என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
    • ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என இ.பி.எஸ். அறிவித்தார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

    அதில், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

    இந்நிலையில், ஆண்களுக்கும் இலவச பயண வாக்குறுதி ஏன்? என்பதற்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வித்தியாசமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

    சிவகாசியில் அதிமுக நிகழ்ச்சியில் பேசிய ராஜேந்திர பாலாஜி, "மகளிருக்கு மட்டும் இலவச பயணத்தை அறிவித்து ஒன்றாக இருந்த குடும்பத்தை திமுக அரசு பிரித்துள்ளது. மனைவியோடு, காதலியோடு இலவசமாக பயணித்து சினிமாவிற்கு செல்லலாம், ஊர் சுற்றலாம் என்பதற்காகத்தான் ஆண்களுக்கும் இலவச பயணத்தை இபிஎஸ் அறிவித்துள்ளார்" என்று வித்தியாசமான விளக்கம் ஒன்றை அளித்தார்.

    • தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் உதவி மேலாளர் ராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர்.
    • கரும்புகை மண்டலம் ஏற்பட்டதால் அவரும் அலுவலக கதவு அருகே மயங்கி கிடந்துள்ளார்.

    மதுரை:

    மதுரை மேலவெளி வீதியில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 17-ந்தேதி அலுவலகத்தின் 2-வது மாடியில் மாலை நேரத்தில் புதிய எல்.ஐ.சி. பாலிசி அறிமுக கூட்டம் நடந்தது. இதில் முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி, உதவி மேலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள், ஏஜெண்டுகள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்தபின் அனைவரும் சென்ற நிலையில் கல்யாணி நம்பி, ராமகிருஷ்ணன் ஆகியோர் புறப்பட தயாரானபோது திடீரென அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

    இதில் அலுவலக அறையில் ராம கிருஷ்ணன் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய படி கிடந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அலுவலகத்திற்குள் இருக்கையின் அடியில் முதுநிலை கிளை மேலாளர் கல்யாணி நம்பி உடல் கருகி இறந்து கிடந்தார்.

    போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தி தீ விபத்து வழக்காக பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் கல்யாணி நம்பியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், சம்பவத்தன்று எனது செல்போனில் தொடர்பு கொண்ட எனது தாயார் என்னை காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்..., போலீசாரை வரழையுங்கள் என்று சில நொடிகள் கதறினார். ஆனால் அங்கு சென்று பார்த்தபோது உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது அலுவலக அறை இரும்பு சங்கிலியால் பூட்டப்பட்டிருந்தது என்று அவரது மகன் லட்சுமி நாராயணன் போலீசில் புகார் செய்திருந்தார்.

    இதையடுத்து கடந்த டிசம்பர் 17-ந்தேதி இரவு நடந்த எல்.ஐ.சி. கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் உதவி மேலாளர் ராமகிருஷ்ணனிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை. கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்காமல் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

    மருத்துவ சிகிச்சையில் இருந்த ராம கிருஷ்ணனிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெண் மேலாளரை பெட்ரோல் ஊற்றி ராமகிருஷ்ணன் எரித்தது தெரியவந்தது.

    விபத்து தொடர்பான காப்பீடு திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கல்யாணி நம்பிக்கு புகார் கிடைத்தது.

    இந்த முறைகேட்டில் அங்கு உதவி மேலாளராக பணிபுரிந்து வரும் ராமகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்தது. இது தொடர்பாக ராமகிருஷ்ணனிடம், கல்யாணி நம்பி விசாரணை நடத்தி உள்ளார்.

    அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கல்யாணி நம்பியை தாக்கவும் ராம கிருஷ்ணன் முயன்றுள்ளார். ஆனாலும் முறைகேட்டு தொகையை உடனடியாக அலுவலக கணக்கில் செலுத்துமாறு கண்டிப்புடன் கல்யாணி நம்பி கூறியதாக தெரிகிறது. மேலும் தாமதமானால் முறைகேடு தொடர்பாக போலீசில் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

    இதனால் ராம கிருஷ்ணனுக்கு, மேலாளர் கல்யாணி நம்பி மீது கடும் ஆத்திரம் இருந்து வந்தது. சம்பவத்தன்று கூட்டம் முடிந்ததும் கல்யாணி நம்பி, ராமகிருஷ்ணனிடையே முறைகேடு தொடர்பாக மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை வெடித்துள்ளது. அப்போது ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன், அங்கு ஜெனரேட்டர் பயன் பாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த பெட்ரோலை எடுத்து வந்து அலுவலக அறையில் இருந்த கல்யாணி நம்பி மீது ஊற்றி தீ வைத்துவிட்டு அலுவலக அறையும் பூட்டி உள்ளார். இதனால் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த கல்யாணி நம்பி சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியானார்.

    இந்த விஷயத்தில் தன் மீது சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது போன்று அனைவரும் நம்புவதற்காக அறைக்கு வெளியே மற்ற பகுதிகளிலும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக ராமகிருஷ்ணன் மீதும் தீப்பிடித்தது. அங்கு கரும்புகை மண்டலம் ஏற்பட்டதால் அவரும் அலுவலக கதவு அருகே மயங்கி கிடந்துள்ளார்.

    இந்த நிலையில் தான் பொதுமக்கள் அவரை மீட்டுள்ளனர். ஆனால் கல்யாணி நம்பி அலுவலகத்திற்குள் இருந்ததாலும் தீ பரவி கரும் புகை சூழ்ந்திருந்ததாலும், மீட்க வந்தவர்களால் அவரை கண்டுபிடிக்க முடியாததால் தீயில் கருகி பலியாகி விட்டார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தீ விபத்தாக வழக்குப்பதிவு செய்திருந்த முதல் தகவலறிக்கையை மாற்றி கொலை வழக்காக திலகர் திடல் போலீசார் மாற்றினர். இந்த வழக்கில் உதவி மேலாளர் ராம கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

    • ஆளுநர் உரை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • ஆளுநர் வாசிக்க திமுக அரசு நிர்பந்திருப்பது கண்டனத்திற்குரியது

    மக்களுக்கான செயல்திட்டங்களை வகுக்க வேண்டிய ஆளுநர் உரை திமுகவினரின் கனவை பிரதிபலித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசின் செயல் திட்டங்களும், அதனால் மக்களுக்குக் கிடைக்கும் பயன்களும் நிறைந்திருக்க வேண்டிய மாண்புமிகு ஆளுநர் அவர்களின் உரை, தமிழகத்தில் பாலாறும், தேனாறும் பெருக்கெடுத்து ஓடுவதாக திமுகவினர் நாள்தோறும் காணும் கனவைத் தூக்கிச் சுமந்திருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

    கொலை, கொள்ளை,பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப்புழக்கம் கூலிப்படைகளின் அட்டூழியம் என தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே முடியாத சூழல் நிலவிவரும் நிலையில், அதுகுறித்து எந்த விவரங்களும் மாண்புமிகு ஆளுநர் அவர்களின் உரையில் இடம்பெறாமல் தவிர்க்கப்பட்டிருப்பது முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலாகும்.

    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மின்வாரிய மற்றும் போக்குவரத்துத்துறை ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், தொழில்முனைவோர்கள் என அனைத்து தரப்பினரும் அவரவர் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரிப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் எல்லார்க்கும் எல்லாம்" என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் வரிகளுக்கு ஏற்ப அரசு செயல்படுவதாக கூறி பெருமை பேசுவது கேலிக்கூத்தானது.

    அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, கட்டணங்களும், வரிகளும் பன்மடங்கு அதிகரிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் என திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழக மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவோ, அதற்கான வழிவகைகளை ஏற்பாடு செய்யவோ எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் திமுக அரசின் பெருமைகளை மட்டுமே உள்ளடக்கிய ஊடகங்களிலும், நாளிதழ்களில் வெளிவரும் விளம்பரமாக அமைந்திருக்கும் மாண்புமிகு ஆளுநர் அவர்களின் உரை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வழங்கிய தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு பத்து லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில் தனியார்த் துறையில் 3 லட்சம் அளவிற்கான வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கியிருப்பதாக ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருப்பதன் மூலம் தன் நிர்வாகத் திறமையின்மையையும், தோல்வியையும் ஒப்புக் கொண்டதாகவே பார்க்க வேண்டியுள்ளது. அதோடு தமிழகத்தில் பன்மடங்கு உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தால் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதோடு, தொழில் தொடங்குவதாக ஒப்புக்கொண்ட பன்னாட்டு நிறுவனங்களும் அண்டை மாநிலத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டிருப்பதாகவும் அதன் மூலம் 36 லட்சம் வேலைவாய்ப்பு உருவாகியிருப்பதாகவும் கூறியிருப்பது "சீனிச் சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா" என்ற வரிகளைத்தான் நினைவுபடுத்துகிறது.

    காவிரியின் குறுக்கே மேகதாது அணையையும், முல்லைப் பெரியாற்றில் புதிய அணையையும் கட்டியேத் தீருவோம் என இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கர்நாடக காங்கிரஸ் மற்றும் கேரள கம்யூனிஸ்ட் பிடிவாதம் பிடித்துவரும் நிலையில், அவர்களுக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிட முடியாத முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு, நதிநீர் பங்கீட்டில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளையும் ஏமாற்றும் செயலாகும்.

    நூற்றாண்டு கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமன்றத்தில் ஆளுநர் உரை எனும் பெயரில் உண்மைக்கு புறம்பான, துளியளவும் ஆதாரமற்ற தகவல்களை அறிக்கையாகத் தயாரித்திருக்கும் திமுக அரசு, அதனை வாசிக்குமாறு மாண்புமிகு ஆளுநர் அவர்களை நிர்பந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அதே நேரத்தில், நீண்ட நெடிய பாரம்பரியமிக்க சட்டமன்றத்தின் மரபுகளை மாற்றக் கோருவது மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கும் அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

    • 1,176 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதுவரை மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
    • கடந்த 5 ஆண்டுகளில் 22 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    சட்டசபையில் ஆளுநர் உரையை சபாநயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:

    * விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 41 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

    * மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு தொகை ரூ.2 ஆயிரம் ஆக அதிகரிப்பு.

    * ரூ.12.16 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

    * 1,176 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதுவரை மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    * 2640 மெகாவாட் மின் உற்பத்திக்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உடன்குடி, எண்ணூர் அனல் மின் நிலைய பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    * நீர் மேலாண்மையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. அரசின் திட்டங்களால் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.

    * கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2086 கோடி செலவில் 121 தடுப்பணைகள், 101 அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    * மதுரை, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    * கடந்த 5 ஆண்டுகளில் 22 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    * ரூ.450 கோடி செலவில் டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.

    * உழவர் சந்தைகள் மூலம் தினமும் ரூ.10 கோடிக்கு விற்பனை நடைபெற்று 8 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.

    * கடந்த 5 ஆண்டுகளில் 125 உழவர் சந்தைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

    * கடந்த 5 ஆண்டுகளில் திருக்கோவில்களுக்கு சொந்தமான ரூ.2261 கோடி மதிப்பிலான 2307 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

    • இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, 'ஆளுநர் உரை தேவையில்லை' என #ConstitutionalAmendment கோருவோம்!
    • #DravidianModel அரசின் நான்காண்டு சாதனைகளைப் பயன்பெறும் மக்களிடம் மறைத்துவிட முடியாது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, 'ஆளுநர் உரை தேவையில்லை' என #ConstitutionalAmendment கோருவோம்!

    அரசு தயாரித்தளித்த அறிக்கையை ஆளுநர் படிக்காமல் வெளியேறுவதால், #DravidianModel அரசின் நான்காண்டு சாதனைகளைப் பயன்பெறும் மக்களிடம் மறைத்துவிட முடியாது.

