என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அயராத உழைப்பினால் கிட்டும் வெற்றியினை பூஜிக்கும் திருநாளாக விஜயதசமி திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
    • தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள 'ஆயுத பூஜை' மற்றும் 'விஜயதசமி' வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    வாழ்விற்கு வளம் சேர்க்கக்கூடிய அறிவை அளிக்கும் கலைமகளாகவும்; செல்வத்தைத் தரும் திருமகளாகவும்; துணிவைத் தரும் மலைமகளாகவும் விளங்கும் அன்னையை, பெண்மையைப் போற்றி வணங்கும் நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையையும், அடுத்த நாளில் விஜயதசமியையும் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    அழிவு இல்லாத சிறந்த கல்விச் செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும்; மனத் திட்பத்தோடு துணிவைத் தரும் மலைமகளையும்; செல்வங்களை அள்ளித்தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு அம்சமாகும்.

    அயராத உழைப்பினால் கிட்டும் வெற்றியினை பூஜிக்கும் திருநாளாக விஜயதசமி திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து, செய்யும் தொழிலை தெய்வமென மதித்து, அன்னை பராசக்தியின் அருளை வேண்டி, தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும். ஊக்கமுடன் கூடிய உழைப்பே, வறுமையை அகற்றி, செல்வத்தைப் பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதை உணர்த்தும் திருநாளாக இந்தப் பண்டிகை விளங்குகிறது.

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், அனைத்து நலமும், வளமும் ஒருங்கே பெற்று சீரோடும், சிறப்போடும் சிறந்து விளங்கிட அருள் புரியுமாறு, தாயாக விளங்கும் அன்னை பராசக்தியைப் போற்றி வணங்கி, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
    • டிரம்பின் யூடியூப் பக்கமும் இடைநீக்கம் செய்யப்பட்டது.

    அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக உள்ள டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்தார்.

    இதைதொடர்ந்து டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் டிரம்பின் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டன. இதில் டிரம்பின் யூடியூப் பக்கமும் இடைநீக்கம் செய்யப்பட்டது.

    இதை எதிர்த்து டிரம்ப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் இவ்வழக்கில் டிரம்புக்கு 24.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் ரூ.217 கோடி) நஷ்ட ஈடு வழங்க யூடியூப் ஒப்புக்கொண்டுள்ளது.

    • அரசியல் காரணங்களுக்காக கரூர் துயர சம்பவத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
    • கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டுமே ஈடுபட்டனர்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த உயிரிழப்புகள் தொடர்பாக கரூர் டவுண் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்திருந்த போலீசார் மாவட்ட செயலாளர் மதியழகனை நேற்று கைது செய்தனர். மேலும் ஒரு த.வெ.க. நிர்வாகி இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதை தொடர்ந்து த.வெ.க. முக்கிய பிரமுகர்களான பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரையும் கைது செய்வதற்கு போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.

    புதுச்சேரியை சேர்ந்த புஸ்சி ஆனந்த் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. இதே போன்று நிர்மல் குமாரும் தலைமறைவாகி இருக்கிறார். இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இந்நிலையில் முன்ஜாமின் கோரி த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில்,

    அரசியல் காரணங்களுக்காக கரூர் துயர சம்பவத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான போலீசார் சம்பவ இடத்தில் இல்லை. கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டுமே ஈடுபட்டனர்.

    கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் சமூக விரோதிகளால் நெரிசல் ஏற்பட்டது. நோயாளிகள் யாரும் இன்றி ஆம்புலன்ஸ் விஜய் பிரசார கூட்டத்திற்குள் வந்ததாக புஸ்ஸி ஆனந்த் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    • 4 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு அரசாணை.
    • ஏ, பி, சி, டி என்று நான்கு நிலைகளிலும் 119 பதவிகள் மாற்றத்திறனாளிகளுக்கு ஏற்றவை.

    மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அவர்கள் பணி புரிவதற்கான ஏற்ற பதவிகள் குறித்த தகவலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஏ, பி, சி, டி என்று நான்கு நிலைகளிலும் 119 பதவிகள் மாற்றத்திறனாளிகளுக்கு ஏற்றவை என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • அரசியல் கட்சி தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அறுதல் கூறி வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், கரூரில் மக்களை சந்தித்து உரையாற்றியபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும், சம்பவம் நடைபெற்றது எப்படி என ஆராய தமிழக அரசு சார்பில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் குழுவை கரூருக்கு அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசும் அறிக்கை கேட்டுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் (அமைப்பு) மற்றும் எம்.பி.யுமான கே.சி. வேணுகோபால் இன்று கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கும் செல்ல இருக்கிறார். இதற்கான கோவை விமான நிலையம் வந்தடைந்துள்ளார். அங்கிருந்து கரூர் விரைகிறார்.

    • மது மற்றும் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்காவிட்டால் இன்றைய தலைமுறை மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது.
    • மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கையும் ஆகும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 157-ஆம் பிறந்தநாளையொட்டி நாளை மறுநாள் அக்டோபர் 2-ஆம் நாள் உள்ளாட்சி அமைப்புகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராம சபைகள் மிகவும் வலிமையான அமைப்புகள் ஆகும். அவற்றில் எடுக்கப்படும் முடிவுகளை உச்சநீதிமன்றம் கூட மதிக்கும் என்பதால், அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிக்க கிராமசபைக் கூட்டங்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தமிழ்நாட்டின் இன்றைய தலையாய பிரச்சனை மது மற்றும் போதை ஒழிப்பு தான். ஒருபுறம் தெருத்தெருவாக மதுக்கடைகளைத் திறந்து இளைஞர்களையும், மாணவர்களையும் அரசே குடிகாரர்களாக்கி வரும் நிலையில், இன்னொருபுறம் ஆளுங்கட்சியின் ஆசிகளுடன் செயல்படும் போதை வணிகர்கள் கிராமங்கள் வரை கஞ்சா, அபின், கோகெயின், பிரவுன் சுகர், எல்.எஸ்.டி, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருள்களை கொண்டு வந்துவிட்டனர்.

    மது மற்றும் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்காவிட்டால் இன்றைய தலைமுறை மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது. மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கையும் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு நாளை மறுநாள் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பாமகவினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்; கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    • ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.க்கள் குழு கோவை விமான நிலையம் வந்தனர்.
    • இன்று மாலை வரை கரூரில் இருந்து அனைவரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளோம்.

    த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் கடந்த 27-ந் தேதி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு விசாரணைகளும் நடந்து வருகின்றன.

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனையின்படி இந்த சம்பவத்தை நேரில் விசாரிக்க எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவத்துக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை கரூர் சென்று ஆராயவும், இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து விரைவில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவும் தேசிய ஜனநாயக கூட்டணியின் குழுவை அவர் அமைத்துள்ளார்.

    இந்த குழுவில் பிரபல நடிகையும், ஹேமமாலினி எம்.பி. ஒருங்கிணைப்பாளராகவும், எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார்(தெலுங்கு தேசம்) ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

    இந்த நிலையில் ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.க்கள் குழு கோவை விமான நிலையம் வந்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அனுராக் தாக்கூர் எம்.பி. கூறுகையில்,

    இன்று மாலை வரை கரூரில் இருந்து அனைவரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளோம். உயிரிழந்த 41 நபர்களின் குடும்பங்களை தனித்தனியாக சந்தித்து பேச உள்ளோம் என்று கூறினார்.

    • சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

    இதுபோன்ற வீடியோக்கள் மட்டுமின்றி முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதுபோன்று கருத்துகளை பதிவிடும் நபர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறையினரை குற்றம் சாட்டியும், குறிப்பிட்ட கட்சி மீது களங்கம் விளைவிக்கும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

    இப்படி அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை தலைமை இயக்குனரகம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதைத் தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தியான பதிவுகளை வெளியிட்ட 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகியான சகாயம், மாங்காடு பகுதியைச் சேர்ந்த விஜய் கட்சி உறுப்பினர் சிவனேஸ்வரன், ஆவடியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான சரத்குமார் ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வீடியோ வெளியிட்டதாக சென்னையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெலிக்சை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர மேலும் 22 பேர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளனர். இதை மீறி, செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசில் சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கென்று ஏற்கனவே தனிப்பிரிவு உள்ளது. அவர்கள் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.

