என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டார்.
- புதின் இந்தியாவுக்கு வருகை தருவதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன.
ரஷிய அதிபர் புதின் விரைவில் இந்தியா வரவுள்ளதாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய செர்ஜி லாவ்ரோவ், "பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 3 ஆவது முறையாக பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ரஷ்யாவிற்கு தான் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். அவ்வகையில் இந்த முறை அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவிற்கு வரவுள்ளார். இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டார். புதின் இந்தியாவுக்கு வருகை தருவதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடி கடந்தாண்டு ரஷியா சென்று அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவிற்கு வருமாறு புதினுக்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
உக்ரைன் - ரஷியா போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக புதின் இந்தியா வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் புதின் எப்போது இந்தியா வரவுள்ளார் என்ற தகவல் இன்னும் வரவில்லை.
- 45 வயதான நடிகர் பிரபாசுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.
- நடிகர் பிரபாஸ் அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியானது
தெலுங்கு பட உலகில் முன்னணி நாயகனாக வலம் வந்த பிரபாஸ், பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்புகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகரானார். இவர் நடிப்பில் வெளியான சலார், கல்கி 2898 ஏடி படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.
45 வயதான நடிகர் பிரபாசுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. பாகுபலி படத்தில் நடிக்கும் போது, நடிகர் பிரபாசுக்கும். அனுஷ்காவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியானது. அதனை இருவருமே மறுத்து நட்பாகத்தான் பழகுகிறோம் என்று தெளிவுபடுத்தினர்.
இந்நிலையில் பிரபாஸின் திருமணம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரின் மகளை நடிகர் பிரபாஸ் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
பிரபாசின் மாமாவும் மறைந்த அரசியல்வாதியுமான கிருஷ்ணம் ராஜுவின் மனைவி சியாமளா தேவி, இந்த திருமண ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபாஸ் தற்போது 'ஸ்பிரிட்', 'கண்ணப்பா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 14.2 கிலோ தங்கம் கடத்தி வந்தபோது பிடிபட்டார்.
- அவரது தந்தை போலீசார் அதிகாரி என்பதால் பாதுகாப்பு விதிமுறையை தவறாக பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம்.
கன்னட நடிகையான ரன்யா ராவ், தங்கம் கடத்தல் வழக்கில் கடந்த 3ஆம் தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அவரை கைது செய்து 14 கிலோ 800 கிராம் தங்கத்தை மீட்டு இருந்தார்கள்.
கைது செய்யப்பட்ட அவரை காவலில் எடுத்து வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அவரது காவல் கடந்த 13ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இதையடுத்து பெங்களூரு பொருளாதார சிறப்பு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் முன்வராததால், நீதிமன்ற காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் தருண் ராஜு அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே ஜாமின் கேட்டு ரன்யா ராவ் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.
- அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்
- விக்ரமின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு இயக்குநர் அருண் குமார் வீடியோ வெளியீடு
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் இன்று (மார்ச் 27) வெளியாகவிருந்தது.
இந்நிலையில், வீர தீர சூரன் படத்திற்கு நிதி வழங்கியதால் படத்தின் பெரும்பாலான உரிமைகள் தங்களிடம் உள்ளதாகவும், தங்களின் அனுமதியை பெறாமல் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான B4U என்டர்டெயின்மென்ட் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடுத்தது.
இந்த் வழக்கின் விசாரணையில் வீர தீர சூரன் படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் வீர தீர சூரன் படத்தின் காலை, மதிய காட்சிகள் திரையிடப்படவில்லை.
இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தில் முதலீடு செய்த B4U நிறுவனம் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்பட்டது.
இதனையடுத்து, வீர தீர் சூரன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 3 நாட்களுக்குள சேட்டிலைட் உரிம ஆவணங்களை வழங்க வேண்டும், எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து வீர தீர சூரன் படம் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குநர் அருண் குமார் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
வீர தீர சூரன் படம் வெளியீடு தாமதமானதற்காக படக்குழுவினர் சார்பாக விக்ரமின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று அந்த வீடியோவில் இயக்குநர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
- ரெயில் நிலைய அலுவலகத்தில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள டெலிகாம் அலுவலகத்தின் முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.
அலுவலகத்தில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக, முதற்கட்ட தகவல் வெளியானது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வேப்பேரியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.
பின்னர், தண்ணீரை பீய்த்து அடித்த தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.
மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
- தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு.
தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களில் 29ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை விடுக்கவில்லை என்றும் சிறப்பாகச் செயல்படுகின்ற மாநிலங்களைத் தண்டிப்பதையே கொள்கையாக மத்திய அரசு வைத்துள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் ஆர்ப்பாட்ட அழைப்பு மடல்.
தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கையுடன் நம்மிடம் வழங்கிய ஆட்சியை அனைவருக்கும் பலனளிக்கும் சாதனைத் திட்டங்களுடன் நாம் நடத்திக் கொண்டிருந்தாலும், நாளொரு போராட்டத்தை முன்னெடுத்தே நம் உரிமைகளைப் பெறக்கூடிய வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயரும் இல்லை, தமிழ்நாட்டிற்கான திட்டங்களும் இல்லை, தமிழ்நாட்டிற்குப் போதுமான நிதியும் ஒதுக்கவில்லை. இதனைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த பிப்ரவரி 8-ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
ஆவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் பங்கேற்றுக் கண்டன உரையாற்றினேன்.
தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கையாக விளங்கும் பேரறிஞர் அண்ணா நமக்கு வழங்கிய - முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்த இருமொழிக் கொள்கைக்கு எதிராக இந்தியைத் திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆதிக்கப் போக்கையும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜனநாயக விரோதப் போக்கையும் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மார்ச் 12-ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. உங்களில் ஒருவனான நான் திருவள்ளூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைக்கப்பட்டால், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறையாக நிறைவேற்றி, மக்கள் தொகையை மனிதவள ஆற்றலாகச் சிறப்பாக மாற்றியுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களும், ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும் தங்கள் ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை இழக்கும் என்பதை எடுத்துரைக்கும் வகையில் மார்ச் 5-ஆம் நாள் தமிழ்நாட்டில் உள்ள 54 கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் நடத்தியதுடன், தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தை கடந்த 22-ஆம் தேதி சென்னையில் நடத்தி, ஒருமித்த உணர்வுடன் ஜனநாயகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தோம். இருமொழிக் கொள்கையைப் பாதுகாத்திடச் சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு.
மாநிலத்தில் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களே தங்களின் நியாயமான உரிமைக்காகவும், மாநிலத்திலிருந்து வசூலிக்கப்பட்ட வரியிலிருந்து உரிய பங்கு கிடைப்பதற்காகவும் ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்த வேண்டியுள்ள நிலையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் ஏழை - எளிய தொழிலாளர்களின் வாழ்வு, பா.ஜ.க. ஆட்சியில் அவலமான நிலையில் உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், பொதுவுடைமை அமைப்புகள் உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களின் ஆதரவுடன் 2004-இல் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, கிராமப்புற ஏழைத் தொழிலாளர்களின் பட்டினிச் சாவைத் தடுத்திடும் வகையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு, குறைந்தபட்சம் 100 நாள் வேலை உறுதி செய்யப்பட்டது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதனைச் சரியாகவும் முறையாகவும் நிறைவேற்றக்கூடிய மாநிலமான தமிழ்நாடு, 100 நாள் வேலைத் திட்டத்தையும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.
சிறப்பாகச் செயல்படுகின்ற மாநிலங்களைத் தண்டிப்பதையே தனது கொள்கையாகக் கொண்டிருக்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசு, 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி, ஜனவரி 13-ஆம் நாள் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதி, கிராமப்புற ஏழைத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கிட ஏதுவாக அந்த நிதியினை விடுவிக்கக் கோரியிருந்தேன்.
அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி அவர்களுடன் கடந்த ஜனவரி 27-ஆம் நாள் டெல்லியில் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களைக் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி அவர்களுடன் நேரில் சந்தித்து, 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை மூலம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தார்கள். தொடர்புடைய துறையின் அமைச்சரிடமும் வலியுறுத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதி தொடங்கி, ஒவ்வொரு திட்டத்திலும் தமிழ்நாட்டிற்குரிய நிதியை ஒன்றிய பா.ஜ.க. அரசு உரிய அளவிலும், உரிய நேரத்திலும் ஒதுக்குவதில்லை. அரசியல் பார்வையுடன் தமிழ்நாட்டை ஓரங்கட்ட நினைக்கிறது. இந்த நிலையிலும், உங்களில் ஒருவனான என் தலைமையிலான தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு, 100 நாள் வேலைத்திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்புக்குரிய நிதியின் மூலம் ஊதியத்தை வழங்கி வருகிறது.
எனினும், ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பே இதில் முதன்மையானது என்பதால் உழைக்கும் ஏழை - எளிய மக்களுக்கு முழுமையான அளவில் ஊதியம் வழங்கிட இயலவில்லை. தமிழ்நாட்டைப் போலவே கேரளா, மேற்கு வங்கம் போன்ற பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்கவில்லை என்ற முறையீடுகள் வைக்கப்பட்டுள்ளன.
