என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இளம்பெண் அவருக்குப் பதிலளிக்கும்படியாக செய்யும் செயல்தான் வீடியோவை வைரலாக்கி இருக்கிறது.
- வீடியோவை பல லட்சம் பேர் ரசித்து உள்ளனர்.
வாலிபர் ஒருவர், பூங்காவில் அமர்ந்திருக்கும் இளம் பெண்ணை கவர்வதற்காக சாகசம் செய்து சொதப்பும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், பூங்காவில் உள்ள கம்பியில் இளம்பெண் ஒருவர் அமர்ந்து இருக்கிறார். அப்போது அங்கு வரும் வாலிபர், அவரது மனதை கவர்வதற்காக அருகில் உள்ள மற்றொரு கம்பியில் தாவி நின்று, சறுக்குவதுபோல பாவனை செய்து, அப்படியே தலைகீழாக சுழன்று வந்து தரையில் நின்றபடி இளம்பெண்ணின் மனநிலையை நோட்டம் விடுகிறார்.
அப்போது அந்த இளம்பெண் அவருக்குப் பதிலளிக்கும்படியாக செய்யும் செயல்தான் வீடியோவை வைரலாக்கி இருக்கிறது. அந்த இளம்பெண், கம்பியில் தலைகீழாக பலமுறை சுழன்று சுழன்று சாகசம் செய்து அசர வைக்கிறார். இதைப் பார்க்கும் வாலிபர், இவர் எத்தனை முறை சுழல்வார் என்பதைப்போல தலையை சுழற்றி சுழற்றி... யப்பா தலை சுற்றுதப்பா... என்று அங்கிருந்து நகர்ந்து செல்வதுடன் வீடியோ முடிகிறது.
சாகசம் செய்து மனதை கவர முயன்ற வாலிபருக்கு, பதில் சாகசத்தால் வாயடைக்கச் செய்த இளம்பெண்ணின் செயலுக்கு வலைத்தளவாசிகள் பாராட்டு கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவை பல லட்சம் பேர் ரசித்து உள்ளனர்.
- 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:
பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் பயணிகள் வசதிக்காக இன்று சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
- இரு நாட்டு தலைவர்களிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார்.
- டிரம்ப் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக் காட்டுகிறது.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இரு நாடுகள் இடையிலான போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு அமெரிக்கா சமீப காலமாக தீவிரம் காட்டி வருகிறது. அதன் பேரில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாட்டு தலைவர்களிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இருநாட்டு அதிபர்களிடம் பேசியதன் விளைவாக உக்ரைன் மற்றும் ரஷியா குறுகிய கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. அதன்படி இருநாடுகள் இடையே 30 நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வரவுள்ளது. இருநாடுகளும் மற்றவரின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறி வைக்கக்கூடாது என்று ஒப்புக் கொள்ள செய்வதில் தான், போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்க டிரம்ப் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக் காட்டுகிறது.
அதிபர் புதினுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேர தொலைபேசி உரையாடலுக்கு பிறகு, இருநாட்டு தலைவர்களும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்தனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்த வார இறுதியில் சவுதி அரேபியாவில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பிரச்சனைகள் தீர்க்கப்படலாம் என்று தெரிவித்தார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி இருநாடுகளும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறி வைக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அமெரிக்கா "எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புகள்" என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளது. எனினும், இத்துடன் ரெயில்வே மற்றும் துறைமுகங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுப்பதாக கூறப்படுகிறது.
அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஜெலன்ஸ்கி தனது சமூக வலைதள பக்கத்தில், "போரை முடிவுக்குக் கொண்டுவரும் முதல் படியாக எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்துவது தான் இருக்க முடியும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இருநாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ள போதிலும், இது எப்போது அமலுக்கு வரும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் இது தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு தான் எப்போது போர் நிறுத்த ஒப்ந்தம் அமலுக்கு வரும் என்று தெரியவரும்.
- இப்படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது.
- இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது.
லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இப்படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கான டிரெய்லர் இன்று 5 மொழிகளிலும் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 3.50 நிமிடம் ஓடும் இந்த ட்ரெய்லரில் மோகன்லால் எப்படிப்பட்டவர் என்பதையும், முதல்வராகப் பொறுப்பேற்ற டோவினோ தாமஸின் அரசியலையும் இந்த பாகம் பேசும் எனத் தெரிகிறது. இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அரசியலை மையமாக வைத்து உருவான இப்படம் மலையாளத்தின் முதல் ரூ.200 கோடி படம் என்ற பெருமையைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- அன்றாட படுகொலைகளுக்குக் காரணம் தமிழ்நாட்டில் சட்ட விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான்.
- வன்முறையில் முதன்மை மாநிலம் தமிழகம் தான் என்ற பெருமையை தமிழகத்திற்கு தி.மு.க. அரசு தேடித் தரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு உட்பட எதுவுமே முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் நேற்று நண்பகல் 12 மணியளவில் ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை-சேலம் நெடுஞ்சாலையில் படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த படுகொலைச் சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாகவும், இவர் நேற்று காலை சேலத்திலிருந்து அவரது மனைவியுடன் காரில் திருப்பூர் சென்று கொண்டிருந்ததாகவும், ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை-சேலம் நெடுஞ்சாலையில் நண்பகல் 12 மணியாலில் சாமி கவுண்டம்பாளையம் பிரிவு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, அவர்களைத் தொடர்ந்து வந்த மர்மக் கும்பல் அந்தக் காரை வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் இருந்த ஜான் என்கிற ரவடியை சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரது மனைவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்தப் படுகொலை கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற அன்றாட படுகொலைகளுக்குக் காரணம் தமிழ்நாட்டில் சட்ட விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், பட்டப்பகலில் நடைபெற்ற இந்தக் கொலையையும், நாள்தோறும் பல கொலைகள் இதுபோன்று நடப்பதையும் பார்க்கும்போது வன்முறையாளர்களின் புகலிடம் தமிழ்நாடு என்ற கருத்திற்கு மாற்றுக்கருந்து இல்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. காவல் துறை என்ற ஒன்று இருக்கிறதா என்று சந்தேகப்படக்கூடிய அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுப் போய்விட்டது. இந்த நிலைமை நீடித்தால் வன்முறையில் முதன்மை மாநிலம் தமிழகம் தான் என்ற பெருமையை தமிழகத்திற்கு தி.மு.க. அரசு தேடித் தரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
தமிழ்நாட்டை அமளிக்காடாக மாற்றியிருக்கும் தி.மு.க. அரசின் செயல்பாடுகளை கண்டிப்பதோடு, தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் வன்முறையிலிருந்து காப்பாற்றவும், தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கும் சமூக விரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
- நாடு முழுவதும் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்து இருக்கிறது.
- பிரம்மபுத்ரா நதியில் ஏராளமான பாலங்களை அமைத்து உள்ளோம்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மாநிலங்களவையில் நெடுஞ்சாலை சுங்கக்கட்டணம் தொடர்பாக நேற்று உறுப்பினர்கள் பல்வேறு கேள்வி எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்து இருக்கிறது. கடந்த 2023-24-ம் ஆண்டில் ரூ.64,809.86 கோடி வசூலாகி இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 35 சதவீதம் அதிகம். அதேநேரம் 2019-20-ல் இது ரூ.27,503 கோடியாக இருந்தது.
சாலை உள்கட்டமைப்புக்காக மத்திய அரசு அதிகம் செலவிடுகிறது. எனவே சுங்கக்கட்டணம் அவசியமானது. சிறந்த சாலையை நீங்கள் விரும்பினால், அதற்காக நீங்கள் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்பதே கொள்கை ஆகும்.
நாங்கள் ஏராளமான பெரிய சாலைகள், 4 வழிச்சாலைகள், 6 வழிச்சாலைகளை அமைத்து வருகிறோம். பிரம்மபுத்ரா நதியில் ஏராளமான பாலங்களை அமைத்து உள்ளோம்.
