என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • செப்டம்பர் 10 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார்.
    • நேபாள 'ஜென் இசட்' போராட்டங்களைப் பற்றி அவர் பேசியது வன்முறையைத் தூண்டியதாக அமைச்சகம் கூறியுள்ளது.

    லடாக் யூனியன் பிரதேசத்திற்கு தனி மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கக் கோரி சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இதற்கிடையே அவர்களுக்கு ஆதரவாக கடந்த புதன்கிழமை லே-வில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் வன்முறையாக மாறியது.

    அங்கு போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்ற இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனங்களுக்குத் தீ வைத்ததுடன், லே-வில் உள்ள பாஜக அலுவலகத்தையும் தாக்கினர்.

    செப்டம்பர் 10 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த சோனம் வாங்க்சுக், வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து இளைஞர்கள் அமைதிக்காக வேண்டும் என்று கூறி தனது போராட்டத்தை நிறுத்திக்கொண்டார்.

    வன்முறைக்குக் காரணம் வாங்க்சுக்கின் "தூண்டுதல் பேச்சுகளே" என்று மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

    அரபு வசந்தம் மற்றும் நேபாள 'ஜென் இசட்' போராட்டங்களைப் பற்றி அவர் பேசியது வன்முறையைத் தூண்டியதாக அமைச்சகம் கூறியுள்ளது.

    இந்தக் குற்றச்சாட்டுகளை வாங்க்சுக் கடுமையாக மறுத்துள்ளார். இப்பிரச்சனையின் மூல காரணிகளைத் தீர்க்காமல் பலிகடா தேடும் தந்திரமாகவே மத்திய அரசு தன்னைக் குறிவைப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

    இந்நிலையில் வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இன்று சோனம் வாங்க்சுக் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே வாங்க்சுக் நிறுவிய SECMOL என்ற  அரசு சாரா நிறுவனத்தின் FCRA (வெளிநாட்டுப் பங்களிப்பு) உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. 

    • த.வெ.க. தலைவர் விஜய் சனிக்கிழமை தோறும் மக்களை சந்தித்து வருகிறார்.
    • மக்களை ஒருநாள் சந்தித்தால் போதுமா? என மற்ற கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

    சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் வெறும் சனிக்கிழமை சனிக்கிழமை மட்டும் வெளியே வரமாட்டேன். ஞாயிற்றுக்கிழமை கூட சுற்றிக்கொண்டுதான் இருப்பேன். இன்னைக்கு என்ன கிழமை என்று கூட தெரியாது. வெள்ளிக்கிழமையா..,

    நான் பல மாவட்டங்களுக்கு போகும்போது அங்கு மக்கள் கூட்டமாக நிற்பார்கள். மனுக்களுடன் நிற்பார்கள். தாய்மார்கள் நிற்பார்கள். நான் வண்டியை நிற்கச் சொல்லுவேன். நிறைய பேர் மனுக்குள் கொடுப்பார்கள். நிறைய பேர் பாராட்டுவார்கள். நிறைய பேர் வாழ்த்துவார்கள். தம்பி, அப்பாட்ட சொல்லிடுங்க.., 1000 ரூபாய் வந்திருச்சி. தேங்க்ஸ். அப்படி பேசி வாழ்த்தியிருக்காங்க.

    ஆயிரம் ரூபாய் எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டேன். 90 சதவீதம் பேர் மருத்துவ செலவிற்கு பயன்படுத்துகிறேன் என்பார்கள்.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், சனிக்கிழமை தோறும் இரண்டு மாவட்டங்கள் என சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். சனிக்கிழமை மட்டும் பிரசாரம் செய்தால் போதுமா? என மற்ற கட்சித் தலைவர்கள் விமர்சித்த நிலையில், கட்சி தொண்டர்களின் நலனிற்காகத்தான் சனிக்கிழமையை தேர்வு செய்தேன் என விஜய் பதில் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

    • இவ்வளவு விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையை எந்த மாநிலத்திலும் கொடுக்கப்படவில்லை.
    • 100-க்கும் அதிகமான வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பைக் ஏற்படுத்தி கொடுக்கின்றோம்.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச, ஆசிய மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 819 வீரர், வீராங்கனைகளுக்கு 21.40 கோடி ரூபாய்க்கான உயரிய ஊக்கத்தொகைகளை வழங்கினார்.

    அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    நம்முடைய அரசு அமைந்த இந்த 4½ வருடத்தில் மட்டும், இன்றைக்கு வரை சுமார் 4 ஆயிரத்து 510 விளையாட்டு வீரர்களுக்கு 150 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகையை நம்முடைய முதல்-அமைச்சர் கொடுத்திருக்கிறார்.

    4 வருடத்தில் மட்டும் இந்தியாவுலேயே இந்த அளவுக்கு எந்த மாநிலத்திலும், இவ்வளவு விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையை எந்த மாநிலத்திலும் கொடுக்கப்படவில்லை.

    இன்றைக்கு மட்டும் இவ்வளவு பேருக்கு உயரிய ஊக்கத்தொகையை கொடுத்திருக்கிறோம் என்றால், அதற்கும் நம்முடைய முதல்-அமைச்சர் தான் காரணம்.

    பொதுவாக, போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்த பிறகு தான் விளையாட்டு வீரர்களுக்கு அரசு அந்த அங்கீகாரத்தை கொடுக்கும், அந்த பரிசுத்தொகை கொடுக்கும்.

