என் மலர்tooltip icon

    உலகம்

    • இரு நாடுகளுக்கும் இடையில் பல தசாப்தங்களாக மோதல் இருந்து வருகிறது.
    • கம்போடியா இன்று ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியது.

    தாய்லாந்து- கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று கம்போடியா ராக்கெட்டுகள், பீரங்கி குண்டுகள் மூலம் தாய்லாந்து மீது பயங்கர தாக்குதல் நடத்தியது. இதனால் கோபம் அடைந்த தாய்லாந்து F-16 போர் விமானங்கள் மூலம் கம்போடியா ராணுவத்தை குறிவைத்து குண்டுமழை பொழிந்தது.

    தாய்லாந்து, கம்போடியா நாட்டின் எல்லைகள் லாவோஸ் நாட்டின் எல்லையுடன் பிணைந்துள்ளது. இந்த பகுதிக்கு எமரால்டு முக்கோணம் என்று பெயர். இந்த இடத்தில் ஏராளமான பழமையான கோவில்கள் உள்ளது. இந்த எல்லை தொடர்பாக பல தசாப்தங்களாக மோதல் இருந்து வருகிறது. 15 வருடத்திற்கு முன்னதாக பயங்கரமான ராணுவ மோதல் ஏற்பட்டது, கடந்த மே மாதம் துப்பாக்கிச்சூட்டில் கம்போடியா ராணுவ வீரர் உயிரிழந்தார்.

    இன்று கம்போடியா ராக்கெட்டுகள், பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் தாய்லாந்து F-16 போர் விமானம் மூலம் குண்டு மழை பொழிந்தது.

    உபோன் ரட்சதானி மாகாணத்தில் 6 போர் விமானங்கள் குவிக்கப்பட்டு கம்போடியா ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குல் நடத்தியது.

    • சைபிரியாவை தளமாக கொண்ட அங்காரா விமான நிறுவனத்தின் விமானம் மாயம்.
    • விமானத்தில் 5 குழந்தைகள் உள்பட 43 பயணிகள் இருந்தனர்.

    ரஷியாவின் கிழக்கே வெகு தூரத்தில் சீனா எல்லையில் உள்ள பிராந்தியம் அமுர். இந்த பிராந்தியத்தில் டிண்டா என்ற நகர் உள்ளது. இந்த நகருக்கு இன்று சைபிரியாவை தளமாக கொண்ட அங்காரா விமான நிறுவனத்திற்கு சொந்தமான AN-24 பயணிகள் விமானம் இன்று ஐந்து குழந்தைகள் உள்பட 43 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 49 பேருடன் சென்று கொண்டிருந்தது.

    விமானம் டிண்டா அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையின் ரேடாரில் இருந்து திடீரென விலகியது. அத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது. அந்த விமானத்தின் பாகங்கள் சீனா எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    பின்னர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிங்கப்பூர் பாஸ்போர்ட் உடன் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
    • அமெரிக்கா 10வது இடத்திற்கும், இங்கிலாந்து 6வது இடத்திற்கும் சரிந்துள்ளன.

    2025 ஆம் ஆண்டுக்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் சமீபத்திய பட்டியலில் இந்தியா எட்டு இடங்கள் முன்னேறி 77வது இடத்தைப் பிடித்துள்ளது.

    இது கடந்த ஆறு மாதங்களில் எந்த நாடும் கண்டிராத மிகப்பெரிய முன்னேற்றமாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா 85வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    லண்டனை தளமாகக் கொண்ட ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு, ஒரு நாட்டின் பாஸ்போர்ட் அதன் குடிமக்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கும் நாடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகளவில் தரவரிசைப்படுத்துகிறது.

    தற்போது, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது வந்தவுடன் விசா பெறும் வசதியுடன் பயணிக்க முடியும்.

    இந்தியர்கள், மலேசியா, இந்தோனேசியா, மாலத்தீவுகள், தாய்லாந்து, பூட்டான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

    வலிமையான பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து உலகளவில் முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் உடன் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

    டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் உடன், விசா இல்லாமல் 189 நாடுகளுக்குள் நுழையலாம்.

    இந்த முறை முன்னணியில் இருந்த அமெரிக்கா 10வது இடத்திற்கும், இங்கிலாந்து 6வது இடத்திற்கும் சரிந்துள்ளன. 

