என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இதுபோன்ற வீடியோக்கள் மட்டுமின்றி முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதுபோன்று கருத்துகளை பதிவிடும் நபர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறையினரை குற்றம் சாட்டியும், குறிப்பிட்ட கட்சி மீது களங்கம் விளைவிக்கும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இப்படி அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை தலைமை இயக்குனரகம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தியான பதிவுகளை வெளியிட்ட 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகியான சகாயம், மாங்காடு பகுதியைச் சேர்ந்த விஜய் கட்சி உறுப்பினர் சிவனேஸ்வரன், ஆவடியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான சரத்குமார் ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வீடியோ வெளியிட்டதாக சென்னையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெலிக்சை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர மேலும் 22 பேர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளனர். இதை மீறி, செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசில் சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கென்று ஏற்கனவே தனிப்பிரிவு உள்ளது. அவர்கள் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.
- இது ஒரு அவமான செயல், அகிம்சையின் மரபு மீதான தாக்குதல்.
- இது வெறும் சிலையை சேதப்படுத்தியது மட்டுமல்ல. அகிம்சை சித்தாந்தத்தின் மீதான வன்முறை தாக்குதல்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நாளை மறுதினம் கொண்டாட இருக்கும் நிலையில், லண்டன் பல்கலைக்கழகம் அருகே உள்ள அவரது சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் மகாத்மா காந்தி சிலை கடந்த 1968 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது வெண்கல சிலையாகும்.
சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் "இது ஒரு அவமான செயல், அகிம்சையின் மரபு மீதான தாக்குதல். இது வெறும் சிலையை சேதப்படுத்தியது மட்டுமல்ல. இன்னும் 3 நாட்களில் சர்வதேச அகிம்சை தினம் வரும் நிலையில், அகிம்சை சித்தாந்தத்தின் மீதான வன்முறை தாக்குதல்" எனத் தெரிவித்துள்ளது.
- உண்மையில் விஜயின் உண்மையான தொண்டர்களோ, ரசிகர்களோ அப்படி செய்ய வாய்ப்பில்லை.
- ஒருவேளை காவலாளி அஜித்குமார் போன்று என் கணவரையும் போலீசார் பயங்கரம் ஆக தாக்குவார்களோ என்ற பயம் உள்ளது.
கரூர்:
கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி ராணி கண்ணீருடன் கூறியதாவது:-
எங்கள் குடும்பம் முழுவதுமே விஜயின் தீவிர ரசிகர்கள். விஜய் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே எனது கணவர் அவரின் ரசிகராக இருந்து வருகிறார். கடந்த 27-ம் தேதி பிரசாரம் நடைபெறுவதற்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு கிளம்பி சென்றவர்தான். இப்போது வரை அவர் வீடு திரும்பவில்லை. எங்கு இருக்கிறார்... எப்படி இருக்கிறார் என்பது தெரியவில்லை.
ஆனால், அவர் கைது செய்யப்பட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வந்தது. நானும் விஜயின் தீவிர ரசிகை. பிரசாரம் நடைபெற்ற இடத்திற்கு நானும் எனது 2 மகன்களும் சென்றிருந்தோம். எனது பிள்ளைகளை மிகவும் பத்திரமான இடத்தில் அமர வைத்துவிட்டு என் தோழிகளுடன் நடனமாடி செல்பி எடுத்து உற்சாகமாகத்தான் இருந்தோம். அங்கு எல்லோருமே அப்டித்தான் இருந்தார்கள்.
விஜய் பிரசார இடத்திற்கு வரும் வரை அங்கு எந்த பிரச்சினையும் இருந்ததாக தெரியவில்லை. அவர் பிரசார வாகனம் வந்து நின்று பேச ஆரம்பித்த பிறகுதான் சலசலப்பு ஆரம்பித்தது. செருப்பு வீச்சு நடந்த பிறகு ஒருத்தர் ஒருவரை தள்ளி விடுவது, அடிப்பது போன்ற நிகழ்வுகள் எல்லாம் தொடங்கியது.
உண்மையில் விஜயின் உண்மையான தொண்டர்களோ, ரசிகர்களோ அப்படி செய்ய வாய்ப்பில்லை. வேண்டும் என்றே ஒரு கும்பல் உள்ளே இறக்கிவிடப்பட்டு அடிதடி நடத்தியது போல்தான் இருந்தது. இறந்தவர்களில் பெரும்பாலானோரை கழுத்தில் மிதித்தும், சாக்கடை பள்ளத்தில் தள்ளியும், அவர்கள் மீது விழுந்து மிதித்தும்தான் கொன்றார்கள்.
