என் மலர்tooltip icon

    உலகம்

    • இந்தியா-அமெரிக்கா இடையே 2007 இல் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை.
    • 20 ஆண்டுகளுக்கு பிறகு அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

    இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த 2007ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷும் இணைந்து இந்த ஒப்பந்தம் மேற்கொண்டனர்.

    ஆனால் இந்த ஒப்பந்தம் அதன்பின்பு நடைமுறைக்குவரவில்லை. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமேரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

    இந்தியாவில் அணு உலைகள் அமைக்க ஹோல்டெக் என்ற அமெரிக்கா நிறுவனத்திற்கு டிரம்ப் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இருப்பினும், இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக இணைந்து உருவாக்கப்படும் அணு மின் நிலையங்கள், அமெரிக்க அரசின் அனுமதி இல்லாமல் இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாடுகளுக்கோ அல்லது அமெரிக்க நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனத்துக்கோ மாற்றப்படக்கூடாது என்று அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் நிபந்தனை விதித்துள்ளது. 

    • பல தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்துள்ளன.
    • ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட முதல் ராக்கெட் இதுவாகும்.

    ஓஸ்லோ:

    விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவதில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போடுகின்றன. இந்த போட்டியில் தற்போது பல தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்துள்ளன.

    அந்தவகையில் ஜெர்மனியைச் சேர்ந்த இசார் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனமானது நார்வேயில் இருந்து சோதனை அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் என்ற ராக்கெட்டை ஏவியது. ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட முதல் ராக்கெட் இதுவாகும்.

    திட்டமிட்டபடி அந்த ராக்கெட் விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது. 30 நொடிகள் வானில் பறந்த அந்த ராக்கெட் பின்னர் சுழன்றடித்துக் கொண்டு கடற்பகுதியில் விழுந்தது. எனினும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ராக்கெட் எட்டியதாக இசார் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • கடந்த ஆண்டு துணை அதிபர் வெரோனிகா அபாத் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
    • தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருவதால் அதிபரின் அதிகாரங்கள் விரைவில் சின்தியாவிடம் மாற்றப்பட உள்ளன.

    குயிட்டோ:

    தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் அதிபர் டேனியல் நோபோவா தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இவரது பதவிக்காலம் விரைவில் முடிகிறது. எனவே நாடாளுமன்ற தேர்தலுக்கான 2-வது கட்ட வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ளது. இதில் ஆளுங்கட்சி சார்பில் அதிபர் டேனியல் நோபோவாவும், அவரை எதிர்த்து இடதுசாரி வேட்பாளர் லூயிசா கோன்சலசும் போட்டியிடுகின்றனர்.

    அந்த நாட்டு சட்டத்தின்படி தேர்தல் பிரசாரத்தின்போது அதிபரின் அதிகாரங்கள் துணை அதிபரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால் அதிபருடன் நிலவிய கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு துணை அதிபர் வெரோனிகா அபாத் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த பதவி காலியாக இருந்ததால் அதிபரின் அதிகாரங்கள் மாற்றப்படாமல் இருந்தன. இந்தநிலையில் ஆளுங்கட்சியின் பொதுச்செயலாளரான சின்தியா கெல்லிபர்ட்டை இடைக்கால அதிபராக நியமித்து அதிபர் டேனியல் உத்தரவிட்டுள்ளார். தற்போது அங்கு தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருவதால் அதிபரின் அதிகாரங்கள் விரைவில் சின்தியாவிடம் மாற்றப்பட உள்ளன.

    • புத்த மடாலயத்தில் திரண்டிருந்த சுமார் 270 புத்தபிட்சுகளும் உயிரிழந்தனர்.
    • கனரக உபகரணங்களின் பற்றாக்குறை மீட்பு நடவடிக்கைகளை மெதுவாக்கியுள்ளது.

    மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. மியான்மரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்க்கப்பட்ட வண்னம் உள்ளன.

    இந்நிலையில் மியான்மரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 3,900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

     

    குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது ரமலானையொட்டி நாடு முழுவதும் மசூதிகளில் பெருந்திரளாகத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் மக்கள் சுமார் 700 பேரும், புத்த மடாலயத்தில் திரண்டிருந்த சுமார் 270 புத்தபிட்சுகளும் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

    ஏற்கனவே உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் ஒரு நாட்டில் பசி மற்றும் நோய் பரவல் மோசமடையக்கூடும் என்றும், மனிதாபிமான உதவிகள் சென்று சேர்வதில் தடை ஏற்பட்டுள்ளதாவும் உதவி குழுக்களும், ஐக்கிய நாடுகள் சபையும் எச்சரித்துள்ளன.  

    குடிநீர் மற்றும் மின்சாரம் தடை, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் தகவல் தொடர்பு நெட்வொர்க்கிகளில் சிக்கல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சவால்கள் நிவாரண பணிகளில் தொய்வை ஏற்படுத்தி வருகின்றன. கனரக உபகரணங்களின் பற்றாக்குறை மீட்பு நடவடிக்கைகளை மெதுவாக்கியுள்ளது.  

    • தெற்காசியாவில் அமைதியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக இம்ரான் கான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
    • கடந்த ஜனவரியில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

    மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான பங்களிப்புகளுக்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    நார்வே நாட்டின் அரசியல் கட்சியான பார்ட்டியேட் சென்ட்ரம் உடன் இணைந்த ஒரு வழக்கறிஞர் குழுவான பாகிஸ்தான் வேர்ல்ட் அலையன்ஸ் அமைப்பினர் இம்ரான் கானின் பெயரை பரிந்துரைத்துள்ளனர்.

    இதுதொடர்பாக பார்ட்டியேட் சென்ட்ரம் கட்சி தனது அதிகாரபூர்வ எக்ஸ் பதவில், பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மேம்படுத்துவதில் இம்ரான் கான் ஆற்றிய பணிக்காக அவர் அங்கீகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    2019 ஆம் ஆண்டில், தெற்காசியாவில் அமைதியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக இம்ரான் கான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு முதன்முதலில் பரிந்துரைக்கப்பட்டார். தற்போது இரண்டாவது முறையாக அந்த பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    ஆனால் ஒவ்வொரு ஆண்டும், நார்வே நோபல் குழு நூற்றுக்கணக்கான பரிந்துரைகளைப் பெறுகிறது, அதன் பிறகு அவர்கள் எட்டு மாத கால செயல்முறைக்கு பிறகு வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்

    முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் 1996 இல் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியை தொடங்கினார். கடந்த 2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தார்.

    அவரது பதவிக்காலத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்குகளில் கடந்த 2023 முதல் சிறையில் உள்ளார். கடந்த ஜனவரியில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. 

    • தொழுகியின்போது மசூதிகள் இடிந்து விழுந்ததில் சுமார் 700 பேர் உயிரிழந்தனர்.
    • இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது

    மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை உலுக்கிய நிலநடுக்கத்தில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஐ கடந்து 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. சுமார் 3,400 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் சுமார் 300 பேர் காணாமல் போயுள்ளதாக மியான்மரின் ராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். அவர்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    மீட்பு பணிகள் தீவிரம்

    மியான்மரில் ஏராளமான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் சீட்டு கட்டுகள் போல சரிந்து உருக்குலைந்து கிடக்கின்றன. எங்கு பார்த்தாலும் கட்டிட குவியல்களாக காட்சி அளிக்கிறது. இந்த கட்டிட குவியல்களில் இருந்த உயிரற்ற சடலங்களை மீட்பு படையினர் மீட்டு வருவது அனைவரையும் கலங்கடித்து உள்ளது.

    கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி 3 நாட்களை கடந்தும் தொடர்ந்து நடந்து வருகிறது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

     

    நன்கு பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் மற்றும் டிரோன்கள் உதவியுடன் இரவு பகலாக மீட்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. நிலநடுக்கத்தால் உடைந்து போன கட்டிடங்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற நிலையிலும் அதை பொருட்படுத்தாமல் உயிரை பணயம் வைத்து மீட்பு படையினர் தங்களது கைகளால் கட்டிட குவியல்களை அகற்றி வருகின்றனர்.

    வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தின்போது நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. எனவே தொழுகியின்போது மசூதிகள் இடிந்து விழுந்ததில் சுமார் 700 பேர் உயிரிழந்தனர் என்று வசந்த புரட்சி மியான்மர் முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது.

    மியான்மரின் 2-வது பெரிய நகரமாக விளங்கும் மண்டலே முற்றிலும் உருக்குலைந்து காணப்படுகிறது. இங்கு தான் ஏராளமானவர்கள் உயிரிழந்து உள்ளனர். இதனால் இந்த நகரத்தில் எங்கு பார்த்தாலும் மரண ஓலம் நிர்மபி சவக்கிடங்காக காட்சி அளித்து வருகிறது. பலியானவர்கள் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதவண்ணம் உள்ளனர். பலரை காணவில்லை. அவர்களை தேடி உறவினர்கள் அங்கும், இங்கும் சுற்றி அலைவது பார்க்க பரிதாபமாக உள்ளது.

    இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்க போதுமான அதிநவீன கருவிகள், பணியாளர்கள் இல்லாமல் அரசு தடுமாறுகிறது.

    நகரத்தில் மட்டுமே தற்போது மீட்பு பணிகள் நடந்து வருகிறது. கிராமப்புற பகுதிகளுக்கு மீட்பு படையினர் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    மண்டலே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2 நாட்களுக்கு மேலாக தவித்த கர்ப்பிணி பெண்ணை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்பு குழுவினர் மீட்டனர். ஆனால் துண்டிக்கப்பட்ட காலில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறியதால் அவர் மீட்கப்பட்ட சிறிது நேரத்தில் இறந்தார். இது மீட்பு குழுவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    குடிநீர் - மின்சார வசதி இல்லை

    இது ஒருபுறம் இருக்க மறுபுறம் பொதுமக்கள் குடிநீர்- மின்சார வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது. பாலங்கள், ரோடுகள் அனைத்தும் சின்னாபின்னமாகி கிடக்கின்றன.

    பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் அவை இருளில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் மீட்பு பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லாடி வருகின்றனர். ஏராளமானவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    உதவிக் கரம் நீட்டிய நாடுகள்

    நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளது.

    அவசர கால குழுக்கள் மற்றும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. நிலநடுக்கம் ஏற்பட்டதும் முதலாவதாக இந்தியா உதவ முன்வந்தது. மியான்மருக்கு ஆபரேஷன் பிரம்மா என்ற பெயரில் விமானங்களில் உடனடியாக நிவாரண பொருட்கள், பேரிடர் மீட்பு படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் இருந்து மியான்மருக்கு இது வரை நிவாரண பொருட்களுடன் கூடிய 5 விமானங்கள் சென்றுள்ளதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  மியான்மர் நிலநடுக்க சேதங்களுக்காக சீனா 14 மில்லியன் டாலர்கள் நிவாரணம் அறிவித்துள்ளது. 126 மீட்புப் பணியாளர்கள் மற்றும் ஆறு நாய்களுடன் மருத்துவ கருவிகள், ட்ரோன்கள் மற்றும் பூகம்பக் கண்டுபிடிப்பான்களையும் அனுப்பியுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் சர்வதேச நிவாரண அமைப்பான UNAIDS கடந்த ஜனவரியில் பதவியேற்றதும் நிறுத்தினார். இதனால் இந்த அமைப்பின் செயல்பாடுகள் முடங்கியுள்ள நிலையில் மியான்மர் நிலநடுக்கத்தின் பாதித்தவர்களுக்கான பெரிய அளவிலான உதவிகள் கிடைப்பது தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • அவர் ஈரானுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இதனை ஈரான் ஏற்க மறுத்து விட்டது.
    • அரசு கட்டுப்பாட்டில் உள்ள டெஹ்ரான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

    அணுஆயுத உற்பத்தியில் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரான் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதை அந்நாடு மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்க புதிய ஒப்பந்தத்தைக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.

