என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட உள்ளனர்.
- நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
2025-26 கல்வி ஆண்டிற்கான "புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன்" திட்டங்களின் தொடக்க விழா இன்று மாலை 4 மணியளவில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியுளளது.
'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் கருப் பொருளில் கொண்டாடும் இவ்விழாவில் தலைமையேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கின்றார்.
கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும் சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இவ்விழா 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
முதல் பகுதியாக தமிழ்நாட்டு மக்களின் மனதுக்கு நெருக்கமானத் திட்டமான 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" இடம் பெறும். அதனைத் தொடர்ந்து 'நான் முதல்வன்', 'விளையாட்டுச் சாதனையாளர்கள்', 'புதுமைப் பெண்-தமிழ்ப் புதல்வன்' மற்றும் 'அரசுப் பள்ளிகளில் இருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற சாதனையாளர்கள்' ஆகிய அரங்கங்கள் நடைபெறுகிறது.
இவ்வரங்கங்களில் இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், இத்திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- பீகார் மாநில தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமனம்.
- தமிழக பொறுப்பாளரான பைஜெயந்த் பாண்டாவை நியமித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களிலும், தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் அடுத்த வருடமும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பாஜக மேலிடம், மூன்று மாநிலத்திற்கான பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.
தமிழகத்திற்கு பாஜக எம்.பி. பைஜெயந்த் பாண்டாவை பொறுப்பாளராகவும், அவருக்கு உதவியாக விமானப் போக்குவரத்து இணையமைச்சர் முரளிதர் மோஹோலையும் நியமித்துள்ளது.
மேற்கு வங்க மாநில பாஜக பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவை நியமித்துள்ளது. அவருக்க உதவியாக பொறுப்பாளராக திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லாப் டெப்பை நியமித்துள்ளது.
பீகார் மாநிலத்திற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது. அவருக்கு உதவியாக மற்றொரு மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீலை நியமித்துள்ளது.
- இந்த வகை ஏவுகணை 2,000 கி.மீ. வரை பாயக்கூடிய திறன் கொண்டது.
- ஏவுகணைக்கு ரயில் அடிப்படையிலான மொபைல் லாஞ்சர் வடிவமைக்கப்பட்டு சோதிக்கப்பட்டது.
நாட்டிலேயே முதல்முறையாக ரெயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) 2,000 கி.மீ. வரை பாயக்கூடிய இந்த வகை ஏவுகணைக்கு ரயில் அடிப்படையிலான மொபைல் லாஞ்சர் வடிவமைக்கப்பட்டு சோதிக்கப்பட்டது.
'அக்னி பிரைம்' ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்காக அதிகாரிகளுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
- 2024-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்தார்.
அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுவதாக தெரிவித்தார். 2025 ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக இடம் பிடித்த அவர் சரியாக விளையாடவில்லை. இதனால் சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். தான் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். ரூ.1 கோடியை தனது அடிப்படை விலையாக அஸ்வின் நிர்ணயித்துள்ளார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஸ் தொடரில் அவர் இணைந்துள்ளார். அவர் சிட்னி தண்டர் அணிக்காக கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் பிபிஎல் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரரானார் அஸ்வின்.
அவர் பிபிஎல் தொடரில் இணைந்ததை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- நாயகன் செல்வத்தின் மனதை பிரதிபலிக்கும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது.
- கார்மேனி செல்வம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பாராட்டுதல்களை பெற்றது.
பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகும் படம் கார்மேனி செல்வம்.
இந்த படத்தில், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியா சந்திரமௌலியும், கவுதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.
இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி பாராட்டுதல்களை பெற்றது. வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் 'கார்மேனி செல்வம்' குடும்பத் திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று மாலை 5.55 மணிக்கு வெளியானது.

நாயகன் செல்வத்தின் மனதை பிரதிபலிக்கும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது. கார்மேனி செல்வம் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் அக்டோபர் மாதம் 17ம் தேதி வெளியாகிறது.
இப்படத்திற்கு யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையை மியூசிக் கிளவுட் ஸ்டூடியோ & டெக்னாலஜி எனும் நிறுவனம் அமைத்துள்ளது. ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பை கையாண்டுள்ளனர்.
- இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
- H1B விசா கட்டணத்தை டிரம்ப் பல மடங்கு உயர்த்தியது இந்தியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.
இதனால் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே H1B விசா கட்டணத்தை டிரம்ப் பல மடங்கு உயர்த்தியது இந்தியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது.
இந்தியாவுக்கு அமெரிக்கா பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு பெரிய பின்னடைவை ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா கொடுத்துள்ளார்.
அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை ஐ.சி.சி. அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது. அமெரிக்க கிரிக்கெட் சங்கம், ஐசிசி விதிமுறைகளைத் தொடர்ச்சியாக மீறியதும், முறையான நிர்வாக அமைப்பைச் செயல்படுத்தத் தவறியதுமே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணம் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் பலவேறு உத்தரவுகளை பிறப்பித்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஜெய் ஷா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- திருப்பதி சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்து.
- தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர், குலசைக்கு சிறப்பு பேருந்து.
திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகை, செங்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.
அதேபோல், தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர், குலசைக்கு அக்டோபர் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
http://tnstc.in என்ற இணையதளத்தில் சிறப்பு பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
- Naal 2 என்ற மராத்திய படத்துக்காக 4 வயது குழந்தை Treesha தேசிய விருது வென்றார்.
- உங்கள் அபார திறமையை வளர்த்துக்கொள்ள தொடர்ந்து பாடுபடுங்கள் என்று கமல் பாராட்டு
செப்டம்பர் 23 ஆம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய விருது வென்ற கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
சிறந்த குழந்தை நட்சத்திரம் பிரிவில் Naal 2 என்ற மராத்திய படத்துக்காக தேசிய விருது வென்ற 4 வயது குழந்தை Treesha-க்கு நடிகரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நான் என் 6 வயதில்தான் என் முதல் விருதை வென்றேன்; அந்த சாதனையை முறியடித்ததற்காக Treesha Thosar-க்கு, என் மனம் நிறைந்த பாராட்டுகள்; நீங்கள் இன்னும் பல தூரம் செல்ல வேண்டும் மேடம். உங்கள் அபார திறமையை வளர்த்துக்கொள்ள தொடர்ந்து பாடுபடுங்கள்: உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் எனது பாராட்டுகள்" என்று தெரிவித்துள்ளார்.
- எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரிக்க விடாமல் தடுத்தனர்.
- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீலகிரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை அவதூறாக பேசியதாக கூறி அதனை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு இன்று மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்க முயன்ற நிலையில் பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து காங்கிரசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரிக்க விடாமல் தடுத்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும் வலுக்கட்டாயமாக அவரது உருவப்படத்தை போலீசார் வாங்கிச் சென்றனர்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் கூறுகையில்," எடப்பாடி பழனிசாமி எங்களது தலைவரை பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் . அல்லது நிறுத்த வைப்போம்" என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர்கள் கெங்கராஜ், ரசூல்மைதீன், மாரியப்பன், மாவட்ட துணை தலைவர்கள் ராமகிருஷ்ணன், தியாக சுரேஷ், வெள்ளபாண்டி, வண்ணை சுப்பிரமணியன், மூத்த தலைவர் லெனின் பாரதி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் அருள்தாஸ், பொதுச்செயலாளர் சையது அலி, தச்சை மண்டல துணைத் தலைவர் மணிகண்டன், நிர்வாகிகள் ஜோதிபுரம் தங்கராஜ், முத்துராமலிங்கம், சிந்தாமதார், வட்டாரத் தலைவர் கணேசன், சுந்தர் ராஜ், இளைஞர் காங்கிரஸ் ஜான் மோசஸ், அமைப்புசாரா தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் தென்கலம் ஜாகிர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 5 ஆயிரம் கோவில்களைக் கட்ட திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைத்து இருக்கிறேன்.
- ஏழுமலையான் கோவில் நாட்டின் அனைத்து தலைநகரங்களிலும் இருக்க வேண்டும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆந்திரா மாநில அரசு சார்பில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், மருமகள் பிராமணி, பேரன் தேவன் ஆகியோர் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தனர்.
