என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • தேர்தலுக்காக பிரதமர் ஆயிரம் பேசினாலும் தேர்தலில் எதிரொலிக்காது.
    • நாங்கள் ஒரு கோடியே 32 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை தந்திருக்கிறோம்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணி என்பது அ.தி.மு.க.வின் ஒரு பகுதியும், அதேபோல பா.ஜ.க.வும் இணைந்ததை தவிர அதை நாங்கள் வலுவாக பார்க்கவில்லை, அது பலவீனமான கூட்டணி. எத்தனை கட்சிகள் அந்த கூட்டணியில் வந்து சேர்ந்தாலும் தி.மு.க. வின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்தியா கூட்டணியை யாராலும் எதுவும் செய்ய முடியாது. தமிழ்நாட்டு மக்களின் மனதில் யார் இருக்கிறார்களோ அவர்கள் தான் வெல்ல முடியுமே தவிர, கூட்டத்தைக் கூட்டி காட்டி யாராலும் வெல்ல முடியாது.

    தமிழ்நாட்டின் மக்களின் மனநிலையை இன்றைக்கு ஒவ்வொரு சர்வே மூலமாக நாங்கள் அறிந்து வருகிறோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும், அதன் மூலமாக தங்களுக்கு இன்னும் பல நன்மைகள் கிடைக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாடு மக்களுடைய விருப்பம். அந்த விருப்பத்தை மோடியாலோ, வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது.

    கிரைம், மாபியா, கரப்ஷன் எல்லாம் பிரதமர் மோடியின் கட்சிக்கும், அவர்களது கூட்டணிக்கும் தான் பொருந்துமே தவிர எங்களுக்கு ஒரு துளியும் பொருந்தாது. 11 முறை தேர்தலில் தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு 12-வது தோல்வியை 2026 நிச்சயமாக தரும். துணை முதலமைச்சர் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து கொண்டி ருக்கிறார். தமிழ்நாட்டில் யாராலும் அசைக்க முடியாத ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறதே தவிர, மற்றவர்கள் சொல்லுகின்ற அளவிற்கு பலவீனமான ஆட்சி கிடையாது. பலமான ஆட்சியில் இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம் அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

    தேர்தலுக்காக பிரதமர் ஆயிரம் பேசினாலும் தேர்தலில் எதிரொலிக்காது. தமிழ்நாட்டு மக்கள் கெட்டிக்காரர்கள், அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்பது தெரியும். தங்களுக்கு எந்த ஆட்சி உதவி செய்யும் என்பது தமிழ்நாடு மக்களுக்கு தெரியும். மோடி ஆயிரம் குற்றச்சாட்டுகளை சொல்லலாம், குறைகளை சொல்லலாம். ஆனால் அவர் தனக்கு முன்னால் இருக்கக்கூடிய மாநிலங்களை எல்லாம், குறிப்பாக பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களையெல்லாம் பார்த்துவிட்டு அதைவிட தமிழ்நாட்டில் ஏதாவது குற்றங்கள் கூட என்று சொன்னால் அப்போது நாங்கள் பதில் அளிக்கிறோம்.

    யார் வந்தாலும் வந்தவர்களை வரவேற்கின்ற இயக்கம் தான் தி.மு.க. அவர்களுக்கு உரிய மரியாதை தருகிற தலைவர் தான் மு.க.ஸ்டாலின். எங்களை நம்பி வருகின்றவர்கள் கெட்டுப் போபவர்கள் கிடையாது. மற்றவர்களை நம்பி செல்பவர்கள் மோசம் போவதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

    எடப்பாடி பழனிசாமியை, டி.டி.வி.தினகரன் விமர்சனம் செய்து பேசிவிட்டு மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளது வெட்கக்கேடு. தேசிய ஜனநாயக கூட்டணி காட்டும் ஒட்டுமொத்த கூட்டத்தையும் நாங்கள் மகளிர் அணி கூட்டத்தின் மூலமாகவே பீட் செய்து விடுவோம். பகுதி பகுதியாக மக்கள் அலையை கொண்டு செல்கின்ற சக்தி இந்தியாவிலேயே தி.மு.க.வுக்கு இருப்பதைப் போல வேறு எந்த இயக்கத்துக்கும் கிடை யாது.

    நாங்கள் எப்போதும் எதிரிகள் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இறுமாப்பு கொண்டவர்கள் கிடையாது. எதிரிகள் இருக்கிறார்கள், ஆனால் எங்களோடு மோதும் அளவிற்கு அவர்கள் வலிமையாக இல்லை. நாங்கள் சொன்னதை செய்துள்ளோம். மகளிர் உரிமைத்தொகை தருகிறோம் என்று கூறினோம், அதை தந்துள்ளோம்.