    அரசியலமைப்புக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சட்டப்பேரவைக்கும் மதிப்பளிக்காமல் மக்கள்நல நடவடிக்கைகளை முடக்கி வைத்து முரண்டு பிடிக்கும் தமிழ்நாடு ஆளுநரை 'Recalcitrant Governor' என @The_Hindu தலையங்கத்தில் நேற்று குறிப்பிட்டிருந்தார்கள். அவரது இன்றைய செயல்பாடும் அதனை மெய்ப்பித்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோர்ட்டில் எங்களுக்குத்தான் வெற்றி கிடைத்து இருக்கிறது என்று இனிப்பு கொடுத்து வெற்றியை கொண்டாடினார்கள்.
    • இந்த வழக்கு மட்டுமல்ல இன்னும் எத்தனை வழக்குகள் போட்டாலும் சரி, அவர்களுக்கு கிடைப்பது பட்டை நாமம்தான்.

    சென்னை:

    பா.ம.க. டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், டாக்டர் அன்புமணி தலைமையிலும் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. டாக்டர் அன்புமணிதான் பா.ம.க. தலைவர் என்றும் கட்சி மற்றும் கட்சியின் சின்னம் அவரிடம்தான் இருக்கும் என்றும் ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதற்கிடையில் டாக்டர் ராமதாஸ் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்திய நிலையில் சுமார் 2 மாதங்களுக்கு முன்பு டெல்லி ஐகோர்ட்டில் ஒரு தீர்ப்பு வெளிவந்தது. இந்த நிலையில் இப்போது சென்னையில் உரிமையியல் கோர்ட்டில் கட்சி தனக்கே சொந்தம் என்று உரிமைக்கோரி டாக்டர் ராமதாஸ் நேற்று மீண்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    இது தொடர்பாக டாக்டர் அன்புமணி தரப்பு கொள்கை பரப்பு செயலாளர் வக்கீல் பாலு கூறியதாவது:-

    எந்த அரசியல் கட்சியிலும், எந்த கட்சி தலைவரும் செய்யாத வேடிக்கை மற்றும் வினோதங்களை டாக்டர் ராமதாஸ் தலைமையில் செய்து வருவதுதான் மிகப் பெரிய வேடிக்கை.

    டாக்டர் அன்புமணிக்குத் தான் கட்சி சொந்தம், சின்னமும் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் இது நீதிமன்ற அவமதிப்பாகும். நான்தான் கட்சி தலைவர் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

    கோர்ட்டில் எங்களுக்குத்தான் வெற்றி கிடைத்து இருக்கிறது என்று இனிப்பு கொடுத்து வெற்றியை கொண்டாடினார்கள். தங்களுக்கு வெற்றி கிடைத்தால் மீண்டும் மீண்டும் டாக்டர் ராமதாசை தலைவராக தேர்வு செய்வதாக ஏன் அறிவிக்க வேண்டும்? ஒரே வருடத்தில் 4 முறை அவரை தலைவராக தேர்வு செய்ததாக அறிவித்து உள்ளார்கள்.

    எந்த கோர்ட்டிலும் அவர்கள் வெற்றி பெற முடியாது என்பது சட்டம் தெரிந்த எல்லோருக்கும் தெரியும். டெல்லி கோர்ட்டில் தங்களுக்குத்தான் வெற்றி கிடைத்தது என்று கொண்டாடியவர்கள்.