சம்பவ இடத்தில் இருந்து நான் பார்த்தேன் என்பதை விட எனக்கும் அப்படியான ஒரு அனுபவம்தான் கிடைத்தது. என்னையும் அருகில் இருந்த சாக்கடை பள்ளத்தில் தள்ளி கழுத்தில் கால் வைத்து மிதித்தார்கள். மிகவும் சிரமப்பட்டுதான் தப்பித்து வந்தேன். நானும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நேற்றுதான் வீடு திரும்பினேன்.
என் கணவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்ததே தவிர அது தொடர்பான வீடியோ எதுவும் வரவில்லை. பிரசாரம் முடிவதற்கு முன்பு வரை அவர் எங்களிடம் பேசிக்கொண்டுதான் இருந்தார். ஆனால், இப்போது அவரை பற்றி எந்த தகவலும் எனக்கு தெரியவில்லை. என்னிடம் இதுவரை காவல்துறையும் எந்த தகவலும் சொல்லவில்லை.
ஒருவேளை காவலாளி அஜித்குமார் போன்று என் கணவரையும் போலீசார் பயங்கரம் ஆக தாக்குவார்களோ என்ற பயம் உள்ளது. நான் அரசுக்கும் காவல்துறைக்கும் ஒரே ஒரு வேண்டுகோள்தான் வைக்கிறேன். எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். தயவு செய்து என் கணவரை எங்கு வைத்து இருக்கிறீர்கள்.. அவர் எப்படி இருக்கிறார் என்பதை மட்டும் சொல்லுங்கள். அவரை என் கண்ணில் காட்டுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
- ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் 9-வது நாளான இன்று நிலக்கடலை சுண்டல், சாம்பார் சாதம், பால் கொழுக்கட்டை செய்து சித்திதாத்ரி தேவிக்கு படைக்கலாம்.
முதலில், நிலக்கடலை சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..
நிலக்கடலை சுண்டல்
தேவையான பொருட்கள்:
நிலக்கடலை - 1 கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
நிலக்கடலையை 1 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து குக்கரில் 4-5 விசில் வரும் வரை அல்லது மென்மையாகும் வரை வேகவைத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
கடுகு வெடித்ததும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இப்போது வேகவைத்த நிலக்கடலை, உப்பு சேர்த்து நன்கு கிளறி, தேங்காய் துருவல் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
சுவையான நிலக்கடலை சுண்டல் தயார்.
இந்த சுண்டலை நவராத்திரி மட்டுமின்றி, எப்போது வேண்டுமானாலும் ஆரோக்கியமான சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
சாம்பார் சாதம்
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு
தேவையான காய்கறிகள் (உதாரணமாக, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்றவை)
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
புளி
உப்பு
தாளிப்புக்கான பொருட்கள் (கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம்)

செய்முறை
முதலில் துவரம்பருப்பை தேவையான அளவு தண்ணீரில், மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு சேர்க்காமல், தேவையான காய்கறிகள் மற்றும் தக்காளி சேர்த்து வேகவைத்து, பிறகு புளி, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
வேகவைத்த பருப்பை சேர்த்துக் கிளறி, சாம்பார் கொதிக்கவும்.
பின்னர் தாளிப்புக்கு, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டவும்.
இறுதியில் கொத்தமல்லி தழைகளை சேர்த்து அலங்கரிக்கவும்.
பால் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
பால் - 2 கப்
சர்க்கரை அல்லது வெல்லம் - தேவையான அளவு
தேங்காய் பால் - ½ கப் (விரும்பினால்)
ஏலக்காய் தூள் - ½ தேக்கரண்டி
உலர் பழங்கள் (முந்திரி, பாதாம், திராட்சை) - அலங்கரிக்க

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து மென்மையான மாவாக தயார் செய்து கொள்ளவும்.
தயார் செய்த மாவிலிருந்து சிறு சிறு கொழுக்கட்டைகளாக உருட்டி தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
பால் கொதித்ததும், அதில் சர்க்கரை அல்லது வெல்லம், ஏலக்காய் தூள் மற்றும் விருப்பப்பட்டால் தேங்காய் பால் சேர்க்கவும். இனிப்பு கலவை நன்கு கொதித்ததும், உருட்டி வைத்துள்ள கொழுக்கட்டைகளை மெதுவாக சேர்த்து நன்கு கிளறவும்.
