search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலை நிறுத்தம்
    X
    வேலை நிறுத்தம்

    ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

    சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை தாக்கி விரட்டியடித்தனர்.

    மேலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த 9 மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நேற்று ராமேசுவரத்தில் மீனவர் சங்க கூட்டம் நடந்தது.

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், பாம்பன், தூத்துக்குடி, நாகை மீனவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். இலங்கை கடற்படையின் இடையூறு இன்றி பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது

    அதன்படி இன்று முதல் ராமேசுவரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது.இதனால் ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் சிறிய விசைப்படகு மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்காமல் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்ல திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் மீன்பிடி டோக்கன் வழங்கும் அலுவலகத்துக்கு சென்று அனுமதி கேட்டனர்.

    ஆனால் பெரிய விசைப்படகு மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் டோக்கன் வழங்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோ‌ஷ மிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டத்தை தொடர்ந்து மீன்பிடி டோக்கன் யாருக்கும் வழங்கப்படவில்லை.

    Next Story
    ×