search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    தடுப்பூசி
    X
    தடுப்பூசி

    ஒமைக்ரானுக்கு எதிராக வீரியமாக செயல்படும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி

    பூஸ்டரின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, கூடுதல் தரவை உலகம் முழுவதிலும் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வழங்குவதாக அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
    லண்டன்:

    உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்த நிலையில், அதன் புதிய மாறுபாடான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதில் தடுப்பூசியின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    அவ்வகையில், அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான வேக்சேவ்ரியா தடுப்பூசி, ஒமைக்ரானுக்கு எதிராக நன்கு செயல்படுவதாக ஆரம்பகட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த தடுப்பூசியை 3வது தவணை பூஸ்டர் டோசாக செலுத்தியபிறகு, ஒமைக்ரானுக்கு எதிராக, அதிக ஆன்டிபாடிகள் உருவாகியிருக்கிறது. 

    மேலும் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தப்பட்ட பிறகு, கொரோனாவின் பீட்டா, டெல்டா, ஆல்பா மற்றும் காமா மாடுபாடுகளுக்கு எதிராகவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது கண்டறியப்பட்டுள்ளது என்று அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்  கூறி உள்ளது.

    மூன்றாவது டோஸ் பூஸ்டரின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, இந்த கூடுதல் தரவை உலகம் முழுவதிலும் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வழங்குவதாக அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கோவிஷீல்டு

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தை, புனேவில் உள்ள சீரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வருகிறது.

    இந்த புதிய ஆய்வு முடிவுகள் ஊக்கம் அளிக்கும் செய்தி என சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 

    ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுவின் தலைமை ஆய்வாளரும் இயக்குநருமான பேராசிரியர் சர் ஆண்ட்ரூ ஜே பொல்லார்டின் கருத்துப்படி, தற்போது நடைபெற்று வரும் அஸ்ட்ராஜெனேகா/ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனைகளின் புதிய தரவு, ஒமைக்ரானுக்கு எதிராக மூன்று டோஸ்கள் நல்ல பாதுகாப்பை அளிக்கின்றன என்பதைக் காட்டுகிறது. இது ஊக்கமளிக்கும் செய்தி’ என அதார் பூனவல்லா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×