கொழுக்கட்டைகள் வெந்து, பால் சற்று கெட்டியானதும், உலர் பழங்களால் அலங்கரித்து பரிமாறலாம்.
- 2-ந்தேதி சூரசம்ஹாரம் நாளில் 20 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மாவட்ட நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு தேவயைான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா பெருந்திருவிழா கடந்த 23-ந்தேதி கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு தொடங்கியது.
இதையொட்டி கோவிலில் தினசரி காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேகங்கள், மதியம் அன்னதானம், மாலை 3 மணிக்கு சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலைநிகழ்சிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஒவ்வொரு திருக்கோலத்தில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
இந்த நிலையில் விரதம் தொடங்கிய பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் நீராடி வலது கையில் காப்புகட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக மற்றும் பஜார் வீதிகளில் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். இதனால் திரும்பிய திசைகளில் எல்லாம் தசரா பக்தர்களாக தெரிகிறது.
கடந்த 28-ந்தேதி முதல் தசரா குழுவினர் மேளம், தாரை தப்பட்டை மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் டிஸ்கோவுடன் வந்து காப்பு கட்ட தொடங்கினர். மறுநாள் ஊர் பெயரோடு அமைந்த தசரா குழுவினர் ஊர் ஊராக சென்று கலைநிகழ்ச்சி நடந்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் உள்ள முக்கிய ஊர்களில் தசரா பக்தர்கள் மற்றும் தசரா குழுவினர் அதிக அளவில் காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் அம்மன் பெயரில் வசூல் செய்த பணத்தை 10-ம் திருநாளான வருகிற 2-ந் தேதி காணிக்கையை கோவில் உண்டியலில் கொண்டு சேர்ப்பார்கள். இதற்கு பக்தர்களுக்கு வசதியாக கோவிலை சுற்றி தற்காலிக உண்டியல்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
விழாவின் முக்கிய நாளான வருகிற 2 மற்றும் 3-ந்தேதி பக்தர்கள் வந்து செல்ல வசதியாக 500-க்கும் மேற்பட்ட சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
மருத்துவ துறை, மின்சார துறை, வருவாய்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் 2 நாள் இங்கு முகாமிட்டு பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றனர்.
2-ந் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு சிறப்பு பூஜையூடன் அன்னை முத்தாரம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு செல்லும் போது காளி வேடம் மற்றும் சுவாமி வேடம் அணிந்த பக்தர்கள் ஒம்காளி, ஜெய்காளி என ஆக்ரோஷமாக கோஷமிட்டு முத்தாரம்மனை பின்தொடந்து செல்வார்கள். சுமார் 20 லட்சம் பக்தர்கள் கூடும் கடற்கரையில் அம்மன், மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து நள்ளிரவு 1 மணிக்கு கடற்கரை மேடையிலும் தொடர்ந்து 2 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கடற்கரை மேடையில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
3-ந் தேதிஅதிகாலை பூஞ்சப்பரத்தில் அன்னை முத்தாரம்மன் வீதியுலா புறப்படுதல், பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு சப்பரம் கோவிலுக்கு வந்து சேர்ந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதம் முறிப்பார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. 12-ம் திருவிழாவான 4-ந் தேதி காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடக்கிறது.
தசரா திருவிழா ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், ஆய்வர் முத்துமாரியம்மாள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் ரவீந்திரன் குமரன், மகாராஜன், கணேசன், வெங்கடேஸ்வரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
2-ந் தேதி சூரசம்ஹாரம் நாளில் 20 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் திரள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு தேவயைான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்காக தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார் ஈடுபடுகின்றனர். மேலும் டிரோன் மற்றும் ஏ.ஐ.தொழில்நுட்ப வசதிகளுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
- அக்கார வடிசல் நிவேதனம் செய்ய வேண்டும்.
- சாமுண்டி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் கேது.
நவராத்திரியின் ஒன்பதாம் நாளன்று அன்னை பராசக்தி சாமுண்டியாக வழிபாடு செய்யப்படுகிறாள். முண்டன் என்ற அசுரனை வதம் செய்ததால் சாமுண்டி என்று அழைக்கப்படுகிறாள். தர்மத்தை நிலைநாட்டுபவள். நம்மை காத்து அருளக்கூடியவள்.
