என் மலர்
இந்தியா
- சித்தராமையா டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.
- அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியானது.
கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவியை பெற சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை சித்தராமையாவை முதல்-மந்திரியாகவும், டி.கே. சிவகுமாரை துணை முதல்-மந்திரியாவும் அறிவித்தது.
இதையடுத்து சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார் என்றும் அடுத்த 2½ ஆண்டுகள் டி.கே. சிவகுமார் முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது. இந்த மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு முதலமைச்சர் பதவிக்காலம் முடிவடைகிறது.
இதனால் டி.கே. சிவக்குமார் கர்நாடக முதலமைச்சராவார் என சில காங்கிரஸ் தலைவர்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தொடர்ந்து நான்தான் முதல்வராக இருப்பேன். மாற்றம் செய்வது குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என சித்தராமையா தெரிவித்தார்.
நேற்று சித்தராமையா டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்தார். பீகார் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதேவேளையில் அமைச்சரவையை மாற்றம் செய்து கொள்ள அனுமதி அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மாற்றம் தொடர்பாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா கூறியதாவது:-
அமைச்சரவை மாற்றம் குறித்து சித்தராமையா மற்றும் அகில இந்திய தலைமை முடிவு செய்யும். அகில இந்திய தலைமை அமைச்சரவையை மாற்றி அமைக்க அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஊடகங்கள் இதைத்தான் சொல்கின்றன, இந்த விஷயம் இப்போது வெளிப்படையாகி வருகிறது. பொதுவாக, அமைச்சரவை மாற்றம் நடைபெறும் போது தலைமை மாற்றங்கள் ஏற்படாது.
அமைச்சரவை மாற்றத்திற்கான அனுமதி பெற்ற பிறகு சித்தராமையா மற்றும் உயர்மட்டக்குழு முடிவு செய்யும். இதில் எனக்கு மிகப்பெரிய பிரச்சினை ஏதும் இல்லை.
இவ்வாறு பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.
- புதிதாக களம் கண்ட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் எந்த இடத்திலும் வெற்றி பெறாமல் டெபாசிட் இழக்கும் நிலைக்கு ஆளானது.
- பீகாரின் பொதுக் கடன் தற்போது ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ளது. தினசரி வட்டி சுமை ரூ.63 கோடியாக உள்ளது.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளை கைப்பற்றி பாஜகவின் -ஜேடியுவின் என்டிஏ கூட்டணி பெரு வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி 35 இடங்கள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தது.
இதற்கிடையே புதிதாக களம் கண்ட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் எந்த இடத்திலும் வெற்றி பெறாமல் டெபாசிட் இழக்கும் நிலைக்கு ஆளானது.
இதற்கிடையே தேர்தலுக்கு முன் என்டிஏ அரசு சுமார் ஒன்றரை கோடி பீகார் பெண்களின் வங்கிக்கணக்கில் தொழில் தொடங்கும் நிதிக்கான முன்பணம் என்ற பெயரில் ரூ.10,000 டெபாசிட் செய்ததே அக்கூட்டணியில் வெற்றிக்கு காரணம் என ஜன் சுராஜ் குற்றம்சாட்டியது.
இந்நிலையில் இன்று, ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் செய்தி தொடர்பாளர் உதய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பீகாரின் பொதுக் கடன் தற்போது ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ளது. தினசரி வட்டி சுமை ரூ.63 கோடியாக உள்ளது. அரசு கஜானா காலியாக இருக்கிறது. பொதுப் பணத்தைப் பயன்படுத்தி, அவர்கள் மக்களின் ஓட்டுக்களை வாங்கினார்கள்.
ஜூன் மாதம் முதல் தேர்தல் அறிவிப்பு வரையில் மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக நிதிஷ் குமார் அரசால் ரூ.40 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரம் பணம், உலக வங்கியிலிருந்து வேறு சில திட்டங்களுக்காக வந்த ரூ.21,000 கோடியிலிருந்து வழங்கப்பட்டது.
தேர்தல் ஒழுக்க நெறிகள் அமலுக்கு வருவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாகத்தான் ரூ. 21,000 கோடியில் ரூ.14,000 கோடி எடுக்கப்பட்டு, 1.25 கோடி பெண்களுக்கு ரூ. 10,000 தொகை விநியோகிக்கப்பட்டது. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பொது நலனுக்காக செலவிட இப்போது பணம் இல்லை" என்று கூறினார்.
- மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உத்தரபிரதேசத்தில் கல் குவாரி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
சோன்பத்ரா மாவட்டத்தில் ஓப்ராவில் உள்ள கிராமத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் இன்று இந்த விபத்து நடந்துள்ளது.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இடிபாடுகளுக்கு அடியில் ஒரு தொழிலாளியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
- உங்களைப் போன்ற திறமையற்ற ஆளுநர், பாஜகவின் ஊழியர், தொடரும் வரை, மேற்கு வங்கத்தில் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை.
- ஆளுநரிடம் ராஜ்பவனில் பாஜக குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை அம்மாநில ஆளுநர் ஆனந்தா போஸ் அண்மையில் ஆதரித்து பேசியிருந்தார்.
இது முறைகேடுகளை நீக்கி, தேர்தல் முறையில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், பீகார் தேர்தல்கள் SIR-க்கு பரந்த அளவிலான மக்கள் அங்கீகாரத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து ஆளுநர் ஆனந்தா போஸை விமர்சித்த ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற எம்.பி கல்யாண் பானர்ஜி, "முதலில், ஆளுநரிடம் ராஜ்பவனில் பாஜக குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். அவர் குற்றவாளிகளை அங்கேயே வைத்திருக்கிறார்.
அவர்களுக்கு துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை வழங்குகிறார். திரிணாமுல் தொண்டர்களை தாக்கச் சொல்கிறார். முதலில் இதை அவர் நிறுத்தட்டும். உங்களைப் போன்ற திறமையற்ற ஆளுநர், பாஜகவின் ஊழியர், தொடரும் வரை, மேற்கு வங்கத்தில் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை" என்று கூறினார்.
ராஜ்பவனில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருப்பதாக கூறும் எம்.பி மாநில காவல்துறை மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறாரா, கல்யாண் பானர்ஜி, பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு ராஜ்பவன் திறந்திருக்கும். அனைவரும் வந்து பார்க்க வரவேற்கப்படுகிறார்கள் என்று ஆளுநர் ஆனந்தா போஸ் தெரிவித்தார்.
இதற்கிடையே ஆளுநர் மாளிகையில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் இருப்பதாக கல்யாண் பேனர்ஜி கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுநர் மாளிகையான ராஜபவன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- சிட்-அப்கள் செய்து முடித்த சிறிது நேரத்திலேயே கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது.
- குழந்தையால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் தாலுகாவில் பள்ளிக்கு தாமதமாக வந்ததற்காக தண்டனையாக 100 முறை சிட்-அப் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதால் 13 வயது சிறுமி உயிரிழந்தார்.
கடந்த வாரம், ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியின் மாணவி அன்ஷிகா கவுட்-க்கு, பள்ளிப் பையுடன் 100 முறை சிட்-அப்கள் செய்து முடித்த சிறிது நேரத்திலேயே கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது.
மாலை வீடு திரும்பியபோது சிறுமியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் பெற்றோர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நிலைமை மேலும் மோசமடைந்து சிறுமி மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஒரு வாரமாக சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் பலனளிக்காமல் நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
தண்டனைக்குப் பிறகு, தங்கள் மகளின் கழுத்து மற்றும் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டதாகவும், குழந்தையால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்த காவல்துறை, பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
அன்ஷிகாவின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக வட்டார கல்வி அதிகாரி பாண்டுரங் கலங்கே தெரிவித்தார்.
- நாளைமுதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை, வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும்.
- மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு 60 நாட்கள் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் விரதத்தை கடைபிடிப்பார்கள். பிறகு இருமுடி கட்டியபடி சபரிமலைக்கு வந்து ஐயப்பனை பயபக்தியுடன் தரிசனம் செய்வார்கள்.
அந்த வகையில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. பக்தர்கள் சரண கோஷங்கள் முழங்க தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
நாளைமுதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை, வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும். கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி தலைமையில் தினசரி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து காலை 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.
நடப்பு சீசனையொட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.
