search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
    X

    தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

    டர்பனில் நடைபெற்ற தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #SAvIND #ViratKohli
    டர்பன்:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் டர்பனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    டி காக், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 16 ரன்கள் எடுத்த நிலையில் அம்லா பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து கேப்டன் டு பிளிசிஸ் களம் இறங்கினார். டி காக் 34 ரன்களில் சாஹல் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அதன்பின் வந்த மார்கிராம் (9), டுமினி (12), மில்லர் (7) அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் டு பிளிசிஸ் சிறப்பாக விளையாடினார். அவருக்கு கிறிஸ் மோரிஸ் (37) துணை நின்றார்.



    சிறப்பாக விளையாடிய டு பிளிசிஸ் 47-வது ஓவரின் 2-வது ஒரு ரன் அடித்து 101 பந்தில் சதத்தை பூர்த்தி செய்தார். சதம் அடித்த பின்னர் டு பிளிசிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 112 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 120 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்ரிக்கா அணி கடைசி 5 ஓவரில் 46 ரன்கள் குவித்தது.

    அதைத்தொடர்ந்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட தொடங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் தவானுடன், கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்திய அணியின் ஸ்கோர் 67 ஆக இருந்த பொழுது ஷிகர் தவான் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.



    அவரைத்தொடர்ந்து ரகானே களமிறங்கினார். இருவரும் நிதானமகா விளையாடி ரன் குவித்தனர். விராட் கோலி அரைசதம் கடந்தார். தொடர்ந்து எதிர்முனையில் சிறப்பாக விளையாடிய ரகானேவும் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தென்னாப்ரிக்கா பந்துவீச்சாளர்கள் திணறினர். 41-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்த கோலி சதத்தை பூர்த்தி செய்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் 33-வது சதமாகும்.

    சிறப்பாக விளையாடிய ரகானே 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். விராட் கோலி - ரகானே ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்தது. அதன்பின் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். விராட் கோலி 112 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் டோனி களமிறங்கினார்.
     
     இந்திய அணி 45.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்தது. வெற்றி ரன்களை டோனி அடித்தார். இதன்மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்னாப்ரிக்கா அணியின் பந்துவீச்சில் மார்னே மார்கல், அண்டிலே பெலுஹ்வாயோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வருகிற 4-ம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற உள்ளது. #SAvIND #ViratKohli
    Next Story
    ×