    அப்படியென்றால் 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஏன் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும். இது முழுக்க முழுக்க டாக்டர் ராமதாசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவரை சுற்றி இருக்கும் பூசாரிகளான ஜி.கே.மணி, அருள் போன்றவர்கள் நடத்தும் நாடகம். இந்த வழக்கு மட்டுமல்ல இன்னும் எத்தனை வழக்குகள் போட்டாலும் சரி, அவர்களுக்கு கிடைப்பது பட்டை நாமம்தான். வழக்குகளை சட்டப்படி நாங்கள் சந்திப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சத்துணவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு ஊழியர்களும் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழ்பவர்கள்.
    • சத்துணவுப் பணியாளர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சத்துணவுப் பணியாளர்களின் போராட்டம் மாணவர்களிடமும், அடித்தட்டு மக்களிடமும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். தமிழ்நாடு முழுவதும் 43 ஆயிரத்து 38 சத்துணவு மையங்களில் இப்போதைய நிலையில் 71 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், 43 ஆயிரம் சத்துணவு மையங்களும் முடங்கி விடும்; அதனால், அந்த மையங்களை நம்பியுள்ள 40.82 லட்சம் மாணவர்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்படும்.

    சத்துணவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு ஊழியர்களும் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழ்பவர்கள்; அவர்கள் தான் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக விளங்குபவர்கள். எனவே, இனியும் தாமதிக்காமல் சத்துணவுப் பணியாளர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பிற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையில் இப்படி நடந்து கொள்வார்களா?
    • சட்டசபையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம் இசைக்கும் மரபு என்றும் மாற்றப்படாது.

    தமிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று தொடங்கியது.

    சட்டசபையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடவில்லை என குற்றம்சாட்டி, உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.

    இந்நிலையில் சட்டசபையில் நடந்தது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கூட்டத்தொடருக்கு ஆளுநரை நேரில் சென்று அழைத்தோம். பேரவையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    * மிகவும் தாழ்ந்த குரலில் தான் உரையை வாசிக்குமாறு ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

    * சட்டசபையின் முதல்நாள் கூட்டத்தில் மாநில அரசின் அறிக்கையை வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமை.

    * அரசின் நிறை குறையை ஆளுநர் பேசலாமா, ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசலாம்.

    * உரையை வாசிக்காமல் ஆளுநர் கிளம்பியதால் நான் மைக்கில் வேண்டுகோள் விடுத்தேன். அப்போது ஆளுநர் மைக் ஆப் செய்யப்பட்டது.

    * ஆளுநர் பேசும்போது அனைவரது மைக்கும் ஆப் செய்யப்படும். நான் பேசும்போது ஆளுநர் உள்ளிட்டோர் மைக் ஆப் செய்யப்படும்.

    * நான் பேசும்போது மற்றவர்களுக்கு தெளிவாக கேட்கத்தான் ஆளுநர் மைக் ஆப் செய்யப்பட்டது. இது மரபு தான். எந்த மரபையும் மீறவில்லை.

    * தமிழ்நாட்டின் ஆளுநரிடம் இருந்து சட்டசபையின் மாண்பு காக்கப்பட்டுள்ளது.

    * பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையில் இப்படி நடந்து கொள்வார்களா?

    * சட்டசபையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம் இசைக்கும் மரபு என்றும் மாற்றப்படாது.

    * யாருக்கும் பயந்து தமிழ்நாடு சட்டசபையின் மரபு என்றும் மாற்றப்படாது என்று கூறினார்.

    • சபாநாயகர் அப்பாவு அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.
    • 22, 23-ந்தேதிகளில் சட்டசபை கூட்டத்தொடர் முழுமையாக நடைபெறும்.

    தமிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலர்க்கொத்து, கலைஞர் மு.கருணாநிதி வரலாறு புத்தகத்தை கொடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.

    தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியது. சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    சட்டசபையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை, என்னை அவமதித்து விட்டீர்கள் எனக்கூறி ஆளுநர் வெளியேறினார்.

    அப்போது, அமைச்சரவை எழுதி கொடுத்ததை படிக்க வேண்டும். சட்டசபை மரபை ஆளுநர் மீற வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்ததை மறுத்து ஆளுநர் வெளியேறினார்.