- அடர்ந்த காட்டில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
- 2025 இல் மட்டும் 357 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் மூன்று மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
சுக்மா காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான், "மாவோயிஸ்டுகள் இருப்பது குறித்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அடர்ந்த காட்டில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. துப்பாக்கிச் சண்டையில் இதுவரை மூன்று மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்கின்றனர்" என்றார்.
2025 இல் மட்டும் 357 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளை அழிக்க 2026 மார்ச் மாதத்தை இலக்காக த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிர்ணயித்துள்ளார்.
- இந்துக்களும் நக்சல்களாக உள்ளனர். பஞ்சாபில் பல இந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- எந்த மத வேதமும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஊக்குவிக்கவில்லை.
டெல்லி கடந்த திங்கள்கிழமை நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு பரவிய வதந்திகளுக்கு மத்தியில், செவ்வாய்க்கிழமை உத்தரப் பிரதேச மாநிலம் தியோபந்த் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் நரேந்திர குமார் சர்மா ஒரு கூட்டத்தை கூட்டினார்.
கூட்டத்தில் பேசிய இன்ஸ்பெக்டர் நரேந்திர குமார் சர்மா, "மக்கள் நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்றார். சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை மக்கள் நம்பக்கூடாது.
பயங்கரவாதத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் மதம் இல்லை. முஸ்லிம்கள் மட்டுமே பயங்கரவாதிகள் என்று நினைப்பது தவறு. இதுபோன்றவர்கள் எல்லா மதங்களிலும் உள்ளனர்.
இந்து சமூகத்தை சேர்ந்தவர்களும் நக்சல்களாக உள்ளனர். கடற்படையில் பல பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளனர். ராணுவத்திலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாபில் பல இந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் மட்டுமே பயங்கரவாதிகள் என்று சொல்வது தவறு. எந்த மத வேதமும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஊக்குவிக்கவில்லை.
இந்த நாற்காலி எனக்கு தாய் போன்றது. நான் 34 ஆண்டுகளாக பாகுபாடு இல்லாமல் பணியாற்றி வருகிறேன்.
மாணவனாக இருந்தபோது நான் கண்டு வியந்த போலீஸ் அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் காவல் துறையில் சேர்ந்தேன்." என்று பேசினார்.
மேலும் காவல் நிலையத்திற்குள் ஏழைகள் சுரண்டப்படும் போக்கு நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நரேந்திர குமார் இவ்வாறு பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர் களப் பணியில்(Field of duty) இருந்து நீக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும்.
- பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
பாட்னா:
243 உறுப்பினா்களை கொண்ட பீகாா் சட்டசபைக்கு நடைபெற்ற தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
இந்த கூட்டணியில் 89 இடங்களுடன் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய ஜனதா தளத்துக்கு 85 தொகுதிகளும், லோக் ஜனசக்திக்கு (ராம் விலாஸ் பஸ்வான்) 19 இடங்களும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 5 தொகுதிகளும், ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவுக்கு 4 இடங்களும் கிடைத்தன.
ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளின் 'இந்தியா' கூட்ட ணிக்கு பலத்த அடி விழுந்தது. இந்த கூட்டணியால் 34 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. ராஷ்டிரிய ஜனதாதளம் 25, காங்கிரஸ்-6, மார்க்சிஸ்டு லெனினிஸ்டு-2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-1 இடங்களை கைப்பற்றின.
தனித்து போட்டியிட்ட ஒவைசி கட்சி 5 இடங்களிலும் பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியிலும், ஐ.ஐ.பி. ஒரு இடத்தையும் பிடித்தன.
தேர்தலில் பா.ஜ.க.வைச் சோ்ந்த துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுத்திரி, விஜய் குமாா் சின்கா உள்பட மாநில மந்திரிகள் 25 போ் (பா.ஜ.க. 15, ஐக்கிய ஜனதா தளம் 10) மீண்டும் போட்டியிட்டனா். இவா்களில், ஐக்கிய ஜனதா தளத்தின் சுமித்குமாா் சிங் தவிர மற்ற அனைவரும் வெற்றி பெற்றனா்.
இதற்கிடையே பீகாரில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் டெல்லியிலும், பாட்னாவிலும் பேச்சுவார்த்தையை தொடங்கின. பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாரை அவரது இல்லத்தில் சிராக் பஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
ஐக்கிய ஜனதா தள செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
நிதிஷ்குமாரை மீண்டும் முதல்-மந்திரியாக்க பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சம்மதித்துள்ளன. இதுகுறித்து அமித்ஷா கூறும்போது, "பீகார் மக்கள் நல்ல ஆட்சி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து இருக்கிறார்கள். மாநில மக்கள் நிதிஷ்குமார் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளனர்" என்றார்.