    நாங்கள் ஒரு கோடியே 32 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை தந்திருக்கிறோம். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் தருகிறோம் என்று கூறி ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமியை மக்கள் நம்புவார்களா, அல்லது ஒரு கோடியே 32 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையைக் கொடுக்கிற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்புவார்களா என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எங்கள் வெற்றிக்கான கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தவெக சார்பில் மரியாதை.
    • ஒப்பற்ற நம் அன்னைத் தமிழை உயிரெனக் காப்போம்.

    மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மொழிப்போர் தீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம். ஒப்பற்ற நம் அன்னைத் தமிழை உயிரெனக் காப்போம்.

    வாழ்க தமிழ்!

    வளர்க தமிழ்!

    வெல்க தமிழ்!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • பா.ம.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று 2011-ம் ஆண்டே முடிவெடுத்து விட்டோம்.
    • பா.ம.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.

    திருச்சி விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * பா.ம.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று 2011-ம் ஆண்டே முடிவெடுத்து விட்டோம்.

    * பா.ம.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.

    * ராமதாஸை கூட்டணியில் இணைப்பது பற்றி தி.மு.க. தலைமை தான் முடிவெடுக்க வேண்டும்.

    * கூட்டணியில் ராமதாஸ் இணைவது பற்றி நாங்கள் முடிவெடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீரவணக்கம், வீரவணக்கம்! மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம்!
    • மொழிப்போர் வீராங்கனை அன்னை தருமாம்பாளுக்கும் நினைவஞ்சலி செலுத்தினேன்.

    மொழிப்போர் வரலாற்றை உணர்த்தும் காணொளி வெளியீடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வீரவணக்கம், வீரவணக்கம்! மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம்!

    1938-ஆம் ஆண்டு மொழிப்போர்க் களத்தின் முதற்கட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த நடராசன் - தாளமுத்து ஆகியோருக்கு மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள அவர்களது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினேன். மொழிப்போர் வீராங்கனை அன்னை தருமாம்பாளுக்கும் நினைவஞ்சலி செலுத்தினேன்.

    எழும்பூரில் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் திருவுருவச் சிலைகளையும் திறந்துவைத்தேன்.

    மொழிப்போர்களில் உயிர்ப்பலியான மற்ற தியாகியரையும் இந்நாளில் தமிழுணர்ச்சியோடு நினைவுகூர்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டணிகளை தூளாக்கும் சக்தி த.வெ.க. தலைவர் விஜய்க்கு மட்டும் தான் உண்டு.
    • எம்.ஜி.ஆருக்கு பிறகு செல்வாக்கு மிக்க தலைவராக விஜய் உள்ளார்.

    மாமல்லபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் தொடங்கியது.

    மேடையில் விஜய் கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் த.வெ.க. கொள்கை பாடல் இசைக்கப்பட்டது. த.வெ.க. நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் என்பதால், மேடையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

    இதையடுத்து த.வெ.க. நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் தி.மு.க.வை வீழ்த்தும் சக்தி கொண்ட ஒரே தளபதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்தான்.

    * கூட்டணிகளை தூளாக்கும் சக்தி த.வெ.க. தலைவர் விஜய்க்கு மட்டும் தான் உண்டு.

    * தி.மு.க., அ.தி.மு.க.வில் இருப்போர் தலைவர்களே இல்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு செல்வாக்கு மிக்க தலைவராக விஜய் உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • த.வெ.க. நிர்வாகிகள் காலையிலேயே மாமல்லபுரம் ஓட்டலுக்கு வரத் தொடங்கினார்கள்.
    • மேடையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

    தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் ஆணையம் கடந்த 22-ந்தேதி 'விசில் சின்னம்' ஒதுக்கியது. இதனால் த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    கரூர் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை, ஜனநாயகன் சென்சார் பிரச்சனை நீடித்து வரும் நிலையில் த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் நடைபெறுகிறது. செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக த.வெ.க. நிர்வாகிகள் இன்று காலையிலேயே மாமல்லபுரம் ஓட்டலுக்கு வரத் தொடங்கினார்கள்.

    கூட்டத்தில் பங்கேற்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் காலை 9.30 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.

    இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் தொடங்கியது. மேடையில் விஜய் கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் த.வெ.க. கொள்கை பாடல் இசைக்கப்பட்டது. த.வெ.க. நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் என்பதால், மேடையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

    கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

    • 38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேச உள்ளார்.
    • செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த பெண்கள் மற்றும் நிர்வாகிகள் விசிலுடன் வந்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.

    விஜய் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி னார். அப்போது அவர் மேடை ஏறி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அதன் பிறகு அவர் எந்த கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை.

    38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேச உள்ளார்.

