என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறியுள்ளார்.

    திருச்சி:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி தொகுதி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதுகுறித்து அ.தி.மு.க.வை சேர்ந்த ஒரு எம்.பி.யை தவிர தமிழ்நாட்டில் இருந்து சென்ற மற்ற எம்.பி.க்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் பேசினோம். இக்கட்டான இந்த சூழலை சமாளிக்க தமிழ் நாட்டுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என நான் கூட மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தேன். அதே போல துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், டெல்லி சென்று குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக ரூ.1000 கோடி நிதி கேட்டிருந்தார்.

    இந்த நிலையில் தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சமே இல்லை என அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் குமார் பாராளுமன்றத்தில் கூறியதுதவறு. அவர் அளித்த தகவல்களும் தவறானவை. முதல் முறையாக பாராளுமன்றம் வந்துள்ளார். அடுத்தடுத்து பேசும்போது, இதுபோன்ற தவறுகளை அவர் திருத்திக் கொள்ள வேண்டும்.

    நீதிபதிகள் நியமனம், அரசியலுக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதில் மத்திய மாநில அரசுகள் தலையிடக்கூடாது. ஒரே நாடு, ஒரே ரே‌ஷன்கார்டு திட்டம் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. அ.ம.மு.க. என்ற கட்சி கடந்த தேர்தலுடன் முடிந்து விட்டது. அதில் இருந்து தங்க தமிழ் செல்வன் விலகி தி.மு.க.வில் சேர்ந்துள்ளார். அவர் வாழ்க, வளர்க.

    இந்தியாவில் நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. அவ்வாறு இணைத்தால் மகிழ்ச்சி. திருச்சி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் பேசியுள்ளேன். நான் ஏற்கனவே எம்.பி. யாக இருந்தபோது புதுக்கோட்டை நகராட்சிக்கு குடிநீர் லாரி வாங்கி கொடுத்தேன். தற்போது அது பயன் பட்டு வருகிறது. அதுபோல, இப்போதும் திருச்சி மாநகராட்சி, புதுகை நகராட்சிக்கு குடிநீர் லாரிகளை வாங்கி கொடுக்கலாம் என திட்ட மிட்டுள்ளேன்.

    உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும் என கே.என்.நேரு பேசியது அவருடைய சொந்த கருத்து. கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான இடங்கள் பங்கீடு குறித்து கட்சிகளின் தலைமைகள் தான் பேசி முடிவு செய்யும்.

    உள்ளாட்சி, சட்டப் பேரவை தேர்தல்களிலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும். ஆனால் தோற்றுவிடுவோம் என்ற பயம் இருப்பதால் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்துமா? என்பது சந்தேகமே. பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றேன் என்று நான் எங்கும் கூறவில்லை. என்னுடைய வெற்றிக்கு தி.மு.க- காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கு பங்கு உண்டு.


    நாங்குநேரி தொகுதியில் ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததால், இடைத்தேர்தலிலும் அங்கு காங்கிரஸ் போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம். வேலூர் பாராளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் வர வாய்ப்புள்ளது. இவற்றில் ஒரு வேளை தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் அவருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க.வில் தற்போது நிர்வாகிகளுக்கு பஞ்சம் இருப்பதால் அ.ம.மு.க.வில் இருந்து விலகியவர்களை சேர்த்துக் கொள்கின்றனர் என்று தினகரன் கூறியுள்ளார்.
    மதுரை:

    அ.ம.மு.க.வில் தினகரனின் வலதுகரம் போல் செயல்பட்ட தங்கதமிழ் செல்வன் திடீரென மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் சேர்ந்தார்.

    தங்கதமிழ்ச்செல்வனின் இந்த திடீர் முடிவு காரணமாக தேனி மாவட்ட அ.ம. மு.க.வினர் அவர் பக்கம் செல்வதை தடுக்க தினகரன் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

    இதற்காக தஞ்சையில் இருந்து நேற்று காலை தினகரன் மதுரை வந்தார். மதுரை ரிங் ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள அவர் தேனி மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    மேலும் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக யாரை நியமிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது குடிநீர் பிரச்சினை பூதாகரமாக நிலவி வருகிறது. இதில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை. இந்த பிரச்சினையை திசை திருப்ப அ.ம.மு.க.வில் இருந்து வெளியேறுபவர்கள் குறித்து பெரிதுப்படுத்தி வருகின்றனர்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்திலும் கட்சியில் இருந்து சில நிர்வாகிகள் விலகியுள்ளனர். ஆனால் தற்போது அ.ம.மு.க.வில் இருந்து நிர்வாகிகள் விலகி இருப்பதை பெரிய விசயமாக்கி வருகின்றனர்.