இதற்காக வெளிச்சந்தையில் இருந்து நிதி பெற்று வருகிறோம். எனவே சுங்கக்கட்டணம் இல்லாமல் இவற்றை செய்ய முடியாது.
ஆனாலும் நாங்கள் மிகவும் நியாயமான முறையிலேயே இருக்கிறோம். 4 வழிச்சாலைகளில் மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கிறோம். இருவழிச்சாலைகளில் வசூலிக்கவில்லை.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து கட்டண சுங்கச்சாவடிகளும் தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (கட்டண நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகள்-2008 மற்றும் தொடர்புடைய சலுகை ஒப்பந்தத்தின் விதிகளின்படி நிறுவப்பட்டுள்ளன.
இந்த சட்டப்படி தேசிய நெடுஞ்சாலையில் ஒரே பிரிவு மற்றும் ஒரே திசையில் 60 கி.மீ.க்குள் கட்டணம் வசூலிக்கக்கூடாது. எனவே உண்மையில் சில விதிவிலக்குகள் உள்ளன.
இந்த பாராளுமன்ற அமர்வுக்குப்பிறகு சுங்கக்கட்டணம் தொடர்பாக நாங்கள் ஒரு புதிய கொள்கையை அறிவிக்க உள்ளோம். அதன்மூலம் இந்த பிரச்சனை தீர்க்கப்படும்.
ஏனெனில் அதில் நாங்கள் நுகர்வோருக்கு நியாயமான சலுகைகளை வழங்குவோம். அதன்பிறகு சுங்கக்கட்டணம் தொடர்பாக எந்த விவாதமும் இருக்காது.
இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
- திருமணமான நாளில் இருந்தே என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்.
- கணவன், மனைவி இடையிலான பிரச்சனையில் 2 பேரும் மாறி, மாறி புகார் அளித்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு வயாலிகாவல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி பிந்துஸ்ரீ. இந்த தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்திருந்தது. கம்ப்யூட்டர் என்ஜினீயரான ஸ்ரீகாந்த், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆனால் திருமணமான நாளில் இருந்தே தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்றும், தத்தெடுத்து குழந்தையை வளர்க்கலாம் என்றும் பிந்துஸ்ரீ கூறி வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தன்னை தொட முயன்றாலோ, தன்னிடம் நெருங்கி வந்தாலோ தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி பிந்துஸ்ரீ மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.
தற்போது ஸ்ரீகாந்துடன் வாழ பிடிக்காமல் தனது பெற்றோர் வீட்டில் பிந்துஸ்ரீ வசித்து வருகிறார். இந்த நிலையில், தனது மனைவி மீது வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீகாந்த் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், 'எனக்கும், பிந்துஸ்ரீக்கும் 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்குள் தாம்பத்யம் நடக்கவில்லை. குழந்தை பெற்றுக் கொண்டால், தனது அழகு கெட்டுப்போய் விடும், அதனால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று பிந்துஸ்ரீ கூறுகிறார். 60 வயதுக்கு பின்பு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார். அதையும் மீறி அவரிடம் நெருங்கினால், என்னை தொட்டால், உங்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டுகிறார். என்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டு தொல்லை கொடுக்கிறார், விவாகரத்து வழங்கவும் ரூ.45 லட்சம் கேட்கிறார். மனைவியின் தொல்லையால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்', என்று கூறி இருந்தார்.
அந்த புகாரை போலீசார் பெற்றுக்கொண்டார்கள். அதே நேரத்தில் குழந்தை பெறும் விவகாரம், தினமும் ரூ.5 ஆயிரம் கேட்டு மிரட்டுவது போன்ற வீடியோ காட்சிகளையும் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், தன் மீது புகார் அளித்த கணவர் ஸ்ரீகாந்த் மீது அதே வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் பிந்துஸ்ரீ நேற்று மதியம் ஒரு புகார் அளித்தார். அதில், தன்னிடம் வரதட்சணை கேட்டு ஸ்ரீகாந்த் மிரட்டுவதாகவும், தன்னை தாக்குவதாகவும் பிந்துஸ்ரீ கூறி இருந்தார்.

