search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிய காட்சி.
    X
    திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிய காட்சி.

    குமரியில் மழை நீடிப்பு - திற்பரப்பு அருவியில் வெள்ளம் கொட்டுகிறது

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

    நேற்றும் மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் அதிகபட்சமாக 23.4 மி.மீ. மழை பதிவானது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. திடீரென பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கன்னியாகுமரி, சாமித்தோப்பு, கொட்டாரம், பொற்றையடி பகுதிகளில் சுமார் 1 மணி நேரமாக இடைவிடாது கனமழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக இதமான குளிர்க்காற்றும் வீசி வருகிறது. பாசன குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

    கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு சாரல் மழையும் பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது.

    பரளியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மாத்தூர் தொட்டில் பாலத்துக்கு கீழ் செல்லும் சப்பாத்து பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது.

    தொடர் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னிப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    குலசேகரம், கீரிப்பாறை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் சுமார் 200 டன் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 6.70 அடியாக இருந்தது. அணைக்கு 477 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 398 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 63.15 அடியாக உள்ளது. அணைக்கு 350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 52 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு 53.81 அடியாக உள்ளது. அணை இன்னும் ஓரிரு நாட்களில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-14, பெருஞ்சாணி-10.2, சிற்றாறு-1-20.2, சிற்றாறு-2-3, புத்தன் அணை-12.8, முள்ளங்கினா விளை-11, கோழிப்போர் விளை-4, திற்பரப்பு-14.2, குருந்தன்கோடு-2.8, ஆணைக்கிடங்கு-5, நாகர் கோவில்-3.4, பூதப் பாண்டி-3.6, கன்னிமார்-21.4, சுருளோடு-11.4, பால மோர்-23.4, மயிலாடி-4.8, கொட்டாரம்-10.4.
    Next Story
    ×