    பாராளுமன்றத்தில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திர நாத்குமார் குடிநீர் பிரச்சினை இல்லை என பேசியுள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

    அ.ம.மு.க.வில் இருந்து விலகிய சிலர், அ.தி.மு.க. விற்கு சென்றுள்ளனர். ஆட்சியில் இருப்பதால் பயனடைவதற்காக அங்கு சென்றிருக்கலாம். அவர்களை பற்றி கவலை இல்லை. நிர்வாகி கள்தான் கட்சியை விட்டு சென்றுள்ளனர். ஆனால் தொண்டர்கள் அ.ம.மு.க.வில்தான் உள்ளனர். சிலர் சென்றதால், அ.ம.மு.க. பலவீனம் அடையாது.

    தங்க தமிழ்செல்வன் எதற்காக எங்களுடன் வந்தார் என இதுவரை தெரியவில்லை. அவர் எடப்பாடி பக்கமே இருந்திருக்கலாம். எங்களுடன் 18 எம்.எல்.ஏ.க் கள் வந்தனர். யாருக்கும் பதவி போய்விட்டால் சிறிது வருத்தம் இருக்கும். அவர்கள் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டதற்கு எம்.எல்.ஏ. பதவி போனது தான் காரணம் என தங்க தமிழ்செல்வன் கூறி கொச்சைப்படுத்தி வருகிறார்.

    எம்.எல்.ஏ.வாக இல்லா விட்டால் வறுமையில் வாடி விடுவார்களா? யாருக்கும் பதவி போனால் சிறிது வருத்தம் இருக்கும். எங்களை பொறுத்தவரை தங்க தமிழ்செல்வனை தவிர, வேறு யாருக்கும் வருத்தம் இல்லை.

    நான் இங்கு வந்தபோது தேனி நிர்வாகிகள் சந்தித்து பேச வேண்டும் என்றனர். இதனால் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அவர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர் இப்போது என்னுடன் இருப்பவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். யார் அழைத்தாலும் செல்லலாம். ஆனால் அவர்கள் அப்படி செல்ல மாட்டார்கள்.

    தங்க தமிழ்செல்வனை கொள்கைபரப்பு செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்தவர் செந்தில் பாலாஜி. கடந்த 6 மாத காலமாக தங்க தமிழ்செல்வனின் நடத்தை சரியில்லை. அ.தி.மு.க. - தி.மு.க. இரு தரப்பிலும் பேசினார். ஆனால் அவரை அ.தி.மு.க.வில் சேர்க்க ஓ.பி.எஸ். தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால், தி.மு.க.வில் சேர்ந்துள்ளார்.

    தி.மு.க.வில் தற்போது நிர்வாகிகளுக்கு பஞ்சம் இருப்பதால் அ.ம.மு.க.வில் இருந்து விலகியவர்களை சேர்த்துக் கொள்கின்றனர். டெல்லியில் இருப்பவர்களை கண்டு பயம் அடைந்ததால்தான் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தி.மு.க. திரும்ப பெற்றுள்ளது.

    அவர் எங்கு போய் சேர வேண்டுமோ, அங்கு சென்று விட்டார். அவரை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    37 எம்.பி.க்களின் பாராளுமன்ற செயல்பாடு பற்றி மு.க.ஸ்டாலின் சொடக்கு போட்டு மிரட்டல் விட்டதற்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திண்டுக்கல்லில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 37 பாராளுமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்றத்தில் என்ன செய்ய போகிறார்கள்? பாருங்கள் என்பதை கையால் ‘சொடக்கு’ போட்டு மிரட்டல் விட்டதை பார்த்தோம். பாராளுமன்றம் நடக்கும்போது பல இருக்கைகள் காலியாக விட்டு விட்டு தி.மு.க. எம்.பி.க்கள் ஒவ்வொருவராக சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது போன்று படம் பிடித்து இங்கே அதை குடும்பத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி ஏதோ பெரிய சாதனைகளை நிகழ்த்தி விட்டதாக காட்டிக்கொள்கிறார்கள்.


    பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மை நிலையை விளக்கவேண்டியது எங்கள் கடமை...

    பெரும்பான்மையான பாரத தேச மக்கள் வாக்களித்து மீண்டும் மோடி அரசு அரியணை ஏற்றிருக்கும் சூழலில் துர்திர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில் மட்டும் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறாத சூழ்நிலையில் நமது மாநிலத்திற்கு மத்திய அமைச்சர் யாருமில்லையே என்பதே உண்மை நிலை.