பின்னர் போலீஸ் நிலையம் முன்பு வைத்து பிந்துஸ்ரீ நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
என் மீது கணவர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை இல்லை. திருமணமான நாளில் இருந்தே என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். எனது வீட்டில் இருந்து பணம் வாங்கி வராததால், என்னை அடித்து, தாக்கி துன்புறுத்தினார். குழந்தை பெற்றுக் கொண்டால், அவரை விட்டு என்னால் செல்ல முடியாது, அவர் செய்யும் கொடுமைகளை நான் தாங்கி கொண்டு இருக்க வேண்டும் என நினைத்தார். இந்த விவகாரத்தில் நான் பேசியதை கத்தரித்தும், சித்தரித்தும் ஸ்ரீகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஒரு ஆண்டாக பெற்றோர் வீட்டில் வசிக்கிறேன். அங்கு வந்தும் ஸ்ரீகாந்த் சண்டை போட்டார். அவரிடம் விவாகரத்திற்காக ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டவில்லை. திருமணத்திற்காக பெற்றோர் செலவு செய்த பணத்தை கொடுக்கும்படி தான் கேட்டு இருந்தேன். என்னை கொடுமைப்படுத்தி வந்ததால், அவருடன் சேர்ந்து குழந்தை பெற்று, அதன் வாழ்க்கையையும் வீணடிக்க கூடாது என்பதால், 60 வயதிற்கு பின்பு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னேன்', என்றார்.
கணவன், மனைவி இடையிலான பிரச்சனையில் 2 பேரும் மாறி, மாறி புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, ஸ்ரீகாந்த், பிந்துஸ்ரீ அளித்த புகார்களின் அடிப்படையில் வயாலிகாவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு ஏப்.21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்.21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு நாளை முதல் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- வீட்டு செல்ல நாய், லேசாக சத்தம் எழுப்பியபடி குழந்தையை விளையாட அழைத்துவிட்டு ஓடுகிறது.
- குழந்தையும் நாயின் மொழியை புரிந்து கொண்டு எழுந்து செல்கிறது.
குழந்தையுடன், நாய் கண்ணாமூச்சி ஆடும் வீடியோ சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது. நடைபழகிய சுமார் ஒன்றரை வயது குழந்தை வீட்டில் தரையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அப்போது அவர்கள் வீட்டு செல்ல நாய், லேசாக சத்தம் எழுப்பியபடி குழந்தையை விளையாட அழைத்துவிட்டு ஓடுகிறது.
குழந்தையும் நாயின் மொழியை புரிந்து கொண்டு எழுந்து செல்கிறது. அப்போது நாய் ஒரு அறையின் வழியாகச் சென்று சுற்றி, மறுவழியாக வந்து விளையாடுகிறது. குழந்தை அந்த வழியில் சுற்றி வரும் முன்பாக எதிர்திசையிலும் ஓடி விளையாட்டு காட்டும் நாய், குழந்தையுடன் அருமையான கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி மகிழ்கிறது.
குழந்தையும் சந்தோஷமாக சிரித்தபடி அங்கும் இங்குமாக நடந்தபடி நாயுடன் விளையாடுகிறது. இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து வலைத்தளத்தில் வெளியிட, அந்த காட்சிகள் 6 நாட்களில் சுமார் 1 கோடியே 44 லட்சம் பேரின் பார்வைகளை ஈர்த்துள்ளது.
- சென்னை , மும்பை போன்ற அணிகள் எப்போதும் தங்களது பெரிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன.
- சென்னை, மும்பை அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் பட்சத்தில் மற்ற அணிகளுக்கு சவால் இன்னும் அதிகமாக இருக்கும்.
சென்னை:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 'ஹாட்ரிக்' விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் (சென்னை அணிக்காக) என்ற சாதனைக்கு சொந்தக்காரர் எல்.பாலாஜி. இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அவர் தற்போது வர்ணனை பணியில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் நேற்று காணொலி வாயிலாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் இடத்துக்கு டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, சாம் கர்ரன், பதிரானா ஆகியோர் இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் ஆர்.அஸ்வின், ஜடேஜா என்று இரண்டு பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால், ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது (ஆப்கானிஸ்தான்) வாய்ப்புக்கு காத்திருக்க வேண்டி இருக்கும்.