    ஆனால், நம்முடைய முதலமைச்சரும், நம்முடைய அரசு மட்டும் தான், போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்னாடியே அந்த வீரர்களை அழைத்து அவர்களுக்கான ஊக்கத் தொகையை, முன்னாடியே நிதி உதவியை செய்கின்றது நம்முடைய அரசு. நிதி உதவி மட்டும் அல்ல, நீங்கள் வெற்றி பெற்று வந்தீர்கள் என்றால், உங்களுக்கு அரசு வேலையையும் நம்முடைய அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது.

    தமிழ்நாட்டினுடைய வரலாற்றிலேயே முதன்முறையாக கடந்த வருடம் 100-க்கும் அதிகமான வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பைக் ஏற்படுத்தி கொடுக்கின்றோம்.

    அந்த வகையில், இன்றைக்கு உங்களுக்கு உயரிய ஊக்கத்தொகையை கொடுத்து இருக்கின்றோம். நீங்கள் மீண்டும் வெற்றி பெற்று வரும் போது, நம்முடைய முதல்-அமைச்சர் உங்களுக்கு அரசு வேலையும் நிச்சயம் பெற்றுத் தருவார்.

    இந்த அளவுக்கு, தமிழ்நாட்டினுடைய விளையாட்டு வீரர்களின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

    அதில் ஒரு சில பேரை மட்டும் இங்கே நான் குறிப்பிட விரும்புகின்றேன். இந்திய அளவில் மட்டும் அல்ல, சர்வதேச அளவிலும் பல சாதனைகளை செய்து கொண்டு வருகின்றீர்கள். அதற்கு சிறந்த உதாரணமாக இன்றைக்கு இந்த மேடையில் 2 பேரை அமர வைத்திருக்கின்றோம்.

    அதில் ஒருத்தர், தம்பி ஆனந்த்குமார் வேல்குமார் இங்கே வந்து இருக்கிறார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வீரரான தம்பி ஆனந்த்குமார், சமீபத்தில் சீனாவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு, இன்றைக்கு ஒட்டு மொத்த உலகத்தையும் தன்பக்கம் திரும்ப வைத்திருக்கிறார். இந்தப் போட்டியில் மொத்தம் 3 மெடல் வென்றிருக்கிறார் ஆனந்த்குமார்.

    இதன் மூலம் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை ஆனந்த்குமார் இன்றைக்கு படைத்திருக்கிறார். அவருடைய வெற்றிப்பயணத்திற்கு நம்முடைய அரசு, நாம் அத்தனைபேரும் அவருக்கு துணை நிற்போம்.

    அதே மாதிரி, இங்கு வந்திருக்கக்கூடிய செஸ் கிராண்ட் மாஸ்டர்என்று போற்றப்படும் வைஷாலி. சில நாட்களுக்கு முன்பு, ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்து மிகப்பெரிய ஒரு சாதனையை படைத்துவிட்டு வந்துள்ளார்.

    வைஷாலிக்கும் என்னென்ன தேவையோ அதையெல்லாம் செய்து கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முதலாவதாக நாம் போடும் முதலுக்கு மோசம் வராமல் இருக்குமா என்பதை உறுதி செய்யவேண்டும்.
    • முதலீட்டின் கால அளவைத் தீர்மானிக்க வேண்டும்.

    மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வம் என்னும் சிம்மாசனத்தில் அமர பல படிகளைத் தாண்டி வருகிறோம். பர்சனல் பைனான்சில், முதலீடுகளை கடன் சார்ந்தவை, பங்கு சார்ந்தவை என இரண்டாகப் பிரிக்கலாம் என்று பார்த்தோம். கடன் சார்ந்த முதலீடுகளில் போஸ்ட் ஆ பீஸ் திட்டங்கள், பேங்க் சேமிப்புத் திட்டங்கள் ஆகியவை பற்றியும் பார்த்தோம். அடுத்து வருவது பாண்ட்ஸ் எனப்படும் பத்திரங்கள். பங்குச் சந்தை வருவதற்கு முன்பே பத்திரங்கள் பிரபலம் அடைந்திருந்தன.

    பத்திரங்கள் என்றால் என்ன? கடன் வாங்குபவர்கள், கடன் தருவோரின் பணத்தை என்றைக்கு எவ்வளவு வட்டியுடன் திருப்பித் தரமுடியும் என்று எழுத்துப்பூர்வமாக தரும் உத்தரவாதமே பத்திரங்கள் எனப்படும். பேங்க் எப்.டி. ரசீது கூட ஒரு பத்திரம்தான்.

    எனக்கு நஷ்டமே வரக்கூடாது என்று உறுதியாக எண்ணுபவர்கள், நஷ்டத்தை ஏற்றுக் கொள்ள இயலாத சீனியர் சிட்டிசன்கள், குறிப்பிட்ட இடைவெளியில் வருமானம் வந்துகொண்டே இருக்கவேண்டும் என்ற தேவை உள்ளவர்கள் ஆகியோருக்கு பத்திரங்கள் கைகொடுக்கும்.

    பத்திரங்களில் அரசுப் பத்திரங்கள், கம்பெனிகள் வெளியிடும் பத்திரங்கள் என்ற இரு வகை உண்டு. ரிஸ்க் குறைந்தால், வருமானமும் குறையும் என்னும் சூத்திரத்தின்படி கம்பெனிகள் வெளியிடும் பத்திரங்களை விட அரசுப் பத்திரங்களில் ரிஸ்க்கும் குறைவு; வருமானமும் குறைவு.