    சென்ற முறை தமிழ் நாட்டின் பிரதிநிதியாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமாரி தொகுதிக்கு மட்டும் 40 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மக்கள் நல திட்டங்களையும் தமிழகம் முழுவதும் பல லட்சம் கோடி மதிப்பில் சாலை பணிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நலப்பணிகள் பல நடைபெற்றும் பல ஆண்டுகளாக பேசப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, சென்னையில் மருத்துவ பூங்கா மையம் இவையெல்லாம் வழங்கியபோதும், இந்த முறை ஒரு பா.ஜனதா உறுப்பினரை கூட தேர்ந் தெடுக்கவில்லையே என்ற ஆதங்கம் எங்களுக்கு உண்டு. அதனால்தான் தமிழகம் இழந்ததை சுட்டிக்காட்ட வேண்டியது எங்கள் ஜன நாயக கடமை. அதே வேளையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி போல் மோடி அரசுக்கு தானே வாக்களித்தீர்கள் அவரை கேளுங்கள் என்று அநாகரிகமாக பேசாமல் தமிழகம் மத்திய அரசு ஜனநாயக ரீதியாக பங்கு பெறாததால் ஆளும் அரசில் தமிழக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பங்குபெற முடியாமல் இருப்பதுதான் உண்மை நிலை.

    எல்லோருக்கும் எல்லாம் வழங்குவதை ஜனநாயகம் என்று பேசுபவர்கள் கடந்த காலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது குடும்பத்தினருக்கு மட்டுமே குறிப்பிட்ட துறைகளை போராடி, வாதாடி ஆதாயம் பெற்று திகார் வரை சென்ற வரலாறு மக்களுக்கு தெரியும்.

    மோடி அரசு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் ஜனநாயக கடமை ஆற்றும் என்பதை யாரும் சொல்லி தர தேவையில்லை, அதனால்தான் பெரும்பான்மை மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    அ.தி.மு.க. ஆட்சி விரைவில் கவிழப்போகிறது என்று கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    கடலூர்:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 96-வது பிறந்தநாள் விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றிபெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

    கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தலைவர் கலைஞர் நம்மை விட்டு மறைந்த பிறகு அந்த இடத்தை பூர்த்தி செய்ய ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா? வெற்றிடத்தை நிரப்பிட முடியுமா? என்று தொடர்ந்து சில அரசியல் வாதிகள், சொல்லிக்கொண்டு அலைந்தார்கள். யார்-யாரோ சொன்னார்கள் டாக்டர்கள் சொன்னார்கள், பெரிய டாக்டர் சொன்னார், சின்ன டாக்டரும் சொன்னார், டாக்டர் அம்மாவும் சொன்னார். தி.மு.க. காணாமல் போக போகிறது, 4-வது இடத்துக்கு வரப்போகிறது, தி.மு.க. இந்த தேர்தலோடு அழிய போகிறது என்று சொன்னார்கள். என்ன நடந்து இருக்கிறது. அவர்கள் ஆசையில் மண் விழுந்திருக்கிறது அது தான் நடந்து முடிந்து இருக்கிறது.

    தலைவர் கலைஞர் இல்லாமல் சந்திக்கிற முதல் தேர்தல் என்பதால் என்னையும் அறியாமல் ஒரு பதற்றம் இருந்தது. ஏனெனில் தலைவர் கலைஞரின் பெயரை காப்பாற்ற வேண்டுமே என்பது தான். ஆனால் வாக்காளர்களாகிய உங்கள் மீது நான் நம்பிக்கை வைத்திருந்தேன். அந்த நம்பிக்கை பொய்த்து போகவில்லை. தேர்தலின் போது நாற்பதும் நமதே என்ற முழக்கத்தோடு தான் தேர்தலில் ஈடுபட்டோம் அந்த முழக்கம் வெற்றி பயணமாக அமைந்திருக்கிறது.

    நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறீர்கள், ஆனால் ஆட்சிக்கு வர முடியாத படி 22 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற முடியவில்லையே என்று நம்மை விமர்சனம் செய்கிறார்கள். நம்முடைய தோழர்களிடத்திலும் அந்த சோர்வு உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் கவலைப்படாதீர்கள். இப்போது சட்டமன்றம் கூடியிருக்கிறது. அதில் என்னென்ன நடக்கப்போகிறதோ என்பதை யாமறியேன் பராபரமே. இன்னும் ஒன்றரை ஆண்டுகாலம் தான் இந்த ஆட்சிக்கு ஆயுள் இருக்கிறது, ஆயுள் முடிந்து ஆட்சிமாற்றமா? ஆயுள் முடிவதற்குள் ஆட்சி மாற்றமா? என்று ஒரு கேள்விக்குறி தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கிறது. எதுவும் நடக்கலாம், எப்படியும் நடக்கலாம் ஆனால் ஒன்று மட்டும் உறுதி. விரைவில் இந்த ஆட்சி கவிழப்போகிறது என்பது உண்மை, அதை யாரும் மறுத்திட முடியாது.

    சட்டமன்றத்தின் இடைத்தேர்தலில் நாம் தான் வெற்றி பெற்று இருக்கிறோம். 22 இடங்களில் 13 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம். 9 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்று இருக்கிறது. ஆகவே நம்முடைய வெற்றி என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று வெற்றி.

    அதனால் தான் இந்த வெற்றியை சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த வெற்றியால் என்ன பயன்? என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். நம் தாய்மொழியாக இருக்கக்கூடிய அழகு தமிழ் மொழி, இந்திய நாடாளுமன்றத்தில் ஒலித்ததே. ஒட்டுமொத்த மக்களின் வழக்கறிஞர்களாக நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறி நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததை பார்த்து பிரதமரே மனம் திறந்து பாராட்டி பேசவில்லையா? மும்மொழி திட்டம் அறிவித்தீர்களே, உடனே நாம் கண்டிக்கவில்லையா? அதற்கு பிறகு அது வாபஸ் பெறப்பட்டது. தென்னக ரெயில்வேயில் இனி தமிழில் பேசக்கூடாது, இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் தான் பேச வேண்டும் என்று ஒரு தாக்கீது வந்தது. அது வந்த அடுத்த வினாடி தென்னக ரெயில்வே அலுவலகத்தை முற்றுகையிட உத்தரவிட்டேன், உடனே தயாநிதி மாறன் தலைமையில் முற்றுகையிட்டார்கள், அடுத்த 5-வது நிமிடத்தில் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்கிறீர்களே? போதுமா? இன்னும் வேண்டுமா?

    ஆனால் இங்கே ஒரு முதல்-அமைச்சர் இருக்கிறார், துணை முதல்-அமைச்சரும் இருக்கிறார். ஏறத்தாழ 32 அமைச்சர்கள் இருக்கிறார்கள், என்ன பிரயோஜனம் என்று கேட்கும் நிலையில் ஆட்சி நடக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து டெல்டா மாவட்ட மக்கள் கிளர்ந்து எழுந்து போராடுகிறார்கள்.

    நாடாளுமன்றத்தில் நம் உறுப்பினர்கள் அதனை எதிர்த்து குரல் எழுப்புவார்கள், அந்த குரலுக்கு மதிப்பு இல்லையென்று சொன்னால் ஒட்டுமொத்த டெல்டா மாவட்ட மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்கிற சூழ்நிலை மத்திய, மாநில அரசுகளுக்கு வரும் என்று எச்சரிக்கிறேன்.

    தலைநகர் சென்னையில் இருந்து தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. தங்கும் விடுதியில் இருக்கிறவர்கள் எல்லாம் காலி செய்து கொண்டு இருக்கிறார்கள், ஐ.டி. கம்பெனி ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் எங்களால் தண்ணீர் கொடுக்க முடியவில்லை என்று சொல்லும் நிலை. ஆனால் அந்த துறையின் அமைச்சர் தண்ணீர் தட்டுப்பாடே இல்லை என்று சொல்கிறார்.

    குடங்களோடு பெண்கள் சாலையில் அலைந்து கொண்டு இருக்கிறதை அமைச்சர் பார்க்கவில்லையா? ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதாக சொல்கிறீர்களே என்ன காரணம்? தண்ணீர் தட்டுப்பாடு இல்லையென்றால் ஏன் தண்ணீர் கொண்டு வரணும்.?

    கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தின் போது, சென்னையில் உள்ள ஏரிகள் எல்லாம் வறண்டு கொண்டு இருக்கிறது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று இந்த தண்ணீர் பிரச்சினை பற்றி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 110 விதியின் கீழ் கடல்நீரை குடிநீராக்கி மக்களுக்கு வழங்கக்கூடிய 4 திட்டங்களை அறிவித்தார். ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தினோம். அதனை விரிவாக்கும் திட்டத்தை 2013-ல் அறிவித்தார்கள். அந்த திட்டத்துக்கு நேற்று முன்தினம் தான் அடிக்கல் நாட்டி இருக்கிறார்கள். இதில் உலக அளவில் டெண்டர் என்று சொல்லி முறைகேடு நடந்திருக்கிறது என்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறோம்.