    இது தொடர்பாக அவர் ஈரானுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இதனை ஈரான் ஏற்க மறுத்து விட்டது. இதனால் ஈரான் அணு ஆயுதம் தொடர்பான ஐ.நா. சபையின் உடன்பாட்டுக்கு வராவிட்டால் ஈரான் மீது பாதுகாப்பு சார்ந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், ஈரான் மீது அமெரிக்கா குண்டுகளை வீசும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

    மேலும் அந்நாட்டின் மீது 2- வது கட்ட வரி விதிப்புகளை சுமத்த வேண்டி இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

    டிரம்பின் இந்த பகிரங்க மிரட்டல் ஈரானை கொதிப்படைய செய்துள்ளது. அவரது இந்த மிரட்டலுக்கு ஈரான் பணியவில்லை.

    அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கும் மறுத்து விட்டது. மாறாக அமெரிக்காவுக்கு எதிராக அதி நவீன ஆயுதங்களுடன் ஏவுகணை தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அரசு கட்டுப்பாட்டில் உள்ள டெஹ்ரான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

    ஈரான், நாடு முழுவதும் தனது நிலத்தடி ஏவுகணை ஆயுதக்கிடங்கை தயார் செய்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது. கெய்பர், ஹேகான், ஹக் காசெம், செஜ்ஜில், எமாத் உள்ளிட்ட அதி நவீன ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஏவுகணைகள் வான்வழி தாக்குதல்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களை ஈரான் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

    அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி கொடுக்க தயாராகி வருவது உலக நாடுகள் மத்தியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

    • அமெரிக்கா கிரீன்லாந்தை பெறும் என ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார்.
    • நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்கிறோம் என்றார் கிரீன்லாந்து பிரதமர்.

    நூக்:

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் அண்டை நாடுகளை வரியினாலும், கருத்தாலும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.

    அந்த வகையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலக சுதந்திரத்திற்காக கிரீன்லாந்து மீதான உரிமையும், கட்டுப்பாடும் அவசியம் எனக்கூறிய அதிபர் டிரம்ப், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்கவேண்டும் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரீன்லாந்தை விலைக்கு வாங்கப் போவதாக தொடர்ந்து கூறி வருகிறார். ஏராளமான கனிம வளங்கள் அங்கு குவிந்து கிடக்கின்றன என்பதால் சீனாவுக்குப் போட்டியாக இப்பகுதியைக் கைப்பற்ற உள்ளதாக டிரம்ப் தெரிவித்து வருகிறார்.

    இந்நிலையில், கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பிரெட்ரிக் நீல்சன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா கிரீன்லாந்தை பெறும் என ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார். நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன், அமெரிக்கா அதைப் பெறாது. நாம் வேறு யாருக்கும் சொந்தமானவர்கள் அல்ல. நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    • டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது.

    நுகுஅலோபா:

    தென்பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நேற்று மாலை 5.48 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.

    10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 20.06 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 174.04 டிகிரி மேற்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு சுனாமி எச்சரிக்கையை டோங்கா தீவு திரும்பப் பெற்றுள்ளது.

    • தலைநகர் நேப்பிடா, சாகைங், மண்டலை, பைகோ, மாகுவே, ஷான் ஆகிய 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
    • மியான்மரில் கடுமையான மருந்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மர்: இடிபாடுகளைத் தோண்ட, தோண்ட உடல்கள் தொடர்ந்து மீட்பு பலி எண்ணிக்கை 1700 ஆக அதிகரித்துள்ளது.

    மியான்மரில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் அந்நாடு உருக்குலைந்துள்ளது.

    தலைநகர் நேப்பிடா, சாகைங், மண்டலை, பைகோ, மாகுவே, ஷான் ஆகிய 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன.

    அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு இடி பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கட்டிடங்கள் உருக்குலைந்து இடி பாடுகள் குவியலாக கிடக்கிறது.

    அதனை அகற்றி ஏராள மானோர் மீட்கப்பட்டு வருகிறார்கள். இதில் பலர் உயிரிழந்த நிலையில் மீட்கப் படுகிறார்கள். இதுவரை சுமார் 1,700 பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 3,400 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் சுமார் 300 பேர் காணாமல் போயுள்ளதாக மியான்மரின் ராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    மியான்மரில் கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் தோண்ட, தோண்ட உடல் கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.

    இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புபணி களில் பொதுமக்களும் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் பலர் வெறும் கைகளால் இடிபாடுகளை அகற்றி உதவி செய்து வருகிறார்கள்.