    அரசுப் பத்திரங்கள்

    "அரைக் காசென்றாலும் அரண்மனைக் காசு" என்பார்கள். அதிலுள்ள நம்பகத்தன்மை அப்படி. மத்திய, மாநில அரசுகள் மற்றும் என்.ஹெச்.ஏ.ஐ., ஹட்கோ என்.டி.பி.சி. போன்ற அரசு நிறுவனங்கள், நாட்டின் உள்கட்டமைப்பு செலவுகளுக்காகவும், வளர்ச்சித் தேவைகளுக்காகவும் பத்திரங்கள் வெளியிடுகின்றன. இவற்றின் முதலீட்டுக் காலம் ஐந்து முதல் நாற்பது வருடங்கள் வரை. முன்பெல்லாம் பெரிய கம்பெனிகளுக்கும், வங்கிகளுக்கும் மட்டுமே இவற்றில் முதலீடு செய்யும் பாக்கியம் கிட்டும். தற்போது சிறு முதலீட்டாளர்களும், கோஆப்பரேடிவ் பேங்குகளும் கூட இவற்றில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    தற்போது 8.05 சதவீதம் வட்டி தரும் ஆர்பிஐ ப்ளோட்டிங் ரேட் ஏழு வருட சேவிங்ஸ் பத்திரங்கள் நடப்பில் இருக்கின்றன. குறைந்த பட்ச முதலீடு ரூ. 1000/. உச்ச வரம்பு கிடையாது. இவற்றின் வட்டி விகிதம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றம் அடையும் வாய்ப்பு உண்டு. ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 தேதிகளில் வட்டி வழங்கப்படும். எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எப்.சி. போன்ற வங்கிகள் மூலமும், போஸ்ட் ஆ பீஸ் மூலமும் இந்தப் பத்திரங்களை வாங்க முடியும். அல்லது நேரடியாக ஆர்.பி.ஐ. ரீடெய்ல் டைரக்ட் போர்டல் மூலமும் வாங்கலாம்.

    சுந்தரி ஜகதீசன்


     

    சீரோ கூப்பன் பத்திரங்களில் வட்டி விகிதம் குறிப்பிடப்படாது. முகமதிப்பு மட்டுமே குறிப்பிடப்படும். உதாரணமாக ஆயிரம் ரூபாய் முகமதிப்புள்ள பத்திரங்கள் ரூ.800/க்கு விற்கப்படலாம். இவற்றுக்கு அவ்வப்போது வட்டி வழங்கப்படாது. முதிர்வு காலத்தில் முகமதிப்பான ஆயிரம் ரூபாய் தரப்படும்.

    ஆகவே அவ்வப்போது வட்டி தேவைப்படுவோருக்கு இது உதவாது.

    டேக்ஸ் ப்ரீ பத்திரங்களின் வட்டிக்கு வரி கிடையாது. இன்றைய தேதியில் 6 சதவீதம் வட்டி (வரி இல்லாதது) கிடைப்பது வங்கி வட்டி விகிதத்தை விடக் கவர்ச்சியானது அல்லவா? ஆனால் 2016க்குப் பின் இவை புதிதாக வெளியிடப்படவில்லை. அதற்கு முந்தைய பத்திரங்கள் சந்தையில் சற்று அதிக விலைக்குக் கிடைக்கின்றன.

    மத்திய அரசுப் பத்திரங்களின் முதிர்வுகாலம் நீண்டது; இடையில் அவசரத் தேவைக்காக க்ளோஸ் செய்ய முடியாது; தேவையென்றால் சந்தையில்தான் விற்கமுடியும் என்ற நெகடிவ் பாயின்ட்டாககுறைபாடு இருந்தாலும், அரசு பத்திரங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இவற்றில் முதலீடு செய்யலாம்.

    மாநில அரசுப் பத்திரங்கள்:

    தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் ஒரு என்.பி.எப்.சி. நிறுவனம். இது வெளியிடும் பாண்டுகளில் பத்திரங்கள் பிக்சட் டிபாசிட் வகையைச் சார்ந்தவை. மாநில அரசின் ஆதரவுடன் இந்தப் பத்திரங்கள் வெளியிடப்படுவதால் ஓரளவு உத்தரவாதம் உள்ளது என்று நம்பலாம். இவற்றில் முதலீட்டுக் காலம் 1 வருடம் முதல் 5 வருடங்கள் வரை. வட்டி விகிதம் 8.10 சதவீதம் முதல் 9.31 சதவீதம் வரை.

    வட்டியை குறிப்பிட்ட இடைவெளிகளில் வாங்கிக் கொள்ளலாம்; அல்லது முதல் + வட்டி என்று முதிர்வுகாலத்தில் மொத்தமாகவும் வாங்கிக் கொள்ளலாம். மினிமம் முதலீடு 50000 ரூபாய். பொர்ம்ரூ. ஒரு லட்சம். 15 ஜி அல்லது ஹெச் படிவம் கொடுத்தாசமர்ப்பித்தால் மூலவரிப்பிடித்தம் (Tax Deducteடிat Source) இருக்காது.

    முதல் போட்டு மூன்று மாதங்களுக்கு அப்புறம் ப்ரீமச்சூர் க்ளோஷர் அனுமதி பண்ணுவாங்க. ஆனால் பெனால்டி அதிகம். 2-3 பர்சன்ட். இந்த பாண்டுகளை மூன்று மாதங்களுக்குப் பிறகு அவசரத் தேவைக்கு க்ளோஸ் செய்யலாம். ஆனால் 2 சதவீதம் - 3 சதவீதம் அளவு பெனால்ட்டி இருக்கும். கடன் தேவை என்றாலும் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வாங்கிக்கலாம். என்.ஆர்.ஐ.கள் கூட இதில் முதலீடு செய்ய முடியும். ஆனால் முதிர்வுத் தொகையை வேற்று நாடுகளுக்கு அனுப்ப முடியாது. வங்கியின் விதிமுறைகளை சரியாகக் கடைப்பிடிக்கும் இந்த முதலீடு, ஓரளவு பாதுகாப்புடன் நல்ல வருமானமும் தரும் என்பதால் பரிசீலிக்கத்தகுந்த ஒன்று.