அப்போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
உலகம் முழுவதும் இந்துக்கள் இருக்கும் இடங்களில் ஏழுமலையான் கோவில்களைக் கட்டி அவரது சக்தியை அனைத்து திசைகளிலும் பரப்புவது அனைவரின் பொறுப்பு.
ஏழுமலையானுக்கு பலமுறை பட்டு வஸ்திரங்களை காணிக்கை செய்யும் பாக்கியத்தை இறைவன் எனக்கு அளித்துள்ளார். சிறுவயதில் இருந்து ஏழுமலையானை வணங்கி வளர்ந்தவன்
எத்தனை சிரமங்களை எதிர்கொண்டாலும், அவர் மீது தனது பாரத்தை சுமத்தி முன்னேறினேன். ஸ்ரீவாணி அறக்கட்டளையின் நிதியுடன் கிராமப்புறங்களில் 5 ஆயிரம் கோவில்களைக் கட்ட திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைத்து இருக்கிறேன்.
மாநிலத்தில் உள்ள தொலைதூர கிராம மக்கள் இறைவனை வழிபடும் வகையில் அனைத்து கிராமங்களிலும் ஏழுமலையான் கோவில் இருக்க வேண்டும்.
அவை நாட்டின் அனைத்து தலைநகரங்களிலும் இருக்க வேண்டும். உலகில் இந்துக்கள் எங்கிருந்தாலும், அங்கு ஏழுமலையான் கோவில் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இதற்காக, திருப்பதி தேவஸ்தான மூத்த அதிகாரிகள் சில குழுக்களை அமைத்து, அவ்வப்போது அங்குள்ள மக்களிடம் பேசி, உலகம் முழுதும் ஏழுமலையான் கோவில்கள் நிறுவப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
ஸ்ரீவாணி அறக்கட்டளை ரூ 2,038 கோடியைப் பெற்றுள்ளது. நாங்கள் ரூ. 837 கோடியை செலவிட்டுள்ளோம். இன்னும் ரூ. 1,700 கோடி உள்ளது. அதில் ஏழுமலையான் கோவில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து 2026-ம் ஆண்டுக்கான காலண்டர் மற்றும் டைரியை வெளியிட்டார்.
பின்னர் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஏழுமலையான் கோவிலுக்கு வந்தார். அவருக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.
பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை சின்ன சேஷ வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
- 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.
- டேப்லெட் கிரே மற்றும் சில்வர் என இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது.
சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய டேப்லெட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
S-சீரிஸ் டேப்லெட் மாடல்களை அப்டேட் செய்த நிலையில், சாம்சங் தற்போது பட்ஜெட் பிரிவு வாடிக்கையாளர்கள் மற்றும் மாணவர்களை கவரும் வகையில், என்ட்ரி லெவல் டேப்லெட் கேலக்ஸி டேப் A11-ஐ அறிமுகம் செய்துள்ளது.
இந்த மாடல் கேலக்ஸி A9 மாடலை போன்று அதே விலையில் தொடங்குகிறது. இந்த மாடல் கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கேலக்ஸி டேப் A11 மாடலில் 2.2GHz ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 5,100mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 8.7 இன்ச் TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் கிரே மற்றும் சில்வர் என இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது.
பட்ஜெட் பிரிவில் லெனோவா மற்றும் ரெட்மி என போட்டி நிறுவன பிரான்டுகளை விட கேலக்ஸி டேப் A11 விலையில் சலுகையை கொண்டுள்ளது. அதன்படி இந்த டேப்லெட் வைபை மாடலின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடல் ரூ.12,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ.17,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன், செல்லுலார் ஆப்ஷன்களின் விலை முறையே ரூ.15,999 மற்றும் ரூ.20,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் மெமரியை கூடுதலாக நீட்டித்துக் கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது.
- விஜயின் பரப்புரையில் பங்கேற்ற பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது புகார்
- தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக நிர்வாகி இமயதமிழன் ஆன்லைனில் புகார்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க போவதாகவும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார்.
இந்நிலையில், விஜயின் பரப்புரையில் பங்கேற்ற பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக நிர்வாகி இமயதமிழன் ஆன்லைனில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட காணொளியை நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






