search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் 10-ந் தேதியே சென்னைக்கு வந்துவிட வேண்டும்- தலைமைக் கழகம் உத்தரவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் 10-ந் தேதியே சென்னைக்கு வந்துவிட வேண்டும்- தலைமைக் கழகம் உத்தரவு

    • அ.தி.மு.க.வில் 2665 பேர் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.
    • பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமி பக்கம் வருவதற்கு தூதுவிட்ட வண்ணம் உள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு வருகிற 11-ந்தேதி சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீ வாரு மண்டப வளாகத்தி நடைபெற உள்ளது.

    கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி பொதுக்குழுவை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக அங்கு பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

    இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்ட நிலையில் சென்னை கோர்ட்டில் ஓ.பன்னீர் செல்வம் தடை கேட்டு தொடர்ந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வருகிறது.

    இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் விஜய்நாராயணன் வாதங்களை எடுத்து வைக்கிறார். கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தாலும், மற்றொரு புறம் பொதுக்குழு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அ.தி.மு.க. தலைமை கழகம் செய்து வருகிறது.

    அ.தி.மு.க.வில் 2665 பேர் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 2,432 பேர் கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் 2441 பேர் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளனர்.

    இந்த நிலையில் தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் பகுதியை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் ஸ்டீபன் சக்கர வர்த்தி தனது ஆதரவாளர்களுடன் நேற்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி ஆதரவு பொதுகுழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2442 ஆக உயர்ந்து விட்டது.

    மேலும் சில பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமி பக்கம் வருவதற்கு தூதுவிட்ட வண்ணம் உள்ளனர்.

    11-ந் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சென்னைக்கு பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து வருவதற்கு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்ததந்த மாவட்ட கழக செயலாளர்கள் பஸ்களில் அழைத்து வர ஏற்பாடு செய்து வருகின்றனர். வெளி மாவட்டங்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் 10-ந் தேதியே சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்று தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி அவர்களை அழைத்து வர மாவட்ட செயலாளர்கள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×