    பெருநகர கார்ப்பரேஷன்கள் கூட குடிநீர் வழங்கல், தெருப் பராமரிப்பு, துப்புரவுப் பணிகள் போன்ற பணிகளுக்காக பத்திரங்கள் வெளியிடுகின்றன. சென்னை, பெங்களூரு, அஹமதாபாத், இந்தூர் போன்ற நகர முனிசிபாலிட்டிகள் இது போன்ற பத்திரங்களை வழங்கியுள்ளன. திருப்பூர், திருச்சி, கோவை போன்ற நகரங்களும் பத்திரங்கள் வெளியிட அனுமதி வேண்டிக் காத்திருக்கின்றன.

    கார்ப்பரேட் பாண்டுகள்:

    உற்பத்தி நிறுவனங்கள், பொருளாதார நிறுவனங்கள், என்.பி.எப்.சி. போன்ற எந்த நிறுவனமானாலும், ரூ. 100 கோடிக்கு மேல் நிகரமதிப்பு இருந்தால் சந்தையில் பத்திரங்களை விற்று, முதல் திரட்டலாம். பத்திரங்கள் வெளியிடும் முன்பு இக்ரா, கேர், க்ரிசில் போன்ற ரேட்டிங் நிறுவனங்களிடம் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, ஒரு தரநிர்ணய சான்றிதழைப் பெற வேண்டும். அந்த நிறுவனங்கள் கம்பெனியின் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்து, கம்பெனியின் பிசினஸ் ரிஸ்க், பொருளாதார ரிஸ்க், மேலாண்மைத்தரம், பணத்தை திருப்பித் தரும் வலிமை இவற்றைப் பொறுத்து ஏஏஏ முதல் டிவரை தரச்சான்றிதழ் அளிக்கின்றன.

    ஏஏஏ நிறுவனங்களில் குறைந்த வட்டியும், டிநிறுவனங்களில் அதிக வட்டியும் கிடைக்கும். Aக்குக் குறைந்த கம்பெனிகளில் முதலீடு செய்வது ரிஸ்க்தான். வட்டி வருமானம் ஆண்டுக்கு ரூ. ஐயாயிரத்தை தாண்டுமெனில், 15 ஜி/ஹெச் படிவங்கள் சமர்ப்பித்து மூலவரிப்பிடித்தத்தை தவிர்க்கலாம். அவசரமாகப் பணம் தேவைப்பட்டால், சந்தையில் இவற்றை விற்க இயலும்.

    சில கம்பெனிகள் அவசரம் என்றால் முதிர்வு காலத்துக்கு முன்பு பணத்தைப் பெற அனுமதித்தாலும், பெனால்ட்டி விதிக்கும். ஆகவே நிறுவனப் பத்திரங்களில் முதலீடு செய்ய விரும்புவோர், தங்களால் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய இயலுமா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

    கம்பெனி பாண்டுகளில் முதலீடு செய்யும்போது பார்க்கவேண்டிய விஷயங்கள்:

    முதலாவதாக நாம் போடும் முதலுக்கு மோசம் வராமல் இருக்குமா என்பதை உறுதி செய்யவேண்டும். நிறுவனத்துக்கு ரேட்டிங் நிறுவனங்கள் கொடுத்த ரேட்டிங், ஒற்றை Aக்குக் கீழே இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பல்ல. முதலீடு செய்த பிறகும் அவ்வப்போது ரேட்டிங்கை செக் செய்வதுடன், சந்தையில் நிறுவனம் குறித்து ஏதாவது எதிர்மறைத் தகவல்கள் வருகிறதா என்றும் கவனிக்க வேண்டும். நிறுவனம் நஷ்டத்தை நோக்கிச் செல்வதாகத் தெரிந்தால் நம் முதலீட்டை வெளியே எடுத்துவிடுவது நல்லது.

    இரண்டாவதாக, நிறுவனம் தரும் வட்டி விகிதம் சந்தையின் போக்குக்கு ஒத்து வருகிறதா என்று பார்க்க வேண்டும். மற்ற நிறுவனங்கள் 8 சதவீதம் வட்டி தரும்போது ஒரு நிறுவனம் மட்டும் 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறினால், அது நமக்காக விரிக்கப்பட்ட வலை என்று புரிந்துகொள்ள வேண்டும்.

    பொதுவாக சீனியர் சிடிசன்களுக்கு 0.25 சதவீதம் பர்சென்ட், ஆன்லைனில் முதலீடு செய்தால் ஒரு 0.24 சதவீதம், ஒரு முறை செய்த முதலீட்டை அதே நிறுவனத்திலேயே புதுப்பித்தால் அதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு 0.10 சதவீதம் என்று கிட்டத்தட்ட பேங்க் வட்டியை விட 2 -3 பர்சென்ட் அதிக வருமானம் கிடைக்கும். வங்கிகள் முழுகினால் நம் டெபாசிட்டுக்கு ரூ. ஐந்து லட்சம் வரையிலான காப்பீடு உண்டு. அதுபோன்ற காப்பீடு இந்தப் பத்திரங்களுக்கு இல்லை. ஆகவே பேங்கை விட ரிஸ்க்கும் அதிகம்; வருமானமும் அதிகம்.

