search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எர்ணாகுளம் அருகே வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றி மகளை கொல்ல முயன்ற கொடூர தந்தை
    X

    எர்ணாகுளம் அருகே வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றி மகளை கொல்ல முயன்ற கொடூர தந்தை

    • சிறுமி கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • தந்தை மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள ஆலங்காடு பகுதியை சேர்ந்த 14 வயது மதிக்கத்தக்க சிறுமி, வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.

    சிறுமியும், அந்த வாலிபரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் காதல் விவகாரம் அவரது தந்தைக்கு தெரியவந்தது. தனது மகள் வேற்று மதத்தை சேர்ந்த வாலிபரை காதலிப்பதையறிந்த அவர் ஆத்திரமடைந்தார். அவர் தனது மகளை கண்டித்துள்ளார்.

    மேலும் காதலை கைவிட்டுவிடுமாறு கூறியிருக்கிறார். ஆனால் சிறுமியோ தனது காதலை கைவிடவில்லை. தொடர்ந்து அந்த வாலிபருடன் பேசிய படி இருந்திருக்கிறார். இதனால் சிறுமி வைத்திருந்த செல்போனை பறித்து வைத்துக்கொண்டார். ஆனால் சிறுமி வேறொரு போன் மூலமாக காதலனுடன் பேசியபடி இருந்திருக்கிறார்.

    இதில் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை, சம்பவத்தன்று சிறுமியிடம் தகராறு செய்திருக்கிறார். அப்போது அவர், பெற்ற மகள் என்றும் பாராமல் இரும்பு கம்பியால் மகளை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமி நிலைகுலைந்து தரையில் விழுந்தார்.

    அப்போது அவர், வீட்டில் இருந்த பூச்சிமருந்தை எடுத்து தனது மகளின் வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றினார். பெற்ற மகளை கொடூரமாக தாக்கியது மட்டுமின்றி, அவளை கொலை செய்யும் நோக்கில் விஷத்தை வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றுவதை சிறுமியின் தாய் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    அவர் தனது கணவரிடமிருந்து மகளை மீட்டார். சிறுமி கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமி தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    சிறுமியை பெற்ற தந்தையே கொடூரமாக தாக்கி விஷம் கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் குறித்து, சிறுமி சிகிச்சை பெற்ற ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்பு சிறுமியின் தந்தையை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது. காதலை கைவிட மறுத்த மகளை தந்தையே கொல்ல முயன்ற சம்பவம் எர்ணாகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×