search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ளோம்: பிரதமர் மோடி
    X

    இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ளோம்: பிரதமர் மோடி

    • குஜராத்தின் காந்தி நகரில் துடிப்பான குஜராத் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • உலகம் இந்தியாவை ஸ்திரத்தன்மையின் முக்கிய தூணாகப் பார்க்கிறது என்றார்.

    அகமதாபாத்:

    குஜராத்தின் காந்தி நகரில் துடிப்பான குஜராத் வர்த்தக மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்தன. இப்போது, அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியா தனது இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருகிறது. 100 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் நேரத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நாங்கள் கொண்டுள்ளோம்.

    இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், இந்தியாவின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான பங்காளிகள்.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் பங்கேற்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உச்சி மாநாட்டில் அவர் தலைமை விருந்தினராக கலந்துகொள்வது இந்தியாவிற்கும் யு.ஏ.இ.க்கும் இடையே இருக்கும் வலுவான உறவைக் குறிக்கிறது.

    உலகம் இந்தியாவை ஸ்திரத்தன்மையின் முக்கிய தூணாகப் பார்க்கிறது. நம்பக்கூடிய ஒரு நண்பர், மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் நம்பிக்கை கொண்ட ஒரு பங்குதாரர், உலகளாவிய நன்மையை நம்பும் ஒரு குரல், உலகப் பொருளாதார வளர்ச்சியின் இயந்திரம், தீர்வுகளைக் கண்டறிவதற்கான தொழில்நுட்ப மையம், திறமையான இளைஞர்களின் சக்தி மற்றும் ஜனநாயகத்தைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.

    யு.ஏ.இ நிறுவனங்களால் இந்தியாவின் துறைமுக உள்கட்டமைப்பில் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள புதிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    இன்று இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா 11-வது இடத்தில் இருந்தது.

    இன்று அனைத்து முக்கிய ஏஜென்சிகளும் வரும் ஆண்டுகளில் இந்தியா உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் இருக்கும் என்று மதிப்பிடுகின்றன. அது நடக்குமென உத்தரவாதம் அளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×