    காயம் அடைந்தவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பல பகுதிகளில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நிலநடுக்கத்தால் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மின்சாரம், தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்புப்பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. முக்கியமான உள்கட்டமைப்புகள் சேதமடைந்து உள்ளதால் மியான்மரின் பல பகுதிகளுக்கு உதவிகள் சென்றடைவது தடைபட்டுள்ளது.

     

    இதற்கிடையே மியான்மரில் கடுமையான மருந்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. இது நிவாரணப் பணிகளை மேலும் பாதிக்கும் என்று உதவி குழுக்கள் கவலை தெரி வித்துள்ளன.

    மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு நிலஅதிர்வுகள் உண்டானது. இதனால் பீதியடைந்துள்ள மக்கள் தெருக்களிலோ அல்லது திறந்த வெளிகளிலோ இரவுகளை கழிக்கின்றனர். பலர் வீடுகளை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

    மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் அங்கு உள்நாட்டு போரும் நடந்து வருகிறது. ராணுவ அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் குழு செயல்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மக்களை தற்போது நிலநடுக்கம் மேலும் இன்னலுக்கு தள்ளி உள்ளது.

    இந்த நிலையில் ராணுவ அரசாங்கத்துக்கு எதிராக செயல்படும் மியான்மரின் நிழல் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் ஆயுதப் பிரிவான மக்கள் பாதுகாப்புப்படை, 2 வார கால போர் நிறுத்தத்தை அறிவித்தது.

    நிலநடுக்க மீட்புப்பணிகளை எளிதாக்கும் வகையில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தாங்கள் கட்டுப்படுத்தும் பகுதிகளில் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் தற்காலிக மீட்பு மற்றும் மருத்துவ முகாம்களை நிறுவுவதை உறுதி செய்ய ஐ.நா. மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் ஒத்துழைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு பல நாடுகள் உதவி வருகின்றன. குறிப்பாக இந்தியா, நிவாரண பொருட்கள், மீட்பு குழுவை அனுப்பியது. 60 டன் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 5 மீட்புப்படை விமானங்கள் சென்றுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    மியான்மரை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், தாய்லாந்தையும் தாக்கியது. தலைநகர் பாங்காங்கில் புதிதாக கட்டப்பட்டு வந்த 33 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர் களை மீட்கும் பணி நடந்து வருகிறது. தாய்லாந்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இன்னும் 90 பேர் மாயமாகி உள்ளனர். 

    • நிலநடுக்கம் இன்று மாலை 5.48 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
    • நிலநடுக்கத்தின் எதிரொலியால் சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே இன்று மாலை 5.48 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில், 20.06 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 174.04 டிகிரி மேற்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

    இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து தகவலும் வெளியாகவில்லை.

    • இந்த மோதலின் காரணமாக, விமானமும் வீடும் தீப்பிடித்து எரிந்தன.
    • விபத்துக்குள்ளான விமானம் ஒற்றை எஞ்சின் கொண்ட சொகாட்டா TBM7 ரக விமானம் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவில் ஒரு சிறிய ரக பயணிகள் விமானம் வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

    நேற்று (சனிக்கிழமை) அயோவாவிலிருந்து மினசோட்டாவுக்குப் பறந்து கொண்டிருந்த விமானம், மின்னியாபோலிஸில் ப்ரூக்லின் பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது மோதியது. இந்த மோதலின் காரணமாக, விமானமும் வீடும் தீப்பிடித்து எரிந்தன.

    விபத்து தொடர்பாக புரூக்ளின் பூங்காவின் செய்தித் தொடர்பாளர் ரிசிகாட் அடெசோகன் கூறுகையில், வீட்டில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை, ஆனால் வீடு முற்றிலுமாக எரிந்து நாசமானது. விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

    விபத்துக்குள்ளான விமானம் ஒற்றை எஞ்சின் கொண்ட சொகாட்டா TBM7 ரக விமானம் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இந்த சம்பவத்தில் குறைந்தது ஒரு நபராவது உயிரிழந்திருப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விமானத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையே விமானம் விபத்துக்குள்ளான பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது. 

    ×