search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிகே வாசன்
    X
    ஜிகே வாசன்

    நோயின் வீரியம் தெரியாமல் வீதியில் சுற்றும் டூவீலர்களை தடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன் அரசுக்கு கோரிக்கை

    இருசக்கர வாகன ஓட்டிகளே தயவு செய்து தேவையற்ற பயணத்தை தவிர்க்க, தண்டனையிலிருந்து தப்பிக்க, கொரோனா ஒழிப்புக்கு உதவிக்கரமாக இருக்க முன்வர வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேவையற்ற பயணத்தை மேற்கொள்ளும் இருசக்கர வாகன ஓட்டிகள் திருந்தியதாக தெரியவில்லை. இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்திருப்பதும், சிறு சிறு தண்டனைகள் கொடுத்திருப்பதும் போதாது. ஏனென்றால் கொரோனா வைரஸின் தாக்கமும், அச்சமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

    அதேவேளையில் நோய் பரவலின் பாதிப்பை அலட்சியம் செய்யும் விதமாக இவர்கள் பயணம் செய்கின்றனர். எனவே தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால்தான் திருந்தாத உள்ளங்கள் பயந்து, திருந்தும். நோயைக்கண்டு அச்சப்படாதவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படும் போது அலட்சியத்தை தவிர்ப்பார்கள்.

    மேலும் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு உடனடி தண்டனையாக காவல்துறையின் சாலைப்போக்குவரத்துப் பணியில் காலை முதல் மாலை வரை ஊரடங்கு முடியும் வரை கட்டாயமாக ஈடுபடுத்திட தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு, காவல்துறைக்கு உத்தரவும் பிறப்பிக்க வேண்டும்.

    இதன் மூலமாவது தேவையற்ற பயணம் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அச்சம் ஏற்பட்டு தேவைக்கு மட்டுமே பயணம் செய்வார்கள். அது மட்டுமல்ல இந்த அறிவிப்பு கண்டிப்பாக நடைமுறைக்கு வர வேண்டும்.

    அதை பார்க்கும் பொதுமக்கள் எவரும் அத்தியாவசிய அவசியத் தேவையைத் தவிர வேறு எதற்காகவும் வெளியில் செல்லமாட்டார்கள். இருசக்கர வாகன ஓட்டிகளே தயவு செய்து தேவையற்ற பயணத்தை தவிர்க்க, தண்டனையிலிருந்து தப்பிக்க, கொரோனா ஒழிப்புக்கு உதவிக்கரமாக இருக்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×