சாமுண்டியை வழிபட கலர் கோலமாவினால் ஆயுதம் கோலம் போட வேண்டும். 77 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். பஞ்சு திரி 56 போட்டு எள் எண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் தீபங்கள் ஏற்றலாம். அக்கார வடிசல் நிவேதனம் செய்ய வேண்டும். தாமரை மல்லிகை பூக்கள் மற்றும் மரிக்கொழுந்து கொண்டு பூஜிக்க வேண்டும்.
"கௌரி அன்னை மேனியிலே கருவாகி மலர்ந்தவளே! நவராத்திரி ஒன்பதாம் நாள் நலம் கூட்டும் கலைமகளே தாயே நீ அன்பு வைத்தால் பார்முழுதும் எனைப்புகழும் ஏழிசையும் என்பாட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்."
என பாடி துதிக்க வேண்டும்.
சாமுண்டி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் கேது. எனவே சாமுண்டியை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் நிவர்த்தியாகும். உள்ளுணர்வு மேம்படும், மன தைரியத்துடன் பணிகளை மேற்கொள்ளும் திறன் கிடைக்கும். பேச்சுக்கலை மேம்படும். எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் உறுதியான சக்தி தருவாள். மக்களை கவரும் ஆற்றலைத் தருவாள்.
- முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி 173 ரன்கள் குவித்தது.
- இதனையடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 83 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சார்ஜா:
வெஸ்ட் இண்டீஸ், நேபாளம் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சார்ஜாவில் நடக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் நேபாளம் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் முழு உறுப்பினர் அணிக்கு எதிராக முதல் வெற்றியை நேபாளம் பதிவு செய்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி 20 ஓவரில் 173 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆசிஃப் ஷேக் 68 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியில் 3 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 17.1 ஓவரில் 83 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் நேபாளம் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நேபாளம் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
- இது பெரும்பாலும் தெரிந்தோ தெரியாமலோ தவறுகளுக்கு வழிவகுக்கிறது.
- வீட்டிற்கு வரும் பெண்கள் முழு உணவை சாப்பிடவில்லை என்றால் அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள்.
அம்பாளுக்கு மிகவும் பிடித்தமான நவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. நவராத்திரியின் போது பெண் குழந்தைகளை வழிபடுவது அவசியம் என்று நம்பப்படுகிறது. பெண் குழந்தைகளை வழிபடாமல் நவராத்திரி முழுமையடையாது என்றும் கூறப்படுகிறது. பெண் குழந்தைகளை வழிபடுவது என்பது துர்கா தேவியின் ஆசிகளை நேரடியாகப் பெறுவதாகும்.
ஒவ்வொரு நவராத்திரியின் அஷ்டமி மற்றும் நவமி பூஜைகள் சிறப்பு வாய்ந்தவை. சிலர் அஷ்டமி அன்று கன்னியா பூஜை செய்கிறார்கள், மற்றவர்கள் அதை நவமி அன்று செய்கிறார்கள். இந்த வருடம், அஷ்டமி இன்றும், நவமி நாளை என வருகின்றன.
கன்னியா பூஜையின் போது பல நேரங்களில், மக்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறுகளைச் செய்கிறார்கள். இதனால் ஒன்பது நாள் விரதம் தோல்வியடைகிறது. இதனால் நாம் செய்யும் தவறுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்...
கன்னியா பூஜையின் போது என்ன தவறுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்...
1. கன்னியா பூஜை யின் போது வீட்டிற்கு வரும் பெண்களுக்கு நீங்கள் என்ன பரிசு கொடுத்தாலும், கருப்பு நிறத்தைத் தவிர்க்க வேண்டும். கருப்பு நிறப் பொருட்களைப் பரிசளிப்பது அபசகுணமாகக் கருதப்படுகிறது. பரிசுகளை வழங்கும்போது நாம் பெரும்பாலும் இதை கவனிக்காமல் விடுகிறோம். இது பெரும்பாலும் தெரிந்தோ தெரியாமலோ தவறுகளுக்கு வழிவகுக்கிறது.
2. கன்னியா பூஜைக்குப் பிறகு மக்கள் பெரும்பாலும் எஃகு கிண்ணங்கள் அல்லது தட்டுகளை பரிசளிப்பார்கள். மத நம்பிக்கைகளின்படி இதுவும் பொருத்தமானதல்ல. நீங்கள் பரிசளிக்க வேண்டியிருந்தால், எஃகுக்குப் பதிலாக மற்ற உலோகங்களால் செய்யப்பட்ட பாத்திரங்களை வழங்க வேண்டும்.