    அதேப்போல் பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ராமநாதபுரத்தில் குதிரை மொழி என்கிற இடத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், 4-வதாக தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றையும் 2013-ல் ஜெயலலிதா அறிவித்தார் அந்த திட்டங்களெல்லாம் என்ன ஆச்சு, சட்டமன்றத்தில் இதைப்பற்றியெல்லாம் கேட்கத்தான் போகிறோம். கலைஞர் ஆட்சியில் குடிநீருக்கு முக்கியத்துவம் அளித்து குடிநீர் வடிகால் வாரியத்தை உருவாக்கிக்கொடுத்தோம். ராமநாதபுரம், தர்மபுரி என பல்வேறு மாவட்டங்களில் கூட்டுக்குடிநீர் திட்டங்களை கொண்டு வந்தோம்.

    ஆனால் இந்த ஆட்சியாளர்கள் 8 ஆண்டுகளாக எதுவுமே செய்யவில்லை. இவர்கள் கவலையெல்லாம் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது எப்படி? என்பதாகவே இருந்தது. இப்போது சட்டமன்றம் கூடியிருக்கிறது. அதனால் எந்த எம்.எல்.ஏ. நம்மிடம் இருப்பார், எந்த எம்.எல்.ஏ. நம்மை விட்டு தாவுவார் என்பதை கண்காணிப்பதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு ஒற்றர்களை காவலுக்கு வைத்திருக்கிறார்கள். அந்த ஒற்றர்களுக்கே நாங்கள் ஒற்றர்களை வைத்திருக்கிறோம். இன்னும் எடப்பாடியை ஆளவிட்டால் நாடு தாங்காது, நாட்டு மக்களும் பொறுக்கமாட்டார்கள். உங்களை நாட்டு மக்கள் முன் நிறுத்தி உரிய தண்டனை வாங்கித்தருவோம். இதற்கு முன்னோட்டமாகத்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவு வந்து உள்ளது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
    மாநிலங்களவை தேர்தலில் ராம்விலாஸ் பஸ்வானை பா.ஜனதா களமிறக்கியது. அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    பாட்னா:

    பீகாரில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகி இருந்த மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். எனவே அந்த இடத்துக்கு நடந்த இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வானை பா.ஜனதா களமிறக்கியது. அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதற்கிடையே ஒடிசாவில் இருந்து பிஜூ ஜனதாதளத்தை சேர்ந்த இருவர் போட்டியின்றி தேர்வாகினர். 3-வது வேட்பாளராக பா.ஜனதாவை சேர்ந்த அஸ்வினி வைஷ்ணவ் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு பிஜூ ஜனதாதளம் ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.
    அ.ம.மு.க.வில் இருந்து விலகி தங்கதமிழ் செல்வன் தி.மு.க.வில் சேர்ந்து இருப்பது பற்றி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அ.ம.மு.க.வில் இருந்து விலகி தங்கதமிழ் செல்வன் தி.மு.க.வில் சேர்ந்து இருப்பது பற்றி அ.ம.மு.க. நிர்வாகி புகழேந்தி கூறியதாவது:-

    வியாழக்கிழமை (27.6.19) வரை தி.மு.க.வில் இணைவது என்று கூறப்படுவது வதந்தி என்றார். நேற்று இணைந்து இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பே அம்மாவால் எம்.பி. ஆக்கப்பட்டு, எம்.எல்.ஏ. ஆக்கப்பட்டு அழகு பார்க்கப்பட்டவர். இந்த இயக்கம் லட்சக்கணக்கான தொண்டர்கள் கொடிபிடித்து, வியர்வை சிந்தி வளர்த்த இயக்கம். இதுநாள் வரை இயக்கத்தில் இருந்து எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு, தன்னை வளர்த்த இயக்கத்துக்கு துரோகம் செய்துவிட்டு சென்றிருக்கிறார். இதற்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும்.

