என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ஏமாற்றியதைப் போல தேனி மக்களையும் ஏமாற்ற பிரசாரம் செய்து வருகிறார்.
- அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்து வருவதை பற்றி பேச மோடிக்கு மனமில்லை.
மேலசொக்கநாதபுரம்:
தேனி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இன்று போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் அப்பகுதி மக்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுத்து தான் வெற்றி பெற்றவுடன் பெரியதொகை தருவதாக ஏமாற்றிச் சென்றவர்தான் இங்கு போட்டியிடும் டி.டி.வி. தினகரன்.
ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ஏமாற்றியதைப் போல தேனி மக்களையும் ஏமாற்ற பிரசாரம் செய்து வருகிறார். அவரை வாக்காளர்கள் நம்ப மாட்டார்கள். மத்தியில் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டபோதும் சரி தொழிலாளர்கள், பள்ளி மாணவர்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்ட போதும் மத்திய அரசுக்கு துணையாக இருந்தது அ.தி.மு.க. அரசு. தற்போது கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக நாடகமாடி வருகின்றனர்.
இவர்கள் கபட கூட்டணியை மக்கள் நம்ப மாட்டார்கள். திருவிழாவில் புகுந்து கொள்ளும் திருடன் தான் நகையை திருடி விட்டு திருடன் ஓடுகிறான்... திருடன் ஓடுகிறான்... என்று சத்தம் போடுவான். பொதுமக்கள் அவனை பிடிக்க செல்லும் போது இந்த திருடன் தப்பித்து ஓடி விடுவான். அதே போல்தான் மத்திய மந்திரிகள் இன்று தேர்தலுக்காக வாகன பேரணி, பிரசாரம் போன்றவற்றை செய்து வருகின்றனர்.
இந்தியாவில் வேலையின்மை, பொருளாதார சீர்கேடுகள், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக கச்சத்தீவு பிரச்சினையை மோடி கையில் எடுத்து வருகிறார். அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்து வருவதை பற்றி பேச மோடிக்கு மனமில்லை. இது போன்ற ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியா அழிவுப்பாதையில் செல்லும். எனவே மக்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படும் என்ற நம்பிக்கை இல்லை.
- நெல்லை தொகுதிக்கு ராகுல் காந்தி வருவதை தேர்தல் திருவிழாவாக பார்க்கிறோம்.
நெல்லை:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., இன்று மாலை பாளையங்கோட்டையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதையொட்டி காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை தரிசித்து வந்துள்ளேன். முருகப்பெருமான் எப்படி பாசிச சக்திகளை சூரசம்காரம் செய்தாரோ அதேபோல் சூரசம்காரம் செய்ய வேண்டி தரிசனம் செய்து முடித்துள்ளோம்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., இன்று மாலை 4 மணி முதல் 4.50 மணி வரை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் அங்கிருந்து கோவை செல்கிறார். அங்கே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் சேர்ந்து பிரசாரத்தில் பங்கேற்க உள்ளார்.
இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணியின் வெற்றி எழுச்சி மிக்க ஒன்றாக அமைந்துள்ளது. தினந்தோறும் 25, 50 என வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர் நாளுக்கு நாள் இறங்கி கொண்டே போகிறது என்று மாம்பழத்தை ஒப்பிட்டு பேசியுள்ளார். இந்த பேச்சு எங்களுக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது. மோடியின் ஆட்சியில் அதிகாரிகளாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்களே அவருக்கு எதிராக பேசி வருகிறார்கள்.
தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படும் என்ற நம்பிக்கை இல்லை. ரூ.4 கோடி பிடிபட்ட பிறகும் ஒரு வாரம் கடந்த நிலையிலும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை அதிகாரிகள் கும்பகர்ணன் போல் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் வேட்பாளரிடம் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை. மக்கள், தொண்டர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து தான் பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு சொந்தமாக வண்டி கூட இல்லை.
ரஜினிகாந்த் கர்நாட காவில் பிறந்து தமிழகத்தில் வந்து நடித்து வருகிறார். பக்கத்து மாவட்டத்தில் இருந்து வந்து போட்டியிடுபவரை இறக்குமதி வேட்பாளர்கள் என்கிறீர்கள். அவர் இறக்குமதி வேட்பாளர் இல்லை. அவர் தென் இந்தியா முழுவதும் மிகவும் பரிச்சயமான வேட்பாளர்.
