என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nitin Gadkari"

    • சுங்கச் சாவடிக்குள் வாகனங்கள் சென்றால் மட்டுமே கட்டணம் பிடிக்கப்பட வேண்டும்.

    தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாகனங்களின் சக்கரங்களின் அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    சுங்க கட்டணம் வசூலிப்பதில் தாமதம் ஏற்படக் கூடாது என்பதற்காக ஃபாஸ்டேக் முறை நடைமுறையில் உள்ளது. வாகனங்கள் சுங்க சாவடியை கடக்கும்போது கேமராக்கள் மூலம் பதிவு எண் ஸ்கேன் செய்யப்பட்டு, வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.

    சுங்கச் சாவடிக்குள் வாகனங்கள் சென்றால் மட்டுமே கட்டணம் பிடிக்கப்பட வேண்டும். ஆனால் அதில் செல்லாத வாகனங்களுக்கும் கட்டணம் பிடிக்கப்பட்டதை பார்த்து வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். கார், வேன், லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்லும்போது அதற்கான கட்டணத்தை வசூலிக்காமல் கூடுதலாக வசூலிப்பதாக புகார் எழுந்தது. பலர் புகார் கொடுக்காமல் சென்றுவிடுவது உண்டு.

    தமிழ்நாட்டில் மதுரவாயல், பரனூர், விக்கிரவாண்டி, போரூர், புழல் உள்ளிட்ட அனைத்து சுங்க சாவடிகளிலும் இந்த தவறு நடை பெற்றுள்ளது. இது பற்றி லாரி உரிமையாளர்கள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு புகார் கொடுத்துள்ளனர். மேலும் இது போன்ற தவறுகள் நாடு முழுவதும் நடந்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்காரி பதில் அளித்தார். 2025 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மொத்தம் 464 கோடி ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகளில் 17.66 லட்சம் தவறான பணம் பிடித்தம் செய்யப்பட்டு மீண்டும் திருப்பி கொடுக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    சுங்கச் சாவடிகளில் தவறாக பணம் பிடித்தம் செய்யப்பட்டு 17.7 லட்சம் வழக்குகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க கட்டணத்தை திருப்பி வழங்கியுள்ளது. கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம், மற்றும் சுங்கச்சாவடியில் செல்லாமலேயே பிடித்தம் செய்த பணம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

    சுங்க சாவடி ஊழியர்கள் வாகன விவரங்களை கை முறையாக பதிவு செய்யும் போது ஏற்படும் பிழைகளால் இத்தகைய பரிவர்த்தனைகள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு இந்த முறையை முழுமையாக கைவிடுவது குறித்து சாலை போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், தவறான பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தாலும் இது நடக்கக்கூடாது. சுங்க கட்டணத்தை பிடித்தம் செய்ய வாகன பதிவு எண்களை கம்ப்யூட்டரில் கைமுறையாக பதிவிடும் நடைமுறையை விரைவில் நிறுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

    • வண்டி சீராக ஓடத் தொடங்கியதும், நாம் அதிலிருந்து விலகி மற்ற வேலைகளைச் செய்ய வேண்டும்.
    • நிதின் கட்கரிக்கு தற்போது 68 வயதாகிறது.

    மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரத்தில் உள்ள விதர்பாவில் 'அட்வான்டேஜ் விதர்பா-காஸ்தர் ஆத்யோகிக் மஹோத்சவம்' என்ற முதலீட்டு மாநாடு மற்றும் வணிக விழா பிப்ரவரி 6 முதல் 8 வரை நடைபெற உள்ளது. மூன்றாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்நிகழ்ச்சி தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நாக்பூரில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார். அப்போது,

    "தலைமுறை மாற்றமும் படிப்படியாக நிகழ வேண்டும் என்று நான் நம்புகிறேன். இப்போது நாம் படிப்படியாக ஓய்வுபெறச் செய்யப்பட்டு, புதிய தலைமுறையினரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். வண்டி சீராக ஓடத் தொடங்கியதும், நாம் அதிலிருந்து விலகி மற்ற வேலைகளைச் செய்ய வேண்டும்.

