search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயணிகள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதாக புகார்: 4 ரெயில்களை நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் சோதனை
    X

    பயணிகள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதாக புகார்: 4 ரெயில்களை நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் சோதனை

    திருப்பதி வழியாக வந்து செல்லும் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணிகள் பயணம் செய்வதாக வந்த புகாரின் பேரில் 4 ரெயில்களை நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.1.22 லட்சம் வசூலிக்கப்பட்டது.
    திருப்பதி:

    திருப்பதி வழியாக வந்து செல்லும் பல்வேறு ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணிகள் பலர் பயணம் செய்வதாக புகார்கள் வந்தன. ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வோரை கண்டு பிடித்து, அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க ரெயில்வே அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

    அதன்படி, தெற்கு மத்திய ரெயில்வே முதன்மை வணிக மேலாளர் குணசேகர் தலைமையில், 30 டிக்கெட் பரிசோதகர்கள், 12 ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்களை கொண்ட குழுவினர் திருப்பதியில் இருந்து அரசு பஸ் மூலம் வந்து திருப்பதியை அடுத்த பனப்பாக்கம் பகுதியில் இறங்கி, அந்த ஊர் வழியாக சென்ற ரெயில்களை நடுவழியில் நிறுத்தி அதிரடிச் சோதனை நடத்தினர். அந்த வழியாக திருப்பதியில் இருந்து கர்நாடகத்துக்கு சென்ற அமராவதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில், திருப்பதியில் இருந்து காட்பாடியை நோக்கி சென்ற பாசஞ்சர் ரெயில் ஆகியவற்றை நடுவழியில் நிறுத்தி சோதனை நடத்தினர்.

    மேலும் காட்பாடியில் இருந்து திருப்பதியை நோக்கி வந்த பாசஞ்சர் ரெயிலை சந்திரகிரி ரெயில் நிலையத்திலும், புதுச்சேரியில் இருந்து திருப்பதியை நோக்கி வந்த ரெயிலை புத்தூரை அடுத்த பூடி ரெயில் நிலையத்திலும் நிறுத்தி அதிகாரிகள் அதிரடிச்சோதனை நடத்தினர். அப்போது மேற்கண்ட ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் ஏராளமானோர் பயணம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த பயணிகள், அனுமதியின்றி திண்பண்டங்கள் விற்றவர்களிமிருந்து ரூ.200 முதல், ரூ.1000 வரை அபராதமம் விதிக்கப்பட்டது. இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.

    இந்தச் சோதனை முடிந்ததும், திருப்பதி ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் ரெயில்வே அதிகாரிகள் ராகேஷ்குமார், டி.வி.ராவ் மற்றும் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசலு, பிரபாகர், திருப்பதி ரெயில் நிலைய லைசன் அதிகாரி சத்தியநாராயணா, திருப்பதி ரெயில் நிலைய அதிகாரி மித்ராசுபோக் மற்றும் அதிகாரிகள் சிவபிரசாத்ரெட்டி, ஆசிர்வாதம், வெங்கடேஷ்வர்லு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பதி வழியாக தினமும் 60 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் பயணிகள், பக்தர்கள் ரெயில்கள் மூலமாக வந்து செல்கின்றனர். திருப்பதி ரெயில் நிலையத்தில் அனைத்து மொழிகளிலும் ரெயில்களின் எண், செல்லும் ஊர்கள், வந்து செல்லும் நேர விவரம் உள்ளிட்ட தகவல்களை விளம்பரம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. கூடுதலாக டிக்கெட் கவுண்ட்டர்கள் தொடங்கப்பட உள்ளன.

    டிக்கெட் இன்றி பிடிபடுபவர்கள், பயணிகளுக்கு இடையூறாக அனுமதியின்றி திண்பண்டங்கள் விற்று பிடிபவர்களுக்கு இனி அபராதத்துடன் 15 முதல் 30 நாட்கள் வரை ஜெயில் தண்டனை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையம் எதிரே கூடுதலாக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு, பயணிகளை ஏற்றிச்செல்ல மாநில அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×