search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி ஆன்லைன் மூலம் ரூ.218 கோடி மோசடி - 2 பேர் கைது

    சென்னையில் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி ஆன்லைன் மூலம் பண முதலீடு பெற்று ரூ.218 கோடி மோசடி செய்த புகாரில் நிதி நிறுவன அதிபர்கள் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
    சென்னை:

    திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் (டி.எச்.எப்.எல்) ஆன்லைன் மூலம் கவர்ச்சிகரமான விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. எங்கள் நிறுவனத்தில் பொது மக்கள் முதலீடு செய்தால், அதிக வட்டியுடன் முதலீட்டு தொகை திருப்பி கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் அள்ளி வீசப்பட்டது. மேலும் பொதுமக்கள் கொடுக்கும் தொகை பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்யப்படும் என்று அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த விளம்பரத்தை பார்த்து பொதுமக்கள் நிறைய பேர் போட்டி போட்டு பணத்தை முதலீடாக குவித்ததாக தெரிகிறது. ஒரே ஒருவர் மட்டும் ரூ.200 கோடி பணத்தை முதலீடு செய்தார். அவருக்கு வட்டியுடன் ரூ.218 கோடி திருப்பி கொடுக்க வேண்டும். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்காமல், மேற்கண்ட நிதி நிறுவனம் ஏமாற்றி விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

    துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் மேற்கண்ட நிதி நிறுவனத்தின் நிர்வாகிகள் கபில் ராஜேஷ் வாதவன் (வயது 41), தீரஜ் ராஜேஷ் வாதவன் (46) ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும் 9 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த மோசடி நிதிநிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள், சென்னை கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவு அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9551133229, 9498109600 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு பேசி இந்த வழக்கு தொடர்பான விவரங்களை கூறலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×