    தோல்வி என்பது நிரந்தரம் அல்ல. எம்.ஜி.ஆர் இருக்கும் வரை 13 ஆண்டுகள் தோல்வி அலையில் நீந்தி வந்ததுதான் தி.மு.க.வும். வெற்றிபெறும்போது இயக்கத்தில் இருப்பதும் தோல்வி அடையும் போது இயக்கத்தை விட்டு வெளியேறியதன் மூலம் அவர் எவ்வளவு விசுவாசமாக இருந்து இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். தனி ஒருவராக சென்று இருக்கிறார். அவர் எங்கிருந்தாலும் வாழ்க. இனியாவது இரவு வேளையில் அவர் சார்ந்து இருக்கும் இயக்கத்தை பற்றி தவறாக பேசாமல் இருந்தால் நல்லது. அங்கேயாவது உண்மையாக, நேர்மையாக, நாணயமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாஞ்சில் சம்பத் கூறியதாவது:-

    தங்கதமிழ்செல்வனுக்கு எனது வாழ்த்துக்கள். தமிழை திராவிடத்தை நேசிப்பவர்கள் தி.மு.க.வை தழுவ வேண்டியது காலத்தின் கட்டாயம். திராவிடத்தையும், அண்ணாவையும் இழந்து வெறுமனே நிற்கிறது அ.ம.மு.க. இந்த நேரத்தில் தங்கதமிழ்செல்வன் சமயோசிதமாக முடிவெடுத்துள்ளார்.

    அவர் தி.மு.க.வில் இணைந்து எந்த நெருடலும் இல்லை. கள அரசியலில் இருப்பவர்கள் ஓய்வெடுக்க முடியாது. அ.ம.மு.க. கொள்கை இல்லாத கட்சி அ.தி.மு.க. முடியப்போகிறது. அது பா.ஜனதாவின் கிளை கட்சிதான்.

    தங்கதமிழ்செல்வன் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. வாக இருந்தவர். தேனி அரசியலில் முக்கியமான இடத்தில் இருப்பார். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.ம.மு.க. செய்தி தொடர்பாளர் நாராயணன் கூறியதாவது:-

    வெற்றியில் பங்கு போட்டவர் தோல்வியில் வெளியேறியதன் மூலம் அவரது தரத்தை காட்டி இருக்கிறார். ஒரு இயக்கம் தோல்வி அடையும் போது அதற்கான காரணத்தை கண்டறிந்து வளர்க்க முயற்சிக்காமல் ஓடுவது அவரது கோழைத்தனமும், பச்சோந்திதனமும் தான்.

    தொகுதியை தாண்டி தெரியாதவரை தமிழகம் முழுவதும் தெரிய வைத்தது அ.ம.மு.க. இப்போது அவர் இழந்து நிற்பது மானம் மட்டுமல்ல அவரது வருங் காலத்தையும் தான். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    டி.டி.வி.தினகரன் பண் பாடற்றவர். நான் எந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.

    மதுரை:

    அ.ம.மு.க. கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் அக்கட்சியில் டி.டி.வி.தினகரனுக்கு அடுத்த இடத்தில் செயல்பட்டவர். கடந்த சில நாட்களாக இவரது நடவடிக்கை டி.டி.வி.தினகரனுக்கு பிடிக்கவில்லை.

    இதற்கிடையில் தங்க தமிழ்செல்வன் பேசியதாக வெளியான ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த தினகரன் விரைவில் தங்கதமிழ்செல்வனை கட்சியை விட்டு நீக்குவேன் என தெரிவித்தார்.

    இந்த நிலையில் மதுரை விமான நிலையம் வந்த தங்கதமிழ்செல்வன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை அழித்து அ.ம.மு.க. வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது. என்னை பற்றி ஆடியோ, வீடியோ அனுப்புவது டி.டி.வி. தினகரனின் தலைமை பண்புக்கு அழகல்ல. அவர் தலைமை என்ற பண்பாடு இல்லாமல் நடந்து கொள்கிறார்.


    நான் எந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை. யாரும் என்னை அணுகவும் இல்லை. கொள்கை இல்லாத அ.ம.மு.க.வுக்கு கொள்கை பரப்பு செயலாளராக இருந்து என்ன பயன்?. அ.ம.மு.க.வில் இருந்து பாதிக்கும் மேற்பட்டோர் வெளிவந்து விட்டனர். தொடர்ந்து முழுமையாக வெளிவருவார்கள். இந்த கூடாரம் கலையுமா? என்பது தொண்டர்களின் கையில்தான் உள்ளது.