    மூன்று நாள் நடைபெறும் இந்த நிகழ்வின் நோக்கம், விதர்பாவை இந்தியாவின் தொழில்துறை வரைபடத்தில் வலுவான மற்றும் வளர்ந்து வரும் வளர்ச்சி மையமாக நிலைநிறுத்துவதாகும்" என தெரிவித்தார். மேலும் எந்தவொரு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் தொழில்துறை, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் மற்றும் சேவைத் துறையின் முக்கியத்துவத்தையும் கட்கரி வலியுறுத்தினார். ஓய்வு குறித்த நிதின் கட்கரியின் இந்தப் பேச்சு தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

    • மாசுபாட்டை அதிகரிப்பதற்கு நாம் ரூ.22 லட்சம் கோடி செலவிடுகிறோம்.
    • டெல்லிக்கு வெளியேயும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன

    டெல்லியில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தாலே தனக்கு நோய்தொற்று ஏற்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    பத்திரிகையாளர் உதய் மஹூர்கரின் 'My Idea of Nation First: Redefining Unalloyed Nationalism' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நிதின் கட்கரி, "என்னால் இரண்டு நாட்கள்கூட டெல்லியில் தங்கமுடிவதில்லை. உடனே நோய்தொற்று ஏற்படுகிறது. டெல்லியில் ஏன் எல்லா இடங்களிலும் இவ்வளவு மாசுபாடு உள்ளது? நான் போக்குவரத்து துறை அமைச்சர். இந்த மாசுபாட்டிற்கு 40% காரணம் நாங்கள்தான். பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களே காரணம்.

    புதைபடிவ எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கும், மாசுபாட்டை அதிகரிப்பதற்கும் நாம் ரூ.22 லட்சம் கோடி செலவிடுகிறோம். இது என்ன தேசியவாதம்? நம்மால் ஒரு மாற்று இந்தியாவை உருவாக்க முடியாதா? மாற்று எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருளைக் கொண்டு ஒரு ஆத்மநிர்பர் பாரதத்தை (சுயசார்பு இந்தியா) உருவாக்க முடியாதா?" என்று கேள்வி எழுப்பினார்.

    டெல்லியில் தொடர்ந்து அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக பாஜக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில் நிதின் கட்கரியின் இந்த கருத்து கவனம்பெற்றுள்ளது. நிதின் கட்கரியின் இந்த கருத்துதொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்.பி, இம்ரான் மசூத்,

    "கட்கரிக்கு குறைந்தபட்சம் காற்று மாசு அதிகரிப்பை ஒப்புக்கொள்ள தைரியம் இருந்தது. நீங்கள் எல்லா தீர்வுகளையும் வழங்கும்போது, தயவுசெய்து இதற்கும் ஒரு தீர்வை பரிந்துரையுங்கள். மாசுபாட்டிற்கு வாகனங்கள் மட்டுமே காரணம் என்று நான் நினைக்கவில்லை. டெல்லிக்கு வெளியேயும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன" என தெரிவித்துள்ளார். 


    • இதற்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.
    • நிறுவனங்களுடன் இணைந்து அரசு விரிவான ஆய்வுகளை நடத்தியுள்ளது.

    கமல் ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் கமல் ஹாசன் அக்கூட்டணியால் மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது.

    இந்நிலையில் கமல் ஹாசன் எம்.பியாக தான் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய முதல் கேள்வி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    பெட்ரோலுடன் வழக்கமான 10 சதவீதத்திற்கு பதிலாக 20 சதவீதம் எத்தனால் கலக்கும் மத்திய அரசின் E20 திட்டம் குறித்து கமல் ஹாசன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதற்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.  

    கமல் ஹாசனின் கேள்விகள்:

    1)E20 எரிபொருளால் வாகனத்தின் மைலேஜ் மற்றும் எஞ்சின் பாகங்கள் பாதிக்கப்படுமா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளதா?