    மூன்றாவதாக, ஒரு வருடம் / மூன்று வருடம் / ஐந்து வருடம்/ பத்து வருடம் என்று தரப்படும் கால அளவுகளில் எதைத் தேர்வு செய்யலாம் என்று தீர ஆலோசிக்கவேண்டும். ஏனெனில், இந்த பத்திரங்களில் செய்த முதலீட்டை முதிர்ச்சிக்கு முன்பாக எடுத்தால் பெனால்டி அதிகம். ஆகவே நம்மால் எவ்வளவு வருடங்கள் அந்தப் பணத்தை அவசரத் தேவைக்குத் தொடாமல் இருக்கமுடியும் என்பதை முதலில் தெரிந்துகொண்டு, பின்னர்தான் முதலீட்டின் கால அளவைத் தீர்மானிக்க வேண்டும்.

    டாட்டா ஸ்டீல், டாட்டா ஹௌசிங் கேபிடல், ஹெச்.டி.எப்.சி., எல் அண்ட் டி பைனான்ஸ் போன்ற ஆரோக்கியமான நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களில், நம் மொத்த முதலீட்டில் பத்து சதவிகித அளவு முதலீடு செய்தால் பாதுகாப்புக்குப் பாதுகாப்பு; வருமானத்திற்கு வருமானம்.

    உங்களிடம் ஏற்கெனவே அரசு / நிறுவனப்பத்திரங்கள் உள்ளனவா? அவற்றில் கிடைக்கும் வட்டி விகிதங்கள் என்னென்ன?

    • நேதன்யாகு போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது.
    • ஜிப்ரால்டர் ஜலசந்தி வழியாக அட்லாண்டிக் பெருங்கடல் வான்பரப்பில் நுழைந்தது.

    காசாவில் செய்து வரும் படுகொலைகளுக்காக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த 2024 நவம்பர் 21 அன்று கைது வாரண்ட் பிறப்பித்தது.

    விசாரணையில் நேதன்யாகு மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகவும் கண்டறியபட்டது.

    தற்போது அமரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்று வரும் 80வது ஐநா கூட்டத்தில் பேசுவதற்காக நேதன்யாகு அமெரிக்கா பயணப்பட்டுள்ளார்.

    சர்வதேச நீதிமன்றத்தின் கைது வாரண்ட் காரணமாக, அமெரிக்காவுக்கான தனது பயணத்தின் போது நேதன்யாகு தனது பாதையை மாற்றியுள்ளார்.

    சர்வதேச நீதிமன்றத்துடன் ஒப்பந்தங்களைக் கொண்ட பல ஐரோப்பிய நாடுகள், நேதன்யாகு தங்கள் எல்லைகளைத் தாண்டினால் கைது செய்யப்படுவார் என்று கூறியிருந்தன.

    இதைக் கருத்தில் கொண்டு, ஐ.சி.சி.யுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்து நேதன்யாகுவின் பயணம் அமைந்தது.

    இஸ்ரேலில் இருந்து அமெரிக்கா செல்ல பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், அயர்லாந்து, இங்கிலாந்து வழியே செல்வதே நேர்வழி ஆகும். ஆனால் அவ்வழியை தவிர்த்த நேதன்யாகுவின் விமானம் கிரீஸ் மற்றும் இத்தாலியை ஒட்டி பயணித்து, மத்தியதரைக் கடலைக் கடந்து ஜிப்ரால்டர் ஜலசந்தி வழியாக அட்லாண்டிக் பெருங்கடல் வான்பரப்பில் நுழைந்தது. மத்திய தரைக்கடல் - அட்லாண்டிக் கடலை இணைப்பது ஜிப்ரால்டர் ஜலசந்தி ஆகும்.

    கடந்த பிப்ரவரி, ஜூலை அமெரிக்கா பயணித்த போதும் நெதன்யாகுவின் விமானம் ஐரோப்பிய நாடுகளை தவிர்த்தே பயணித்தது. தற்போது அவர் பயணித்த பாதையின் ரேடார் விவரங்கள் வைரலாகி வருகின்றன.  

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
    • இங்கிலாந்து தொடரில் இடம் பெற்ற கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.

    மும்பை:

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில், இங்கிலாந்து தொடரில் இடம் பெற்ற கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக 7 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் நீக்கப்பட்டிருப்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகியது.

    அந்த கருத்துக்கு இந்திய அணியின் தேர்வாளர் அஜித் அகர்கர், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம் என்றும் அதை அவர் பூர்த்தி செய்யவில்லை என கூறினார்.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தேர்வை நான் எதிர்பார்த்தேன் என கருண் நாயர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆமாம், நான் இந்த தேர்வை எதிர்பார்த்தேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வார்த்தைகள் இல்லை. எனக்கு அதிக கருத்துகள் எதுவும் இல்லை. பதில் சொல்வது எனக்கு மிகவும் கடினம்.

    தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களிடம்தான் கேட்க வேண்டும். ஒரே விஷயம் என்னவென்றால், கடைசி டெஸ்டில் முதல் இன்னிங்சில் வேறு யாரும் ரன் அடிக்காதபோது நான் அரை சதம் அடித்தேன். குறிப்பாக நாங்கள் வென்ற கடைசி ஆட்டத்தில் அணிக்காக நான் பங்களித்ததாக நினைத்தேன்.

    என கருண் நாயர் கூறினார்.

