search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ தளபதி நரவனே
    X
    ராணுவ தளபதி நரவனே

    சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து பலமான அச்சுறுத்தலாக உள்ளன - ராணுவ தளபதி நரவனே பேட்டி

    சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவுக்கு பலமான அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளன என்று ராணுவ தளபதி நரவனே கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    ராணுவ தினம் 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ராணுவம் மற்றும் ராணுவம்சாரா துறைகளில் ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. அது களத்திலும் தெரிகிறது. இரு நாடுகளும் இணைந்து இந்தியாவுக்கு பலமான அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டை புறக்கணித்து விட முடியாது.

    இந்த இருமுனை அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா தயாராக வேண்டி உள்ளது.

    பாகிஸ்தானை பொறுத்தவரை, பயங்கரவாதத்தை ஒரு அரசு கொள்கை சாதனமாகவே பயன்படுத்தி வருகிறது. அந்நாட்டின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எந்த நேரத்தில், எந்த இடத்தில் பதிலடி கொடுப்பது என்பதை தீர்மானிக்கும் உரிமை இந்தியாவுக்கு இருக்கிறது.

    கிழக்கு லடாக்கை பொறுத்தவரை, கடந்த ஆண்டு இருந்த நிலவரம்தான் இப்போதும் இருக்கிறது. எந்த மாற்றமும் இல்லை. இந்தியா, சீனா இரு நாடுகளுமே படைகளை குறைக்கவில்லை.

    இருப்பினும், பரஸ்பர, பாதுகாப்பு நலன் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்மூலம், இருதரப்பும் படைகளை விலக்கிக்கொள்ளும் சூழ்நிலை வரும் என்று நம்புகிறோம். பங்காங் ஏரியின் தெற்கு கரையில் இந்திய படைகள் கைப்பற்றிய உயரமான மலை முகடுகளை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வோம்.

    லடாக்கில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள இந்திய படைகள் அதிகபட்ச உஷார்நிலையில் இருக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×