search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விஜய் மக்கள் இயக்க செயல்பாடுகளை சமூக ஊடகங்களில் பரப்ப ஏற்பாடு
    X

    விஜய் மக்கள் இயக்க செயல்பாடுகளை சமூக ஊடகங்களில் பரப்ப ஏற்பாடு

    • முக்கிய திருவிழாக்கள், தலைவர்களின் பிறந்த நாட்கள், நினைவு நாட்களில் தலைமை உருவாக்கிய போஸ்டர்களையே பகிர வேண்டும்.
    • இயக்கத்தின் சேவைகள் மூலம் பயனடைந்த பயனாளிகளின் பேட்டிகளை அவர்களின் ஒப்புதல் பெற்று சின்னஞ்சிறிய வீடியோவாக வெளியிட வேண்டும்.

    சென்னை:

    அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில ஆலோசனைக் கூட்டம் இன்று பனையூரில் நடந்தது. விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்ப அணியினரின் செயல்பாடுகள் குறித்து புஸ்சி ஆனந்த் பேசியதாவது:-

    தமிழ்நாட்டு மக்களுக்கும் இயக்கத்துக்குமான தொடர்பை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்.

    இயக்கத்தின் தலைமை உத்தரவு, இயக்கத்தின் புதிய அறிவிப்புகள், இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல் வந்தவுடன் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் தெரிவித்தவுடன் அதனை உரிய ஹேஷ்டாக்குடன் பதிவிட வேண்டும்.

    அணியின் தலைமை தெரிவிக்கும் பதிவுகளை மாநகரம் முதல் ஊராட்சி கிளை வரை உள்ள வாட்ஸ்அப் குழுக்களுக்கு பகிர வேண்டும்.

    முக்கிய திருவிழாக்கள், தலைவர்களின் பிறந்த நாட்கள், நினைவு நாட்களில் தலைமை உருவாக்கிய போஸ்டர்களையே பகிர வேண்டும்.

    இயக்கத்தின் தலைமை ஒரு பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் அணியில் இருப்பவர்கள் அனைவரும் லைக் மற்றும் ஷேர் செய்ய வேண்டும். லைக்ஸ் மற்றும் ஷேரிங் எண்ணிக்கை மில்லியனை சாதாரணமாக தாண்ட வேண்டும்.

    இயக்கத்திற்குள் தற்போது சுமார் 1,600-க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்களும் அதில் சுமார் 3 லட்சம் பேர் இயக்கப் பணிகள் சார்ந்த தகவல் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இவை அனைத்தையும் மறுக்கட்டமைப்பு மூலம் சீரமைத்து விரிவாக்கம் செய்து 234 தொகுதிகளிலும் வலுப்படுத்த வேண்டும்.

    இயக்கத்தின் இளைஞரணி, மகளிர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, தொழிலாளர் அணி, வணிகர் அணி, விவசாயிகள் அணி உள்ளிட்ட அனைத்து அணிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களையும் இணைக்கும் பாலமாக தகவல் தொழில்நுட்ப அணி செயல்பட வேண்டும். இதனை நிர்வகிக்க மாநகரம், மாவட்டம், ஒன்றியம், நகரம், வட்டம், பகுதி, பேரூர், ஊராட்சி கிளை ஆகிய அனைத்து பகுதிகளுக்கும் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 30 ஆயிரம் பேரை 234 தொகுதிகளிலும் நிர்வாகிகளாக நியமிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

    இயக்கம் செய்து வரும் சேவைகளை தொடர்ந்து வீடியோவாக பதிவிட வேண்டும். அந்த வீடியோவில் எப்போது எந்த பகுதியில் எடுக்கப்பட்டது என்ற விவரங்களை இணைக்க வேண்டும்.

    இயக்கத்தின் சேவைகள் மூலம் பயனடைந்த பயனாளிகளின் பேட்டிகளை அவர்களின் ஒப்புதல் பெற்று சின்னஞ்சிறிய வீடியோவாக வெளியிட வேண்டும். தலைமையின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர்களின் பதிவுகளை லைக் செய்யவும் ஷேர் செய்யவும் கூடாது. எந்த வகையிலும் தனிநபர் தாக்குதல் இருக்கக் கூடாது. மொழி, இனம், சாதி, மதம் என்ற வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் நல்லிணக்க பாதையில் பயணிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×