    • இளைஞர்கள் போராட்டத்தால் பிரதமர் ஷர்மா ஒலி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    • அவருக்குப் பதிலாக சுஷிலா கார்கி பிரதமராக பதவி ஏற்ற நிலையில், அடுத்த வருடம் பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

    இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அரசு ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி இளைஞர்கள் தலைமையிலான Gen Z குரூப் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்தது. இளைஞர்கள் பிரதமர் வீட்டை சூறையாடினர். பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனைத்தொடர்ந்து பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் வன்முறை முடிவுக்கு வந்தது. முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.

    பிரதமராக பதவி ஏற்றதும், அடுத்த வருடம் மார்ச் மாதம் 5ஆம் தேதி பொதுத்தேர்தலை நடத்துவற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் நேபாள அதிபர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வயதை 18 வயதில் இருந்து, 16ஆக குறைப்பதற்கான சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    இதன்மூலம் நேபாளத்தில் 16 வயது நிறைவடைந்தோர், வாக்காளர் பட்டியலில் தனது பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். பொதுவாக தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக பெயர் சேர்ப்பதற்கான காலஅவகாசம் வழங்கப்படும். தற்போது இப்போதில் இருந்தே விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால், 16 வயதில் விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டை பெற்றாலும், 18 வயது நிரம்பிய பின்னர்தான் வாக்கு செலுத்த முடியும்.

    • தேர்ந்தெடுக்கப்படட்ட மாணவிகளிடம் பெண் ஆசிரியைகள் பேசி அவர்களை சுவாமியின் ஆபீசுக்கு அல்லது அறைக்கு அனுப்பி வைப்பார்கள்.
    • இந்த பெண் ஆசிரியர்களில் சிலர் ஏற்கனேவே அக்கல்லூரியில் பயின்று சாமியாரின் வலையில் விழுந்த முன்னாள் மாணவிகளே ஆவர்.

    டெல்லியில் பிரபல சாமியாராக வளம் வந்த சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளி ஆகியுள்ளார்.

    வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஆசிரமத்தின் இயக்குனராக இருந்த அவர் மீது, ஆசிரமத்தின் கீழ் இயங்கும் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பயின்று வந்த 17 மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர்.

    பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவு (EWS) ஸ்காலர்ஷிப் உடன் முதுநிலை டிப்ளமோ பயின்று வந்த அம்மாணவிகளை அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி தனது இச்சைக்கு இணங்க வைக்க பல்வேறு வழிகளில் முயன்றுள்ளார்.

    சாமியாரின் நோக்கங்களுக்கு இணங்குமாறு சில ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் தங்களை கட்டாயப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீஸ், மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்த ஆசிரம வார்டன்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் துன்புறுத்தல் உள்பட பிரிவுகளின் கீழ் சாமியார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதாயறிந்த சைதன்யானந்த சரஸ்வதி தலைமறைவாகி உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சாமியார் எவ்வாறு மாணவிகளை கட்டாயப்படுத்தினார் என்பது குறித்து அந்த கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட  முன்னாள் மாணவர் ஒருவர் முன்வந்து பொதுவெளியில் பேசியுள்ளார். 

    செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "சாமியார், மாணவிகளை இலவசமாக வெளிநாட்டு பயணம், ஐபோன்கள், சொகுசு கார்கள், லேப்டாப்களை வழங்குவதாக அட்மிஷன் போடும் சமயத்தில் இருந்தே ஆசை காட்டத் தொடங்குவார்.

    புதிய மாணவிகள் கல்லூரியில் சேர்ந்து வகுப்புகளுக்கு வரத் தொடங்கியதும் அவர்களில் யாரை குறிவைப்பது என்ற செயல்முறை தொடங்கும்.

    அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதிக மதிப்பெண்கள், வெளிநாட்டு இண்டர்ன்ஷிப் வாய்ப்புகள், பெரிய நிறுவனங்களில் பிளேஸ்மென்ட் வாய்ப்புகள் ஆகியவை வழங்கப்படும். இதை ஏற்று ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கை கல்லூரியில் ஒவ்வொரு நாளும் கடினமானதாக மாறும்.

    இந்த மாணவிகள் இரவு தங்குவதற்கு கட்டப்படுத்தப்படுவர். யாருடன் பேச அனுமதிக்கப்படாமல் 24 மணிநேரமும் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.

    இருந்தும் அடம் பிடிக்கும் சில பெண்கள் காட்டமாக நடத்தப்பட்டு கல்லூரியில் இருந்தே நீக்கப்படுவார்கள். அந்த பெண்களின் பெற்றோர்களுக்கும் அழுத்தம் தரப்படும்.

    பெண்களை எப்படி தேர்ந்தெடுப்பார்கள் என்று கேட்டால், சைத்னயானந்த சரஸ்வதியே தனிப்பட்ட முறையில் இந்த செயல்முறையில் ஈடுபடுவார்.

    ஒவ்வொரு மாணவியிடமும் தனித் தனியே சுவாமி பேசுவார். இதன் பின் பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவரே சில சமயம் பாடம் பெண்களுக்கு தனியே பாடம் எடுக்க வருவார்.

    இந்த சமயத்திலும் அவர் தனக்கேற்ற மாணவிகளை தேர்ந்தெடுப்பார். இதன் பின் சுவாமியால் தேர்ந்தெடுக்கப்படட்ட மாணவிகளிடம் பெண் ஆசிரியைகள் பேசி அவர்களை சுவாமியின் ஆபீசுக்கு அல்லது அறைக்கு அனுப்பி வைப்பார்கள்.