    • இது ஒரு அவமான செயல், அகிம்சையின் மரபு மீதான தாக்குதல்.
    • இது வெறும் சிலையை சேதப்படுத்தியது மட்டுமல்ல. அகிம்சை சித்தாந்தத்தின் மீதான வன்முறை தாக்குதல்.

    மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நாளை மறுதினம் கொண்டாட இருக்கும் நிலையில், லண்டன் பல்கலைக்கழகம் அருகே உள்ள அவரது சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் மகாத்மா காந்தி சிலை கடந்த 1968 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது வெண்கல சிலையாகும்.

    சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் "இது ஒரு அவமான செயல், அகிம்சையின் மரபு மீதான தாக்குதல். இது வெறும் சிலையை சேதப்படுத்தியது மட்டுமல்ல. இன்னும் 3 நாட்களில் சர்வதேச அகிம்சை தினம் வரும் நிலையில், அகிம்சை சித்தாந்தத்தின் மீதான வன்முறை தாக்குதல்" எனத் தெரிவித்துள்ளது. 

    • உண்மையில் விஜயின் உண்மையான தொண்டர்களோ, ரசிகர்களோ அப்படி செய்ய வாய்ப்பில்லை.
    • ஒருவேளை காவலாளி அஜித்குமார் போன்று என் கணவரையும் போலீசார் பயங்கரம் ஆக தாக்குவார்களோ என்ற பயம் உள்ளது.

    கரூர்:

    கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி ராணி கண்ணீருடன் கூறியதாவது:-

    எங்கள் குடும்பம் முழுவதுமே விஜயின் தீவிர ரசிகர்கள். விஜய் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே எனது கணவர் அவரின் ரசிகராக இருந்து வருகிறார். கடந்த 27-ம் தேதி பிரசாரம் நடைபெறுவதற்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு கிளம்பி சென்றவர்தான். இப்போது வரை அவர் வீடு திரும்பவில்லை. எங்கு இருக்கிறார்... எப்படி இருக்கிறார் என்பது தெரியவில்லை.

    ஆனால், அவர் கைது செய்யப்பட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வந்தது. நானும் விஜயின் தீவிர ரசிகை. பிரசாரம் நடைபெற்ற இடத்திற்கு நானும் எனது 2 மகன்களும் சென்றிருந்தோம். எனது பிள்ளைகளை மிகவும் பத்திரமான இடத்தில் அமர வைத்துவிட்டு என் தோழிகளுடன் நடனமாடி செல்பி எடுத்து உற்சாகமாகத்தான் இருந்தோம். அங்கு எல்லோருமே அப்டித்தான் இருந்தார்கள்.

    விஜய் பிரசார இடத்திற்கு வரும் வரை அங்கு எந்த பிரச்சினையும் இருந்ததாக தெரியவில்லை. அவர் பிரசார வாகனம் வந்து நின்று பேச ஆரம்பித்த பிறகுதான் சலசலப்பு ஆரம்பித்தது. செருப்பு வீச்சு நடந்த பிறகு ஒருத்தர் ஒருவரை தள்ளி விடுவது, அடிப்பது போன்ற நிகழ்வுகள் எல்லாம் தொடங்கியது.

    உண்மையில் விஜயின் உண்மையான தொண்டர்களோ, ரசிகர்களோ அப்படி செய்ய வாய்ப்பில்லை. வேண்டும் என்றே ஒரு கும்பல் உள்ளே இறக்கிவிடப்பட்டு அடிதடி நடத்தியது போல்தான் இருந்தது. இறந்தவர்களில் பெரும்பாலானோரை கழுத்தில் மிதித்தும், சாக்கடை பள்ளத்தில் தள்ளியும், அவர்கள் மீது விழுந்து மிதித்தும்தான் கொன்றார்கள்.

    சம்பவ இடத்தில் இருந்து நான் பார்த்தேன் என்பதை விட எனக்கும் அப்படியான ஒரு அனுபவம்தான் கிடைத்தது. என்னையும் அருகில் இருந்த சாக்கடை பள்ளத்தில் தள்ளி கழுத்தில் கால் வைத்து மிதித்தார்கள். மிகவும் சிரமப்பட்டுதான் தப்பித்து வந்தேன். நானும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நேற்றுதான் வீடு திரும்பினேன்.

