search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் குவிந்தனர்: ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
    X

    கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் குவிந்தனர்: ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்

    • திண்டிவனம், விழுப்புரம், கிருஷ்ணகிரி ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் பூசணிக்காய் விற்பனைக்கு குவிந்துள்ளது.
    • அவல், பொறி, கடலை, வாழைத்தோரணம், பழங்கள் விற்பனை களைகட்டி உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    போரூர்:

    ஆயுத பூஜை பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை முதலே கோயம்பேடு மார்கெட்டில் குவிந்த சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்ல குவிந்தனர். இதனால் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

    ஆண்டு தோறும் கோயம்பேடு பூ மார்கெட் வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏலம் நடத்தி சிறப்பு சந்தைக்கு அனுமதி கொடுக்கப்படுவது வழக்கம். மெட்ரோ ரெயில் பணி, ஆக்கிரமிப்பு கடைகள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த ஆண்டு சிறப்பு சந்தை நடத்த ஏலம் நடத்தப்படவில்லை.

    இதையடுத்து சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் பூஜை பொருட்களை வாங்கி சென்றிட வசதியாக மளிகை மார்கெட் வளாகத்தில் கடந்த 18-ந்தேதி அங்காடி நிர்வாக குழு சார்பில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டது.

    இந்த சிறப்பு சந்தையில் 100-க்கும் மேற்பட்ட வெளி வியாபாரிகள் அவல், பொரி, கடலை, பூசணிக்காய், தேங்காய், வெற்றிலை உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    திண்டிவனம், விழுப்புரம், கிருஷ்ணகிரி ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் பூசணிக்காய் விற்பனைக்கு குவிந்துள்ளது.

    அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் படவேடு ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட லாரிகளில் வாழைகன்று விற்பனைக்கு வந்திருந்தன. இவை அனைத்தும் கோயம்பேடு மார்கெட்டை ஒட்டியுள்ள "இ மற்றும் ஏ" சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    அவல், பொறி, கடலை, வாழைத்தோரணம், பழங்கள் விற்பனை களைகட்டி உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அவல் ஒரு படி ரூ.100-க்கும், பொரி-ரூ.20, கடலைரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளம் பழங்கள் விலையும் அதிகமாக இருந்தது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் விலை விபரம் வருமாறு:- ஆப்பிள்-ரூ.200, சாத்துக்குடி-ரூ.100, மாலூர் கொய்யா-ரூ.150, மாதுளம் பழம்-ரூ.250, அவல் ஒரு படி (பெரியது) -ரூ.100, பொரி ஒரு படி-ரூ.20, கடலை ஒரு படி-ரூ.150, நாட்டு சர்க்கரை ஒரு கிலோ-ரூ.100, தேங்காய் ஒன்று-ரூ.20-ரூ.25வரை, வாழை இலை ஒன்று-ரூ.10, வாழைகன்று (10எண்ணிக்கை - 1 கட்டு) -ரூ.100, பூசணிக்காய் (1கிலோ)-ரூ.10, எழுமிச்சை கிலோ ரூ.120, தோரணம் (20எண்ணிக்கை) -ரூ.50, மாங்கொத்து ஒரு கட்டு ரூ.15, வெற்றிலை கவுளி(80 எண்ணிக்கை)-ரூ.40 மஞ்சள் வாழைத்தார் ஒன்று- ரூ.500.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, அங்காடி நிர்வாக குழு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000வசூல் செய்து வருகின்றனர். ஆனால் மார்கெட் வளாகத்தை சுற்றி உள்ள சாலைகளில் நேரடியாக வியாபாரிகள் பலர் தற்காலிக கடைகள் அமைத்தும் வாகனங்களில் வைத்தும் நேரடியாக பூஜை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவல்,பொரி, கடலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை ஆகாமல் அதிகளவில் தேக்கமடைந்து பெருத்த நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் கண்காணிப்பு செய்து ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆயதபூஜையையொட்டி ஆந்திரா, திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து இன்று 80-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூ விற்பனைக்கு குவிந்து உள்ளது. பூக்கள் விலை அதிகமாக காணப்பட்டது. சாமந்தி ஒரு கிலோ ரூ.200-க்கும், மல்லி மற்றும் கனகாம்பரம் ரூ.900-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் வலை விபரம்(கிலோவில்)வருமாறு:-

    சாமந்தி பூ -ரூ.200-க்கும், பன்னீர் ரோஜா-ரூ.150-க்கும், சாக்லேட் ரோஜா-ரூ.250, மல்லி மற்றும் கனகாம்பரம்-ரூ.90, அரளி-ரூ500, ஜாதி-ரூ.450,முல்லை-ரூ.600, சம்பங்கி-ரூ250 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மார்கெட்டில் உள்ள கடைகளில் பூக்கள் விலை மேலும் பல மடங்கு எகிறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×