search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஹாங்காங்கில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை - சீனாவின் திட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டதா?

    ஹாங்காங்கில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய சீனா திட்டமிட்டுள்ளது.
    ஹாங்காங்:

    ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச்சட்டத்தை சீனா அமல்படுத்தியது. மேலும், சீனாவின் தேசிய பாதுகாப்பு அலுவலகம் ஹாங்காங்கில் திறக்கப்பட்டது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாக ஹாங்காங் அரசின் அனுமதி இல்லாமல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை சீனா நேரடியாக மேற்கொள்ளலாம். 

    சட்டம் அமல்படுத்தப்பட்டது முதல் ஹாங்காங்கில் செயல்பட்டு வந்த
    ஜனநாயக ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நடவடிக்கைகள் ஹாங்காங்கின் தன்னாட்சி அமைப்பிற்கு முடிவு கட்டும் நடவடிக்கையாக கருதப்படுகிறது.

    இதற்கிடையில், சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கபட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. 

    இந்த வைரஸ் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஹாங்காங்கில் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஹாங்காங்கில் 4 ஆயிரத்து 756 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    வைரஸ் பரவியவர்களில் 4 ஆயிரத்து 200 பேர் குணமடைந்துள்ளனர். 427 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு 81 பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் சராசரியாக அங்கு 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்த பட்ட பிறகு முதல்முறையாக ஹாங்காங்கின் நிர்வாகத்தில் சீனா முதல்முறையாக தலையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பாதுகாப்புத்துறை தவிர தற்போது மருத்துவ துறையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஹாங்காங்கில் உள்ள சுமார் 75 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சீனா நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது. ஹாங்காங்கின் நிர்வாகம் இல்லாமல் மருத்துவத்துறையில் சீனா நேரடியாக களமிறங்குவது இதுவே முதல்முறையாகும். 

    அதன் படி 60 பேர் கொண்ட சீனாவின் மருத்துவக்குழு ஹாங்காங்கிற்கு செப்டம்பர் 1-ம் தேதி வர உள்ளது. தற்போது தினமும் செய்யப்பட்டும் 12 ஆயிரம் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை தினமும் 5 லட்சம் பரிசோதனை என உயர்த்தப்பட உள்ளது.

    கோப்பு படம்

    இந்த நடவடிக்கை ஹாங்காங்கின் நிர்வாக ரீதியிலும், மக்களின் சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கை என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பரிசோதனையின் போது ஹாங்காங் மக்களின் டிஎன்ஏ மாதிரிகள் சீன அரசால் சேகரிக்கப்பட்டு அவை நபர்களை அடையாளம் காணவும், தனிப்பட்ட தகவல்களை தெரிந்துகொள்ளவும் பயன்படுத்தப்படலாம் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

    ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஹாங்காங் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. சீன தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படவில்லை.

    கொரோனா பரிசோதனை என்ற போர்வையில் ஹாங்காங்கிற்குள் அரசியல் ரீதியில் சீனா நுழைய முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

    Next Story
    ×