என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கேலி செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
    • நிர்மலா தாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து கருத்து தெரிவித்த குணால் கம்ராவுக்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், தற்போது மத்திய அமைச்சர் குறித்த கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக்கு காவல் நிலையத்தில் விசாராணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல் துறையினர் குணால் கம்ராவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில், நேற்று (புதன் கிழமை) குணால் கம்ரா வெளியிட்ட மற்றொரு வீடியோவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கேலி செய்யும் வகையிலான காட்சிகள் இடம்பெற்று இருந்தது.

    அந்த வீடியோவில் 1987ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'மிஸ்டர் இந்தியா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஹவா ஹவாய்' என்ற பாடலில் பாப்கார்ன் எமோஜிக்கள் இடம்பெற்று இருந்தன. இவை திரையரங்குகளில் வாடிக்கையாக விற்பனை செய்யப்படும் பாப் கார்ன் மீது ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை கிண்டல் செய்யும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், அந்த வீடியோவில் சாலைகளில் குழிகள் இருப்பதும், மெட்ரோ பணிகளுக்காக சாலையில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மேம்பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்களை கேலி செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சரிவாலி தீதி மற்றும் நிர்மலா தாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே குறித்த சர்ச்சைக்கு காவல் துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதற்கு பதிலளித்த குணால் கம்ரா காவல் நிலையத்தில் ஆஜராக ஒருவார காலம் அவகாசம் கோரியிருந்தார். காவல் துறையினர் குணால் கம்ரா கோரிக்கையை நிராகரித்ததுடன் காவல் நிலையத்தில் ஆஜராக மீண்டும் சம்மன் வழங்கியுள்ளனர்.

    • தம்பதிக்கு மெஹந்தி வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
    • திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்ஷ். அதே ஊரை சேர்ந்தவர் மிருதுளா. இருவரும் சிறு வயது முதலே நண்பர்களாக பழகி வந்தனர். பள்ளியிலும் ஒன்றாக படித்து வந்தனர்.

    அப்போது அவர்களிடையே காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

    கடந்த 1961-ம் ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த காலம். காதல் திருமணம் என்பது அரிதானது.

    இதனால் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த தங்களது காதலை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை.

    இதனால் ஹர்ஷ் மற்றும் மிருதுளா பள்ளி பருவத்திலேயே வீட்டை விட்டு வெளியேறி எளிமையான முறையில் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அப்போது அவர்கள் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுப்பதில்லை என சபதம் ஏற்றனர்.

    இந்த நிலையில் தம்பதிக்கு குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைத்து ஆளாக்கினர்.

    அவர்களுக்கும் குழந்தை பிறந்து மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள், கொள்ளு பேர குழந்தைகள் என பெரிய குடும்பமாக வளர்ச்சி பெற்றது.

    பேரன், பேத்திகளுடன் வாழ்ந்தாலும் தங்களுடைய திருமணம் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நடைபெறவில்லை. பிரமாண்ட முறையில் விருந்து வைக்கவில்லை என வயதான பிறகும் தம்பதி ஏக்கத்துடன் இருந்தனர்.

    64 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மகன்கள் தங்களது பெற்றோர் எளிமையான முறையில் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவர்களுக்கு பிரமாண்ட முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் பெரிய திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமண ஏற்பாடுகள் நடந்தன.

    இன்னிசை கச்சேரி ஆட்டம், பாட்டம் என திருமண மண்டபம் களை கட்டியது. தம்பதிக்கு மெஹந்தி வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

    மகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப்பேர குழந்தைகள் முன்னிலையில் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

    திருமண விழாவில் உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமண விழாவில் போட்டோ ஷூட் நடந்தது. மண மேடையில் மாலையும் கழுத்துமாக நின்ற தாத்தா, பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்.

    மேலும் செல்பி எடுத்துக் கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    இந்த திருமண வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் இந்த தலைமுறைக்கு நீங்கள் முன்மாதிரி என பதிவு செய்து வருகின்றனர்.

    • பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நள்ளிரவில் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
    • கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

    ஈரோடு:

    சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது சோதனையில் ரூ.1000 கோடி வரை ஊழல் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.

    இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஈரோடு மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நள்ளிரவில் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.

