search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்
    X

    திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. #tirupati #tirupatibrahmotsavam
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி தினமும் காலை, மாலையில் மாட வீதிகளில் வாகனங்களில் சாமி ஊர்வலம் நடக்கிறது.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    சந்திரபாபு நாயுடு, ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை நாளை காணிக்கையாக வழங்குகிறார். விழாவின் முக்கிய நாளான 17-ந் தேதி கருட சேவையும், 18-ந் தேதி மாலையில் தங்க ரத ஊர்வலமும், 20-ந் தேதி காலை தேர்த் திருவிழாவும், 21-ந் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

    3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். கருட சேவையின் போது, கூடுதலாக 1,500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் 650 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வரும் 21-ந் தேதி வரை வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ஆர்ஜித சேவைகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பிரம்மோற்சவ விழா வினைக்காண வசதியாக 31 இடங்களில் எல்.இ.டி. தொலைக் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. மேலும், 11 முதலுதவி மையங்கள், 12 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ விழா நடைபெறும் 9 நாட்களும் அலிபிரி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

    கருட சேவை நாளில் ரூ.300 மற்றும் சிறப்பு சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது. இதேபோல் 16, 17 ஆகிய 2 நாட்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்களின் விநியோகமும் நிறுத்தப்படும். கருட சேவையன்று திருப்பதியில் இருந்து திருமலைக்கு இரு சக்கர வாகனங்கள் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.

    பக்தர்களுக்கு வழங்குவதற்காக 7 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×