    • உணவுக்காகக் காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,054 ஆக உயர்ந்துள்ளது.
    • உணவு விநியோக மையங்களை இஸ்ரேல் மரணப் பொறிகளாக மாற்றுவதாகவும் அந்த அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

    காசாவில் பட்டினியை இனப்படுகொலை ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் இஸ்ரேலை கண்டித்துள்ளது.

    காசாவில் கடந்த இரண்டு நாட்களில், 33 பேர் பட்டினியால் இறந்துள்ளனர். அவர்களில் 12 பேர் குழந்தைகள். இதன் மூலம், சமீபத்திய நாட்களில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 80 குழந்தைகள் உட்பட 101 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் மரணத்தின் விளிம்பில் இருப்பதாகவும் கள நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

    உணவுக்காகக் காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,054 ஆக உயர்ந்துள்ளது.

    காசாவிற்கு அவசர உதவி கோரி 111 உலகளாவிய அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன. எல்லைகளற்ற மருத்துவர்கள், ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் மற்றும் பொது மன்னிப்பு சபை போன்ற அமைப்புகள் களத்தில் உள்ளன.

    காசாவிற்கு வெளியேயும் காசாவிற்குள்ளும் கிடங்குகளில் டன் கணக்கில் உணவு, சுத்தமான நீர், மருந்து மற்றும் எரிபொருள் குவிந்துள்ளன. மனிதாபிமான அமைப்புகள் இவற்றை விநியோகிப்பதை இஸ்ரேல் தடுக்கிறது.

    காசா மனிதாபிமான அறக்கட்டளை என்ற பெயரில் இஸ்ரேல் அமைத்த உணவு விநியோக மையங்களை இஸ்ரேல் மரணப் பொறிகளாக மாற்றுவதாகவும் அந்த அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

    ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் கூறுகையில், "உணவு தேடி வரும் மக்களை குறிவைப்பதற்கு எந்த நியாயமும் இல்லை.

    உணவு விநியோக மையங்களில் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு இணங்கி தங்கள் வார்த்தையை காப்பாற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

    இதுதவிர்த்து அண்மையில் பிரிட்டன் மற்றும் கனடா உட்பட 29 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் படுகொலையை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு கடிதம் எழுதி உள்ளனர். 

    • 22,000 இந்திய மாணவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் சீனா தடுத்தது.
    • கடந்த நான்கு ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த பதட்டங்களைத் தணிக்க உதவியது.

    சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது. இதன்மூலம் 5 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியா சுற்றுலா விசாக்களை மீண்டும் வழங்குகிறது.

    ஜூலை 24 முதல் சீன குடிமக்கள் சுற்றுலா விசாக்களுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என்று சீனாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

    2020 ஆம் ஆண்டு COVID-19 தொற்றுநோய் பரவலின் போது சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை இந்தியா தடை செய்தது.

    22,000 இந்திய மாணவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுத்த சீனாவின்நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சுற்றுலா விசாக்களை வழங்குவதை இந்தியா நிறுத்தியது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், இரு நாடுகளும் டெபாசாங் மற்றும் டெம்சோக் எல்லைகளில் இருந்து தங்கள் படைகளை திரும்பப் பெற முடிவு செய்தன, இது கடந்த நான்கு ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த பதட்டங்களைத் தணிக்க உதவியது.

    இரு நாடுகளும் டெல்லியில் இருந்து சீனாவிற்கும், டெல்லியில் இருந்து சீனாவிற்கும் நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவதாக அண்மையில் அறிவித்தன.

    மேலும் கடைசியாக சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

    • இதனால் ஒரு குடும்பம் இறுதி சடங்கை ரத்து செய்தது.
    • குடும்பங்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளதாகவும், இதற்கு விளக்கம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

    ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 241 பேர் இறந்தனர், அவர்களில் 53 பேர் பிரிட்டன் நாட்டினர் ஆவர்.