    அந்தப் போஸ்டரில் ஆயிரம் ரூபாய் கொடுப்பதுபோல் கொடுத்து ஆயிரம் கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? பாட்டிலுக்கு 10 ரூபாய், விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல், உரிமம் பெறாத பார் மூலம் 40 ஆயிரம் கோடி ஊழல் போன்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

    கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதேபோல் பவானி, பெருந்துறை, கவுந்தப்பாடி, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தது. இதனைப் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

    • போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு சென்ற முதல் நாளிலேயே 4 பேர் கைது.
    • மீனவர் சங்க தலைவர் சேசுராஜா தலைமையில் 5 பேர் இலங்கை சென்றுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறை பிடித்து வருகிறார்கள். கடந்த 2 மாதங்களில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

    இதனை கண்டித்து கடந்த மாதம் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தினர். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருவோடு ஏந்தியும், கஞ்சி காய்ச்சியும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    அப்போது ராமேசுவரம் வந்த தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, போராட்டத் தில் ஈடுபட்ட மீனவர்களை நேரடியாக சந்தித்து பேசினார்.

    மேலும் மத்திய, மாநில அரசுகளிடம் பேசி மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்து சென்றார்.

    இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு சென்ற முதல் நாளிலேயே 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்தநிலையில் இன்று அதிகாலை மேலும் 11 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதிச்சீட்டு பெற்று 400 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இன்று அதிகாலையில் அவர்கள் வடக்கு கடல் பகுதியில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினரை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டனர்.

    இருந்தபோதிலும் வேர்க்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெர்சிஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அதில் இருந்த பாம்பனை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 38), சவேரியார் அடிமை (35), முத்துகளஞ்சியம் (27), எபிரோன் (35), ரஞ்சித் (33), இன்னாசி (25), கிறிஸ்து (45), ஆர்னாட் ரிச்சே (36), ராமே சுவரத்தை சேர்ந்த பாலா (38), தங்கச்சிமடத்தை சேர்ந்த யோவான்ஸ் நானன் (36), அந்தோணி சிசோரியன் (43) ஆகிய 11 பேரையும் சிறைபிடித்தனர்.

    மேலும் அந்த படகில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இறால் உள்ளிட்ட மீன்களையும் பறிமுதல் செய்துகொண்ட இலங்கை கடற்படையினர், அவர்கள் மீது எல்லை தாண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 11 பேரிடம் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை மீன்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் 11 பேரும் ஒரு விசைப்படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.

    பின்னர் ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என என இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    மீனவர்கள் பிரச்சனை தொடர்பாகவும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை சந்திக்கவும் இரு நாட்டு நல்லெண்ண அடிப்படையில் ராமேசுவரத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு விசைப்படகு மீனவர் சங்க தலைவர் சேசுராஜா தலைமையில் 5 பேர் இலங்கை சென்றுள்ளனர்.

    நேற்று யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்தித்து பேசிய நிலையில் இன்று மீண்டும் 11 ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

    • அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
    • தமிழகத்தின் நலனுக்காக அவர் முன் வைத்துள்ள கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதன் மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    இந்நிலையில் இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம் சூட்டி உள்ளார். அவர் பேசிய வீடியோவில்,

    இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு வடிவமாக பார்க்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 2 மணி நேரத்துக்கு மேலாக தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி இருப்பது பற்றி பல கருத்துகள் எழுந்துள்ளன.

    தமிழகத்தின் நலனுக்காக அவர் முன் வைத்துள்ள கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறி உள்ளார்.

    • வேறு சில மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.
    • தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தொகுதிகளை மறு சீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு (2026) இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ் நாட்டில் 8 எம்.பி. இடங்கள் வரை குறையும் அபாயம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதேபோன்று வேறு சில மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.

    இதையடுத்து தொகுதி மறு சீரமைப்பை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் சென்னையில் 24 கட்சிகள், அமைப்புகள் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கைகளை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டாலும் இது தொடர்பாக தீவிரமாக ஆய்வு செய்ய காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. காங்கிரஸ் தேசிய கட்சி என்பதால் இது தொடர்பான கருத்துக்களை ஆய்வு செய்ய குழு அமைக்க முடிவு செய்துள்ளோம்.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை தெளிவான தகவல்களை வெளியிடவில்லை. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வெளியாகும் யூகத்தின் அடிப்படையிலான தகவல்களுக்கு மத்திய அரசு உரிய விளக்கங்களை தர வேண்டும்' என்று கூறியுள்ளார்.

    தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையை மக்கள் தொகை பற்றிய புதிய கணக்கெடுப்பு நடத்தும் வரை மேற்கொள்ளக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
    • அ.தி.மு.க.வின் தூணாக விளங்கியவர்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள திருத்து பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி பாண்டியன் (வயது 76). அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக இருந்து வந்த இவர், 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

    சமீப காலமாக கருப்பசாமி பாண்டியனுக்கு வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு இருந்து வந்தாலும், கட்சி பணிகளை திறம்பட மேற்கொண்டு வந்தார். கடந்த 1 வாரமாக உடல்நிலை சற்று பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை திருத்து கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் கருப்பசாமி பாண்டியன் மகனும், அ.தி.மு.க. மாநில எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணை செயலாளருமான வி.கே.பி. சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    அப்போது முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, நெல்லை மாநகர் மாவட்ட செயலா ளர் தச்சை கணேசராஜா, புறநகர் மாவட்ட செய லாளர் இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ., கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    அதன்பின்னர் எடப் பாடி பழனிசாமி நிருபர் களிடம் கூறியதாவது:-

    போற்றுதலுக்கும், மிகுந்த மரியாதைக்கும் உரிய கருப்பசாமி பாண்டியன் தென் மாவட்டங்களில் முத்திரை பதித்தவர். எம்.ஜி.ஆர். மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவரது காலத்தில் இருந்து கட்சியில் இருக்கிறார். கட்சியை உயிராக நேசித்த வர். தென் மாவட்ட மக்களிடம் மிகவும் மரியாதைக் குரியவராக இருந்தவர்.

    எம்.ஜி.ஆர். காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். மாவட்ட செயலராக இருந்தவர். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்தில் துணை பொதுச் செயலாளராக திறம்பட பணியாற்றியவர்.

    அ.தி.மு.க.வின் தூணாக விளங்கியவர். நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற போது என்னை நேரில் சந்தித்து எங்களுடைய முழு ஆதரவு உங்களுக்கு உண்டு என்று தெரிவித்தார்.

    தென் மாவட்டங்களில் உங்களுக்கு துணையாக நிற்பேன் எனக் கூறி எனக்கு வலிமை சேர்த்தவர். அவ ருடைய நினைவெல்லாம் கட்சிதான். அவருடைய இழப்பு அ.தி.மு.க.விற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத் தாருக்கும், உற்றார்-உறவினருக்கும், தென் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    அப்போது அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் கல்லூர் வேலாயுதம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், துணைச்செய லாளர் வீரபெருமாள், முன்னாள் எம்.பி.க்கள் முத்துகருப்பன், சவுந்தர் ராஜன், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கர லிங்கம், பொருளாளர் ஜெயபாலன், துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன், அணி செயலாளர்கள் ஜெயலலிதா பேரவை ஜெரால்டு, எம்.ஜி.ஆர். மன்றம் பால் கண்ணன் மற்றும் திரளான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
    • கியாஸ் எடுத்து செல்லும் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளது.

    தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

    லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமான சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ேராலியம் ஆகியவை மூலம் வீடுகள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு வினியோகத்தில் ஈடுபட்டுள்ளன.


    சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் பாட்டலிங் மையங்களுக்கு ஏற்றி செல்லும் பணியில் நாடு முழுவதும் 24 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் 2025-30-ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகளை எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

    புதிய ஒப்பந்தத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளை குறைவாக கேட்டு இருப்பதோடு 21 டன் எடை கொண்ட கியாஸ் மற்றும் 3 அச்சு லாரிகளுக்கு முன்னுரிமை என்கிற விதியை அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

    மேலும் 2 அச்சு லாரிகளை குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் , வாடகை நிர்ணயம் செய்வதில் பழைய முறையையே கடை பிடிக்க வேண்டும் என கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் எண்ணை நிறுவனங்கள் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகளை ஏற்பது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கிடையே கடந்த 17-ந் தேதி எண்ணை நிறுவன அதிகாரிகளுடன் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர் சந்தித்து சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதன்பிறகும் புதிய கட்டுப்பாடுகளில் பெரிய தளர்வு ஏதும் அறிவிக்கப்பட வில்லை. இதனால் விரக்தி அடைந்த கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

    அதன்படி தென் மண்டல அளவில் இயக்கப்படும் 6 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகளையும் ஆங்காங்கே நிறுத்தி இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இதனால் கிடங்குகளில் இருந்து கியாஸ் சிலிண்டரில் கியாஸ் நிரப்பும் பிளாண்ட்களுக்கு கியாஸ் எடுத்து செல்லும் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால் விரைவில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. உடனடியாக இதில் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இது குறித்து தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் செந்தில் கூறியதாவது-

    புதிய ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 2 அச்சு லாரிகள் புறக்கணிப்பு, கிளீனர் இல்லையென்றால் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை அபராதம், சிறிய விபத்து என்றாலும் 2 ஆண்டுகளுக்கு தடை என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் இடம் பெற்றிருந்தன.

