search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4-வது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி - புதிய வீரர்கள் பதிவு நாளை தொடக்கம்
    X

    4-வது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி - புதிய வீரர்கள் பதிவு நாளை தொடக்கம்

    4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான புதிய வீரர்கள் பதிவு நாளை முதல் வருகிற 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாக கமிட்டி கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் அணி நிர்வாகத்தினருடன் கலந்து பேசி 4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குறித்து முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி 8 அணிகள் பங்கேற்கும் 4-வது டி.என்.பி.எல். போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி முதல் ஆகஸ்டு 18-ந் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 32 ஆட்டங்கள் சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

    அணிகள் வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை விடுவித்து 3 வீரர்களை வாங்கி கொள்ள முடியும். அணியில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளது. ஒரு அணியில் குறைந்தபட்சமாக 16 வீரர்களும், அதிகபட்சமாக 22 வீரர்களும் இடம் பெறலாம். இதில் 2 பேர் மாவட்ட வீரர்களாக இருக்க வேண்டும். வீரர்கள் பரிமாற்றம் இன்று (19-ந் தேதி) முதல் வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும்.

    புதிய வீரர்கள் பதிவு நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும். புதிய வீரர்கள் பதிவுக்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வீரர்கள் ஒதுக்கீடு அடுத்த மாதம் 4-ந் தேதி நடைபெறும். போட்டி அட்டவணை விரைவில் வெளியிடப்படும். இந்த தகவலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணை செயலாளர் ஆர்.ஐ.பழனி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×