search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்
    X
    ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்

    புதிய சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் - ரகுராம் ராஜன் யோசனை

    பொருளாதார மந்தநிலை கவலை அளிக்கிறது. புதிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று ரகுராம் ராஜன் யோசனை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், ஒரு தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்தியாவின் பொருளாதார மந்தநிலை கவலை அளிக்கிறது. பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக குறைந்து விட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இதுதான் குறைந்த அளவாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

    ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், நுகர்வோர் உற்பத்தி நிறுவனங்கள் என எல்லாவற்றிலும் வீழ்ச்சி காணப்படுகிறது. அத்துறையினர் ஊக்கச்சலுகை கேட்கிறார்கள்.

    இந்த நேரத்தில், பொருளாதாரத்தையும், வளர்ச்சி விகிதத்தையும் அதிகரிக்க புதிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். சர்வதேச சந்தையில் கடன் பெறுவது சீர்திருத்தம் அல்ல, அது தந்திர நடவடிக்கை.

    மின்சார துறை, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் பிரச்சினைகளை உடனடியாக களைய வேண்டும். தனியார் துறையினர் முதலீடு செய்வதை தூண்டும்வகையில் சீர்திருத்தம் இருக்க வேண்டும். தற்போதுள்ள கடினமான சூழ்நிலையில், ஊக்கச்சலுகைகள் நீண்டகால பலன் அளிக்காது.

    முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறியதுபோல், நாம் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை அதிகமாக மதிப்பிட்டு விட்டோம். சரியான கண்ணோட்டத்துடன் அதை மதிப்பிட வேண்டும்.

    2008-ம் ஆண்டை போன்ற பெரிய பொருளாதார வீழ்ச்சி, மீண்டும் ஏற்படாது என்று என்னால் கணிக்க முடியாது. ஆனால், அப்படி ஏற்பட்டால், அது வேறு காரணங்களால்தான் ஏற்படும். தற்போதைய பிரச்சினைகளை களைந்தாலும், புதிய பிரச்சினைகள் வருவதை தடுக்க முடியாது.

    இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.
    Next Story
    ×