search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    ஆர்.கே.நகர் தொகுதி உள்பட 2 தொகுதிகளில் போட்டியிடுவேன்- டி.டி.வி.தினகரன்

    வரும் சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதி உள்பட 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் அ.ம.மு.க.வுக்கு புதிய தலைமை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதை கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருணாநிதியை எம்.கே. என்போம். அவர் தலைவராக இருந்த கட்சியில் இன்றைக்கு பி.கே. என்பவர் இருக்கிறார் என்று தமிழகம் முழுவதும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் பேசுகிறார்கள்.

    எங்களது பிரசாந்த் கிஷோர் எல்லாம் எங்களுடனே இருக்கிறார்கள் என்று அன்றைக்கே நான் சொன்னேன். ஒரு சட்டமன்றத் தொகுதியை எடுத்துக் கொண்டால் குறைந்தபட்சம் ஐந்து பிரசாந்த் கிஷோராவது எங்கள் கட்சியில் இருக்கிறார்கள்.

    ஒவ்வொருவரும் அவர்களின் விருப்பத்தை, எண்ணத்தை, ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஆவலை சொல்வார்கள். ஆனால் நிச்சயம் தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உருவாக்கும் என்ற ஒரே கொள்கையோடு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

    வடிவேலு மிகப்பெரிய நகைச்சுவை நடிகர், தற்போது அவர் நடிக்காமல் ஒதுங்கியிருப்பதற்கு காரணமே, அவர்களை தோற்கடிக்கும் அளவிற்கு நிறைய வடிவேலுகள் இந்த ஆட்சியில் கிளம்பியுள்ளனர். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

    இந்த காமெடி ஆட்டம் எல்லாம் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலோடு முடிந்து போய்விடும். அதன் பிறகு தொந்தரவு எல்லாம் ஒழிந்து விட்டது என்று வடிவேலு மீண்டும் நடிக்க வந்து விடுவார் என்று நினைக்கிறேன்.

    விலை போனவர்களால் எங்கள் இயக்கத்திற்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. ஏனென்றால், அம்மாவின் ஆட்சியையும், அம்மாவின் கட்சியையும் மீட்டெடுப்பதற்காக உண்மையான தொண்டர்கள் எந்தவித எதிர்பார்ப்புமின்றி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    மீண்டும் ஆர்.கே.நகரில் நிச்சயம் போட்டியிடுவேன். வரும் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம் என்று இருக்கிறேன். அதில் ஒரு தொகுதி ஆர்.கே.நகர். இன்னொரு தொகுதியை இன்னும் முடிவு செய்யவில்லை.

    என்னை அரசியலில் அம்மா கொண்டு வந்ததே தென்மண்டலத்தில்தான். அதனால் அந்த பக்கத்திலும் போட்டியிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆர்.கே.நகரில் போட்டியிட்டது திடீர் முடிவுதான். தென் பகுதியில் போட்டியிடலாம் என்ற எண்ணம் இருக்கிறது.

    யார் ஆளுமையாக இருக்கிறார், யார் வலுப்பெற்றிருக்கிறார் என்பது தேர்தல் வந்தால் மக்கள் சொல்வார்கள், நான் சொல்லக்கூடாது.

    தென் மாவட்டத்தில் நான் போட்டியிட வேண்டும் என்று பல இடங்களில் கோரிக்கை வைக்கிறார்கள் என்பதால்தான் இரு தொகுதிகளில் போட்டியிட முடிவு எடுத்து இருக்கிறேன். அதே நேரத்தில் ஆர்.கே.நகரையும் விட்டுவிட்டு போக முடியாது. அதனால்தான் இரு தொகுதிகளில் போட்டியிட போகிறேன்.

    இரு தொகுதிகளில் போட்டியிட்டு மக்களை ஏமாற்ற போகிறீர்கள் என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் இரு தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் தலைவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று அர்த்தமா?

    எனக்கு தோல்வி பயம் எல்லாம் கிடையாது. தென் மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் அங்கு ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன்.

    எங்கள் கூட்டணி மூன்றாவது அணியா? இரண்டாவது அணியா? என்பதை தேர்தல் நேரத்தில் நீங்கள் தெரிந்துக் கொள்வீர்கள்.

    ரஜினிகாந்த் அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அது தொடர்பாக நான் என்ன பதில் சொல்ல முடியும்?

    2021 பிப்ரவரி தான் சசிகலா வெளிவர முடியும். இருந்த போதிலும் முன்னரே வெளியே கொண்டு வருவதற்கான சட்ட ரீதியான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். வேறு முயற்சிகளை எல்லாம் எடுக்கவில்லை.

    உடனே தினகரன் குறுக்கு வழியில் முயற்சி செய்கிறார் என்று சொல்லி விடாதீர்கள்? உங்களின் கேள்விகளுக்கு எல்லாம் சசிகலா பதில் சொல்வார்.

    இவ்வாறு தினகரன் கூறினார்.
    Next Story
    ×