    இந்நிலையில் விபத்தில் பலியான 2 இங்கிலாந்து நாட்டவரின் உடல்களுக்கு பதிலாக தவறான உடல் அவர்களது குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடல்கள் இங்கிலாந்தில் உள்ள சில குடும்பங்களுக்கு தவறுதலாக அனுப்பப்பட்டதாக வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்தில் உள்ள இரண்டு குடும்பங்களுக்கு வேறு நபர்களின் உடல்கள் அல்லது பலரது உடல்களின் எச்சங்கள் அனுப்பப்பட்டுள்ளன. லண்டன் மரண விசாரணை அதிகாரி டிஎன்ஏ பரிசோதனை செய்தபோது இது வெளிச்சத்துக்கு வந்தது.

    இதனால் ஒரு குடும்பம் இறுதி சடங்கை ரத்து செய்தது. மற்றொரு குடும்பத்திற்கு பலரது உடல் பாகங்கள் ஒன்றாக அனுப்பப்பட்டு, அவற்றை பிரித்த பிறகு இறுதி சடங்கு செய்ய நேர்ந்தது.

    இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், உடல்களை அடையாளம் காண உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டன என்றும், உடல்கள் கண்ணியத்துடன் கையாளப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து இங்கிலாந்து அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

    அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் டிஎன்ஏ சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், ஏர் இந்தியாவுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை என்றும் இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடல்கள் மருத்துவமனையால் சீல் செய்யப்பட்ட சவப்பெட்டிகளில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    பிரிட்டிஷ் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் ஜேம்ஸ் ஹீலி-பிராட், குடும்பங்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளதாகவும், இதற்கு விளக்கம் தேவை என்றும் தெரிவித்துள்ளார். 

    • தாக்குதலில் சரண்ப்ரீத்தின் முகத்திலும் உடலிலும் காயம் ஏற்பட்டது.
    • இந்தியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவர் தாக்கப்பட்டார்.

    வெளிநாடுகளில் இந்தியர்கள் இனவெறி தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் மீது கும்பல் ஒன்று சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

    இந்த சம்பவம் ஜூலை 19 சனிக்கிழமை இரவு அடிலெய்டில் உள்ள கிந்தோர் அவென்யூவில் நடந்தது.

    நகரின் லைட் ஷோவை பார்க்க 23 வயதான சரண்ப்ரீத் சிங் அவரது மனைவியும் வந்திருந்தபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் எந்தத் தூண்டுதலும் இல்லாமல் சரண்ப்ரீத்தை காரில் இருந்து இழுத்து சாலையில் தள்ளி அவர்கள் தாக்கியுள்ளனர்.

    தாக்குதலில் சரண்ப்ரீத்தின் முகத்திலும் உடலிலும் காயம் ஏற்பட்டது.அவர் மயக்கமடைந்த பிறகு காவல்துறையினரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இந்தியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவர் தாக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    தாக்குதலை படம் பிடித்துக் கொண்டிருந்த சரண்ப்ரீத்தின் மனைவியையும் கும்பல் மிரட்டிவிட்டுச் சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உக்ரைன் ரஷியா இடையிலான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது.
    • பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் கொண்டு வர அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

    கீவ்:

    உக்ரைன் ரஷியா இடையிலான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக ரஷியா மீது இன்னும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி வருகிறார்.

    அதேநேரம், பேச்சுவார்த்தை மூலம் அமெரிக்கஅதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    போரை முடிவுக்கு கொண்டு வ, ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்துப் பேச தயாராக இருக்கிறேன்.

    உக்ரைன் இந்தப் போரை ஒருபோதும் விரும்பவில்லை. மேலும் போரை தொடங்கிய ரஷியா தான் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.

    • ஜப்பான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீத வரிகள் விதிக்கப்படும்.
    • ஜப்பான் அமெரிக்காவில் 550 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும்.

    அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் சில நாடுகளுடன் உடன்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் ஜப்பானுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜப்பானுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீத வரிகள் விதிக்கப்படும்.

    இதுவரை செய்யப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா 90 சதவீத லாபத்தைப் பெறும்.

    ஜப்பான் அமெரிக்காவில் 550 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும். இந்த ஒப்பந்தம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதுபோன்ற எதுவும் இதற்கு முன்பு இருந்ததில்லை.