அவர் ஒரு மத போதகர். இந்தியா முழுவதும் உள்ள மக்களின் நன்மைக்காக பிரார்த்தனை செய்பவர். ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்துக்குமான தேர்தல் இப்போது நடக்கிறது.
நெல்லை தொகுதிக்கு ராகுல் காந்தி வருவதை தேர்தல் திருவிழாவாக பார்க்கிறோம். அவரது வருகை மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாடு முழுவதும், 27 லட்சம் கோடி ரூபாய், 44 கோடி மக்களுக்கு சென்றடைந்தது.
- நிறைய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட நிறைய மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளர் நரசிம்மன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வருகை தந்தார்.
அப்போது அவர் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கொளுத்தும் வெயில் என்று பாராமலும், வேலை நாட்களிலும் இந்த பிரசார கூட்டத்திற்கு மக்கள் திரண்டுள்ளனர். இதனை கண்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்கு இரண்டு, மூன்று கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறனே். மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற கோஷம் ஒலித்து வருகின்றன.
எதிர்கட்சியாக காங்கிரஸ் கட்சியினர், தி.மு.க.வினர் பாராளுமன்றத்தில் கிருஷ்ணகிரியை பற்றியோ, ஓசூரை பற்றியோ என்ன கேள்விகளை எழுப்பினர்கள் என்று பெரிய கேள்விகுறியாக உள்ளது.
நிறைய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட நிறைய மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. இதில் பி.எம். முத்ரா யோஜன திட்டத்தின் மூலம் ஏழை எளியோருக்கு சிறு,குறு தொழில்கள் தொடங்க வங்கி மூலம், எந்த ஒரு ஆவணமின்றி குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், 27 லட்சம் கோடி ரூபாய், 44 கோடி மக்களுக்கு சென்றடைந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் 5 ஆயிரம் 427 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 6.34 லட்சம் பேருக்கு கடன் கிடைத்துள்ளது. அதேபோன்று ஸ்டார் அப்திட்டம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 465 பேருக்கு ரூ.60 கோடி கிடைத்துள்ளது. இதில் குறிப்பாக பெண்கள், எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவினரும் பயன் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் 2.75 லட்சம் பேரின் வீட்டிற்கு குழாய் மூலம் நேரடியாக குடிநீர் மூலம் விநியோக செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் நேரிடையாக வழங்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறத்தில் 18,600 பேருக்கு பிரதமர் மோடி வீடு கட்டி கொடுத்துள்ளார். அதேபோல் மாவட்டத்தில் நகர்ப்புறத்தில் 7460 பேருக்கு பிரதமர் மோடியின் பெயரில் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு மூலம் ஒரு ரூபாய் செலவில்லாமல், எந்தவொரு ஆவணம் காட்டாமல் கேஷ் லெஸ் என்ற முறையில் இலவச சிகிச்சை அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 64 ஆயிரம் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2.35 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் தொழில் வளர்ச்சி அடைந்து உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் துறையில் தி.மு.க.வினர் வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். போதை பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் முதலமைச்சர் குடும்பத்துடன் தொடர்பில் இருந்துள்ளார்.
முன்னதாக அவர் டெல்லியில் இருந்து பெங்களூரு விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் மூலம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் ஓசூரில் உள்ள பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் பா.ஜ.க., பா.ம.க., மற்றும் கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை முடித்துவிட்டு அவர் காரில் அங்கிருந்து புறப்பட்டு பெங்களூருவுக்கு சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூருக்கு புறப்பட்டார்.
- சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய மந்திரி அமித்ஷா தரிசனம் செய்ய இருப்பதாக முதலில் கூறப்பட்டது.
மதுரை:
மதுரை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று மாலை மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை அடுத்த நேதாஜி சாலையில் தொடங்கி தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்குத் தூண் பகுதி வரை ரோடு-ஷோ மூலமாக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில் உள்துறை அமைச்சரின் வருகையை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதி முழுவதும் காவல்து றையினர் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக மதுரை நேதாஜி சாலை, தெற்கு ஆவணி மூல வீதி, விளக்குத் தூண் பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள், வணிகர்கள் நடந்து சென்று வருகின்றனர்.
