search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    அதிமுக ஆட்சி விரைவில் கவிழப்போகிறது- மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

    அ.தி.மு.க. ஆட்சி விரைவில் கவிழப்போகிறது என்று கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    கடலூர்:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 96-வது பிறந்தநாள் விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றிபெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

    கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தலைவர் கலைஞர் நம்மை விட்டு மறைந்த பிறகு அந்த இடத்தை பூர்த்தி செய்ய ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா? வெற்றிடத்தை நிரப்பிட முடியுமா? என்று தொடர்ந்து சில அரசியல் வாதிகள், சொல்லிக்கொண்டு அலைந்தார்கள். யார்-யாரோ சொன்னார்கள் டாக்டர்கள் சொன்னார்கள், பெரிய டாக்டர் சொன்னார், சின்ன டாக்டரும் சொன்னார், டாக்டர் அம்மாவும் சொன்னார். தி.மு.க. காணாமல் போக போகிறது, 4-வது இடத்துக்கு வரப்போகிறது, தி.மு.க. இந்த தேர்தலோடு அழிய போகிறது என்று சொன்னார்கள். என்ன நடந்து இருக்கிறது. அவர்கள் ஆசையில் மண் விழுந்திருக்கிறது அது தான் நடந்து முடிந்து இருக்கிறது.

    தலைவர் கலைஞர் இல்லாமல் சந்திக்கிற முதல் தேர்தல் என்பதால் என்னையும் அறியாமல் ஒரு பதற்றம் இருந்தது. ஏனெனில் தலைவர் கலைஞரின் பெயரை காப்பாற்ற வேண்டுமே என்பது தான். ஆனால் வாக்காளர்களாகிய உங்கள் மீது நான் நம்பிக்கை வைத்திருந்தேன். அந்த நம்பிக்கை பொய்த்து போகவில்லை. தேர்தலின் போது நாற்பதும் நமதே என்ற முழக்கத்தோடு தான் தேர்தலில் ஈடுபட்டோம் அந்த முழக்கம் வெற்றி பயணமாக அமைந்திருக்கிறது.

    நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறீர்கள், ஆனால் ஆட்சிக்கு வர முடியாத படி 22 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற முடியவில்லையே என்று நம்மை விமர்சனம் செய்கிறார்கள். நம்முடைய தோழர்களிடத்திலும் அந்த சோர்வு உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் கவலைப்படாதீர்கள். இப்போது சட்டமன்றம் கூடியிருக்கிறது. அதில் என்னென்ன நடக்கப்போகிறதோ என்பதை யாமறியேன் பராபரமே. இன்னும் ஒன்றரை ஆண்டுகாலம் தான் இந்த ஆட்சிக்கு ஆயுள் இருக்கிறது, ஆயுள் முடிந்து ஆட்சிமாற்றமா? ஆயுள் முடிவதற்குள் ஆட்சி மாற்றமா? என்று ஒரு கேள்விக்குறி தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கிறது. எதுவும் நடக்கலாம், எப்படியும் நடக்கலாம் ஆனால் ஒன்று மட்டும் உறுதி. விரைவில் இந்த ஆட்சி கவிழப்போகிறது என்பது உண்மை, அதை யாரும் மறுத்திட முடியாது.

    சட்டமன்றத்தின் இடைத்தேர்தலில் நாம் தான் வெற்றி பெற்று இருக்கிறோம். 22 இடங்களில் 13 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம். 9 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்று இருக்கிறது. ஆகவே நம்முடைய வெற்றி என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று வெற்றி.

    அதனால் தான் இந்த வெற்றியை சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த வெற்றியால் என்ன பயன்? என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். நம் தாய்மொழியாக இருக்கக்கூடிய அழகு தமிழ் மொழி, இந்திய நாடாளுமன்றத்தில் ஒலித்ததே. ஒட்டுமொத்த மக்களின் வழக்கறிஞர்களாக நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறி நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததை பார்த்து பிரதமரே மனம் திறந்து பாராட்டி பேசவில்லையா? மும்மொழி திட்டம் அறிவித்தீர்களே, உடனே நாம் கண்டிக்கவில்லையா? அதற்கு பிறகு அது வாபஸ் பெறப்பட்டது. தென்னக ரெயில்வேயில் இனி தமிழில் பேசக்கூடாது, இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் தான் பேச வேண்டும் என்று ஒரு தாக்கீது வந்தது. அது வந்த அடுத்த வினாடி தென்னக ரெயில்வே அலுவலகத்தை முற்றுகையிட உத்தரவிட்டேன், உடனே தயாநிதி மாறன் தலைமையில் முற்றுகையிட்டார்கள், அடுத்த 5-வது நிமிடத்தில் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்கிறீர்களே? போதுமா? இன்னும் வேண்டுமா?

    ஆனால் இங்கே ஒரு முதல்-அமைச்சர் இருக்கிறார், துணை முதல்-அமைச்சரும் இருக்கிறார். ஏறத்தாழ 32 அமைச்சர்கள் இருக்கிறார்கள், என்ன பிரயோஜனம் என்று கேட்கும் நிலையில் ஆட்சி நடக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து டெல்டா மாவட்ட மக்கள் கிளர்ந்து எழுந்து போராடுகிறார்கள்.

    நாடாளுமன்றத்தில் நம் உறுப்பினர்கள் அதனை எதிர்த்து குரல் எழுப்புவார்கள், அந்த குரலுக்கு மதிப்பு இல்லையென்று சொன்னால் ஒட்டுமொத்த டெல்டா மாவட்ட மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்கிற சூழ்நிலை மத்திய, மாநில அரசுகளுக்கு வரும் என்று எச்சரிக்கிறேன்.

    தலைநகர் சென்னையில் இருந்து தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. தங்கும் விடுதியில் இருக்கிறவர்கள் எல்லாம் காலி செய்து கொண்டு இருக்கிறார்கள், ஐ.டி. கம்பெனி ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் எங்களால் தண்ணீர் கொடுக்க முடியவில்லை என்று சொல்லும் நிலை. ஆனால் அந்த துறையின் அமைச்சர் தண்ணீர் தட்டுப்பாடே இல்லை என்று சொல்கிறார்.

    குடங்களோடு பெண்கள் சாலையில் அலைந்து கொண்டு இருக்கிறதை அமைச்சர் பார்க்கவில்லையா? ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதாக சொல்கிறீர்களே என்ன காரணம்? தண்ணீர் தட்டுப்பாடு இல்லையென்றால் ஏன் தண்ணீர் கொண்டு வரணும்.?

    கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தின் போது, சென்னையில் உள்ள ