என் மலர்
தலைப்புச்செய்திகள்
- கரூர் துயர சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.
- கரூரில் நடந்த கொடூரத்தை பற்றி உண்மை கண்டறியும் குழுவை அமைத்திருப்பது அரசியல் நோக்கம் கொண்டதே.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்தவுடன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் குழுவை அமைத்துள்ளது. இந்த குழு இன்று கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க உள்ளனர்.
இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்,
* கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை பா.ஜ.க. நேரடியாக தொடங்கி உள்ளது.
* கரூரில் நடந்த கொடூரத்தை பற்றி உண்மை கண்டறியும் குழுவை அமைத்திருப்பது அரசியல் நோக்கம் கொண்டதே.
* காங்கிரஸ் பேரியக்கமும் உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
* கரூர் விவகாரத்தில் பா.ஜ.க.வின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாக உள்ளது.
* தமிழ்நாடு அல்லாத பிற மாநில பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவை ராகுல் காந்தி நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
- ஒருநாள் தொடர் அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது.
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனையடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடர் அக்டோபர் 14-ந் தேதியுடன் முடிவடைகிறது.
அதனை தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக விலகி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
அவர் ஆசிய கோப்பை தொடரின் போது காயத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் கடைசி 2 போட்டிகளில் பாண்ட்யா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இப்படிப்பட்ட நேரத்தில் பழி சுமத்துவது தேவையில்லாத ஒன்று, தவறான ஒன்று.
- அந்த நேரத்தில் மக்களோடு மக்களாக நிற்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் கரூரில் மக்களை சந்தித்து உரையாற்றும்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக த.வெ.க. தலைவர்கள் அரசு மற்றும் காவல்துறை மீது பழிபோடுவது குறித்து கனிமொழி எம்.பி.யிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு கனிமொழி எம்.பி. கூறியதாவது:-
பாதிக்கப்பட்ட மக்களுடன் உடனடியாக நின்றது திமுக மற்றும் அரசாங்கம். மக்களின் உயிர் மற்றும் ஆறுதல்தான் முக்கியமான விசயம். அடிப்படையில் எல்லோரும் மனிதர்களாக செயல்பட வேண்டும். விசாரணை முடிவில் உண்மை வெளிவரும்.
யார் மீது தவறுகள் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெளிவாக சொல்லியிருக்கிறார்.
இப்படிப்பட்ட நேரத்தில் பழி சுமத்துவது தேவையில்லாத ஒன்று, தவறான ஒன்று. அந்த நேரத்தில் மக்களோடு மக்களாக நிற்க வேண்டும்.
அந்த நேரத்தில் கட்சி தலைவர் அந்த இடத்தை விட்டு செல்வதோ, ஆறுதல் கூட சொல்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்று செல்வதோ, தன்னுடைய பாதுகாப்பை மட்டுமே நினைப்பதோ என்னைப் பொறுத்தவரையில் பார்த்திராத ஒன்று. அவர்கள் இல்லை என்றாலும், அடுத்தக்கட்ட தலைவர்களை அனுப்பியிருக்க வேண்டும்.
நான் செல்கின்ற போதும் கூட அந்த கட்சியை சார்ந்த தலைவர்கள் இல்லை என்று பார்க்கும்போது மனிதாபிமானம் இல்லை என்று சொல்லத்தோன்றுகிறது. மற்ற கட்சித் தலைவர்கள் கூட மக்களோடு நின்று உதவி செய்து கொண்டிருக்கிறாரக்ள்.
இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.
- பேராவூர் அருகே அமைந்து உள்ள புல்லங்குடி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் முடிவுற்ற நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதுடன் புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி பேசுகிறார்.
