search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் கடும் சரிவை சந்திக்கும் குழந்தை பிறப்பு விகிதம்
    X

    கேரளாவில் கடும் சரிவை சந்திக்கும் குழந்தை பிறப்பு விகிதம்

    • இந்தியாவில் இயற்கை வளங்கள் மிகுந்த மாநிலமாக திகழ்வது கேரள மாநிலம்.
    • ஒரு பிரிவினர் அரசு வேலை கிடைத்த பிறகு குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

    கேரளா:

    பிறப்பு விகிதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் மக்கள்தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கையே ஆகும். மக்கள்தொகையில் 1000 பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் நபர்களின் எண்ணிக்கை மனித பிறப்பு விகிதம் என குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக ஒரு வருடத்திற்கு 1000 பேருக்கு 45 பிறப்புகள் ஏற்பட்டால், பிறப்பு விகிதம் 45. இந்த விகிதம் சில நேரங்களில் ஒரு சதவீதமாக குறிப்பிடப்படுகிறது.

    இந்தியாவில் இயற்கை வளங்கள் மிகுந்த மாநிலமாக திகழ்வது கேரள மாநிலம். மக்கள்தொகை பெருக்கத்திலும் அது பெரிய மாநிலமாகவே இருக்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 33 மில்லியன் மக்களுடன், மக்கள்தொகையில் 13-வது பெரிய மாநிலமாக கேரளா இருந்தது.

    இந்நிலையில் தற்போது அங்கு குழந்தை பிறப்பு விகிதம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. கேரள மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பு பெரிய அளவில் இருந்தது. அந்த ஆண்டில் அங்கு 5 லட்சத்து 60 ஆயிரத்து 268 குழந்தைகள் பிறந்துள்ளன.

    ஆனால் அதன்பிறகு குழந்தைகள் பிறப்பு விகிதம் படிப்படியாக குறைய தொடங்கியது. கடந்த 2019-ம் ஆண்டு 4 லட்சத்து 80 ஆயிரத்து 113 குழந்தைகளே பிறந்தன. அது 2021-ம் ஆண்டு மேலும் குறைந்தது. அந்த ஆண்டில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 767 குழந்தைகளே பிறந்துள்ளன.

    2011-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2021-ம் ஆண்டில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 501 குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளன. இது 25 சதவீதம் குறைவாகும். கடந்த 10 ஆண்டுகளில் கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. அங்கு குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

    இளைஞர்களின் பார்வை மற்றும் வாழ்க்கை தொடர்பான கருத்துக்களில் அவர்களுக்கு ஏற்பட்ட மாற்றத்தால் கேரளாவில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு இடம்பெயர்வது அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு பிறப்பு விகிதம் குறைவதாக கூறப்படுகிறது.

    மேலும் தற்போதைய புதிய தலைமுறையினர், நிதி பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கிறார்கள். பலர் ஒரு குழந்தையே போதும் என்று நினைக்கிறார்கள். குழந்தையை தேவையில்லை என்று நினைப்பவர்களும் அதிகமாக உள்ளனர். இவர்களுக்கு மத்தியில் பிற்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கும் தம்பதிகளும் இருக்கிறார்கள்.

    இவைகள் பிரதான காரணங்களாக கூறப்பட்டாலும், மேலும் சில காரணங்களும் கேரளாவில் குழந்தை பிறப்பு குறைவதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன. கேரளாவில் கருக்கலைப்பு செய்யும் போக்கு சமீபகாலமாக மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள், குழந்தை பிறக்காத நிலையில் கருவுறாமை சிகிச்சை எடுத்துக்கொள்வதில்லை. இவர்களில் ஒரு பிரிவினர் அரசு வேலை கிடைத்த பிறகு குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். மற்றொரு பிரிவினர் வெளிநாடு செல்வதற்காக கர்ப்பமாவதை தவிர்க்கின்றனர்.

    இளைஞர்களின் இந்த எண்ணம் காரணமாகவே கேரளாவில் குழந்தை பிறப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் கேரளாவில் புதிய தலைமுறைகள் கணிசமாக குறையும் என்றும், எதிர்காலத்தில் பல விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அஞ்சப்படுகிறது.

    அதாவது பெரியவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டி இருக்கும். ஆள் இல்லாத வீடுகள் அதிகரிக்கக்கூடும்.

    இது போன்ற பல விளைவுகளை கேரளா சந்திக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தை பிறப்பு மற்றும் அதன் அவசியம் குறித்து இளைஞர்களின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×