    என் கணவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்ததே தவிர அது தொடர்பான வீடியோ எதுவும் வரவில்லை. பிரசாரம் முடிவதற்கு முன்பு வரை அவர் எங்களிடம் பேசிக்கொண்டுதான் இருந்தார். ஆனால், இப்போது அவரை பற்றி எந்த தகவலும் எனக்கு தெரியவில்லை. என்னிடம் இதுவரை காவல்துறையும் எந்த தகவலும் சொல்லவில்லை.

    ஒருவேளை காவலாளி அஜித்குமார் போன்று என் கணவரையும் போலீசார் பயங்கரம் ஆக தாக்குவார்களோ என்ற பயம் உள்ளது. நான் அரசுக்கும் காவல்துறைக்கும் ஒரே ஒரு வேண்டுகோள்தான் வைக்கிறேன். எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். தயவு செய்து என் கணவரை எங்கு வைத்து இருக்கிறீர்கள்.. அவர் எப்படி இருக்கிறார் என்பதை மட்டும் சொல்லுங்கள். அவரை என் கண்ணில் காட்டுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
    • ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.

    அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் 9-வது நாளான இன்று நிலக்கடலை சுண்டல், சாம்பார் சாதம், பால் கொழுக்கட்டை செய்து சித்திதாத்ரி தேவிக்கு படைக்கலாம்.

    முதலில், நிலக்கடலை சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

    நிலக்கடலை சுண்டல்

    தேவையான பொருட்கள்:

    நிலக்கடலை - 1 கப்

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 1

    கறிவேப்பிலை - சிறிதளவு

    பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

    தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு 

    செய்முறை:

    நிலக்கடலையை 1 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து குக்கரில் 4-5 விசில் வரும் வரை அல்லது மென்மையாகும் வரை வேகவைத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

    கடுகு வெடித்ததும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    இப்போது வேகவைத்த நிலக்கடலை, உப்பு சேர்த்து நன்கு கிளறி, தேங்காய் துருவல் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

    சுவையான நிலக்கடலை சுண்டல் தயார்.

    இந்த சுண்டலை நவராத்திரி மட்டுமின்றி, எப்போது வேண்டுமானாலும் ஆரோக்கியமான சிற்றுண்டியாக சாப்பிடலாம்.

    சாம்பார் சாதம்

    தேவையான பொருட்கள்

    துவரம்பருப்பு

    தேவையான காய்கறிகள் (உதாரணமாக, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்றவை)

    மஞ்சள் தூள்

    மிளகாய் தூள்

    புளி

    உப்பு

    தாளிப்புக்கான பொருட்கள் (கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம்) 

    செய்முறை

    முதலில் துவரம்பருப்பை தேவையான அளவு தண்ணீரில், மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

    வெங்காயம், பூண்டு சேர்க்காமல், தேவையான காய்கறிகள் மற்றும் தக்காளி சேர்த்து வேகவைத்து, பிறகு புளி, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

    வேகவைத்த பருப்பை சேர்த்துக் கிளறி, சாம்பார் கொதிக்கவும்.

    பின்னர் தாளிப்புக்கு, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டவும்.

    இறுதியில் கொத்தமல்லி தழைகளை சேர்த்து அலங்கரிக்கவும்.

    பால் கொழுக்கட்டை

    தேவையான பொருட்கள்:

    அரிசி மாவு - 1 கப்

    தண்ணீர் - 1 கப்

    உப்பு - தேவையான அளவு

    பால் - 2 கப்

    சர்க்கரை அல்லது வெல்லம் - தேவையான அளவு

    தேங்காய் பால் - ½ கப் (விரும்பினால்)

    ஏலக்காய் தூள் - ½ தேக்கரண்டி

    உலர் பழங்கள் (முந்திரி, பாதாம், திராட்சை) - அலங்கரிக்க 

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து மென்மையான மாவாக தயார் செய்து கொள்ளவும்.

