search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை முயற்சி
    X
    தற்கொலை முயற்சி

    திருப்பூரில் 6 வயது பெண் குழந்தை கழுத்தை நெரித்துக்கொலை- தாய் தற்கொலை முயற்சி

    திருப்பூரில் 6 வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக்கொலை செய்து விட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 37). இவரது மனைவி அருள்மொழி (33). இவர்களது மகன் கோகுலகிருஷ்ணன் (10), மகள் கீர்த்தி (6). தேவேந்திரன் குடும்பத்துடன் திருப்பூர் போயம்பாளையத்தில் தங்கி அவினாசி நகரில் உள்ள ஒரு பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகிறார்.

    அருள்மொழியும் பனியன் கம்பெனிக்கு சென்று வருகிறார். கோகுலகிருஷ்ணன் மற்றும் கீர்த்தி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

    இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் தேவேந்திரன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். 2 குழந்தைகளுடன் அருள்மொழி வசித்து வந்தார். கோகுல கிருஷ்ணன் அரையாண்டு தேர்வு விடுமுறைக்காக அருள்மொழியின் அக்காள் வீட்டுக்கு சென்று விட்டார்.

    நேற்று மாலை கீர்த்தி வீட்டின் முன்பு விளையாடினார். அருள்மொழி வீட்டில் இருந்தார். விளையாடிய சிறுமியை திடீரென வீட்டுக்குள் அவரது தாய் தூக்கிச்சென்றார்.

    சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து சத்தம்கேட்டது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது அருள்மொழி தூக்கில் தொங்கியவாறு உயிருக்கு போராடினார். சிறுமி கீர்த்தி மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தை கீர்த்தியை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது என்று கூறினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அருள்மொழி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் அனுப்பர் பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கீர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் கூறும்போது, குழந்தையை கொன்ற தாய் தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து சிகிச்சை பெற்று வரும் அருள்மொழிக்கு மயக்கம் தெளிந்த பின்னர் தான் தெரியவரும் என்றனர்.

    Next Story
    ×