    2) பழைய வாகனங்களுக்கு ஏற்ற E10 பெட்ரோல் நாடு முழுவதும் கிடைப்பது நிறுத்தப்பட்டது ஏன்? அதனை மீண்டும் கொண்டுவரும் திட்டம் உள்ளதா?

    3) E20 பயன்பாட்டால் எஞ்சின் சேதமடைந்தால் அதற்கான உத்தரவாதம் அல்லது காப்பீடு குறித்து வழிகாட்டுதல்கள் உள்ளனவா?

    நிதின் கட்கரி எழுத்துபூர்வமாக அளித்த பதில்:

    நிறுவனங்களுடன் இணைந்து அரசு விரிவான ஆய்வுகளை நடத்தியுள்ளது. E20 எரிபொருள் குறித்து நடத்தப்பட்ட கள சோதனைகளில் வாகனங்களின் செயல்பாட்டில் எந்தப் பாதிப்பும் கண்டறியப்படவில்லை.

    பழைய வாகனங்களில் கூட, E20 எரிபொருளைப் பயன்படுத்துவதால் எஞ்சின் தேய்மானமோ அல்லது செயல்திறன் குறைவோ ஏற்படவில்லை என்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வாகனத்தின் மைலேஜ் என்பது எரிபொருளை மட்டும் சார்ந்தது அல்ல. முறையான பராமரிப்பு, டயர் காற்றழுத்தம் மற்றும் ஏசி பயன்பாடு போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தே அமைகிறது.

    எத்தனால் கலப்பு அதிகரிப்பது நாட்டின் இறக்குமதிச் செலவைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • விபத்து எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 2.31 சதவீதம் அதிகம்
    • விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் உத்தரபிரதேசம் முதலிடம்

    2024-ல் இந்தியாவில் சாலைவிபத்தில் 1.77 லட்சம் பேர் இறந்ததாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று மக்களவையில் தெரிவித்தார். அதாவது ஒரு நாளைகு 485 பேர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 2.31 சதவீதம் அதிகமாகும்.

    2024-ல் நாட்டில் பதிவான மொத்த சாலை விபத்து இறப்புகளின் எண்ணிக்கை 1,77,177 ஆகும். இதில் eDAR போர்ட்டலில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கு வங்கம் தொடர்பான தரவுகளும் அடங்கும். 2023 ஆம் ஆண்டு மொத்தம் 4,80,583 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,72,890 பேர் உயிரிழந்துள்ளனர். 4,62,825 பேர் காயமடைந்துள்ளனர்.

    விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 2023 ஆம் ஆண்டில் இங்கு 23,652 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 24,118 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2023 ஆம் ஆண்டில் 18,347 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18,449 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இறப்பு எண்ணிக்கை 15,366 லிருந்து 15,715 ஆக அதிகரித்துள்ளது. இவற்றிற்கு மாறாக கேரளா குறைந்த அளவு விபத்து சதவிகித்தை பதிவு செய்துள்ளது.

    • மக்களவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் நிதின் கட்கரியிடம் கேள்வி எழுப்பினார்.
    • அதனால்தான் எங்களால் மணிக்கு 100 முதல் 130 கி.மீ வேகத்தில் ஓட்ட முடியவில்லை

    டெல்லி-மும்பை விரைவுச் சாலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கார் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவைக் குறிப்பிட்டு, மக்களவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் நிதின் கட்கரியிடம் கேள்வி எழுப்பினார்.

    அதாவது, நிதின் கட்கரியின் கார் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, ஆனால் அசாமில் அத்தகைய சாலைகள் இல்லாதது வருத்தமளிக்கிறது. சுங்க வரி செலுத்தினாலும் அசாம் மக்களுக்கு தரமான சாலைகள் கிடைக்கவில்லை. அதனால்தான் எங்களால் மணிக்கு 100 முதல் 130 கி.மீ வேகத்தில் ஓட்ட முடியவில்லை என்று கோகாய் கூறினார்.

