
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125-வது பிறந்தநாள் விழா மேற்குவங்காளத்தில் இன்று அரசு விழாவாக நடைபெற்றது.
அம்மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி, மேற்குவங்காள கவர்னர் ஜெக்தீப் தன்கார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அந்நிகழ்ச்சியில் முதல்மந்திரி மம்தா பானர்ஜி பேசுவதற்காக மேடையில் அமைக்கப்பட்டிருந்த ’மைக்’ அருகே சென்றபோது நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கூடியிருந்தவர்களில் சிலர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என தொடர்ச்சியாக கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியதாவது:-
’ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட்டால் மம்தாவுக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு புரியவில்லை. அவ்வாறு கோஷமிடும்போது மம்தாவுக்கு ஏன் கோபம் வருகிறது?. அவர் (மம்தா) தனது இருக்கையில் இருந்து எழுந்தபோது அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே கோஷங்கள் எழுப்பப்பட்டது என நான் நினைக்கிறேன். கோஷம் எழுப்பியதால் விழா மேடையை விட்டு வெளியேறுவது என்பது அவரின் (மம்தா) விரக்தியை காட்டுகிறது.
என்றார்.