புதிய ஆட்சி அமைப்பதற்கு ஏதுவாக நிதிஷ்குமார் நாளை முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன் பிறகு ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கப்படுவார். அதை தொடர்ந்து புதிய ஆட்சி அமைக்க அவர் கவர்னரை சந்தித்து உரிமை கோருவார்.
நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக பதவியேற்கும் விழா புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நடைபெறும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் ஒருவர் தெரிவித்தார். 19-ந்தேதி சர்வ அமாவாசை (நல்ல நாள்) என்பதால் அன்றே அவர் பதவி ஏற்கலாம் என்று கூறப்படுகிறது. பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும்.
தற்போது அமைய இருக்கும் புதிய ஆட்சியில் கூட்டணியில் உள்ள மற்ற 3 கட்சிகளும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மந்திரிசபையில் இடம் பெறுவதில் ஆர்வத்துடன் இருப்பதாக லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய மந்திரியுமான சிராக் பஸ்வான் நிதிஷ்குமாரை சந்தித்த பிறகு தெரிவித்தார். கடந்த அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. மட்டுமே இடம் பெற்றன.
பா.ஜ.க.வில் 15 பேரும், ஐக்கிய ஜனதா தளத்தில் 12 பேரும், லோக் ஜனசக்தி கட்சியில் 6 பேரும், இந்துஸ் தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் சார்பில் ஒரு வரும் மந்திரிகள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீகாரில் 10-வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்கிறார்.
முதன்முதலில் அவர் 2000-ம் ஆண்டு மார்ச் 3-ந்தேதி முதல்-மந்திரியாக பதவியேற்றார். இந்த அரசு மெஜாரிட்டி நிரூபிக்க முடியாமல் அடுத்த 7 நாட்களில் கவிழ்ந்தது. ஓராண்டுக்கு பிறகு நடந்த தேர்தலில் ஆர்.ஜே.டி. கட்சி சார்பில் லல்லுவின் மனைவி ராப்ரி தேவி மீண்டும் முதல்-மந்திரி ஆனார். அதன்பிறகு 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று நிதிஷ்குமார் முதல்-மந்திரி ஆனார்.
கடந்த 2010-ம் ஆண்டு நிதிஷ்குமார் 3-வது முறை முதல்-மந்திரி ஆனார். கடைசி 2 ஆட்சியிலும் நிதிஷ்குமாருக்கு பா.ஜ.க. முழு ஆதரவு அளித்தது. பின்னர் 2014-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இருந்து நிதிஷ்குமார் பிரிந்தார். லல்லுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மெகா கூட்டணியில் இணைந்தவர் 2015-ம் ஆண்டு மகத்தான வெற்றி பெற்றார்.
இதில் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு அவர் மெகா கூட்டணியில் இருந்து பிரிந்து மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பினார். 2020-ம் ஆண்டு மறுபடியும் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022-ல் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி
ஆர்.ஜே.டி., காங்கிரசின் மெகா கூட்டணி சார்பில் முதல்-மந்திரியானார்.
இதற்கிடையில் 2024-ம் ஆண்டு மே 24-ந்தேதி முதல் 278 நாட்கள் ஜே.டி.யு. ஆட்சியில் ஜிதன்ராம் மாஞ்சி இடைக்கால முதல்-மந்திரியாக இருந்தார்.
ஜனவரி 2024-ம் ஆண்டு நிதிஷ்குமார் மீண்டும் மெகா கூட்டணியை விட்டு வெளியேறி பா.ஜ.க.வுடன் இணைந்து 9-வது முறையாக முதல்-மந்திரி ஆனார். தற்போது 10-வது முறையாக முதல்-மந்திரி பொறுப்பேற்க உள்ளார்.