    மேலும் 3 அச்சு லாரிகளுக்கு 25 சதவீதம், 2 அச்சு லாரிகளுக்கு 75 சதவீதம் தொழில் வாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது மட்டும் எங்களுக்கு சாதகமாக உள்ளது. புதிய டேங்கர் லாரிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதற்கு 60 லட்சம் வரை செலவாகும்.

    இதன் பாதிப்புகள் குறித்து எடுத்து கூறியும் கடந்த 24-ந் தேதி வரை விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. புதிய ஒப்பந்தத்தால் நாங்கள் நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடும், இதனால் இன்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.

    இதனால் எண்ணை நிறுவனங்களின் தென் மண்டலத்திற்கு உட்பட்ட சென்னை, கொச்சி, பாலக்காடு, விசாகப்பட்டினம், மங்களூரு, எடியூர், சரளப்பள்ளி, தூத்துக்குடி உள்பட 10 இடங்களில் உள்ள கிடங்குகளில் இருந்து லாரியில் கியாஸ் எடுத்து செல்லும் பணியில் ஈடுபடும் 6 ஆயிரம் டேங்கர் லாரிகளும் இன்று காலை முதல் இயங்கவில்லை.

    இதில் தினசரி 1500 கியாஸ் டேங்கர் லாரிகளில் கியாஸ் எடுத்து செல்லும் பணிகள் முடங்கி உள்ளதால் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகளை தளர்த்தும் வரை வேலை நிறுத்தம் தொடரும். இந்த வேலை நிறுத்தம் நாடு முழுவதும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    இதற்கிடையே இன்று மாலை மும்பையில் இருந்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கோவைக்கு வருகிறார்கள். அவர்களுடன் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்துகிறோம், அதில் சுமூக முடிவு ஏற்பட்டால் போராட்டத்தை வாபஸ் பெறுவோம், போராட்டம் தொடர்ந்தால் ஒரு வாரத்திற்கு பிறகு கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும்.

    இந்த போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும், பார் வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.65,720-க்கும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.65,480-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,560-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,235-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,880-க்கும் விற்பனையானது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும், பார் வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    26-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,560

    25-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,480

    24-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,720

    23-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840

    22-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    26-03-2025- ஒரு கிராம் ரூ.111

    25-03-2025- ஒரு கிராம் ரூ.110

    24-03-2025- ஒரு கிராம் ரூ.110

    23-03-2025- ஒரு கிராம் ரூ.110

    22-03-2025- ஒரு கிராம் ரூ.110

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.1,000 கோடி ஊழல் என்பதை குறிப்பிட்டு அ.தி.மு.க. சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
    • அமித்ஷா, டி.டி.வி., சசிகலாவை இணைப்பது குறித்து பேசியதை சுட்டிக்காட்டியும் பேசி உள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதன் மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    இந்த நிலையில், தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்களில் அ.தி.மு.க. - பா.ஜ.க. ஒரே பாதையில் செல்ல முடிவு செய்துள்ளதாகவும், போராட்டத்தில் முதற்கட்டமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் புகாரை முன்னெடுத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.1,000 கோடி ஊழல் என்பதை குறிப்பிட்டு அ.தி.மு.க. சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சந்திப்பின்போது பேசிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதில், 2021 சட்டசபை தேர்தலில் தாம் சொன்னதை ஏற்காததால் தோல்வி அடைந்ததாகவும், 6 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தோம் என்று அமித்ஷா வருத்தப்பட்டதாகவும், தாம் கூறியதை கேட்டிருந்தால் தி.மு.க. ஆட்சியில் இருந்திருக்காது எனவும் அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் அமித்ஷா, டி.டி.வி., சசிகலாவை இணைப்பது குறித்து பேசியதை சுட்டிக்காட்டியும் பேசி உள்ளார்.

    தேர்தலுக்கு முன் அமைச்சர்கள் சிலருக்கு கடிவாளம் போட வேண்டும் என அ.தி.மு.க. கேட்டுக்கொண்டதாகவும், தி.மு.க. அமைச்சர்கள் சிலரின் சொத்து விபரத்தையும் அ.தி.மு.க. தரப்பில் அமித்ஷாவிடம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த முறை அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • அதிக வருவாய் ஈட்டிக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
    • வரிவிதிப்பு முறை ஏப்ரல் 3ம் தேதி அமலுக்கு வருகிறது.

    அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த உத்தரவு காரணமாக உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து பேசிய டிரம்ப், "இது வளர்ச்சியை தூண்டும். நாங்கள் 25 சதவீதம் வரிவிதிக்கிறோம்," என்று தெரிவித்தார். அதிபர் டிரம்ப் அறிவித்து இருக்கும் புதிய வரிவிதிப்பு முறை ஏப்ரல் 3ம் தேதி அமலுக்கு வருகிறது.

    அதிபர் டிரம்ப் நீண்ட காலமாகவே வாகனங்கள் இறக்குமதி விவகாரத்தில் வரி விதிப்பது பற்றி பேசி வந்தார். மேலும், தான் ஆட்சிக்கு வந்ததும், இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். அதன்படி தற்போது 25 சதவீதம் வரி விதித்து இருப்பதன் மூலம் அமெரிக்காவில் வாகன உற்பத்தி அதிகரிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.

    கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவுக்கு சுமார் 8 மில்லியன் கார்கள் மற்றும் இலகு ரக டிரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு மட்டும் 244 பில்லியன் டாலர்கள் ஆகும். மெக்சிகோ, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் இருந்தே அமெரிக்காவுக்கு அதிக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. வாகனங்களை தொடர்ந்து அவற்றுக்கான உதிரிபாகங்கள் பெரும்பாலும் மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 197 பில்லியன் டாலர்கள் ஆகும்.

    வரிவிதிப்பால் ஏற்படக்கூடிய மாற்றங்கள்:

    வாகனங்கள் இறக்குமதிக்கு 25 சதவீதம் வரி விதிப்பதன் மூலம் அமெரிக்காவுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்ப்பு.

    வரி விதிப்பு அமலுக்கு வரும் போது அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் விலை 12500 டாலர்கள் வரை அதிகரிக்கும். இதன் மூலம் மிடில் கிளாஸ் வாடிக்கையாளர்கள் புதிய கார்களை வாங்கக்கூடிய சூழல் குறையும்.

    வரிவிதிப்பு காரணமாக அமெரிக்காவில் வாகன உற்பத்தி அதிகரிக்கும். இதனால் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என டிரம்ப் நம்பிக்கை.

    இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி விதிப்பதன் மூலம் நீண்ட கால பயன்கள் அதிகரிக்கும் என்ற நிலையில், குறுகிய காலக்கட்டத்தில் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு அதிக செலவீனங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

    அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு கார் உற்பத்தியாளர்கள் பெரும்பாலான பாகங்களை பெறுவதற்கு மெக்சிகோ, கனடா மற்றும் ஆசிய சந்தைகளை சார்ந்து இருக்கும் சூழல் தான் நிலவுகிறது. இதனால் வாகன உற்பத்தியாளர்கள் அதிக வரி செலுத்த வேண்டும். இதனால், வாகனங்கள் விலையை அதிகரிக்க வேண்டிய சூழலும் உருவாகலாம்.

    அதிபர் டிரம்ப் உத்தரவு காரணமாக ஜெனரல் மோட்டார்ஸ், ஸ்டெலான்டிஸ் போன்ற வாகன உற்பத்தியாளர்கள் பங்குகள் சரிவை சந்தித்தன. முதலீட்டாளர்கள் லாபத்தில் நீண்ட கால விளைவுகள் குறித்து அச்சம் கொண்டுள்ளனர்.

    கனடா, ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்ற தன்மையை உருவாக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    வரிவிதிப்பு நடவடிக்கை வர்த்தகப் போர் ஏற்படும் சூழலை உருவாக்கிவிடும். ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே அமெரிக்க மதுபானங்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. இந்த அறிவிப்புக்கு அதிபர் டிரம்ப் ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று பதிலடி கொடுத்தார்.

    அதிக கார் செலவுகளை ஈடுகட்ட டிரம்ப் ஒரு புதிய வரி ஊக்கத்தொகையை முன்மொழிந்துள்ளார். அதன்படி கார் வாங்குபவர்கள், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை தேர்வு செய்யும் போது அரசு வருமான வரிகளில் இருந்து வாகன கடன்களுக்கான வட்டியைக் கழிக்க அனுமதிக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.

    இந்த வரிகள் பணவீக்கத்தைத் தூண்டி, நுகர்வோருக்கு தேர்வுகளை குறைக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். இவை டிரம்பின் பரந்த பொருளாதார கொள்கையின் ஒரு பகுதியாகும். இதில் எஃகு, அலுமினியம், கணினி சில்லுகள் மற்றும் எரிசக்தி பொருட்கள் மீதான வரிகளும் அடங்கும்.

    ×