    தயார் செய்த மாவிலிருந்து சிறு சிறு கொழுக்கட்டைகளாக உருட்டி தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

    பால் கொதித்ததும், அதில் சர்க்கரை அல்லது வெல்லம், ஏலக்காய் தூள் மற்றும் விருப்பப்பட்டால் தேங்காய் பால் சேர்க்கவும். இனிப்பு கலவை நன்கு கொதித்ததும், உருட்டி வைத்துள்ள கொழுக்கட்டைகளை மெதுவாக சேர்த்து நன்கு கிளறவும்.

    கொழுக்கட்டைகள் வெந்து, பால் சற்று கெட்டியானதும், உலர் பழங்களால் அலங்கரித்து பரிமாறலாம்.

    • 2-ந்தேதி சூரசம்ஹாரம் நாளில் 20 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • மாவட்ட நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு தேவயைான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா பெருந்திருவிழா கடந்த 23-ந்தேதி கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு தொடங்கியது.

    இதையொட்டி கோவிலில் தினசரி காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேகங்கள், மதியம் அன்னதானம், மாலை 3 மணிக்கு சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலைநிகழ்சிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஒவ்வொரு திருக்கோலத்தில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    இந்த நிலையில் விரதம் தொடங்கிய பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் நீராடி வலது கையில் காப்புகட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக மற்றும் பஜார் வீதிகளில் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். இதனால் திரும்பிய திசைகளில் எல்லாம் தசரா பக்தர்களாக தெரிகிறது.

    கடந்த 28-ந்தேதி முதல் தசரா குழுவினர் மேளம், தாரை தப்பட்டை மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் டிஸ்கோவுடன் வந்து காப்பு கட்ட தொடங்கினர். மறுநாள் ஊர் பெயரோடு அமைந்த தசரா குழுவினர் ஊர் ஊராக சென்று கலைநிகழ்ச்சி நடந்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் உள்ள முக்கிய ஊர்களில் தசரா பக்தர்கள் மற்றும் தசரா குழுவினர் அதிக அளவில் காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் அம்மன் பெயரில் வசூல் செய்த பணத்தை 10-ம் திருநாளான வருகிற 2-ந் தேதி காணிக்கையை கோவில் உண்டியலில் கொண்டு சேர்ப்பார்கள். இதற்கு பக்தர்களுக்கு வசதியாக கோவிலை சுற்றி தற்காலிக உண்டியல்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

    விழாவின் முக்கிய நாளான வருகிற 2 மற்றும் 3-ந்தேதி பக்தர்கள் வந்து செல்ல வசதியாக 500-க்கும் மேற்பட்ட சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    மருத்துவ துறை, மின்சார துறை, வருவாய்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் 2 நாள் இங்கு முகாமிட்டு பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றனர்.

    2-ந் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு சிறப்பு பூஜையூடன் அன்னை முத்தாரம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு செல்லும் போது காளி வேடம் மற்றும் சுவாமி வேடம் அணிந்த பக்தர்கள் ஒம்காளி, ஜெய்காளி என ஆக்ரோஷமாக கோஷமிட்டு முத்தாரம்மனை பின்தொடந்து செல்வார்கள். சுமார் 20 லட்சம் பக்தர்கள் கூடும் கடற்கரையில் அம்மன், மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

    தொடர்ந்து நள்ளிரவு 1 மணிக்கு கடற்கரை மேடையிலும் தொடர்ந்து 2 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கடற்கரை மேடையில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    3-ந் தேதிஅதிகாலை பூஞ்சப்பரத்தில் அன்னை முத்தாரம்மன் வீதியுலா புறப்படுதல், பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு சப்பரம் கோவிலுக்கு வந்து சேர்ந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதம் முறிப்பார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. 12-ம் திருவிழாவான 4-ந் தேதி காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடக்கிறது.

    தசரா திருவிழா ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், ஆய்வர் முத்துமாரியம்மாள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் ரவீந்திரன் குமரன், மகாராஜன், கணேசன், வெங்கடேஸ்வரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    2-ந் தேதி சூரசம்ஹாரம் நாளில் 20 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் திரள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு தேவயைான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்காக தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார் ஈடுபடுகின்றனர். மேலும் டிரோன் மற்றும் ஏ.ஐ.தொழில்நுட்ப வசதிகளுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 

    ×