- உமரின் கூட்டாளிகளிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
- உமர் சட்ட விரோத நிதிகள் மூலம் ரூ.20 லட்சம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி செங்கோட்டை யில் கடந்த 10-ந்தேதி கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயம் அடைந்தனர். காரில் வெடிபொருட்கள் நிரப்பி தற்கொலை தாக்குதல் நடத்திய டாக்டர் உமர் முகமது பலியானார்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த உமர், அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். பரிதாபாத்தில் இருந்து 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு டெல்லியில் குண்டுவெடிப்பு நடந்தது.
இதற்கிடையே உமரின் கூட்டாளிகளிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. டாக்டர் உமர், டெல்லியில் குண்டுவெடிப்புக்கு ஒரு நாள் முன்பு வரை அரியானாவின் நூஹ் நகரில் வாடகை அறையில் தங்கி இருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.
அப்போது அவர் பல செல்போன்களைப் பயன்படுத்தி உள்ளார் என்று தெரிவித்தனர். அவரது நெருங்கிய கூட்டாளி டாக்டர் முசாம்மில் ஷகீல்லை போலீசார் பிடித்ததை அறிந்ததும் உமர் பரிதாபாத்தில் உள்ள அல்-பலாஹ் மருத்துவக் கல்லூரியை விட்டு வெளியேறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் டெல்லியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு, அல் பலாஹ் பல்கலைக் ழகத்தில் தயாரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புல்வாமாவின் கோய்ல் கிராமத்தில் உள்ள உமரின் வீடு பாதுகாப்பான முறையில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. முழு வீடும் தரைமட்டமானதை அடுத்து, கட்டட இடிபாடுகளில் தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர். இதில் உமர் வெடிபொருட்களை சோதிக்க வீட்டில் ஆய்வகம் வைத்திருந்ததும், டெல்லியில் குண்டுவெடிப்பு நடத்த சோதித்து பார்த்து இருப்பதும் தெரியவந்தது.
டாக்டர் உமர் சட்ட விரோத நிதிகள் மூலம் ரூ.20 லட்சம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பல ஹவாலா வியாபாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் உமர் அரியானாவின் நூஹ் நகரில் உள்ள ஒரு சந்தையில் பணம் கொடுத்து அதிக அளவில் உரங்களை வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் கார் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 9மிமீ தோட்டாக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கண்டு பிடிக்கப்படவில்லை.
பறிமுதல் செய்யப்பட்ட 3 தோட்டாக்களில் ஒன்று மட்டும் வெற்று ஷெல் ஆகும். இந்த 9 மிமீ தோட்டாக்கள் பொதுவாக பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினரால் பயன்படுத்தப்படுகின்றன.
இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த அனைத்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் ஆயுதங்களிலும் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அவர்களின் தோட்டாக்கள் சரியாக இருந்தது.
எனவே குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தோட்டாக்கள் பாதுகாப்பு படையினர், போலீசாருக்கு சொந்தமானவை அல்ல என்பது உறுதியானது. இதையடுத்து இந்த தோட்டாக்கள் யாருடையது? என்றும் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் தோட்டாக்கள் எப்படி வந்தது? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் மேலும் முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. குண்டு வெடிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பரிதாபாத் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பழைய டெல்லி வரை உமரின் பயணத்தின் புதிய தெளிவான படங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
டெல்லி-என்.சி.ஆரில் உள்ள பல மாவட்டங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சோதனைச் சாவடி களில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் இருந்த காட்சிகள் மூலம் இந்த படங்கள் எடுக்கப்பட்டு உள்ளன.
- இந்திய சுதந்திர உணர்வை மக்களிடையே ஊக்குவிக்க பத்திரிகையாளர்கள் பாடுபட்டனர்.
- நவம்பர் 16-ஆம் தேதி இந்திய பத்திரிகை கவுன்சிலால் "தேசிய பத்திரிகை தினம்" கொண்டாடப்படுகிறது.
இன்று தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் (Fourth Pillar of Democracy) என வர்ணிக்கப்படுபவை பத்திரிகைகள் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.
அரசியல், அதிகாரவர்க்கம், நீதித்துறை ஆகியவை பொதுமக்களின் நன்மைக்காக செயல்படும் அமைப்புகள். இவற்றினால் விளையும் நன்மை தீமைகள் குறித்து பொதுமக்கள் அறிவதற்கும், சிந்திக்கவும், ஆலோசிக்கவும் பத்திரிகைகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன.
ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் பல பத்திரிகைகள் மற்றும் அதன் ஆசிரியர்கள் அப்போதைய அரசாங்கத்தால் பெரும் அடக்குமுறையை சந்தித்து வந்தனர். அதையும் மீறி இந்திய சுதந்திர உணர்வை மக்களிடையே ஊக்குவிக்க அவர்கள் பாடுபட்டனர்.
காகித வடிவிலான அச்சு பத்திரிகையிலிருந்து வானொலி, தொலைக்காட்சி என அடுத்த கட்டத்திற்கு சென்ற பத்திரிகைகள், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மின்னணு பேப்பர், டிஜிட்டல் வலைதளங்கள், மென்பொருள் செயலிகள் என நினைத்து பார்க்க முடியாத வடிவங்களை அடைந்திருக்கின்றன.
அடுத்த கட்ட நவீனமயமாக்கலில் இணையதளத்தில் பெருகி வரும் சமூக வலைதளங்களின் மூலம் எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற கருத்து பரிமாற்றம் மற்றும் தகவல் தொடர்பு மேடைகளாகவும் மிகப்பெரும் பரிணாம வளர்ச்சியை பத்திரிகைகள் கண்டுள்ளன.
பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பி.சி.ஐ.) எனப்படும் இந்திய பத்திரிகையாளர் கவுன்சில் நவம்பர் 16, 1966 அன்று உருவாக்கப்பட்டது.
பொறுப்புள்ள, நேர்மையான, சுதந்திரமான, நடுநிலை உள்ள அமைப்பாக பத்திரிகைகள் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 16-ஆம் தேதி இந்திய பத்திரிகை கவுன்சிலால் "தேசிய பத்திரிகை தினம்" கொண்டாடப்படுகிறது.
ஒரு சட்டபூர்வமான அமைப்பாக இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய பத்திரிகை கவுன்சில், பத்திரிகைகள், தங்கள் தொழில் தர்மத்தை கடைபிடித்து, செய்திகளை நெறிப்படுத்தி செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்திலும் தேசிய பத்திரிகை தினத்தை கொண்டாடி வருகிறது.
தேசிய பத்திரிகை தினத்தன்று, நேர்மையாக செய்திகளை மக்களுக்கு தருவதில் தங்கள் உயிரையும் தியாகம் செய்த பல பத்திரிகையாளர்கள் நினைவுகூரப்படுகின்றனர். சிறப்பாக பணியாற்றிய பத்திரிகையாளர்களை பாராட்டி கவுரவிக்கும் விதமாக பல நிகழ்ச்சிகள் இன்று நம் நாட்டில் பல அமைப்புகளால் நடத்தப்படும்.
உலகெங்கிலும் பல நாடுகளில் வன்முறையின்றி, ரத்தம் சிந்தாமல் ஆட்சி மாற்றத்திற்கும் பல புரட்சிகளுக்கும் பத்திரிகைகள் வழிவகுத்தன என்பது பத்திரிகை துறையினர் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க பதிவாகும்.
வருடம் முழுவதும் 24 மணி நேரமும், வெயில், மழை, பனி என பாராமல், ஓய்வின்றி மக்களுக்கு செய்திகளை வழங்க பத்திரிகையாளர்கள் பாடுபடுகின்றனர். உணவு, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை போல் பத்திரிகைகளின் சேவையும் பொதுமக்களுக்கு அவசியமாகி விட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
- சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் 17-ந் தேதி தொடங்கும் நிலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள்.
- பந்தளம், அடூர், பத்தனம்திட்டா, வடசேரிக்கரா ஆகிய இடங்களில் சிறப்பு மருந்தகங்கள் செயல்படும்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 36 பேர் மரணம் அடைந்தனர். இதனால் உயிரிழப்புகள் கேரளாவில் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் 17-ந் தேதி தொடங்கும் நிலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள். அவர்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு, மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீரில் வாழும் ஒரு வகை அமீபாவால், மூளை காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனை மனதில் கொண்டு ஐயப்ப பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும்.
அதே போல் குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும். சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் அவசர இதய சிகிச்சை மையம் செயல்படும். பந்தளம், அடூர், பத்தனம்திட்டா, வடசேரிக்கரா ஆகிய இடங்களில் சிறப்பு மருந்தகங்கள் செயல்படும். ஓட்டல்கள், உணவகங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு சுகாதார அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






