search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்தில் இறந்து கிடக்கும் மாடு
    X
    தீ விபத்தில் இறந்து கிடக்கும் மாடு

    உசிலம்பட்டி அருகே தீ விபத்து- 16 மாடுகள் உடல் கருகி பலி

    உசிலம்பட்டி அருகே மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 16 மாடுகள் உடல் கருகி பலியாகின. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரை அடுத்துள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்.

    வீட்டின் அருகே ஆடு, கோழி வளர்ப்பு பண்ணை அமைத்துள்ளார். மேலும் 40-க்கும் மேற்பட்ட மாடுகளையும் தனது பண்ணையில் வளர்த்து வந்தார். இங்கு அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

    இன்று காலை மாட்டு கொட்டகையில் இருந்த மின் மோட்டாரை இயக்கி விட்டு அவர் தோட்டத்துக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் மின் மோட்டாரில் மின் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தீப்பொறி மாட்டு கொட்டகை, வைக்கோல் படப்புகளில் பரவியது. சிறிது நேரத்தில் மளமளவென தீ பரவி மாட்டுக் கொட்டகை முழுவதும் பரவியது.

    அங்கிருந்த மாடுகள் அனைத்தும் கட்டப்பட்டிருந்ததால் அவைகளால் வெளியேற முடியவில்லை. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் கொட்டகையில் இருந்த 16 மாடுகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தன. 20-க்கும் மேற்பட்ட மாடுகள் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இதனால் மாடுகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



    Next Story
    ×