ரோடு-ஷோ நடைபெறும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே நிற்கக்கூடிய வாகனங்களில் வெடி குண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உயரமான கட்டிடங்களில் நின்றபடி காவல்துறையினர் முழுவதுமாக கண்காணித்து வருகின்றனர்.
உள்துறை மந்திரி அமித் ஷா மதுரையில் இரண்டு முறை பிரசாரத்திற்கு திட்டமிட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் திட்டம் உறுதி செய்யப்பட்டு மாலை 6 மணி முதல் 7 மணி வரையும் ரோடு-ஷோ நடைபெறவுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக மாலை 3 மணி முதல் வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கும் அந்த பகுதியில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதைடுத்து இன்று மாலை சுவாமி வீதி உலா வரவுள்ள நிலையில் பக்தர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய மந்திரி அமித்ஷா தரிசனம் செய்ய இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் இன்று மாலை சுவாமி வீதியுலா வருவதால் அவர் கோவிலுக்கு செல்வதில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு தற்போது அமித்ஷா சுவாமி தரிசனம் செய்வது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
- வாக்குப் பதிவிலும் ஆண்களை விட அதிகளவில் பெண்கள் ஆர்வமாக பங்கேற்பார்கள்.
- தேர்தல் முடிந்தவுடன் ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படும் என ரங்கசாமி வாக்குறுதி அளித்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் பெண் வாக்காளர்கள்தான் அதிகம் உள்ளனர்.
புதுவை தேர்தல் துறையின் இறுதி வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 20 ஆயிரத்து 914 வாக்காளர்கள் மாநிலம் முழுவதும் இடம் பெற்றுள்ளனர். இதில் மாநிலத்தின் 4 பிராந்தியங்களிலும் பெண் வாக்காளர்கள்தான் அதிகளவில் உள்ளனர்.
புதுவை பிராந்தியத்தில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 28 ஆண்வாக்காளர்களும், 4 லட்சத்து 15 ஆயிரத்து 183 பெண் வாக்காளர்களும் உள்ளனர். காரைக்கால் பிராந்தியத்தில் 76 ஆயிரத்து 932 ஆண் வாக்காளர்களும், 89 ஆயிரத்து 258 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.
மாகியில் 14 ஆயிரத்து 357 ஆண், 16 ஆயிரத்து 653 பெண், ஏனாமில் 19 ஆயிரத்து 12 ஆண், 20 ஆயிரத்து 343 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மொத்தத்தில் புதுவை மாநிலம் முழுவதும் 4லட்சத்து 79 ஆயிரத்து 329 ஆண், 5 லட்சத்து 41 ஆயிரத்து 431 பெண் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அதோடு வாக்குப் பதிவிலும் ஆண்களை விட அதிகளவில் பெண்கள் ஆர்வமாக பங்கேற்பார்கள். இதனால் பெண் வாக்காளர்களை கவர, புதுவை அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.
பா.ஜனதாவினரும், காங்கிரசாரும் பெண்களை அதிகளவில் பிரசாரத்திற்கு அழைத்து செல்கின்றனர். பெண்களும் ஆர்வமாக பிரசாரத்திற்கு சென்று வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமியிடம், பெண் வாக்காளர்கள், பணத்துக்கு பதிலாக மீண்டும் இலவச அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தேர்தல் முடிந்தவுடன் ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படும் என ரங்கசாமி வாக்குறுதி அளித்தார்.
அதோடு புதுவை அரசு 64 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000-ம் உதவித்தொகை வழங்கி வருவதாகவும், விடுபட்ட 10 ஆயிரம் பெண்கள் கண்டறியப்பட்டு விரைவில் உதவித்தொகை வழங்கப்படும்.என்றும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை, கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் என பெண்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை பட்டியலிட்டு பேசுகிறார்.
இன்னும் 2 ஆண்டுகள் அரசு தொடரும் என்பதால், மேலும் பல பெண்களுக்கான திட்டங்களை அறிவிக்க உள்ளோம். முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படும் என கூறி வருகிறார்.