    இதற்கு பதிலளித்த நிதின் கட்கரி, கனமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலைகள் சேதமடைந்ததை ஒப்புக்கொண்டார். அதாவது, கௌரவ் கோகோய் கூறியது உண்மை என்றும், விசாரணை நடத்தப்பட்டு சாலைகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இப்போது நிலைமை சிறப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

    • தற்போது இந்தியாவில் 57 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • 2024-25-ம் ஆண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களின் சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாயை தொடும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் அவர் கூறியதாவது:

    தற்போது இந்தியாவில் 57 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024-25 மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

    மின்சாரத்தில் இயங்கும் கார்களின் விற்பனை 20.8 சதவீதமும், இருசக்கர வாகனங்களின் விற்பனை 33 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 18 சதவீதமும் அதிகரித்துள்ளது.

    அதேபோல், பெட்ரோல், டீசல் கார்களின் கார்களின் விற்பனை 4.2 சதவீதமும், இரு சக்கர வாகனங்களின் விற்பனை 14 சதவீதமும் மூன்று சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 6 சதவீதமும் அதிகரித்துள்ளது.

    வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்களின் சந்தை 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டும். ஆண்டுக்கு 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் 400-க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களின் ஸ்டார்ட் அப் சந்தையை உருவாக்கும் என தெரிவித்தார்.

    • எனது மூளை மாதம் ரூ. 200 கோடி சம்பாதிக்கும் மதிப்புடையது என நிதின் கட்கரி பேசினார்.
    • அந்த அளவுக்கு இந்தியாவின் சாலைகள் சிறப்பாக உள்ளன என நிதின் கட்கரி பேசினார்.

    இந்தியா ஏப்ரல் 2023 இல் நாடு தழுவிய அளவில் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை (E20) அறிமுகப்படுத்தியது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும் ஒரு முக்கிய படியாக மத்திய அரசு இந்த கொள்கையை முன்வைத்தது.

    இருப்பினும், எதிர்க்கட்சிகள் மற்றும் நிபுணர்கள், இந்தத் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தனர். பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் மைலேஜ் பாதிக்கிறது என விமர்சனங்கள் எழுந்தன.

    குறிப்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் 2 மகன்கள் நாட்டின் 2 முன்னணி எத்தனால் உற்பத்தி ஆலையை நடத்துவதால் அவர்களின் சொந்த ஆதாயத்துக்காக எத்தனால் கலந்த பெட்ரோல் ஊக்குவிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.

    இதுகுறித்து விளக்கம் அளித்த நிதின் கட்கரி, "எனது மூளை மாதம் ரூ. 200 கோடி சம்பாதிக்கும் மதிப்புடையது. எப்படி நியாயமாக சம்பாதிக்க வேண்டும் என எனக்கு தெரியும். எனக்கு எந்த பணப் பிரச்னையும் இல்லை. இதையெல்லாம் என் சொந்த நலனுக்காக செய்யவில்லை" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, "துபாயின் சாலைகளை மேம்படுத்துவதற்கு நிதின் கட்கரியை 6 மாதங்கள் அனுப்புங்கள் என அந்நாட்டு இளவரசர் பிரதமர் மோடியிடம் கேட்டார். அந்த அளவுக்கு இந்தியாவின் சாலைகள் சிறப்பாக உள்ளன" என்று தெரிவித்தார்.

    துபாய் சாலைகளை விட இந்தியாவின் சாலைகள் தரமாக உள்ளதாக நிதின் கட்கரி பேசியது இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

    • பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுவதால் வாகன மைலேஜ் குறைந்துவிட்டதாக புகார்
    • டீசலுடன் எத்தனாலை கலக்கும் திட்டம் தோல்வியடைந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

    இந்தியாவில் விற்கப்படும் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுகிறது. 2014-ல் பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் வெறும் 1.5% உடன் தொடங்கிய நிலையில், 2022 ஜூன் மாதத்தில் பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. தற்போது பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுகிறது.

