search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்

    ரூ.32.74 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள்- முதலமைச்சர் திறந்து வைத்தார்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.32.74 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    சென்னை:

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 14 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    12 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆவடி, ஸ்ரீமுஷ்ணம், கும்பகோணம், பாபநாசம், மானூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

    தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் கரூர் மாவட்டம், கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆப்பரேட்டர் அட்வான்ஸ்டு மெஷின் டூல்ஸ் தொழிற் பிரிவுக்கான புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டப்பட்டுள்ளது.

    மதுரை, அம்பத்தூர், திண்டுக்கல், கோயம்புத்தூர், அம்பாசமுத்திரம், ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு 4 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் பணிமனை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    2017-18-ம் ஆண்டில், தமிழ்நாடு எண்ணெய் வித்துக்களில் 10.382 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி அடைந்ததற்காக மத்திய அரசின் கிருஷிகர்மான் விருதுக்கு தமிழ்நாடு ஐந்தாவது முறையாக தேர்வு செய்யப்பட்டது.

    பிரதமர் மோடியால் வழங்கப்பட்ட கிருஷிகர்மான் விருதினை வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, முதல்-அமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

    வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வேளாண் சார்ந்த பல முக்கிய தகவல்கள் தொகுப்பின் 2-வது பதிப்பான 2019-ம் ஆண்டுக்கான வேளாண் புள்ளிவிவரப் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    முதல் பிரதியை முதல்- அமைச்சர் வெளியிட, அமைச்சர் துரைக்கண்ணு பெற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயகுமார், ஜெயக்குமார், மாபா. பாண்டியராஜன், நிலோபர் கபில், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×