    அனைத்திலும் தோல்வி பெற்றபின் அவற்றை மறுப்பது ஏன்?. ஊடகங்களையே தவறாக கூறும் தலைவர்தான் இப்போது இருக்கும் டி.டி.வி.தினகரன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எவ்வளவு நாளைக்குத்தான் காங்கிரசுக்கு பல்லக்கு தூக்குவது? என்று பேசியது குறித்து திமுக முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு விளக்கம் அளித்துள்ளார்.

    திருச்சி:

    குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து திருச்சியில் நேற்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்தே போட்டியிட வேண்டும். எவ்வளவு நாளைக்குத்தான் காங்கிரசுக்கு பல்லக்கு தூக்குவது? என்று தெரிவித்தார். அவரது பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கே.என்.நேருவின் பேச்சுக்கு பதில் அளித்த, தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், கூட்டணி சூழ் நிலைக்கு ஏற்ப அமைகிறது. நாங்கள் யாரையும் பல்லக்கு தூக்க சொல்லவில்லை என்றார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. கூறுகையில், கே.என். நேருவின் கருத்து தி.மு.க.வின் கருத்தாகி விடாது. அவர் எனக்கு நல்ல நண்பர். ஏன் அப்படி பேசினார் என தெரியவில்லை என்றார். இதனால் கே.என்.நேருவின் பேச்சு தி.மு.க-காங்கிரஸ் இடையே திடீர் மோதலை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருத்துக்கு கே.என்.நேரு விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரசுக்கு அதிக இடம் பெறவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தென் சென்னை மாவட்டத்தில் அதிக இடங்கள் பெற வேண்டும் என அந்த மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் நாளிதழ்களில் வந்துள்ளன.


    காங்கிரஸ் கட்சியினருக்கே அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பம் உள்ள நிலையில், தி.மு.க. வினருக்கும் அந்த எண்ணம் உள்ளது என்பதை வெளிப்படுத்துவதற்காகவே அப்படி பேசினேன். நான் கூறிய கருத்து தி.மு.க.வின் கருத்து அல்ல. எனது தனிப்பட்ட கருத்து என்று குறிப்பிட்டே பேசினேன். சாதாரண தொண்டன் என்ற அடிப்படையில் இதனை தெரிவித்தேன்.

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே, அனைத்து கட்சிகளுடனும் அனுசரித்து போக வேண்டும் என்ற கருத்தை கட்சி தலைமையிடம் தெரிவித்தவன் நான்.

    கடந்த காலங்களில் கூட்டணியில் இருந்த போதே காங்கிரசார் தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்தும், தி.மு.க. குறித்தும் பல்வேறு விமர்சனங்களை செய்துள்ளனர். இருப்பினும் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு தான் நாங்கள் இப்போது வரை கூட்டணியில் உள்ளோம். கூட்டணி என்பது தலைமை எடுக்கும் முடிவு.

    காங்கிரசார் பேசி வரும் கருத்துகளால் எந்தவித பிளவும் வந்து விடக்கூடாது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை தலைமைக்கு தெரியப்படுத்துவோம்.

    திருச்சி மாநகராட்சியில் கடந்த முறை 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு மேயர் பதவியை கொடுத்து விட்டு, நாங்கள் கைகட்டி கொண்டு நின்றோம். இம்முறை திருச்சிக்கு மேயர் பதவியை கொடுப்பது குறித்து தி.மு.க. தலைவர் முடிவெடுப்பார். தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்று நான் பேச வில்லை. தலைவரின் முடிவுக்கு கட்டுப்படும் மாவட்ட செயலாளராக என்றுமே நான் இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வருகிற தேர்தல்களில் அ.ம.மு.க. மாபெரும் வெற்றி பெறும். இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.க.வையும் மீட்டெடுப்போம் என்று தினகரன் பேசியுள்ளார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

    தேர்தலில் தோல்வி அடைந்த போது எனக்கு வருத்தம் இருந்தது. ஆனால் அதற்கான காரணம் தெரிந்த பின் வருத்தப்படவில்லை. மின்னணு வாக்குப்பதிவு எந்திர முறையை மாற்ற வேண்டும். ஓட்டுச் சீட்டு முறை வேண்டும். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் என்பது ஒரே கட்சி ஆட்சி அமைப்பதற்காக தான். மாநில கட்சிகளை இல்லாமல் செய்வதற்காக ஒரே தேர்தல், ஒரே தேசம் என்று கூறுகின்றனர்.