    ஒரு லிட்டர் எரிபொருளில் 800 மில்லி லிட்டர் பெட்ரோல் 200 மில்லி லிட்டர் எத்தனால் கலந்து விற்கப்படுவதால் (E 20) வாகன மைலேஜ் குறைந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உயிரி எரிசக்தி மாநாட்டின் உரையாற்றிய நிதின் கட்கரி, "டீசலுடன் எத்தனாலை கலக்கும் திட்டம் தோல்வியடைந்ததால், தற்போது டீசலுடன் ஐசோபியூடனாலை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், "பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பிற்கு எதிரான கருத்துக்கள், தனக்கு எதிராக பணம் கொடுத்து திட்டமிட்டு நடக்கும் பரப்புரை என விமர்சித்தார்.

    • எனது துறையில் வெளிப்படையாக உண்மையை சொல்வதை யாரும் விரும்பவில்லை.
    • மக்களை ஏமாற்றி நம்பவைக்கத் தெரிந்த தலைவர் தான் எப்போதும் வெற்றி பெறுகிறார்.

    மக்களை ஏமாற்றத் தெரிந்தவர் தான் சிறந்த தலைவர் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரில் அகில பாரத மகானுபவ பரிஷத் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் நேற்று நிதின் கட்கரி பங்கேற்றார்.

    அப்போது பேசிய அவர், "மக்களை ஏமாற்ற தெரிந்தவர் தான் சிறந்த அரசியல்வாதி. எனது துறையில் வெளிப்படையாக உண்மையை சொல்வதை யாரும் விரும்பவில்லை.

    எல்லாருக்கும் அவரவருக்கான நோக்கங்கள் உள்ளன. மக்களை ஏமாற்றி நம்பவைக்கத் தெரிந்த தலைவர் தான் எப்போதும் வெற்றி பெறுகிறார்.

    ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அதாவது, உண்மையே இறுதியில் வெல்லும் என பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் எழுதியிருக்கிறார்.

    வேண்டிய விஷயங்களை சாதிக்க பல குறுக்கு வழிகள் இருக்கும். நீங்கள் விதிகளை மீறி, ரெட் சிக்னலை பொருட்படுத்தாமல் கடந்து செல்லலாம், ஆனால் ஒரு தத்துவ ஞானி சொன்னதுபோல், குறுக்குவழிகள் உங்கள் பயணத்தை முடக்கிவிடும்.

    எனவே உண்மை மற்றும் அர்பணிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுங்கள்" என தெரிவித்தார். 

    • பெருநகரங்களில் மட்டுமல்ல, தொலைதூர மற்றும் அணுக முடியாத கிராமப்புறங்களிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
    • இன்னும் ஓராண்டில் நமது நெடுஞ்சாலைகளின் தரம் அமெரிக்க சாலைகளின் தரத்தை ஒத்திருக்கும் என நான் அதிகமாக நம்புகிறேன்.

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

    அப்போது நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்து திட்டங்கள், சாலை போக்குவரத்து கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்து விரிவான தகவல்களை வழங்கினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மர வங்கி, செல்போன் அடிப்படையிலான டிரைவிங் பயிற்சி, 11 முன்னணி வாகன உற்பத்தியாளர்களின் நெகிழ்வுத்தன்மை கொண்ட எந்திரங்கள் என இந்தியாவின் போக்குவரத்து துறை மிகப்பெரிய மாற்றம் பெற்று வருகிறது.

    மேலும் 25 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு இருவழிப்பாதை 4 வழிச்சாலையாக மாற்றுதல், முக்கிய வழித்தடங்களில் அதிவேக மின்சார போக்குவரத்து நெட்வொர்க் நிறுவுதல் மற்றும் சாலை கட்டுமானத்தை ஒரு நாளைக்கு 100 கி.மீ ஆக உயர்த்துதல் போன்ற திட்டங்களும் உள்ளன.