    இந்த பெண் ஆசிரியர்களில் சிலர் ஏற்கனேவே அக்கல்லூரியில் பயின்று சாமியாரின் வலையில் விழுந்த முன்னாள் மாணவிகளே ஆவர். அவர்கள் சாமியார் அளித்த வெளிநாடு பயணம் உள்ளிட்ட சலுகைகளை ஏற்றுக்கொண்டவர்கள்.

    2016 லேயே சாமியார் மீது ஒரு ஜூனியர் மாணவி போலீசில் புகார் அளித்தார். ஆனால் பின்னர் சாமியாரின் தரப்பு வெளிநாட்டில் வேலை, unlimited ஷாப்பிங் ஆகிய ஆசை காட்டி அவரை சமரசம் செய்ய முயன்றனர்.

    அந்த பெண்ணை ஹாஸ்டலில் அடைத்து வைத்து யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் செய்தனர்.

    அப்பெண்ணை சாமியாருடன் 2 நாள் மதுரா பயணம் மேற்கொள்ள நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினர். அந்த பெண் பயந்து தனது வீட்டுக்கு ஓடிச் சென்றார். ஆனால் சாமியாரின் ஆட்கள் வீட்டுக்கு சென்று அவரை அழைத்துச் செல்ல முயன்றனர். பெண்ணின் தந்தை தலையிட்டதை அவர்கள் அங்கிருந்து அகன்றனர்.

    மாணவிகளின் ஒரிஜினல் டாகுமெண்ட்களை அட்மிஷனின் போதே வாங்கி வைத்துக்கொள்வார்கள். இதை வைத்து சாமியார் மாணவிகளை மிரட்டுவார். கல்லூரியில் உள்ள 170 சிசிடிவி கேமராக்களும் சாமியாரின் நேரடி கட்டுப்பாட்டில் தான் இருக்கும். அவர் மீது தற்போது எழுந்துள்ள அனைத்து புகார்களும் முற்றிலும் உண்மை" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் சாமியார் பல அரசியல்வாதிகளுடன் இருப்பதுபோல் போலி புகைப்படங்களை வைத்துக்கொண்டும், சொகுசு கார்கள் வைத்துக்கொண்டும், தன்னை அமெரிக்க தூதர் என கூறிக்கொண்டும் ஏமாற்றி வந்ததாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

    • முதல் இன்னிங்சில் இந்தியா 194 ரன்களில் சுருண்டு 226 ரன்கள் பின்தங்கியிருந்தது.
    • 2ஆவது இன்னிங்சில ஆஸ்திரேலியா ஏ அணி 226 ரன்னில் சுருண்டது.

    இந்தியா- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையில் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்றது. 2ஆவது டெஸ்ட் லக்னோவில் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ முதல் இன்னிங்சில் 420 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ 194 ரன்களில் சுருண்டது. சாய் சுதர்சன் மட்டும் தாக்குப்பிடித்து 75 ரன்கள் அடித்தார்.

    பின்னர் 226 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா ஏ 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. குர்னூர் பிரார், மனாவ் சுதர் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் மற்றும் யாஷ் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்த ஆஸ்திரேலியா ஏ 2ஆவது இன்னிங்சில் 185 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா ஏ 411 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    பின்னர் 412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களம் இறங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஏ 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்தது, சாய் சுதர்சன் 44 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இன்று 4ஆவது நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. சாய் சுதர்சனுடன் இணைந்து கே.எல். ராகுல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாய் சுதர்சன் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். துருவ் ஜுரெல் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    கே.எல். ராகுல் 176 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா ஏ அணி 91.3 ஓவரில் 413 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2ஆவது போட்டியில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 30ஆம் தேதி தொடங்குகிறது.

    • இது வெப்பநிலையைப் பொறுத்து பேனலை கருப்பு நிறத்தில் இருந்து தங்க நிறத்திற்கு மாற்றும் திறன் கொண்டிருக்கிறது.
    • இந்த சாதனம் ஆண்ட்ராயடு 15 சார்ந்த கலர் ஓஎஸ் 15இல் இயங்குகிறது.

    இந்தியாவில் ரெனோ 14 5ஜி மாடலின் புதிய வெர்ஷனை ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது கலாச்சார ரீதியாக ஈர்க்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் புதுமையான ஃபினிஷ் கொண்டுள்ளது. இந்த மாடல் வழக்கமான நிறுவனத்தின் அதே அம்சங்களுடன் வருகிறது. அதே நேரத்தில் அதன் பின்புற பேனலில் தனிப்பயனாக்கப்பட்ட தோற்றம் மற்றும் தனித்துவமான தொழில்நுட்பம் உள்ளது.

    புதிய வெர்ஷன் ஒப்போ ரெனோ 14 5ஜி தீபாவளி எடிஷன் என அழைக்கப்படுகிறது. இது மண்டலா மற்றும் மயில் உள்ளிட்ட இந்திய மையக்கருத்துகளைச் சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒளி மற்றும் நல்லிணக்கத்தைக் குறிக்கும் சுடர் போன்ற ஃபினிஷ் கொண்டுள்ளது. இவை அனைத்தும் பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இது மாறுபாட்டையும் ஆழத்தையும் கொண்டுவருகிறது.