    ஆளுநர் வெளியேறியதை தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக்கூறி பேரவையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    மக்கள் சபையை ஆளுநர் அவமதித்துள்ளதாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

    இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்க மறுத்த உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார் இதைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது சபாநாயகர் கூறியதாவது:

    வரும் 24-ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும். நாளை மறைந்த சட்டசபை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்படும்.

    22, 23-ந்தேதிகளில் சட்டசபை கூட்டத்தொடர் முழுமையாக நடைபெறும். 24-ந்தேதி ஆளுநர் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் பதில் அளிப்பார். சனிக்கிழமை முதலமைச்சர் உரையுடன் நிறைவு பெறும் என்று கூறினார்.

    • எனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு மதரீதியான விஷயமும் காரணமாக இருக்கலாம்.
    • ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்துக்கு பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்தார்.

    இந்தி திரைப்படத் துறையில் தனக்கு பாகுபாடு கட்டப்பட்டதாக அண்மையில் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் பேசு பொருளானது.

    அண்மையில் கொடுத்த பெட்டியின் பேசிய ஏ.ஆர்.ரகுமான், ".கடந்த 8 வருடங்களாக இந்தி திரைப்படத் துறையில் இசை அமைக்கும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைக்கவில்லை. இசைத் துறை, இனி இசைக்கலைஞர்கள் மற்றும் இயக்குநர்களின் கைகளில் இல்லை. கார்ப்பரேட் கைகளில் உள்ளது. படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதால் பாகுபாடு நிலவுகிறது. எனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு மதரீதியான விஷயமும் காரணமாக இருக்கலாம். இது என் முகத்துக்கு நேராக நடக்கவில்லை என்றாலும், அது போன்ற விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்துக்கு பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்தார். இதனையடுத்து ஏ.ஆர். ரகுமானுக்கு ஆதரவாக திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "மதம், மொழி மற்றும் அடையாளத்தைத் தாண்டிய கலையைக் கொண்ட ஒரு இசைக்கலைஞரை வேண்டுமென்றே குறிவைத்து தாக்கியதும், இந்தியாவில் அதிகாரத்தில் இருப்பவர்களின் அதிர்ச்சியூட்டும் மௌனமும் மிகவும் கவலையளிக்கிறது. ஏ.ஆர். ரகுமான் இந்த நாட்டின் இசையை உலகிற்கு எடுத்துச் சென்ற ஒரு படைப்பாளி மட்டுமல்ல, இந்தியாவின் முதன்மை கலாச்சாரத் தூதராகவும் இந்திய விழுமியங்களின் பிரதிநிதியாகவும் திகழ்கிறார். அவர் பாராட்டுக்கும் நன்றியுணர்ச்சிக்கும் தகுதியானவர், பாரபட்சத்திற்கும் வெறுப்பிற்கும் அல்ல. இத்தகைய சகிப்பின்மைக்கு ஒரு ஜனநாயக மற்றும் பன்மைத்துவ சமூகத்தில் இடமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

    • எதிர்க்கட்சிகளே சொல்லாத பொய்யை ஆளுநர் தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.
    • இந்தியாவில் தலைசிறந்த 100 பல்கலைக்கழங்களில் 18 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.

    சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் உரையை வாசிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறி உள்ளார்.

    சட்டசபையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடவில்லை என குற்றம்சாட்டி உள்ள ஆளுநர், தமிழக அரசின் மீது 13 குற்றச்சாட்டுகளை அடுக்கி விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    இந்நிலையில் சட்டசபையில் நடந்தது தொடர்பாக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவயது:

    * மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பா.ஜ.க.வின் பிரதிநிதியாக சட்டசபைக்கு வந்துள்ளார்.

    * முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும் இறுதியில் தேசிய கீதம் பாடுவதும் சட்டசபையின் மரபு.

    * ஆளுநர் தனது உரையை வாசிக்கும்போது மைக் ஆப் செய்யப்பட்டது என ஆளுநர் மாளிகை கூறியது முற்றிலும் தவறு.

    * ஆளுநர் உரையை படியுங்கள் என்று தான் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.