காங்கிரஸ் தரப்பில் சிறுமி பாலியல் படுகொலை சம்பவத்தை நினைவுபடுத்தி, பெண்களுக்கு புதுவையில் பாதுகாப்பு இல்லை என்று பிரசாரம் செய்கின்றனர். மேலும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம், பெண்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளதை எடுத்துகூறி பிரசாரம் செய்கின்றனர்.
அதோடு, பெண்கள் வீட்டு வேலை, குடும்ப பணி செய்தாலும் மதிப்பு, மரியாதை இல்லை. இதனால்தான் ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம் கொடுக்கப்படும் என ராகுல்காந்தி அறிவித்துள்ளார். அவர் சொன்னதை செய்வார் என குறிப்பிடுகின்றனர். இதன்மூலம் பெண் வாக்காளர்களை கவர 2 கூட்டணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
- தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- தபால் வாக்களிக்க ஏதுவாக வருகிற 15-ந் தேதி சீலிடப்பட்ட தபால் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட உள்ளது.
ஈரோடு:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார், ஆயுதப்படை போலீசார் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியை ஆசிரியர்களுக்கு கடந்த 7-ந் தேதி நடந்த 2-ம் கட்ட பயிற்சியின் போது தபால் வாக்குப்பதிவு நடந்தது. இதில் அவர்கள் தங்களது வாக்கினை தபால் மூலமாக ஓட்டு பெட்டியில் போட்டனர்.
இதனைத்தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடும் சீருடை பணியாளர்களான ஈரோடு மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை போலீசாருக்கு வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) தபால் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,
பாராளுமன்ற தேர்தலில் ஈடுபடும் 2,050 போலீசாருக்கு ஏற்கனவே தபால் வாக்களிக்கும் படிவம் வழங்கப்பட்டு அவர்கள் தொகுதிக்கான வேட்பாளரின் பெயர், சின்னங்கள் அடங்கிய பேலட் பேப்பரும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதில் போலீசார்களுக்கான தபால் வாக்களிக்க ஏதுவாக வருகிற 15-ந் தேதி சீலிடப்பட்ட தபால் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட உள்ளது. அதில் மாவட்டத்தில் உள்ள போலீசார் தங்களது தபால் வாக்கினை செலுத்த உள்ளனர். தபால் வாக்களிக்க ஈரோட்டில் வேளாளர் கல்லூரி, கோபியில் ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உறுதி செய்தால் முறைப்படி அனைத்து போலீசாருக்கும் தகவல் அளிக்கப்படும். இது தவிர பிற தொகுதிகளில் வாக்குரிமை உடைய போலீஸ் அதிகாரிகள் நேரடியாக தபால் மூலமாக தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வேட்பாளர்களின் பொருளாதார பின்னணியை பொறுத்தவரை 945 பேரில், 202 பேர் அதாவது 21 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.
- காங்கிரஸ் சார்பில் 78 சதவீதம் குற்ற வழக்குகள், 22 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையே 4 முனைப் போட்டி நிலவுகிறது.
இவர்களுடன் கணிசமான அளவுக்கு வழக்கம் போல சுயேட்சை வேட்பாளர்களும் உள்ளனர். இந்த வேட்பாளர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என்பதை அவ்வளவு எளிதில் வாக்காளர்களால் கண்டுபிடித்து விட முடியாது.
அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஜனநாயக சீர்திருத்தக் கழகம் தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களை மிக நுட்பமாக ஆய்வு செய்துள்ளது. மொத்தம் களத்தில் உள்ள 950 வேட்பாளர்களில் 945 வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதில், 135 வேட்பாளர்கள் அதாவது 15 சதவீதம் பேர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களாக உள்ளனர். இவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதை அந்த வேட்பாளர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர். தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் இருப்பதை அவர்கள் வேட்பு மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்த 15 சதவீத குற்றவாளிகளில் 81 பேர் மிக கடுமையான குற்றவாளிகள். அதாவது இவர்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. இது மொத்த வேட்பாளர்களில் 8 சதவீதம் ஆகும்.
இந்த கடுமையான குற்றவாளிகள் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள். கட்சி வாரியாக குற்றவாளி வேட்பாளர்களை ஆய்வு செய்த போது பல ருசிகர தகவல்கள் கிடைத்தன.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சியில் 28 சதவீதம் குற்ற வழக்குகள், 15 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்டவர்களும், அ.தி.மு.க. சார்பில் 35 சதவீதம் குற்ற வழக்குகள், 18 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்டவர்களும் களத்தில் உள்ளனர்.