    ஸ்பெஷல் எடிஷன் மாடலை வேறுபடுத்தும் வகையில் ஒப்போ நிறுவனத்தின் க்ளோ-ஷிஃப்ட் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. இது வெப்பநிலையைப் பொறுத்து பேனலை கருப்பு நிறத்தில் இருந்து தங்க நிறத்திற்கு மாற்றும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்த நடைமுறை மற்றும் தோற்றம் ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்து இருக்கிறது. இந்த சாதனம் ஏரோ-ஸ்பேஸ் கிரேடு ஃபிரேம், கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு மற்றும் டஸ்ட், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்கான IP66, IP68 மற்றும் IP69 மதிப்பீடுகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

    புதிய ஒப்போ ரெனோ 14 5ஜி ஸ்பெஷல் எடிஷன் 8GB ரேம், 256GB மெமரி மாடலின் விலை ரூ.39,999 ஆகும். பண்டிகை கால தள்ளுபடி செய்யப்பட்டு இந்த மாடலின் விலை ரூ.36,999 ஆகக் குறைகிறது. வாடிக்கையாளர்கள் கட்டணமில்லா மாத தவணை, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மூலம் ரூ.3,000 வரை கேஷ்பேக், ரூ.3,000 எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

    ஒப்போ ரெனோ 14 5ஜி தீபாவளி எடிஷன் அம்சங்கள்

    இந்த ஸ்மார்ட்போன் 120Hz ரிப்ரெஷ் ரேட் உடன் 6.6 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது LPDDR5X RAM மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ், மீடியாடெக் டிமென்சிட்டி 8350 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இத்துடன் 80W சார்ஜிங், 6000mAh பேட்டரி கொண்டுள்ளது.

    கேமராவை பொருத்தவரை OIS உடன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைடு மற்றும் 3.5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை அடங்கும். இத்துடன் 50MP ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமரா சேர்க்கப்பட்டுள்ளது.

    இந்த சாதனம் ஆண்ட்ராயடு 15 சார்ந்த கலர் ஓஎஸ் 15இல் இயங்குகிறது. மேலும் இரட்டை ஸ்பீக்கர்கள், இ-சிம் சப்போர்ட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், மேம்பட்ட கூலிங் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

    • சியோமி பேட் 8 ப்ரோ மாடல் ஹைப்பர் ஓஎஸ் 3 கொண்டிருக்கிறது.
    • கேமராவை பொருத்தவரை 50MP பிரைமரி கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    சியோமி 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் சியோமி பேட் 8 மற்றும் சியோமி பேட் 8 ப்ரோ ஆகியவை நேற்று சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய டேப்லெட்கள் ஸ்னாப்டிராகன் சிப்செட், 144Hz ரிப்ரெஷ் ரேட் உடன் 11.2-இன்ச் ஸ்கிரீன் கொண்டுள்ளன. இவை ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 3 மூலம் இயங்குகிறது.

    புதிய டேப்லெட் ஸ்டான்டர்டு மாடல் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட் கொண்டிருக்கிறது. சியோமி பேட் 8 ப்ரோ மாலில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த இரு மாடல்களிலும் 67W வரை சார்ஜிங் மற்றும் 9,200mAh பேட்டரியை கொண்டுள்ளது.

    சியோமி பேட் 8 ப்ரோ அம்சங்கள்:

    சியோமி பேட் 8 ப்ரோ மாடல் ஹைப்பர் ஓஎஸ் 3 கொண்டிருக்கிறது. இதில் 11.2-இன்ச் 3.2K (2136x3200 பிக்சல்) LCD ஸ்கிரீன், 144Hz ரிப்ரெஷ் ரேட்மற்றும் TUV ரைன்லேண்ட் சான்றிதழ் கொண்டுள்ளது.

    இந்த புதிய டேப்லெட் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டில் இயங்குகிறது. அட்ரினோ GPU உடன் இணைந்து, 16GB வரை ரேம் மற்றும் 512GB வரையிலான மெமரியுடன் வருகிறது. கேமராவை பொருத்தவரை 50MP பிரைமரி கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    சியோமி பேட்8 ப்ரோ மாடல் 5ஜி, ப்ளூடூத் 5.4, வைபை 7 மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட், பக்கவாட்டில் கைரேகை சென்சார், டால்பி அட்மோஸ் ஆதரவுடன் குவாட் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. சியோமி பேட்8 ப்ரோ மாடல் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 9,200mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    சியோமி பேட் 8 அம்சங்கள்:

    சியோமி பேட் 8 மாடலில் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட், 12GB ரேம், 256GB மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதில் 13MP பிரைமரி கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமரா உள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் பேட்8 ப்ரோ மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் 9,200mAh பேட்டரி மற்றும் 45W சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்கள் பேட் 8 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    சியோமி பேட் 8, சியோமி பேட் 8 ப்ரோ விலை

    சியோமி 8 ப்ரோ மாடலின் 8GB + 128GB மாடலின் விலை CNY 2,999 (இந்திய மதிப்பில் ரூ. 34,500) என தொடங்குகிறது. இதன் 8GB + 256GB மாடல் CNY 3,099 (இந்திய மதிப்பில் ரூ. 38,000), 12GB + 256GB மாடல் CNY 3,399 (இந்திய மதிப்பில் ரூ. 42,700), 12GB + 512GB மாடல் CNY 3,699 (இந்திய மதிப்பில் ரூ. 46,000) மற்றும் 16GB + 512GB மாடல் CNY 3,899 (இந்திய மதிப்பில் ரூ. 48,000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சியோமி பேட் 8 மாடலின் 8GB + 128GB மாடல் CNY 2,199 (இந்திய மதிப்பில் ரூ. 27,500) இல் தொடங்குகிறது. 8GB + 256GB மாடல் CNY 2,699 (இந்திய மதிப்பில் ரூ. 27,700) மற்றும் 12GB + 256GB மாடல் CNY 2,799 (இந்திய மதிப்பில் ரூ. 30,600) விலையில் கிடைக்கிறது.

    ×