உங்களில் ஒருவனான என் தலைமையில் நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்குரிய நிலுவைத் தொகையான 4,034 கோடி ரூபாயை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்றும், 5 மாதங்களாக இந்தத் தொகை விடுவிக்கப்படாமல் இருப்பதால் கிராமப்புற ஏழைத் தொழிலாளர்கள், குறிப்பாக பெண் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுவதையும் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. மக்களவையில் எடுத்துரைத்தார்.
மாநிலங்களவையிலும் திருச்சி சிவா எம்.பி. இது குறித்துப் பேசினார். இரு அவைகளிலும் கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் இது குறித்து வலியுறுத்தியும், நிலுவைத் தொகையை வழங்குவதற்குப் பதில், "உத்தர பிரதேசத்தைவிட தமிழ்நாட்டிற்குக் கூடுதல் நிதி விடுவிக்கப்பட்டிருக்கிறது" என்று திசைதிருப்பும் பதில்களே ஒன்றிய பா.ஜ.க அரசிடமிருந்து கிடைத்தது.
மாநிலங்களின் பரப்பளவையும் மக்கள்தொகையையும் காரணம் காட்டி, திறமையாகத் திட்டங்களைச் செயல்படுத்தும் மாநிலங்களின் உரிமைகளை நசுக்கி, மக்களை வஞ்சிக்கும் போக்கைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நமது உரிமைக்கான குரல் எழுப்பி வரும் நிலையில், மக்கள் மன்றத்திலும் அதனை எதிரொலித்திடச் செய்யும் வகையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்கக்கோரி, தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அளவில் மார்ச் 29-ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கழகத்தின் பொதுச்செயலாளர் அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் இரண்டு இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இது நம் மாநில உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல, நாள்தோறும் உழைத்து நாட்டை முன்னேற்றிடும் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம். எனவே, ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களில், பாதிக்கப்பட்ட கிராமப்புற ஏழை ஆண் - பெண் தொழிலாளர்களையும் பங்கேற்கச் செய்திட வேண்டும். அவர்களின் உரிமை முழக்கமாக உடன்பிறப்புகள் களம் காண வேண்டும்.
வியர்வை காய்வதற்கு முன்பே உழைப்பிற்கான ஊதியத்தை வழங்குவதுதான் நியாயமான செயலாகும். உழைத்தவர்கள் ஓடாய்த் தேய்கிற வரை, அவர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு, ஊதியத்தைத் தர மறுக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அதன் உழைப்புச் சுரண்டலையும், உரிமைப் பறிப்பையும் உரக்க முழங்கிடுவோம். உரிமைகளை வென்றிடுவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் உயர்ந்தது.
- நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 35 நிறுவன பங்குகள் உயர்ந்தது.
தொடர்ந்து 7 நாட்களாக ஏற்றம் கண்டு வந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நேற்று சரிவை சந்தித்தது. இந்நிலையில், இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சற்று உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 77,288.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 77,087.39 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
அதன்பின் படிப்படியாக சென்செக்ஸ் ஏறத்தொடங்கியது. இன்று குறைந்தபட்சமாக 77,082.51 புள்ளிகளிலும் அதிகபட்சமாக 77,747.46 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 317.93 புள்ளிகள் சரிந்து 77,606.43 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் உயர்ந்தது. 10 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தை போன்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று சற்று உயர்ந்தது.
நேற்று நிஃப்டி 23,486.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,433.95 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
அதன்பின் நிஃப்டி ஏறுமுகமாக இருந்தது. இன்று குறைந்தபட்சமாக 23,412.20 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,646.45 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக நிஃப்டி 105.10 புள்ளிகள் சரிந்து 23,591.95 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 35 நிறுவன பங்குகள் உயர்ந்தது. 15 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
- அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் இன்று (மார்ச் 27) வெளியாகவிருந்தது.
