search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
    X
    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

    தாஜ்மகாலை பார்க்க டிரம்ப் ஆசைப்பட்டதால் ஆமதாபாத் நிகழ்ச்சிகள் ரத்து

    சூரியன் மறையும் நேரத்தில் தாஜ்மகாலை பார்க்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆசைப்பட்டதால் ஆமதாபாத் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 2 நாள் பயணமாக வருகிற திங்கட்கிழமை (24-ந்தேதி) இந்தியா வருகிறார்.

    அவர் வரும் “ஏர்வோர்ஸ்” சிறப்பு விமானம் திங்கட்கிழமை மதியம் 11.55 மணிக்கு ஆமதாபாத் வந்து சேரும்.

    ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து அவர் நேரடியாக மோதிரா கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு செல்கிறார். அவர் செல்லும் வழி நெடுக லட்சக்கணக்கானவர்கள் திரண்டு நின்று டிரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு டிரம்ப்புடன் பிரதமர் மோடியும் செல்வார். அங்கு “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதில் டிரம்ப், மோடி இருவரும் சிறப்புரையாற்ற உள்ளனர்.

    குஜராத் பயணத்தின் போது ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி தவிர மோதிரா கிரிக்கெட் ஸ்டேடியத்தை டிரம்ப் திறந்து வைப்பார் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட இந்த ஸ்டேடியம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் என்ற சிறப்பு பெற்றதாகும்.

    ஆனால் தற்போது இந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தின் திறப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே வருகிற 24-ந்தேதி இந்த ஸ்டேடியத்தை டிரம்ப் திறந்து வைக்க மாட்டார்.

    அதே போல் குஜராத்தில் சபர்மதி ஆசிரமத்திற்கும் டிரம்ப் செல்ல திட்டமிட்டிருந்தது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    தாஜ்மகால்

    குஜராத்தில் டிரம்ப்பின் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டதற்கு டிரம்ப்பின் தாஜ்மகால் ஆசைதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. உலகப்புகழ் பெற்ற காதல் சின்னமான ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை சூரியன் மறையும் நேரத்தில் பார்த்தால் மிக சிறப்பாக இருக்கும்.

    இதை கருத்தில் கொண்டு குஜராத் நிகழ்ச்சிகளை ஓரிரு மணி நேரத்துக்குள் முடித்து விட்டு டிரம்ப் ஆக்ரா புறப்பட்டு செல்வார் என்று தெரிய வந்துள்ளது. அங்கு தாஜ்மகால் முழுவதையும் அவர் சுற்றி பார்க்க உள்ளார். இதையடுத்து தாஜ்மகால் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அன்று இரவு டிரம்ப் ஆக்ராவில் இருந்து டெல்லி செல்கிறார். டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் டிரம்ப்புக்கு இரவு விருந்து அளிக்கப்படுகிறது. இதில் இரு நாட்டு உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

    அன்று இரவு டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் டிரம்ப்பும் அவரது மனைவியும் தங்குகிறார்கள். டிரம்ப்புடன் அமெரிக்காவில் இருந்து உயர்மட்ட குழுவும் வருகிறது. அவர்களும் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்கள்.

    மறுநாள் (25-ந்தேதி) செவ்வாய்க்கிழமை காலை பிரதமர் மோடியும், ஜனாதிபதி டிரம்ப்பும் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவு இடத்துக்கு செல்கிறார்கள். அங்கு மகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மலர் தூவி மரியாதை செலுத்துவார்.

    அதன் பிறகு டிரம்ப்- மோடி இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    வர்த்தக பரிவர்த்தனை தொடர்பாக இரு நாடுகளும் இன்னும் தெளிவாக பேசி விட்டு ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளன. எனவே டிரம்ப்பின் 2 நாள் சுற்றுப்பயணத்தில் மிகப்பெரிய ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகாது.

    என்றாலும் இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான உறவை மேம்படுத்துவது குறித்து மோடியும், டிரம்ப்பும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

    இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், “மோடி-டிரம்ப் இருவரும் இரு நாடுகளின் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள், அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்” என்றார்.

    இந்தியாவில் டிரம்ப் சுமார் 36 மணி நேரமே இருப்பார் என்று தெரிய வந்துள்ளது. ஆமதாபாத், ஆக்ரா, டெல்லி ஆகிய 3 நகரங்கள் தவிர அவர் வேறெங்கும் செல்லவில்லை. வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

    எனவே செவ்வாய்க்கிழமை டிரம்ப்புக்கு மோடி மதிய உணவு விருந்து அளிப்பதுடன் டிரம்ப் நிகழ்ச்சிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 36 மணி நேர டிரம்ப் பயணத்துக்காக அமெரிக்காவில் இருந்து 7 விமானங்களில் பாதுகாப்பு கருவிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    Next Story
    ×