search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகத்தில் பரபரப்பு: தேர்தல் முடிவுக்கு முன்பே காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு போட்டா போட்டி
    X

    கர்நாடகத்தில் பரபரப்பு: தேர்தல் முடிவுக்கு முன்பே காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு போட்டா போட்டி

    • தேர்தல் பிரசாரத்தின் போது சித்தராமையா தான் முதல்-மந்திரி ஆவேன் என கூறி வாக்கு சேகரித்தார்.
    • சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவிக்கு பனிப்போர் நீடித்து வருகிறது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில் காங்கிரஸ் கூடுதல் இடங்களை கைப்பற்றலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இன்று சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு போட்டா போட்டி எழுந்துள்ளது. ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா, தான் முதல்-மந்திரி ஆவேன் என கூறி வாக்கு சேகரித்தார். அதுபோல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான டி.கே.சிவக்குமாரும், மண்டியா, மைசூரு மாவட்டங்களில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில், ஒக்கலிக சமுதாய மக்கள் தேவகவுடாவை முதல்-மந்திரியாகவும், பிரதமராகவும் ஆக்கினீர்கள். அதுபோல் அவரது மகன் குமாரசாமியையும் முதல்-மந்திரி ஆக்கினீர்கள். எனவே இந்த முறை என்னை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்று கூறி அனல் பறக்கவிட்டார். இவ்வாறு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவிக்கு பனிப்போர் நீடித்து வருகிறது.

    ஆனால் காங்கிரஸ் மேலிடம், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கும் நபரை முதல்-மந்திரி ஆக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்ற கோஷமும் எழுந்துள்ளது. அதாவது முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. மற்றொரு தலித் சமுதாய தலைவரான அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் வழங்கவும் அந்த சமுதாயத்தினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில், கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும், அடுத்த முதல்-மந்திரி அவர் தான் எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் சித்தாபுரா பகுதிகளில் நேற்று விளம்பர பேனர்களை வைத்து, காங்கிரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதே வேளையில் ஏற்கனவே காங்கிரஸ் செயல் தலைவரும், லிங்காயத் சமுதாய தலைவருமான எம்.பி.பட்டீல் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் தானும் இருப்பதாக கூறியுள்ளார்.

    அதுபோல் 91 வயதான காங்கிரஸ் மூத்த தலைவருமான சாமனூர் சிவசங்கரப்பாவும் நேற்று முன்தினம் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் முடிவு இன்று வெளியாகும் நிலையில் காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு தலைவர்கள் இடையே போட்டா போட்டி எழுந்துள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×