பா.ஜ.க. சார்பில் 70 சதவீதம் குற்ற வழக்குகள், 39 சதவீதம் கடும் குற்ற வழக்குகள், தி.மு.க. சார்பில் 59 சதவீதம் குற்ற வழக்குகள், 27 சதவீதம் கடும் குற்ற வழக்குகள், பா.ம.க. சார்பில் 60 சதவீதம் குற்ற வழக்குகள், 40 சதவீதம் கடும் குற்ற வழக்குகள், காங்கிரஸ் சார்பில் 78 சதவீதம் குற்ற வழக்குகள், 22 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்களின் பொருளாதார பின்னணியை பொறுத்தவரை 945 பேரில், 202 பேர் அதாவது 21 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.
அ.தி.மு.க.வின் 34 வேட்பாளர்களில் 33 பேரும், பா.ஜ.க.வின் 23 வேட்பாளர்களில் 22 பேரும், தி.மு.க.வின் 22 வேட்பாளர்களில் 21 பேரும், நாம் தமிழர் கட்சியின் 39 வேட்பாளர்களில் 15 பேரும், காங்கிரஸ் கட்சியின் 9 பேரில் 8 பேரும், தே.மு.தி.க.வின் 5 பேரில் 3 பேரும், சுயேச்சைகள் 606 பேரில் 62 பேரும் கோடீஸ்வரர்கள்.
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். இவர்களில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அசோக்குமார் ரூ.662.47 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
சிவகங்கை தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் ரூ.304.92 கோடி சொத்துக்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். வேலூர் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் ரூ.152.77 கோடி சொத்துக்களுடன் 3-வது இடத்தில் இருக்கிறார்.
சுயேட்சை வேட்பாளர்கள் 606 பேரில் 62 பேர் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். வடசென்னை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் ரூ.13.15 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
சுயேட்சைகளில் 10 வேட்பாளர்கள் தங்களிடம் ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகவே சொத்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள். 8 சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுக்கு எந்த சொத்தும் இல்லை என்று மனுவில் தெரிவித்துள்ளனர். குறைவான சொத்து உள்ளதாக 3 சுயேச்சைகள் தெரிவித்து உள்ளனர்.
42 சதவீத வேட்பாளர்கள் 5 முதல்12-ம் வகுப்பு வரை படித்தவர்களாகவும், 48 சதவீதம் பட்டதாரிகளாகவும் உள்ளனர். மேலும், 25 முதல் 40 வயதுக்குட்பட்ட வேட்பாளர்கள் 325 பேர், அதா வது 34 சதவீதமும், 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 487 பேர், அதாவது 52 சதவீதமும் உள்ளனர். 130 பேர் 61 முதல் 80 வயதுக்குள் உள்ளனர். 945 வேட்பாளர்களில் 8 சதவீதம் அதாவது 77 பேர் பெண் வேட்பாளர்கள்.
- ஆரணி, திருவண்ணாமலையில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி இரவு சேலம் வந்தார்.
- பரமத்திவேலூர் ரோடு புறநகர் போலீஸ் நிலையம் எதிரில் திறந்த வேனில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
சேலம்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
ஆரணி, திருவண்ணாமலையில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி இரவு சேலம் வந்தார். பின்னர் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் தங்கினார். தொடர்ந்து இன்று மாலை நாமக்கல் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து திருச்செங்கோட்டில் பரமத்திவேலூர் ரோடு புறநகர் போலீஸ் நிலையம் எதிரில் திறந்த வேனில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
தொடர்ந்து இரவு 7 மணியளவில் சேலம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசை ஆதரித்து கோட்டை மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி திருச்செங்கோடு மற்றும் சேலம் கோட்டை பகுதியில் அ.தி.மு.க.கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளது.
- வழக்கமாக மது வாங்க வரும் மது பிரியர்கள் கடை அடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
- கடந்த தேர்தலின் போது மதுக்கடைகள் தனியார் வசம் இருந்தது.
திருப்பதி:
ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் தொண்டர்களுக்கு மது பாட்டில்கள் வழங்கி வருகின்றனர்.