    மோடி இருக்கிற வரை நாம் ஆட்சிக்கு வர முடியாது என ஒரு சிலர் கூறி வேறு கட்சிக்கு தாவுகின்றனர். ஒரு சிலர் குழம்பி போய் இருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களையும் குழப்பி கொண்டிருக்கிறார்கள். அது போன்றவர்களிடம் ஒரு முடிவு எடுத்து இந்த கட்சி தேறும் என நினைத்தால் இருங்கள். இல்லையென்றால் வேலையை பார்த்து விட்டு செல்லுங்கள் என தெரிவித்து விட்டேன்.

    நான் வசிக்கிற பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நமக்கு 14 ஓட்டுகள் தான் விழுந்துள்ளது. எனக்கு தெரிந்த நபர்களே 100 பேர் வரை வாக்களித்திருப்பார்கள். நம்முடைய வாக்குகள் எங்கே போனது என்று தான் கேள்வி.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் பா.ஜ.க.வுக்கு தானே சென்றிருக்க வேண்டும் என நீங்கள் கேட்பீர்கள். அதை கேட்காமல் இருப்பதற்காகத்தான் தி.மு.க.வுக்கு மாற்றிவிட்டனர். தி.மு.க. வாக்கு வித்தியாசத்தை பார்த்தாலே தெரியும். நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவோம். அதேபோல் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலும் வரும். அதிலும் போட்டியிடுவோம்.

    தண்ணீர் பிரச்சினையால் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டார்கள். 1,100 வாக்குச்சாவடிகளில் நமக்கு பூஜ்யம் விழுந்தது எப்படி? என்பதை முறையிட உள்ளோம். அதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். சிலர் கட்சியை விட்டு சென்றார்கள் என்ற செய்தி வரும். அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். வரும் தேர்தல்களில் அ.ம.மு.க. மாபெரும் வெற்றி பெறும். இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.க.வையும் மீட்டெடுப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு தேமுதிக நாளை ஆலோசனை நடத்துகிறது. இந்த கூட்டத்தில் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க.வுக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது. வட சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் நான்கிலும் தோற்றது.

    இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு பிறகு தே.மு.தி.க, நாளை ஆலோசனை நடத்துகிறது.

    அந்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காலை 9 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.

    கூட்டத்துக்கு வரும் மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் பட்டியலை தவறாமல் கொண்டு வர வேண்டும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது.

    இந்த கூட்டத்தில் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்படுகிறது.

    உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டி என்ற நிலைப்பாடு எடுத்தால், அதைப் பொறுத்து நாங்கள் முடிவு செய்வோம் என்று கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.

    சென்னை:

    உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும், காங்கிரசுக்கு எத்தனை காலம்தான் பல்லக்கு தூக்குவது என தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு பேசிய இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கே.என்.நேருவின் பேச்சு குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நான் தற்போது சாலை பயணத்தில் இருக்கிறேன். கே.என்.நேரு என்ன பேசினார் என்ற முழு விவரம் எனக்கு தெரியாது. விவரம் தெரியாமல் அதைப் பற்றி பேசக் கூடாது.


    ஒருவேளை தி.மு.க. தனித்து போட்டி என்ற நிலைப்பாடு எடுத்தால், அதைப் பொறுத்து நாங்கள் முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நான் அதிமுகவில் இணையப்போவதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டவர் தங்க தமிழ்ச்செல்வன். இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.களில் ஒருவர் ஆவார். நேற்று தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பேசிய அவர், தினகரனின் அமமுக கட்சியை மக்கள் ஏற்கவில்லை என்று கூறினார். இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காகவே கட்சி ஆரம்பித்தோம். ஆனால் மக்கள் நாங்கள் தனி சின்னம் பெற்று போட்டியிட்டதை ஏற்கவில்லை என்றும் கூறினார்.

    தேனி தொகுதியை பொறுத்தவரை தேர்தல் மின்னணு இயந்திரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை சரியாக தான் இருந்தது என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி அரசை வழக்கமாக எதிர்க்கும் தங்க தமிழ்ச்செல்வன் அந்த பேட்டியில்  அதிமுக அரசு பிளாஸ்டிக்கை ஒழித்தது வரவேற்கத்தகக்து என்று கூறினார். தங்க தமிழ்ச்செல்வனின் இந்த பேட்டியின் மூலம் விரைவில் அதிமுகவில் இணைவார் என்று பரவாலக செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், அமமுக நிர்வாகி தங்க தமிழ்ச்செல்வன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

    நான் அதிமுகவில் இணையப்போவதாக வந்த செய்தியில் உண்மையில்லை. சிலர் வேண்டுமென்றே, இதுபோன்ற உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று விளக்கம் அளித்துள்ளார்.
    ×