3. இரும்புப் பொருட்களைப் பரிசாகக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். கன்னியா பூஜையின் போது அவ்வாறு செய்வது சனி தோஷத்தைத் தரும். பரிசுகளை வாங்கும்போது இதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.
4. கன்னியா பூஜைக்குப் பிறகு பரிசுகளை வழங்கும்போது, தவறுதலாக கூட, தோல் கொண்ட எந்தப் பொருளையும் கொடுக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
5. வீட்டிற்கு வரும் பெண்கள் முழு உணவை சாப்பிடவில்லை என்றால் அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள்.
- தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது.
- வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை இம்மாத தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. இம்மாத ஆரம்பத்தில் ஒரு சவரன் ரூ.77 ஆயிரம் என்ற நிலையில் விற்பனையானது. அதன்பிறகு விலை 'கிடுகிடு'வென உயரத் தொடங்கியது. கடந்த 6-ந் தேதி ஒரு கிராம் ரூ.10 ஆயிரம் என்றும், ஒரு சவரன் ரூ.80 ஆயிரம் என்றும் அதிகரித்து, அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
அதுவும் நின்றபாடில்லை. மேலும் விலை அதிகரித்துக்கொண்டேதான் இருந்தது. அதன்படி கடந்த 9-ந் தேதி ரூ.81 ஆயிரத்தையும், 16-ந் தேதி ரூ.82 ஆயிரத்தையும், 22-ந் தேதி ரூ.83 ஆயிரத்தையும், அதற்கு மறுநாளே ரூ.84 ஆயிரம் மற்றும் ரூ.85 ஆயிரத்தையும் கடந்து, ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் என்ற வகையிலேயே பயணித்தது. அதன்பின்னர், அவ்வப்போது லேசான சரிவு இருந்தாலும், ரூ.84 ஆயிரம் மற்றும் ரூ.85 ஆயிரம் என்ற இடைப்பட்ட அளவிலேயே ஆட்டம் காட்டியது.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் விறுவிறுவென விலை ஏற்றம் கண்டது. காலையில் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் அதிகரித்தது. பின்னர் மாலையில் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் உயர்ந்தது. அப்படியாக நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ.86 ஆயிரத்து 160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதன்மூலம் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. பொருளாதார மந்த நிலையில், தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றால் விலை உயருகிறது. இந்த மாதத்தில் மட்டும், அதாவது கடந்த 1-ந் தேதியில் இருந்து நேற்று வரை கிராமுக்கு ரூ.1,065-ம், சவரனுக்கு ரூ.8,520-ம் உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து, மாத இறுதி நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,860-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இன்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 161 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
29-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,160
28-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120
27-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120
26-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,400
25-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,080
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
29-09-2025- ஒரு கிராம் ரூ.160
28-09-2025- ஒரு கிராம் ரூ.159
27-09-2025- ஒரு கிராம் ரூ.159
26-09-2025- ஒரு கிராம் ரூ.153
25-09-2025- ஒரு கிராம் ரூ.150
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் சிவபூஜை செய்தருளல்.
- திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
இந்த வார விசேஷங்கள்
30-ந் தேதி (செவ்வாய்)
* துர்க்காஷ்டமி.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர் திருக்கல்யாணம், இரவு புஷ்பக விமானத்தில் பவனி.
* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்துடன் காட்சி.
* மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் மகிஷாசுரமர்த்தினி அலங்கார காட்சி.
* கீழ்நோக்கு நாள்.
1-ந் தேதி (புதன்)
* சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை.
* திருப்பதி பெருமாள் ரத உற்சவம்.
* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்துடன் காட்சி.
* மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் சிவபூஜை செய்தருளல்.
* மேல்நோக்கு நாள்.
2-ந் தேதி (வியாழன்)
* விஜயதசமி.
* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா.
* மதுரை கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு விடும் காட்சி.
* திருப்பதி ஏழுமலையான் பல்லக்கில் உற்சவம்.
* மேல்நோக்கு நாள்.
3-ந் தேதி (வெள்ளி)
* சர்வ ஏகாதசி.
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் சப்தாவர்ணம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
4-ந் தேதி (சனி)
* சனிப் பிரதோஷம்.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் தெப்ப உற்சவம்.
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சிறப்பு அபிஷேகம்
* மேல்நோக்கு நாள்
5-ந் தேதி (ஞாயிறு)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி கருடன் வாகனத்திலும் திருவீதி உலா.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமானுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
6-ந் தேதி (திங்கள்)
* பவுர்ணமி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.