    * எவ்வளவு தாழ்மையுடன் கேட்க வேண்டுமோ அவ்வளவு தாழ்மையுடன் கேட்டார் சபாநாயகர்.

    * ஆளுநரின் மைக் அணைக்கப்படவில்லை. ஆளுநரின் மைக் அணைக்கப்பட்டதாக கூறியது பச்சை பொய்.

    * எதிர்க்கட்சிகளே சொல்லாத பொய்யை ஆளுநர் தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.

    * தமிழக பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் உள்ளது என்பதை மத்திய அரசே ஒத்துக்கொண்டுள்ளது.

    * ஆளுநர் கூறியிருப்பது பொய் என்பதற்கு மத்திய அரசின் புள்ளிவிபரங்களே சாட்சி.

    * ஆளுநருக்கு தமிழகத்தின் மீது என்ன வெறுப்பு என்பதை அவர்தான் கூற வேண்டும்.

    * ஆளுநர் வெளியேறிய சில நிமிடங்களிலேயே விளக்க அறிக்கை வருகிறது.

    * முன்னரே இப்படி ஒரு அறிக்கையை தயாரித்து விட்டு திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர்.

    * பெண்கள் மீதான குற்றங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    * பெண்கள் தைரியமாக வந்து புகார் அளிக்கும் நிலையை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.

    * உயர்கல்வி அதிகம் பயிலும் பெண்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

    * மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது அதிக கல்வி வளர்ச்சி கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

    * அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.

    * சிறு குறு தொழில்களில் தமிழகம் பின்தங்கி உள்ளதாக கூறுவது தவறு.

    * தமிழ்நாட்டில் கஞ்சா உற்பத்தி கிடையாது. போதைப்பொருட்கள் எந்த மாநிலத்தில் இருந்து வருகிறது என்பது உங்களுக்கே தெரியும்.

    * இந்தியாவில் தலைசிறந்த 100 பல்கலைக்கழங்களில் 18 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.

    * ஆண்டுதோறும் 20,000 பேர் தற்கொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த எண்ணிக்கையை சரிபார்க்க வேண்டும்.

    * தனிமனித தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தனிமனித தற்கொலைக்கு அரசு பொறுப்பாகாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தவறான தகவல்கள் உள்ள உரையை ஆளுநர் எவ்வாறு வாசிப்பார்? ஆளுநர் வெளிநடப்பு செய்ததில் தவறு இல்லை.
    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் உயர்கல்வி பயில்பவர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    பரபரப்பான சூழ்நிலையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியது.

    இந்நிலையில் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    ஆளுநர் வெளியேறியதை தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக்கூறி பேரவையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    சட்டம், ஒழுங்கு விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததாகக்கூறி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இந்நிலையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? என ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஆளுநர் மீது தவறான எண்ணத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகின்றனர்.

    * அமைச்சரவை தயாரித்து வழங்கிய உரையில் உள்ள தவறை ஆளுநர் சுட்டிக்காட்டுகிறார்.

    * தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது.

    * தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் 55% அதிகரித்துள்ளது என்பதை ஆளுநர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.

    * தவறான தகவல்கள் உள்ள உரையை ஆளுநர் எவ்வாறு வாசிப்பார்? ஆளுநர் வெளிநடப்பு செய்ததில் தவறு இல்லை.

    * புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆவணமாகவே உள்ளன. பெரும்பாலான ஒப்பந்தங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

    * தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் உயர்கல்வி பயில்பவர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    * ஆளுநர் உரையில் முதலமைச்சர் தனது கருத்துக்களையும் பதிவு செய்கிறார்.

    * ஆளுநர் குறித்து விமர்சனம் செய்வது முறையல்ல. அ.தி.மு.க. அதனை செய்தது இல்லை.

    * தவறான உரையை வாசிக்க மாட்டேன் என ஆளுநர் சொல்வது நியாயம். தனது தவறை அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

    * ஆளுநர் மீது தவறான பிம்பத்தை உருவாக்க தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×