    நாங்கள் புதுமைகளை முன்னெடுத்துச்செல்கிறோம். போக்குவரத்தில் ஒரு மாபெரும் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் பயணிக்கும் விதத்தை மாற்றுவதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.

    பெருநகரங்களில் மட்டுமல்ல, தொலைதூர மற்றும் அணுக முடியாத கிராமப்புறங்களிலும் கவனம் செலுத்தப்படுகிறது. கேதார்நாத் உட்பட 360 இடங்களில் ரோப் கார்கள், கேபிள் பஸ்கள் மற்றும் பனிகுலர் ரெயில் திட்டங்களை நாங்கள் அமைத்து வருகிறோம். இவற்றில் 60 திட்டங்களில் ஏற்கனவே பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இந்த திட்டங்களுக்கு ரூ.200 கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை செலவிடப்படுகிறது. இவற்றின் பணிகள் முடிவடைந்தால் இந்தியாவின் முகத்தையே அது மாற்றும்.

    மேம்படுத்தப்பட்ட சாலை கட்டமைப்பு நாட்டின் பொருளாதாரத்துக்கு உந்துசக்தியாக இருப்பது மட்டுமின்றி, வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவும்.

    இன்னும் ஓராண்டில் நமது நெடுஞ்சாலைகளின் தரம் அமெரிக்க சாலைகளின் தரத்தை ஒத்திருக்கும் என நான் அதிகமாக நம்புகிறேன். பெருநகரங்களில் கேபிள் மூலம் இயங்கும் பஸ்கள், விமானம் போன்ற வசதிகளுடன் கூடிய மின்சார விரைவுப் போக்குவரத்து பஸ்கள் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

    டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு மெட்ரினோ பாட் டாக்சிகள், ஹைப்பர்லூப் அமைப்புகள் மற்றும் தூண் அடிப்படையிலான வெகுஜன விரைவான போக்குவரத்து போன்ற அடுத்த தலைமுறை போக்குவரத்துக்கான முன்னோடித் திட்டங்கள் தயாராக உள்ளன.

    தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டாளர்கள் இருவரும் வருகிறார்கள். இது ஒரு புரட்சியாக இருக்கும். டாடா, டயோட்டா, ஹூண்டாய், மகிந்திரா உள்பட 11 நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதிகள் மற்றும் புதைபடிவ எரிபொருளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நெகிழ்வான எரிபொருள் எந்திர வாகனங்களை உருவாக்க ஒப்புக் கொண்டுள்ளன.

    2013-14-ல் 91,287 கி.மீ.யாக இருந்த தேசிய நெடுஞ்சாலை தற்போது 60 சதவீதம் அதிகரித்து 1.46 லட்சம் கி.மீ.யாக உள்ளது.

    இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

    • பைக்குகளுக்கு சுங்க வரி விதிக்க உள்ளதாக இணைய தளங்களில் செய்திகள் வெளியாகின.
    • இருசக்கர வாகனங்களுக்கு முழுமையான வரி விலக்கு தொடரும் என்றார் நிதின் கட்கரி.

    புதுடெல்லி:

    இந்திய நெடுஞ்சாலைகளில் ஜூலை 15-ம் தேதி முதல் சுங்க சாவடிகளில் இருசக்கர வாகன ஓட்டிகளும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என இணைய தளங்களில் தகவல்கள் பரவின.

    இந்நிலையில், இருசக்கர வாகனங்களுக்கு அரசு சுங்க வரி விதிக்கப் போவதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையல்ல என மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக நிதின் கட்கரி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இருசக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்க இருப்பதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளைப் பரப்புகின்றன. அத்தகைய முடிவு எதுவும் முன்மொழியப்படவில்லை. இருசக்கர வாகனங்களுக்கு முழுமையான வரி விலக்கு தொடரும். உண்மை தெரியாமல் தவறான செய்திகளைப் பரப்புவதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்துவது ஆரோக்கியமான ஊடக அறம் அல்ல. இதை நான் கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கவரி விதிக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது.

    ×