search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருத்துக்கணிப்பு முடிவு போலவே தேர்தல் முடிவுகள் அமையும் - அருண் ஜெட்லி நம்பிக்கை
    X

    கருத்துக்கணிப்பு முடிவு போலவே தேர்தல் முடிவுகள் அமையும் - அருண் ஜெட்லி நம்பிக்கை

    கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறியநிலையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் துல்லியத்தன்மை, உண்மைத்தன்மை ஆகியவை தொடர்பாக எங்களில் சிலரிடையே சச்சரவு ஏற்படலாம்.

    ஆனால், எண்ணற்ற கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் ஒரே மாதிரி இருக்கும்போது, தேர்தல் முடிவுகளும் அதே மாதிரிதான் இருக்கும். இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எந்த பங்கும் இருக்காது. கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகளும் இருந்தால், இதை வைத்து எதிர்க்கட்சிகள் செய்த பிரச்சினையும் தோல்வி அடையும்.

    2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுடன் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை சேர்த்து பார்த்தால், இந்திய ஜனநாயகம் நன்றாக முதிர்ச்சி அடைந்திருப்பது தெளிவாகும்.

    யாருக்கு ஓட்டு போடுவது என்று முடிவு செய்வதற்கு முன்பு, தேசநலனை வாக்காளர்கள் முக்கியமாக கருதி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. சிந்தனை திறனுள்ள மக்கள் ஒரே மாதிரியாக வாக்களிக்கும்போது, அது அலையை உருவாக்குகிறது.

    காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி குடும்பம் ஒரு சுமையாக ஆகிவிட்டது. இனிமேல், அந்த குடும்பம், காங்கிரசுக்கு ஒரு சொத்தாக இருக்காது. கழுத்தை பிடித்த ‘அல்பட்ராஸ்’ பறவையாக இருக்கும். அந்த குடும்பம் இல்லாவிட்டால், கூட்டம் சேராது. அந்த குடும்பம் இருந்தால், ஓட்டு கிடைக்காது.

    பிரதமர் மோடிக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல், 2014-ம் ஆண்டு தேர்தலிலும் எடுபடவில்லை. இந்த தேர்தலிலும் எடுபடவில்லை.

    தலைவர்கள் தகுதி அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறார்கள். சாதி அல்லது குடும்ப பின்னணி அடிப்படையில் அல்ல. பிரதமர் மோடியின் செயல்பாடு சார்ந்த விஷயங்கள், வாக்காளர்களிடம் ஆதரவை பெற்றுள்ளன. அவர்கள் எதிர்க் கட்சி கூட்டணியை நம்ப தயாராக இல்லை.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

    பா.ஜனதாவைச் சேர்ந்த குஜராத் மாநில துணை முதல்-மந்திரி நிதின் பட்டேல் கூறியதாவது:-

    மோடியை மீண்டும் பதவியில் அமர்த்துவது என்று தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனே மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இது எல்லா கருத்துக்கணிப்புகளிலும் தெளிவாக தெரிகிறது. இருப்பினும், கருத்துக்கணிப்பில் கூறியதை விட அதிக தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×