search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குண்டுவெடிப்பு
    X
    குண்டுவெடிப்பு

    சாலையோர குண்டுவெடிப்பில் சிதறிய பேருந்து- 11 பேர் பலி

    வன்முறைத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்திவரும் தலிபான் அமைப்பினர் இந்த தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என மாகாண ஆளுநர் குற்றம்சாட்டி உள்ளார்.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. தலிபான் பயங்கரவாதிகள் புதிய பகுதிகளை பிடிப்பதற்கும், சோதனைச் சாவடிகளை தாக்குவதிலும் கவனம் செலுத்துவதால் அரசுப் படைகளுடனான மோதலும் தீவிரமடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க படையினரை முழுவதுமாக திரும்ப பெறும் நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில், வன்முறை அதிகரித்து பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இந்நிலையில், பாத்கிஸ் மாகாணம் ஆப்காமரி கிராமத்தில் சாலையோரம் பயங்கரவாதிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு நேற்று மாலை வெடித்து சிதறியது. இதில் பயணிகள் பேருந்து பலத்த சேதமடைந்ததுடன், பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 11 பேர் பலியாகினர். மேலும் சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 

    இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், வன்முறைத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்திவரும் தலிபான் அமைப்பினர் இந்த தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என மாகாண ஆளுநர் குற்றம்சாட்டி உள்ளார்.

    இதேபோல் பர்யாப் மாகாணம் குவாய்சர் மாவட்டத்தில் உள்ள காவல்துறை தலைமையகத்தை தலிபான் பயங்கரவாதிகள் திடீரென சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில் 14 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 37 வீரர்களை பயங்கரவாதிகள் சிறைப்பிடித்தனர். அவர்களை மீட்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 

    காபூலில் இந்த வாரம் அடுத்தடுத்து இரண்டு பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×