    ஜப்பான் அமெரிக்காவிற்கு 15 சதவீத பரஸ்பர வரிகளை செலுத்தும். இது அமெரிக்காவிற்கு மிகவும் உற்சாகமான நேரம். ஜப்பானுடன் நாம் எப்போதும் சிறந்த உறவைக் கொண்டிருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதேபோல் பிலிப்பைன்ஸ் நாடுடனும் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    • 500 லாரிகள் மூலம் நாடு முழுவதும் பொருட்களை கொண்டும் செல்லும் சேவையை வழங்கி வந்தது.
    • நிறுவனத்தின் ஐடி அமைப்பில் ஊடுருவியது.

    பிரிட்டன் போக்குவரத்து நிறுவனமான கே.என்.பி லாஜிஸ்டிக்ஸ் 158 ஆண்டுகள் பழமையான நிறுவனமாகும்.

    இந்த நிறுவனம் சுமார் 500 லாரிகள் மூலம் நாடு முழுவதும் பொருட்களை கொண்டும் செல்லும் சேவையை வழங்கி வந்தது.

    இந்நிலையில் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தனது நிறுவனக் கணக்கிற்கு பலவீனமான கடவுச்சொல்லை அமைத்தபோது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

    அகிரா என்ற சைபர் கும்பல் இந்தக் கடவுச்சொல்லை எளிதாக யூகித்து நிறுவனத்தின் ஐடி அமைப்பில் ஊடுருவியது.

    அதன் பிறகு, ஊழியர்கள் பயன்படுத்த முடியாத வகையில் நிறுவனத்தின் அனைத்து தரவையும் முடக்கினர். இந்தத் தரவை மீண்டும் அணுக, அவர்களிடம் பணம் கேட்கப்பட்டது.

    ஆனால் நிறுவனம், கொடுக்க போதுமான பணம் இல்லாததால் நிறுவனம் இறுதியில் மூடப்பட்டது. அதன் 700 ஊழியர்கள் வேலை இழந்தனர்.

    பிரிட்டனில் உள்ள பல முக்கிய நிறுவனங்கள் சமீபத்தில் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன.   

    • பழங்குடியினத் தலைவர் இந்த கொலையை செய்ய உத்தரவிட்டார்.
    • பாகிஸ்தானில் 2024 இல் குறைந்தது 405 ஆணவக்கொலைகள் பதிவாகியுள்ளன.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இளம் ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்ட வீடியோ அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    பனோ பீபி - அஹ்சான் உல்லா என்ற இளம் ஜோடி, குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்டர்.

    இந்நிலையில் கணவன்-மனைவியை கடத்திச் சென்று குவெட்டா நகரின் புறநகரில் வைத்து நபர் ஒருவர் துப்பாக்கியால் பலமுறை சுட்டுள்ளார். இதில் இருவரும் உயிரிழந்தனர். மே 2025ல் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் பழங்குடியினத் தலைவர் சர்தார் சதக்ஸாய் மற்றும் பெண்ணின் சகோதரன் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெண்ணின் சகோதரன் முறையீட்டின் பேரில் , பழங்குடியினத் தலைவர் இந்த கொலையை செய்ய உத்தரவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    மனித உரிமைகள் ஆணையத்தின் தகவல்படி, பாகிஸ்தானில் 2024 இல் குறைந்தது 405 ஆணவக்கொலைகள் பதிவாகியுள்ளன.

    • ரைசா என்ற 13 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
    • அப்போது அவரின் கால்களுக்கு வித்தியாசமாக எதோ தட்டுப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.

    பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள Bacabal நகரில் Mearim என்ற ஆறு உள்ளது. இந்த பகுதிக்கு அருகில் ரைசா என்ற 13 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் சிறுமி குறித்து செய்தி சேகரிக்க லெனில்டோ ஃபிரசாவோ என்ற பத்திரிக்கையாளர் அங்கு சென்றுள்ளார்.

    சிறுமி கடைசியாக காணப்பட்ட இடத்தை விளக்க லெனில்டோ ஆற்றில் இறங்கினார். அப்போது அவரின் கால்களுக்கு வித்தியாசமாக எதோ தட்டுப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னரே அவர் காணாமல் போன சிறுமியின் உடலை மிதித்தது தெரியவந்தது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சிறுமியின் உடல் அங்கிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    சிறுமி தனது நண்பர்களுடன் நீந்தும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

    ×