ராமநாதபுரம்:
சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை ஓராண்டுக்கு முன்பே தொடங்கிய முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் மக்களை சென்றடைவதை கண்காணிக்கும் முறையிலும், கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்த சுற்றுப் பயணத்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே கரூரில் நடைபெற்ற துயர சம்பவம் காரணமாக முதலமைச்சரின் ராமநாதபுரம் மாவட்ட சுற்றுப்பயணம் மற்றும் ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. வேறொரு தேதியில் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டி ருந்தது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் நடைபெறவிருந்த ரோடு ஷோ மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாறாக அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (2-ந்தேதி) சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமநாதபுரம் செல்கிறார். அன்று இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
மறுநாள் (3-ந்தேதி) காலை காரில் புறப்பட்டு ராமநாதபுரத்தையடுத்த பேராவூர் அருகே அமைந்து உள்ள புல்லங்குடி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அங்கு 55 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் முடிவுற்ற நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதுடன் புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி பேசுகிறார். விழா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
- அயராத உழைப்பினால் கிட்டும் வெற்றியினை பூஜிக்கும் திருநாளாக விஜயதசமி திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
- தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள 'ஆயுத பூஜை' மற்றும் 'விஜயதசமி' வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
வாழ்விற்கு வளம் சேர்க்கக்கூடிய அறிவை அளிக்கும் கலைமகளாகவும்; செல்வத்தைத் தரும் திருமகளாகவும்; துணிவைத் தரும் மலைமகளாகவும் விளங்கும் அன்னையை, பெண்மையைப் போற்றி வணங்கும் நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையையும், அடுத்த நாளில் விஜயதசமியையும் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
அழிவு இல்லாத சிறந்த கல்விச் செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும்; மனத் திட்பத்தோடு துணிவைத் தரும் மலைமகளையும்; செல்வங்களை அள்ளித்தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு அம்சமாகும்.
அயராத உழைப்பினால் கிட்டும் வெற்றியினை பூஜிக்கும் திருநாளாக விஜயதசமி திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து, செய்யும் தொழிலை தெய்வமென மதித்து, அன்னை பராசக்தியின் அருளை வேண்டி, தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும். ஊக்கமுடன் கூடிய உழைப்பே, வறுமையை அகற்றி, செல்வத்தைப் பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதை உணர்த்தும் திருநாளாக இந்தப் பண்டிகை விளங்குகிறது.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், அனைத்து நலமும், வளமும் ஒருங்கே பெற்று சீரோடும், சிறப்போடும் சிறந்து விளங்கிட அருள் புரியுமாறு, தாயாக விளங்கும் அன்னை பராசக்தியைப் போற்றி வணங்கி, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
- டிரம்பின் யூடியூப் பக்கமும் இடைநீக்கம் செய்யப்பட்டது.
அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக உள்ள டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்தார்.
இதைதொடர்ந்து டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் டிரம்பின் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டன. இதில் டிரம்பின் யூடியூப் பக்கமும் இடைநீக்கம் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து டிரம்ப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் இவ்வழக்கில் டிரம்புக்கு 24.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் ரூ.217 கோடி) நஷ்ட ஈடு வழங்க யூடியூப் ஒப்புக்கொண்டுள்ளது.
- அரசியல் காரணங்களுக்காக கரூர் துயர சம்பவத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
- கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டுமே ஈடுபட்டனர்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த உயிரிழப்புகள் தொடர்பாக கரூர் டவுண் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்திருந்த போலீசார் மாவட்ட செயலாளர் மதியழகனை நேற்று கைது செய்தனர். மேலும் ஒரு த.வெ.க. நிர்வாகி இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து த.வெ.க. முக்கிய பிரமுகர்களான பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரையும் கைது செய்வதற்கு போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்த புஸ்சி ஆனந்த் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. இதே போன்று நிர்மல் குமாரும் தலைமறைவாகி இருக்கிறார். இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்நிலையில் முன்ஜாமின் கோரி த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில்,
அரசியல் காரணங்களுக்காக கரூர் துயர சம்பவத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான போலீசார் சம்பவ இடத்தில் இல்லை. கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டுமே ஈடுபட்டனர்.
கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் சமூக விரோதிகளால் நெரிசல் ஏற்பட்டது. நோயாளிகள் யாரும் இன்றி ஆம்புலன்ஸ் விஜய் பிரசார கூட்டத்திற்குள் வந்ததாக புஸ்ஸி ஆனந்த் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
- 4 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு அரசாணை.
- ஏ, பி, சி, டி என்று நான்கு நிலைகளிலும் 119 பதவிகள் மாற்றத்திறனாளிகளுக்கு ஏற்றவை.
மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அவர்கள் பணி புரிவதற்கான ஏற்ற பதவிகள் குறித்த தகவலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஏ, பி, சி, டி என்று நான்கு நிலைகளிலும் 119 பதவிகள் மாற்றத்திறனாளிகளுக்கு ஏற்றவை என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- அரசியல் கட்சி தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அறுதல் கூறி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், கரூரில் மக்களை சந்தித்து உரையாற்றியபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும், சம்பவம் நடைபெற்றது எப்படி என ஆராய தமிழக அரசு சார்பில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் குழுவை கரூருக்கு அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசும் அறிக்கை கேட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் (அமைப்பு) மற்றும் எம்.பி.யுமான கே.சி. வேணுகோபால் இன்று கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கும் செல்ல இருக்கிறார். இதற்கான கோவை விமான நிலையம் வந்தடைந்துள்ளார். அங்கிருந்து கரூர் விரைகிறார்.
- மது மற்றும் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்காவிட்டால் இன்றைய தலைமுறை மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது.
- மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கையும் ஆகும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 157-ஆம் பிறந்தநாளையொட்டி நாளை மறுநாள் அக்டோபர் 2-ஆம் நாள் உள்ளாட்சி அமைப்புகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராம சபைகள் மிகவும் வலிமையான அமைப்புகள் ஆகும். அவற்றில் எடுக்கப்படும் முடிவுகளை உச்சநீதிமன்றம் கூட மதிக்கும் என்பதால், அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிக்க கிராமசபைக் கூட்டங்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் இன்றைய தலையாய பிரச்சனை மது மற்றும் போதை ஒழிப்பு தான். ஒருபுறம் தெருத்தெருவாக மதுக்கடைகளைத் திறந்து இளைஞர்களையும், மாணவர்களையும் அரசே குடிகாரர்களாக்கி வரும் நிலையில், இன்னொருபுறம் ஆளுங்கட்சியின் ஆசிகளுடன் செயல்படும் போதை வணிகர்கள் கிராமங்கள் வரை கஞ்சா, அபின், கோகெயின், பிரவுன் சுகர், எல்.எஸ்.டி, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருள்களை கொண்டு வந்துவிட்டனர்.
மது மற்றும் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்காவிட்டால் இன்றைய தலைமுறை மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது. மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கையும் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு நாளை மறுநாள் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பாமகவினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்; கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
- ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.க்கள் குழு கோவை விமான நிலையம் வந்தனர்.
- இன்று மாலை வரை கரூரில் இருந்து அனைவரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளோம்.
த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் கடந்த 27-ந் தேதி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு விசாரணைகளும் நடந்து வருகின்றன.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனையின்படி இந்த சம்பவத்தை நேரில் விசாரிக்க எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்துக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை கரூர் சென்று ஆராயவும், இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து விரைவில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவும் தேசிய ஜனநாயக கூட்டணியின் குழுவை அவர் அமைத்துள்ளார்.
இந்த குழுவில் பிரபல நடிகையும், ஹேமமாலினி எம்.பி. ஒருங்கிணைப்பாளராகவும், எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார்(தெலுங்கு தேசம்) ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
இந்த நிலையில் ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.க்கள் குழு கோவை விமான நிலையம் வந்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அனுராக் தாக்கூர் எம்.பி. கூறுகையில்,
இன்று மாலை வரை கரூரில் இருந்து அனைவரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளோம். உயிரிழந்த 41 நபர்களின் குடும்பங்களை தனித்தனியாக சந்தித்து பேச உள்ளோம் என்று கூறினார்.
- சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இதுபோன்ற வீடியோக்கள் மட்டுமின்றி முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதுபோன்று கருத்துகளை பதிவிடும் நபர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறையினரை குற்றம் சாட்டியும், குறிப்பிட்ட கட்சி மீது களங்கம் விளைவிக்கும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இப்படி அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை தலைமை இயக்குனரகம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தியான பதிவுகளை வெளியிட்ட 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகியான சகாயம், மாங்காடு பகுதியைச் சேர்ந்த விஜய் கட்சி உறுப்பினர் சிவனேஸ்வரன், ஆவடியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான சரத்குமார் ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வீடியோ வெளியிட்டதாக சென்னையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெலிக்சை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர மேலும் 22 பேர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளனர். இதை மீறி, செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசில் சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கென்று ஏற்கனவே தனிப்பிரிவு உள்ளது. அவர்கள் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.