    இதற்கிடையே, சட்டசபை தேர்தலையொட்டி த.வெ.க.வுக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியது. இது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் இன்று செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த பெண்கள் மற்றும் நிர்வாகிகள் விசிலுடன் வந்தனர். அவர்கள் அரங்கமே அதிர.. விசில் ஊதி தங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்கள்.

    • தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என பேசியிருக்கிறார் இ.பி.எஸ்.
    • அ.தி.மு.க. ஆட்சி மலரும் என பேசுகின்ற நிலை இல்லாமல் போனது கவலை அளிக்கிறது.

    திருச்சி விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் NDA இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    * அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி இயங்காதது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

    * தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என பேசியிருக்கிறார் இ.பி.எஸ்.

    * அ.தி.மு.க. ஆட்சி மலரும் என பேசுகின்ற நிலை இல்லாமல் போனது கவலை அளிக்கிறது.

    * பா.ஜ.க.வின் பிடியில் அ.தி.மு.க. சென்றுவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நம் மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் 'மொழிப்போர் தியாகிகள் நாள்' இன்று.
    • மொழி திணிப்பு எந்தவகையில் வந்தாலும் அதனை சமரசமின்றி எதிர்த்து போராடுவோம்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதவது:-

    இந்தி மொழி திணிப்பை எதிர்த்து, இறுதி மூச்சு வரை போராடி உயிர்நீத்த நம் மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் 'மொழிப்போர் தியாகிகள் நாள்' இன்று. தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழ்நாட்டின் தனித்துவ இருமொழிக் கொள்கையையும் ஒருபோதும் கைவிட மாட்டோம். மொழி திணிப்பு எந்தவகையில் வந்தாலும் அதனை சமரசமின்றி எதிர்த்து போராடுவோம் என்று இந்நாளில் உறுதியேற்போம்.

    மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • அன்னைத் தமிழைக் காத்த தியாகிகளின் நினைவைப் போற்றிடும் நாள் இன்று.
    • இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராடிய அவர்களின் வழியில் என்றும் நம் மொழியுரிமையைக் காத்து நிற்போம்.

    மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    எண்ணில்லா போராட்டங்களும், விலை மதிப்பில்லா உயிர்த் தியாகங்களும் செய்து அன்னைத் தமிழைக் காத்த தியாகிகளின் நினைவைப் போற்றிடும் நாள் இன்று. இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராடிய அவர்களின் வழியில் என்றும் நம் மொழியுரிமையைக் காத்து நிற்போம்.

    மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காவல்துறை அதிகாரிகள் 3 பேருக்கு சிறப்புமிக்க குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • காவல் ஆய்வாளர்கள் பாண்டி முத்துலட்சுமி, செந்தில் குமார், ஆனந்தி, சந்திரா, உதவி ஆய்வாளர் முருகனுக்கு விருது அறிவிப்பு.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் 3 பேருக்கு சிறப்புமிக்க குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    காவல் துறை கண்காணிப்பாளர் குமரவேலு, துணை ஆணையர் அன்வர் பாஷா, ஐஜி மகேஸ்வரிக்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 21 அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகைசால் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, டிஎஸ்பி தேவராஜன், கமாண்டன்ட் மணிவர்மன், உதவி ஆணையர் ஜான், கூடுதல் ஆணையர் அமுல்தாஸூக்கு மெச்சத்தக்க பணிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிஎஸ்பி சீனிவாசன், ஆய்வாளர்கள் விஜய், கிருஷ்ணமூர்த்தி, ஜானகி, காளீஸ்வரி, இலக்குமணன், ரகுநாதன், மோகனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    காவல் ஆய்வாளர்கள் பாண்டி முத்துலட்சுமி, செந்தில் குமார், ஆனந்தி, சந்திரா, உதவி ஆய்வாளர் முருகனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ராமேசுவரம் பகுதியில் சாலைகளில் மணல் புழுதியாக பறந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர்.
    • மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடைவிதித்தனர்.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதால் ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதலே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் படகுகள் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    பலத்த சூறாவளி காற்று காரணமாக பாம்பனில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் பகுதியில் சாலைகளில் மணல் புழுதியாக பறந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர். இதேபோல ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியிலும் வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறவாளி காற்று வீசியது.

    இந்தநிலையில் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து நேற்று விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தயாராகி இருந்தனர். ஆனால் மீன் துறை அதிகாரிகள் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதோடு கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கை வந்துள்ளதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல டோக்கன் வழங்க மறுத்து விட்டனர். மேலும், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் இருக்கும் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடைவிதித்தனர்.

    இதன் காரணமாக, ராமேசுவரம் பகுதியிலும் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 1300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 600-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதே போல் பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளிலும் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை.

    இந்த தடை உத்தரவால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் நேற்று சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். இதேபோல மண்டபம் பகுதியிலும் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் தெற்கு துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    ×