search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூரிய மண்டல ஆராய்ச்சி
    X
    சூரிய மண்டல ஆராய்ச்சி

    சூரிய மண்டல ஆராய்ச்சியில் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற தயார் - நாசா அறிவிப்பு

    சூரிய மண்டல ஆராய்ச்சியில் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்வதற்கு இந்தியா அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடைசி நிமிடத்தில் தரை இறங்காமல் போய்விட்டது. இது இந்தியாவுக்கும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோவுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

    அதே நேரத்தில் உலக நாடுகள் பலவும் இந்தியாவின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளன.

    இதுவரை எந்தவொரு நாட்டினாலும், ஆராய்ந்து அறியப்படாத நிலவின் தென்துருவப்பகுதியை சென்றடையும் இந்தியாவின் முயற்சி, மயிரிழையில்தான் வெற்றி பெறத்தவறி விட்டது. அதே நேரத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ள உள்ள திட்டங்களுக்கு இது பாடமாக இருக்கும்.

    இந்தியாவின் சந்திரயான்-2 விண்கல திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’ வெகுவாக பாராட்டி உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டு உள்ளது.

    அவற்றில் கூறி இருப்பதாவது:-

    நிலவின் தென் துருவ பகுதியில் தங்களது சந்திரயான்-2 விண்கலத்தை தரை இறக்க இஸ்ரோ மேற்கொண்ட முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம்.

    உங்களின் இந்த பயணத்தின்மூலம் எங்களுக்கு ஊக்கம் அளித்து இருக்கிறீர்கள்.

    எதிர்காலத்தில், நமது சூரிய மண்டல ஆராய்ச்சியில் உங்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பை எதிர் நோக்கி உள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகமும் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

    அதன் மூத்த அதிகாரி ஒருவர் சந்திரயான்-2 பற்றி கருத்து தெரிவிக்கையில், “இந்தியாவின் முயற்சிகள் வியக்க தகுந்தவை. சந்திரயான்-2 திட்டத்தின் வியக்க தகுந்த முயற்சிகளுக்காக இஸ்ரோவை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த திட்டமானது. இந்தியாவுக்கு ஒரு பெரிய படியாக அமைந்துள்ளது. அது விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு உதவுகிற தரவுகளை தொடர்ந்து தந்து கொண்டே இருக்கும். இந்தியா தனது விண்வெளி அபிலாசைகளை சாதித்து காட்டும் என்று நாங்கள் நம்புகிறோம்” என கூறினார்.

    ‘நாசா’வின் முன்னாள் விண்வெளி வீரர் ஜெர்ரி லெனிங்கர், “நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரை இறக்க மேற்கொண்ட துணிச்சலான முயற்சியில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், எதிர்கால திட்டங்களில் அந்த நாட்டுக்கு உதவும்” என்று கூறினார்.

    அத்துடன், “நாம் தளர்ந்து விடத்தேவையில்லை. இந்தியா மிகவும் கடினமான ஒன்றை செய்ய முயற்சித்தது. உண்மையைச் சொல்வதானால், லேண்டர் தரை இறங்கும்போது எல்லாமே திட்டமிட்டபடி நடந்து கொண்டிருந்தது” என்றும் குறிப்பிட்டார்.

    Next Story
    ×