search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 7 மாதம் அவகாசம் வழங்க முடியாது - சுப்ரீம் கோர்ட்

    உள்ளாட்சி தேர்தலுக்கு அவகாசம் அளிப்பது குறித்து புதிய பிரமாண பத்திரத்தை 2 நாளில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டது.

    புதுடெல்லி:

    தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 30-ந் தேதிகளில் தேர்தல் நடந்தது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் 2020-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர்.

    வார்டு மறுவரையறை செய்யாததால் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை.

    காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 9-ந் தேதிகளில் நடக்கிறது.

    இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 7 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 4-ந் தேதி மனுதாக்கல் செய்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வக்கீல் ரோத்தகி ஆஜரானார்.

    கோப்புபடம்

    மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த 7 மாதம் அவகாசம் வழங்க முடியாது என்று உத்தரவிட்டது.

    பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் மற்றும் தேர்தலுக்கான அரசியல் கூட்டங்களை நடத்தும் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை மட்டும் நடத்த முடியாதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 7 மாதம் தேவையில்லை. 4 மாதமே போதுமானது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    தேர்தல் ஆணைய வக்கீல் ரோத்தகி கூறும்போது, “சுப்ரீம் கோர்ட்டு இது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். 7 மாதங்கள் கூட எங்களுக்கு தேவையில்லை. 3 முதல் 4 மாதங்கள் வரை அவகாசம் போதும்” என்றார்.

    இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு அவகாசம் அளிப்பது குறித்து புதிய பிரமாண பத்திரத்தை 2 நாளில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விட்டது.

    மாநில தேர்தல் ஆணையத்தின் பிரமாண பத்திரத்தை பொறுத்து எவ்வளவு காலம் அவகாசம் அளிக்கப்படும் என்பதை சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்யும்.

    இதையும் படியுங்கள்...டாஸ்மாக் பார்கள் விரைவில் மீண்டும் திறப்பு- கட்டுப்பாட்டு விதிகள் தயாராகிறது

    Next Story
    ×