- செப்டம்பர் வரையில் பெய்யக்கூடிய மழை அளவைத்தான் தென்மேற்கு பருவமழை காலத்தில் பதிவு செய்யப்படுகிறது.
- கடந்த ஆண்டும் நெல்லையில் 249 சதவீதம் இயல்பைவிட அதிக மழை பதிவாகியிருந்தது.
சென்னை:
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை கணக்கில் கொள்ளப்படுகிறது. இந்த பருவமழை முற்றிலும் நீங்க, அக்டோபர் மாதம் 2-வது வாரம் வரை காலம் எடுத்துக் கொண்டாலும், செப்டம்பர் வரையில் பெய்யக்கூடிய மழை அளவைத்தான் தென்மேற்கு பருவமழை காலத்தில் பதிவு செய்யப்படுகிறது.
அந்த வகையில் தென்மேற்கு பருவமழை காலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி பெறக்கூடிய மொத்த மழை என்பது 32.8 செ.மீ. ஆகும். இது இயல்பான மழை அளவு. அதன்படி, கடந்த ஜூன் 1-ந்தேதியில் இருந்து நேற்று வரையிலான (செப்டம்பர் 29-ந்தேதி) நிலவரப்படி, 32.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதாவது இயல்பைவிட ஒரு சதவீதம் அதிகமாக மழை கிடைத்திருக்கிறது.
இதில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட 250 சதவீதம் அதிகம் மழை பெய்திருந்தது. இந்த காலக்கட்டத்தில் அங்கு 8.9 செ.மீ. மழை பதிவாகும். ஆனால் 31.3 செ.மீ. மழை பெய்திருந்தது. கடந்த ஆண்டும் நெல்லையில் 249 சதவீதம் இயல்பைவிட அதிக மழை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதற்கடுத்தபடியாக, தென்காசி மாவட்டத்தில் 55 சதவீதமும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 79 சதவீதமும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 46 சதவீதமும், கோவை மாவட்டத்தில் 39 சதவீதமும் மழை பதிவாகி உள்ளது. இதுதவிர, அரியலூர் (+6 சதவீதம்), சென்னை (+30 சதவீதம்), கடலூர் (+14 சதவீதம்), நீலகிரி (+13 சதவீதம்), சிவகங்கை (+4 சதவீதம்), தஞ்சாவூர் (+7 சதவீதம்), தேனி (+10 சதவீதம்),
திருப்பத்தூர் (+21 சதவீதம்), திருவள்ளூர் (+33 சதவீதம்), திருவண்ணாமலை (+9 சதவீதம்), திருவாரூர் (+9 சதவீதம்), வேலூர் (+36 சதவீதம்), விழுப்புரம் (+18 சதவீதம்) மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும் மழை பெய்துள்ளது.
மேலும், செங்கல்பட்டு (-7 சதவீதம்), தர்மபுரி (-21 சதவீதம்), திண்டுக்கல் (-41 சதவீதம்), ஈரோடு (-26 சதவீதம்), கள்ளக்குறிச்சி (-31 சதவீதம்), காஞ்சீபுரம் (-3 சதவீதம்), கன்னியாகுமரி (-1 சதவீதம்), கரூர் (-35 சதவீதம்), கிருஷ்ணகிரி (-17 சதவீதம்), மதுரை (-24 சதவீதம்), நாகப்பட்டினம் (-22 சதவீதம்), நாமக்கல் (-31 சதவீதம்), பெரம்பலூர் (-2 சதவீதம்), புதுக்கோட்டை (-6 சதவீதம்), ராமநாதபுரம் (-48 சதவீதம்), சேலம் (-15 சதவீதம்),
திருப்பூர் (-59 சதவீதம்), தூத்துக்குடி (-62 சதவீதம்), திருச்சி (-26 சதவீதம்), விருதுநகர் (-46 சதவீதம்) ஆகிய 20 மாவட்டங்களில் குறைவான மழை பதிவாகியிருக்கிறது. தமிழ்நாட்டைத் தவிர, புதுச்சேரியில் 51 சதவீதமும், காரைக்காலில் 32 சதவீதமும் அதிகமாக இந்த பருவமழையில் மழை பெய்துள்ளது.
பொதுவாக தென்மேற்கு பருவமழையை காட்டிலும், வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழகம் அதிக மழையை பெறும். அடுத்த மாதம் (அக்டோபர்) 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.