கடந்த சில சீசனில் சென்னை அணியில் நிறைய ஆல்-ரவுண்டர்கள் இருந்ததால் சில சமயம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த சீசனில் அதிக ஆல்-ரவுண்டர்கள் இல்லை. எனவே சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் சென்னை அணியின் முக்கியமான வீரராக இருப்பார். 'பவர்-பிளே'யிலும், இறுதிகட்டத்திலும் அவரால் சிறப்பாக பந்து வீச முடியும்.
உள்ளூர் வீரர் என்பதால் சேப்பாக்கம் ஆடுகளம், சூழலை நன்கு அறிந்தவர். இங்கு எப்போதும் ஆடினாலும் அசத்தி இருக்கிறார். இங்கு முன்பு சென்னைக்கு எதிரான ஒரு முக்கியமான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சுக்காக களம் இறங்கிய போது 30 ரன் மற்றும் 2 விக்கெட் (2023-ம் ஆண்டு) எடுத்திருந்தார். எனவே அவரது பங்களிப்பு அணிக்கு மிகவும் முக்கியமாகும். அதனால் இங்குள்ள சூழலில் எதிரணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்.
18-வது ஐ.பி.எல்.-ல் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகள் எதுவாக இருக்கும் என்று கேட்கிறீர்கள். இந்த ஆண்டு எல்லா அணிகளுமே நன்றாக உள்ளன. பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் எல்லா அணிகளுமே புதிய அணிகள். ஏனெனில் நிறைய வீரர்கள் வேறு அணிக்கு மாறியிருக்கிறார்கள். ஷ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா அணியில் இருந்து பஞ்சாப்புக்கு போய் இருக்கிறார். லோகேஷ் ராகுல் லக்னோவில் இருந்து டெல்லிக்கு மாறியுள்ளார்.
ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து லக்னோ அணிக்கு சென்று இருக்கிறார். இவர்கள் அங்கு முதலில் தங்களை வலுவாக நிலைநிறுத்தி, வெற்றிக்குரிய, நம்பிக்கையான சூழலை உருவாக்க வேண்டும். அணி உரிமையாளர்களுடன் நல்ல அணுகுமுறை இருக்க வேண்டும். வீரர்களின் ஓய்வறை சூழல் சிறப்பாக இருக்க வேண்டும். இப்படி நிறைய விஷயங்களை கவனிக்க வேண்டி இருப்பதால் புதிய அணிகளுக்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். எனவே முதல் 4-5 ஆட்டங்களுக்கு பிறகே ஒவ்வொரு அணியையும் மதிப்பிட முடியும்.
இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் எப்போதும் தங்களது பெரிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன. அவர்கள் வெற்றிகரமான அணிகளாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். சென்னை, மும்பை அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும் பட்சத்தில் மற்ற அணிகளுக்கு சவால் இன்னும் அதிகமாக இருக்கும்.
இதே போல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்த 4 அணிகளும் தங்களுக்கே உரிய கிரிக்கெட்டை சிறப்பாக விளையாடி இருக்கின்றன. வரும் சீசனிலும் அவர்கள் நன்றாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
'ஹாட்ரிக்' விக்கெட் குறித்து கேட்கிறீர்கள். 'ஹாட்ரிக்' விக்கெட்டை திட்டமிட்டு எடுக்க முடியாது. அது நடப்பது அரிது. போட்டிக்குரிய நாளில் சூழல் சாதகமாக அமைந்து, அதிர்ஷ்டமும் இருந்தால் 'ஹாட்ரிக்' விக்கெட் சாதனை படைக்க முடியும்.
இவ்வாறு பாலாஜி கூறினார்.
- கொசுக்களை அழிப்பதில் சிட்டுக்குருவிகளின் பங்கு அதிகம்.
- வாழு, வாழவிடு என்ற கொள்கைக்கு ஏற்ப நாமும் வாழ்வோம், சிட்டு குருவிகளையும் வாழ விடுவோம்.