தொண்டர்கள் மது பாட்டில் வழங்கினால் மட்டுமே பிரசாரத்திற்கு வர முடியும் என கராராக கூறி விடுகின்றனர்.
பிரசாரத்திற்காக மதுபானங்களை வாங்கி அள்ளி சென்று விடுகின்றனர். இதனால் மதியத்திற்குள் மதுபாட்டில்கள் விற்று தீர்ந்து விடுகின்றன.
குறிப்பிட்ட அளவு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படுவதால் விற்பனை இலக்கை எட்டியவுடன் மதியத்திற்கு மேல் கடை ஊழியர்கள் மது கடையை அடைத்து விட்டு செல்கின்றனர்.
வழக்கமாக மது வாங்க வரும் மது பிரியர்கள் கடை அடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
ஆந்திராவில் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.70 கோடிக்கு மது விற்பனை ஆகிறது.
கடந்த தேர்தலின் போது மதுக்கடைகள் தனியார் வசம் இருந்தது. இதனால் மது கடை நடத்துபவர்கள் முன்கூட்டியே மதுபாட்டில்களை ஸ்கேன் செய்து இரவு வரை விற்பனை செய்தனர்.
தற்போது மது கடைகள் அரசு வசம் உள்ளதால் தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகளுடன் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.
- கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியில் உருது 2-வது அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது.
- சந்திரண்ணா பீமா திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், மேற்கு கோதவரி மாவட்டத்தில், நடந்த ரம்ஜான் நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.
கர்னூல் உருது பல்கலைக்கழகம் மேம்படுத்தப்படும்.
கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியில் உருது 2-வது அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் ஐதராபாத், விஜயவாடாவில் ஹஜ் ஹவுஸ் கட்டப்பட்டது. ஹஜ் யாத்ரீகர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.

தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இஸ்லாமியர்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
இதேபோல் சமூக வலைத்தளத்தில் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட செய்தி குறிப்பில், தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால் 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மாதம் தோறும் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
சொந்த தொழில் செய்ய 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். சந்திரண்ணா பீமா திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- அ.தி.மு.க. அழிந்து போகும் என்று பேசி வரும் அண்ணாமலைக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
- தேன்கூட்டில் கையை வைத்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியாது.
மதுரை:
மதுரையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பரவை, ஊர் மெச்சிகுளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஒரு உயரமான சுவரில் ஆட்டுக்குட்டி ஒன்று நின்று கொண்டு அவ்வழியாகச் சென்ற சிங்கத்தை வம்புக்கு இழுத்தது. ஏய் சிங்கம் நில், எனக்கு தழையை பறித்து போடு என சவடால் அடித்தது. சுவர் என்பது ஆளுங் கட்சி. மத்தியில் தனது கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது என்ற திமிரில் அண்ணாமலை வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார்.
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை. அவர் மட்டுமல்ல, அவரது அப்பனே வந்தாலும் அ.தி.மு.க.வை அளிக்க முடியாது. அரசியலில் அவர் கற்றுக் குட்டி தான், திராவிட இயக்கங்களின் வரலாறு தெரியாமல் பேசி வருகிறார் அண்ணாமலை. அவர் படித்து பாஸ் செய்தாரா, அல்லது பிட்டு அடித்து பாஸ் செய்தாரா என சந்தேகமாக உள்ளது.

அ.தி.மு.க. அழிந்து போகும் என்று பேசி வரும் அண்ணாமலைக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். திராவிட இயக்கம் வளர வேண்டும் என உழைத்த தலைவர்களை அண்ணாமலை இழிவாக பேசி வருகிறார். அவர்களைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது . உயர்ந்த தலைவர்களை இழிவாகப் பேசி வரும் அவரது நாக்கை வெட்டணுமா, வேண்டாமா? பத்தாண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க. அரசு தமிழகத்திற்கு என்ன செய்தது.
பா.ஜ.க.வில் முழுவதும் திருடர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. திருட்டுக் கூட்டம் அனைத்தும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளது. அண்ணாமலை வந்த பிறகு தான் இதுபோன்ற நபர்கள் பா.ஜ.க.வில் அதிகமாக சேர்ந்துள்ளனர். அ.தி.மு.க. அழிந்து போகும் என்று பேசிவரும் அண்ணாமலை தான் தேர்தலுக்குப் பிறகு அழிந்து போவார். அரசியலில் இருந்து அவர் அப்புறப்படுத்தப்படுவார். முகவரி இல்லாமல் ஆகிவிடுவார்.
