search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விபத்து
    X
    விபத்து

    தூத்துக்குடி அருகே இன்று அதிகாலை விபத்து: கர்ப்பிணி-தாய் உள்பட 3 பேர் பலி

    தூத்துக்குடி அருகே இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் கர்ப்பிணி-தாய் உள்பட 3 பேர் பலியாகினர்.
    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் அருகே உள்ள குமரன்நகரை சேர்ந்தவர் ராஜாமணி. சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி மாரியம்மாள் என்ற முத்துகனி. இவர்களது இளைய மகள் கன்னிசெல்வி (வயது 26). இவருக்கும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த டிரைவான ராஜேஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது கன்னி செல்வி 3 மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

    இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனை கன்னிசெல்வியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சமாதானம் செய்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் மாரியம்மாள் மற்றும் அவரது மூத்த மகளான காளிஸ்வரியின் கணவரான மணிகண்டராஜா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் நேற்று கன்னிசெல்வியை பார்க்க காரைக்குடிக்கு சென்றனர்.

    அங்கு அவரை பார்த்து விட்டு பின்னர் மீண்டும் கன்னிசெல்வியை அழைத்துக் கொண்டு நேற்று இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடிக்கு திரும்பினர்.

    இன்று அதிகாலை அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எப்போதும் வென்றான் பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மாரியம்மாள் மற்றும் கன்னிசெல்வி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மணிகண்டராஜாவும் சற்று நேரத்தில் உயிரிழந்தார்.

    தகவலறிந்த விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ், எப்போதும் வென்றான் இன்ஸ்பெக்டர் ஜின்னாபீர்முகம்மது, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் எது என தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் எப்போதும் வென்றான், எட்டயபுரம், கீழஈரால், குறுக்குசாலை உள்ளிட்ட பகுதிகளில் சம்பவம் நடந்த நேரத்தில் அந்த சாலையில் சென்ற வாகனங்கள் குறித்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    உயிரிழந்த மணிகண்ட ராஜா ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு காளிஸ்வரி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது. மோட்டார் சைக்கிள் விபத்தில் கர்ப்பிணி - தாய் மற்றும் உறவினர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



    Next Story
    ×