும்பமாக சென்று பட்டாசு வாங்கி சென்றனர். அவ்வப்போது மழை சிறிது நேரம் பெய்தாலும் உடனே நின்றதால் தீபாவளி பட்டாசு விற்பனை களை கட்டியது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் கடைசி நேரத்தில் பட்டாசு விற்பனை சூடு பிடித்தது.
கடந்த 3 நாட்களில் சென்னையில் பட்டாசு வெடித்ததன் மூலம் 151 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. 15 மண்டலங்களிலும் தூய்மை பணியாளர்கள் பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 17 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. ஆலந்தூரில் 13 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. கோடம்பாக்கம் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் தலா 12 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- எங்கள் வீடுகளில் உள்ள சிறுவர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.
திருப்பூர்:
திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள நஞ்சராயன் குளத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ளது நஞ்சராயன் நகர் பகுதி. நஞ்சராயன் குளத்தை ஒட்டி அமைந்துள்ள சாலை வழியாக இந்தப் பகுதிக்கு செல்லும் பாதை உள்ளது. இந்த குடியிருப்பு பகுதி நூற்றுக்கணக்கான மனையிடங்களுடன் கடந்த 30 ஆண்டுக்கு முன்பே அமைக்கப்பட்டது.
4 பிரதான வீதிகளும் 12 குறுக்கு வீதிகளிலும் வீடுகள் அமைந்துள்ளன. இதன் அருகே அமைந்துள்ள நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பறவைகள் இங்கு வலசை வருகின்றன. வலசை வரும் பறவைகள் பட்டாசு, வெடிகள் ஏற்படுத்தும் அதிக ஒலியால் அச்சமுறும். அதன் இயல்பு பாதிக்கப்படும் என்பதால், இங்கு வசிக்கும் மக்கள் தீபாவளியின்போது பட்டாசுகளை முற்றிலும் தவிர்த்து விடுகின்றனர்.
இந்த ஆண்டும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
பறவைகள் நலன் கருதி பட்டாசு வெடிப்பதில்லை. எங்கள் வீடுகளில் உள்ள சிறுவர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களும் இதை ஏற்றுக்கொண்டனர். பறவைகளுக்காக எங்கள் சிறுவர்கள் இதை தியாகம் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே உள்ள மோதல் போக்கு நீடித்து வருகிறது.
- முதலமைச்சர் டெல்லிக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்தால் மட்டுமே புதுச்சேரிக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்து வாக்காளர்களை கவர முடியும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு அரசு துறைகளில் நடவடிக்கை எடுக்க அதிகாரங்கள் இருந்தாலும், உச்சபட்ச அதிகாரம் கவர்னருக்கே உள்ளது.
அதனால்தான் புதுச்சேரியில் ஒவ்வொரு முறையும் ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர்கள் மாநில அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை விடுப்பதும் அதனை மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் தொடர்கதையாக உள்ளது.
தற்போது என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே நிர்வாக ரீதியாக உரசல்கள் நீடித்து வருகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பட்டாசு மற்றும் இனிப்புகள் வழங்கும் கோப்புக்கு கவர்னர் அனுமதி அளிக்கவில்லை. அதேபோல் மத்திய அரசும் தீபாவளி இனிப்பு மற்றும் பட்டாசுகளை எம்.எல்.ஏ.க்கள் தங்களது சொந்த செலவிலேயே வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.
இதற்கிடையே கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் கோப்புக்கும் கவர்னர் கைலாஷ்நாதன் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே உள்ள மோதல் போக்கு நீடித்து வருகிறது.
என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணியின் தலைவராக உள்ள முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டம் உள்ளிட்ட எந்த கூட்டங்களிலும் பங்கேற்காததும், பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்திக்காததே கவர்னரின் ஒத்துழையாமைக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
முதலமைச்சர் ரங்கசாமி அவ்வப்போது டெல்லி சென்று பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்தித்தாலே கவர்னரின் நிலைப்பாடு தலைகீழாக மாறியிருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றால் முதலமைச்சர் டெல்லிக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்தால் மட்டுமே புதுச்சேரிக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்து வாக்காளர்களை கவர முடியும் என பா.ஜ.க.வினர் கூறுகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி தீபாவளி பண்டிகையையொட்டி கவர்னர் கைலாஷ்நாதனை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இது மரியாதை நிமித்தமானது என்றாலும் இருவருக்கும் உள்ள மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
- தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித சேவைகள் நடைபெறவில்லை.
- திருப்பதி கோவிலில் நேற்று 72,026 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று தீபாவளி ஆஸ்தானம் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. ஏழுமலையான் சர்வ பூபால வாகனத்தில் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்தார். ஏழுமலையானின் படைத்தளபதி விஸ்வக்சேனர் மற்றொரு பல்லக்கில் பவனி வந்தார்.
அர்ச்சகர்கள் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். மாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையானுக்கு சகஸ்ர தீப அலங்கார சேவை நடந்தது.
தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித சேவைகள் நடைபெறவில்லை. தோமாலா அர்ச்சனை சேவை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் காஞ்சி காமகோடி விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் கலந்துகொண்டு பின்னர் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அனைத்து காத்திருப்பு அறைகள் நிரம்பியது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு காத்திருந்தனர்.
திருப்பதியில் விட்டு விட்டு மழை பெய்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோவிலில் நேற்று 72,026 பேர் தரிசனம் செய்தனர். 23,304 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.3. 86 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். கிருஷ்ண தேஜா விருந்தினர் மாளிகை வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.