இந்நிலையில், வீர தீர சூரன் படத்தை வெளியிட டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்தது. இதனால் வீர தீர சூரன் படத்தின் 9 மணி காட்சி திரையிடப்படவில்லை. முதல் காட்சி வெளியாகும் என ஆர்வமுடன் காத்திருந்த விக்ரம் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 9 மணி காட்சிக்கு டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கு ஒரு வாரத்தில் பணம் திருப்பி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீர தீர சூரன் படத்திற்கு நிதி வழங்கியதால் படத்தின் பெரும்பாலான உரிமைகள் தங்களிடம் உள்ளதாகவும், தங்களின் அனுமதியை பெறாமல் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான B4U என்டர்டெயின்மென்ட் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கின் விசாரணையில், வீர தீர சூரன் படத்தை தயாரித்த ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.7 கோடி டெபாசிட் செய்யவும் படம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், 'வீர தீர சூரன்' படத்தை வெளியிட விதித்த தடையை 4 வாரங்களுக்கு நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தில் முதலீடு செய்த B4U நிறுவனம் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்பட்டது.
இதனையடுத்து, வீர தீர் சூரன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 3 நாட்களுக்குள சேட்டிலைட் உரிம ஆவணங்களை வழங்க வேண்டும், எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து இப்படம் இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறத
- இரத்தத்தை உண்ணும் பூச்சிகளுக்கு நச்சுத்தன்மையாக்குவது.
- நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு நிடிசினோனைப் பயன்படுத்தலாம்.
சயின்ஸ் டிரான்ஸ்லேஷன் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கொசுக்களின் எண்ணிக்கையை அடக்கி மலேரியாவைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட நிடிசினோன் என்ற மற்றொரு மருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
"பூச்சிகளால் பரவும் நோய்கள் பரவுவதை தடுப்பதற்கான ஒரு வழி, விலங்குகள் மற்றும் மனிதர்களின் இரத்தத்தை- இந்த இரத்தத்தை உண்ணும் பூச்சிகளுக்கு நச்சுத்தன்மையாக்குவதாகும்" என்று லிவர்பூல் ஸ்கூல் ஆஃப் டிராபிகல் மெடிசின் கௌரவ உறுப்பினரும், ஆய்வின் இணை-தலைமை ஆசிரியருமான லீ ஹைன்ஸ் கூறினார்.
"மலேரியா போன்ற பூச்சிகளால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு நிடிசினோனைப் பயன்படுத்துவது ஒரு நம்பிக்கைக்குரிய புதிய கருவியாக இருக்கலாம் என்று எங்கள் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன."
இந்த மருந்து பொதுவாக அரிதான பரம்பரை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து 4-ஹைட்ராக்ஸி-ஃபெனைல்பைருவேட் டைஆக்ஸிஜனேஸ் (HPPD) எனப்படும் ஒரு வகை என்சைமை (Enzyme) தடுப்பதன் மூலம் செயல்படுகிறது. இதைத் தடுப்பது மனித உடலில் தீங்கு விளைவிக்கும் நோய் துணை தயாரிப்புகள் குவிவதைத் தடுக்கிறது.
இருப்பினும், ஒரு கொசு மருந்தை கொண்ட இரத்தத்தை குடிக்கும்போது, அது இந்த HPPD என்சைமையும் அவர்களின் உடலில் தடுக்கிறது. இது பூச்சி இரத்தத்தை ஜீரணிப்பதைத் தடுக்கிறது, இதனால் அவை விரைவாக இறக்கின்றன.
அல்காப்டோனூரியா நோயால் கண்டறியப்பட்ட நான்கு பேர் ஆய்வுக்காக தங்கள் இரத்தத்தை தானம் செய்தனர், இது பல ஆப்பிரிக்க நாடுகளில் மலேரியாவை பரப்புவதற்கு பொறுப்பான முதன்மை கொசு இனமான பெண் அனோபிலிஸ் காம்பியா கொசுக்களுக்கு வழங்கப்பட்டது.
கொசுக்களைக் கொல்ல மருந்தின் எந்த செறிவுகள் தேவை என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து, அதன் செயல்திறனை ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தான ஐவர்மெக்டினுடன் ஒப்பிட்டனர்.
மனித இரத்த ஓட்டத்தில் ஐவர்மெக்டினை விட நிடிசினோன் நீண்ட காலம் நீடிக்கும் என்றும், மலேரியாவை பரப்பும் வயதானவை உட்பட அனைத்து வயது கொசுக்களையும் மட்டுமல்ல, பாரம்பரிய பூச்சி கொல்லிகளை எதிர்க்கும் உறுதியான கொசுக்களையும் கொல்ல முடிந்தது என்றும் காட்டப்பட்டது.
மருந்தை ஊட்டப்பட்ட கொசுக்கள் முதலில் பறக்கும் திறனை இழந்து, பின்னர் விரைவாக முழு முடக்கம் மற்றும் மரணம் அடைந்தன என்று ஆய்வு ஆசிரியர்கள் விளக்குகின்றனர். இருப்பினும், மருந்தின் எந்த அளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதைத் தீர்மானிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவை.
- தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் கட்டிடம் இல்லாமல் இருப்பதும், மேற்கூரைகள் இடிந்து விழுவதும் தொடர்ந்து செய்திகளில் வெளிவருகின்றன.
- நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கட்டிடங்கள் கட்டியிருந்தால், வெள்ளை அறிக்கை வெளியிட ஏன் இத்தனை தாமதம், தயக்கம்?
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த மாதம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான திருச்சியில், பள்ளிக்கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடைபெறுவதைப் பார்த்தோம். இதோ, அதற்கு அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், பொன்னகரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் இது போல எத்தனை பள்ளிகள் இருக்கின்றனவோ தெரியவில்லை.
தமிழகத்தில் திமுக ஆட்சியில், 6,000 பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவையில், அமைச்சர் பெரியசாமி கூறியிருந்தார். பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதற்கும், தரம் உயர்த்துவதற்கும் மொத்தம் ரூ. 7,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 2497 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்றுவருவதாகவும், இந்த ஆண்டும், ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்தார்.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் கட்டிடம் இல்லாமல் இருப்பதும், மேற்கூரைகள் இடிந்து விழுவதும் தொடர்ந்து செய்திகளில் வெளிவருகின்றன. நாங்கள் கேட்பதெல்லாம், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வகுப்பறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன, குறிப்பாக, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்படி எத்தனை வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை, திமுக அரசு வெளியிட வேண்டும் என்பதுதான். ஆனால் பல நாட்கள் கடந்தும் இதுவரை அதற்கு பதில் இல்லை.
திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் வெள்ளை அறிக்கை வெளியிடக் கேட்கிறோம். உண்மையில் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கட்டிடங்கள் கட்டியிருந்தால், வெள்ளை அறிக்கை வெளியிட ஏன் இத்தனை தாமதம், தயக்கம்? என வினவியுள்ளார்.
- இசைஞானி இளையராஜா இசையை உலகமெங்கும் இருக்கும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.
- 400-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் அணிவகுப்பது என்பது தற்போது சாத்தியமில்லை.
சென்னை:
இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2-ந்தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெறும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இசைஞானி இளையராஜா இசையை உலகமெங்கும் இருக்கும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள். அந்த இசையை தமிழ்நாடும் ரசிக்க வேண்டும். எனவே தமிழ்நாடு அரசு இளையராஜா சிம்பொனியை இசையை இசைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சட்டசபை உறுப்பினர் சிந்தனை செல்வன் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நானும் இளையராஜாவை சந்திக்கும் போது இதே கோரிக்கையை முன்வைத்தேன். ஆனால் 400-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் அணிவகுப்பது என்பது தற்போது சாத்தியமில்லை. ஆனால் விரைவில் அதை கண்டிப்பாக செய்வதாக இளையராஜா உறுதி அளித்துள்ளார்.
மேலும், தமிழக அரசின் சார்பில் லண்டனில் சிம்பொனி அரங்கேற்றியதற்காகவும், இளையராஜாவின் 50 ஆண்டு கால திரையுலக பணிக்காகவும் அவருக்கு பாராட்டு விழா ஜூன் மாதம் 2-ந்தேதி நடத்தப்படும் என்று அறிவித்தார்.
முன்னதாக, லண்டனில் சிம்பொனியை நிகழ்ச்சியை அரங்கேற்றுவதற்கு முன்னதாக இளையராஜாவை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாமக எம்.எல்.ஏக்களுடன் பேசிக்கொண்டே அதிமுக எம்.எல்.ஏ திண்டுக்கல் சீனிவாசன் சட்டப்பேரவைக்கு வந்தார்.
- கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முடிவு செய்வார்.
சட்டப்பேரவைக்கு வரும்போது பாமக எம்.எல்.ஏக்கள் ஜி.கே.மணி, அருள் உள்ளிட்டோருடன் அதிமுக எம்.எல்.ஏ திண்டுக்கல் சீனிவாசன் பேசிக்கொண்டே வந்தார்.
அப்போது "பாஜக, நம்ம (அதிமுக), அப்புறம் பாமக" என சிரித்துக்கொண்டே பேசி வந்த திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது "நாங்க கூட்டணிங்க" எனச் சொல்லிச் சென்றதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று மதியம் திண்டுக்கல் சீனிவாசனிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "பாமகவுடன் கூட்டணி என நான் யாரிடமும் கூறவில்லை. கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முடிவு செய்வார்" என்று கூறிவிட்டு சென்றார்.