இன்று சிட்டுக்குருவிகளை பார்ப்பதே தற்போது அரிதாக உள்ளது. முன்பு கிராமப்புறங்களில் பரவலாக காணப்பட்டன. தற்போது அவை படிப்படியாக இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு அழிந்து கொண்டே வருகிறது. அழியும் இனத்தில் உள்ள சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வேண்டும். இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம். இந்த தினத்தில் சிட்டுக்குருவிகள் பற்றி மதுரையை சேர்ந்த பறவைகள் நல ஆர்வலரும், ஆசிரியையுமான சா.வனிதா கூறியதாவது:-
உலகில் வாழும் உயிரினங்களுள் மிக முக்கியமான உயிரினம் சிட்டுக்குருவிகள். அது ஒரு காட்டுயிரி என்றாலும் அவை பெரும்பாலும் மனித குடியிருப்புகளை ஒட்டியே வாழ்பவை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியம்(ஐ.யூ.சி.என்.) கடந்த 2002-ம் ஆண்டு அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் சிட்டுக்குருவியை சேர்த்தது. ஆனால் 2018-ம் ஆண்டு அதிக கவனம் தேவைப்படாத உயிர்களின் பட்டியலுக்கு மாற்றியது. செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி காணாமல் போவதாக பரவலாக ஒரு கூற்று உண்டு. ஆனால் உதகையில் செல்போன் கோபுரங்கள் உள்ள பல இடங்களில் சிட்டுக்குருவிகள் வாழ்வதை காணலாம்.
நகரமயமாதல் காரணத்தால் நமது குடியிருப்பு முறை மாறிப்போனதுதான் சிட்டுக்குருவிகள் குறைந்து போக முதன்மையான காரணம். ஓட்டு வீடுகளும், குடிசை வீடுகளும் இருந்தவரை அவைகளுக்கு கூடு கட்ட இடம் கிடைத்தன. ஆனால் நாம் கான்கிரீட் வீடுகளுக்கு மாறிய போது சிட்டுக்குருவிகள் இல்லாமல் போனது.

சிட்டுக்குருவிகள் தானிய உண்ணிகள் என்றாலும் தனது குஞ்சுகளுக்கு முதலில் ஊட்டுவது சிறு புழுக்களையும், பூச்சிகளையும தான். தாவரங்கள் இருந்தால்தான் பூச்சிகள் இருக்கும். ஆனால் ஒரு செடி கூட வளர இயலாமல் சிமெண்டு மயமாக நமது இருப்பிடங்கள் மாறியதால் பூச்சிகளும், புழுக்களும் இல்லாமல் போயின. கொசுக்களை அழிப்பதில் சிட்டுக்குருவிகளின் பங்கு அதிகம். சிட்டுக்குருவிகளின் ஒலியை கேட்பதால் மக்களின் மன அழுத்தம் குறைவதாக உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். எனவே ஆண்டுதோறும் மார்ச் 20-ந்தேதி இன்று(வியாழக்கிழமை) வரை உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. வாழு, வாழவிடு என்ற கொள்கைக்கு ஏற்ப நாமும் வாழ்வோம், சிட்டு குருவிகளையும் வாழ விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருவெள்ளாறை ஸ்ரீ கவேதாத்திரிநாதர் கருட வாகனத்தில் பவனி.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-6 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சஷ்டி நள்ளிரவு 12.02 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: அனுஷம் இரவு 9.02 மணி வரை பிறகு கேட்டை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் பவனி. திருவெள்ளாறை ஸ்ரீ கவேதாத்திரிநாதர் கருட வாகனத்தில் பவனி. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிநாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-கடமை
மிதுனம்-சிறப்பு
கடகம்-சுகம்
சிம்மம்-துணிவு
கன்னி-ஆர்வம்
துலாம்- பக்தி
விருச்சிகம்-தனம்
தனுசு- முயற்சி
மகரம்-கண்ணியம்
கும்பம்-உறுதி
மீனம்-கவனம்






