search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரபிரதேசத்தில் 2 தலித் சகோதரிகளை கற்பழித்து கொன்று தூக்கில் தொங்க விட்ட கொடுமை
    X

    உத்தரபிரதேசத்தில் 2 தலித் சகோதரிகளை கற்பழித்து கொன்று தூக்கில் தொங்க விட்ட கொடுமை

    • கொல்லப்பட்ட 2 சிறுமிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை நடந்தது.
    • இவ்வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    லக்னோ :

    உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டம் நிகாசன் பகுதியில், இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்ட 2 சிறுமிகளும் உடன் பிறந்தவர்கள். தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

    அவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவன் சோட்டு. அவன், 2 சிறுமிகளையும் தன்னுடைய நண்பர்களான ஜுனைத், சுஹைல், ஹபிசுரமான் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.

    அந்த பழக்கத்தின் அடிப்படையில், நேற்று முன்தினம் அந்த சகோதரிகளை சந்திப்பதற்காக ஜுனைத், சுஹைல், ஹபிசுரமான் ஆகியோர் சென்றனர். பின்னர், மோட்டார் சைக்கிளில் சவாரி செய்யலாம் என்று 2 சிறுமிகளையும் அழைத்து சென்றனர்.

    அங்குள்ள ஒரு கரும்பு தோட்டத்துக்கு 2 சிறுமிகளையும் கூட்டிச் சென்றனர். அங்கு வைத்து 2 பேரையும் அவர்களது விருப்பத்துக்கு மாறாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    பின்னர், தங்களை திருமணம் செய்து கொள்ளுமாறு 2 சிறுமிகளும் வற்புறுத்தினர். அவர்கள் மீண்டும் மீண்டும் நிர்பந்தம் செய்ததால் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் துண்டால் கழுத்தை நெரித்து 2 சிறுமிகளையும் கொலை செய்தனர்.

    பின்னர், தங்கள் நண்பர்களான கரீமுதின், ஆரிப் ஆகியோரை செல்போனில் பேசி வரவழைத்தனர். அவர்களின் உதவியுடன் 2 சிறுமிகளின் உடல்களை அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்க விட்டனர். பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்குவதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமிகளின் குடும்பத்தினரும், கிராம மக்களும் போராட்டத்தில் குதித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் சுமன் சம்பவ இடத்துக்கு வந்தார். குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்தார்.

    சிறுமிகளின் தாயார் அளித்த புகாரின்பேரில், சோட்டு உள்பட 6 பேர் மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம், போக்சோ ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    நேற்று முன்தினம் இரவு 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஜுனைத்தும், மற்றொருவனும் தலைமறைவாக இருந்தனர்.

    இந்தநிலையில், நேற்று அவர்கள் போலீசாரின் கண்ணில் பட்டனர். போலீசார் லேசான துப்பாக்கி சூடு நடத்தி 2 பேரையும் கைது செய்தனர். இதில், ஜுனைத்தின் காலில் குண்டு காயம் ஏற்பட்டது.

    இவ்வழக்கில், ஜுனைத், சுஹைல், ஹபிசுரமான், ஆரிப், கரீமுதின், சோட்டு ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கொல்லப்பட்ட 2 சிறுமிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை நடந்தது. அக்காட்சி, வீடியோ படமாக எடுக்கப்பட்டது.

    கடந்த 2011-ம் ஆண்டு, ஒரு சிறுமியின் உடல், நிகாசன் போலீஸ் நிலையத்துக்கு உள்ளே ஒரு மரத்தில் தொங்கியபடி கிடந்தது. அந்த சம்பவத்தை நினைவுபடுத்துவதுபோல், தலித் சிறுமிகள் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் அமைந்து இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் சுமன் தெரிவித்தார்.

    Next Story
    ×