search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    அ.ம.மு.க.வில் மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு அமைப்பு- டி.டி.வி.தினகரன்

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் “மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு” உருவாக்கப்படுவதாக அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய சமூகத்தின் பார்வையை மொத்தமாக மாற்றி, சாதனைச்சிகரங்களைத் தொடுவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு எல்லாத் துறைகளிலும் உருவாக்கித் தருவது அவசியமாகும்.

    மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல் சூழலுக்கும் உகந்த வகையில் நம்முடைய சமூக கட்டமைப்பை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அரசியல் அதிகாரத்திலும் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு இருக்கும் போது தான் அத்தகைய மாற்றங்கள் காலப்போக்கில் சாத்தியமாகும்.

    வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறனாளிகளை நேசித்துக் கொண்டாடிய அம்மாவின் திருப்பெயரைத் தாங்கியிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், அதற்கான முன்னெடுப்பைச் செய்வதில் பெருமிதம் கொள்கிறது.

    மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் அங்கீகாரமாக, அவர்களுக்கென்று கழகத்தின் சார்பு அணிகளில் தனியாக “மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு” உருவாக்கப்படுகிறது. இதற்கான நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.

    எதிர்காலத்தில் சமூக, அரசியல் களத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு புது எழுச்சி தரப்போகும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பினை சிறப்புக்குரிய இந்த நாளில் வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

    மனிதம் போற்றுவோம், மாற்றுத்திறனாளிகளைக் கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×