தேன்கூட்டில் கையை வைத்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியாது. நிச்சயம் அதற்கான பலனை அனுபவிப்பார். ஒரு கவுன்சிலர் பதவிக்கு கூட வெற்றி பெற இயலாமல் பணத்தை வாரி இறைத்த போதும் அண்ணாமலைக்கும், பா.ஜ.க.வுக்கும் யாரும் ஓட்டு போட தயாராக இல்லை. அ.தி.மு.க. தலைவர்களைப் பற்றியும், அ.தி.மு.க.வை பற்றியும் பேசுவதற்கு அண்ணாமலைக்கு அருகதையே கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- நோட்டாவுக்கு என்று பொதுவான குறிப்பிட்ட சின்னம் எதுவும் கிடையாது.
- தமிழகம் இந்த வரிசையில் பீகார், உத்தரபிரதேசத்தை தொடர்ந்து 3-வது இடத்தை பிடித்தது.
வாக்காளர்கள் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாவிட்டால் செல்லாத ஓட்டு போடுவதற்கு பதில் "விருப்பம் இல்லை" என்று வாக்களிக்கும் முறை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைக்கு "நோட்டா" என்ற பெயர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மின்னணு எந்திரங்களில் நோட்டாவுக்கு வாக்காளிப்பதற்கு என்று வசதிகள் செய்யப்பட்டன.
நோட்டாவுக்கு என்று பொதுவான குறிப்பிட்ட சின்னம் எதுவும் கிடையாது. சிலர் தேர்தல்களில் நோட்டாவுக்கு என்று தனி சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் கடந்த தேர்தலில் நோட்டா எனும் ஆங்கில வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்களுக்கு பிறகு கடைசியில் நோட்டா பிரிவு சேர்க்கப்பட்டு இருக்கும்.
2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நோட்டா அறிமுகம் ஆன போது நாடு முழுவதும் சுமார் 60 லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்து இருந்தனர். அதாவது வாக்களித்தவர்களில் சுமார் 2 சதவீதம் பேர் எந்த வேட்பாளரையும் விரும்பவில்லை என்பது தெரிய வந்தது.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 65 லட்சத்து 22 ஆயிரமாக அதிகரித்தது. அதிகபட்சமாக பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுமார் 8 லட்சத்து 17 ஆயிரம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்து இருந்தனர்.
பீகாரை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் 7 லட்சத்து 25 ஆயிரம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்து இருந்தனர். தமிழகம் இந்த வரிசையில் பீகார், உத்தரபிரதேசத்தை தொடர்ந்து 3-வது இடத்தை பிடித்தது.
தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 5 லட்சத்து 50 ஆயிரத்து 570 பேர் நோட்டாவுக்கு வாக்களித்தனர். மேற்கு வங்காளம், குஜராத், ராஜஸ்தான், மராட்டியம், மத்திய பிரதேசம், ஆந்திரா மாநிலங்களிலும் கணிசமானவர்கள் நோட்டாவுக்கு வாக்களித்து இருந்தனர்.
இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 1 கோடி பேர் நோட்டாவுக்கு வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதுதான் இதற்கு காரணமாக கருதப்படுகிறது. தமிழகத்திலும் நோட்டாவுக்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்துக்கு மேல் செல்லக்கூடும் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
சில தொகுதிகளில் நோட்டாவுக்கு விழும் வாக்குகள் கட்சி வேட்பாளர்களின் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக கூடமாறலாம் என்கிறார்கள். இதன் காரணமாக அரசியல் கட்சி வேட்பாளர்கள் கடும் பீதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இளைய தலைமுறை மற்றும் முதல் முதலாக வாக்களிக்கப் போகும் இளைஞர்களை பிரசாரத்தின் மூலம் கவர்ந்தால் மட்டுமே அவர்களை நோட்டாவில் இருந்து தங்கள் பக்கம் திருப்ப முடியும் என்று அரசியல் கட்சி வேட்பாளர்கள் இளம் வாக்காளர்களுக்காக சமூக வலைதள பிரசாரத்தை அதிகப்படுத்தி உள்ளனர்.






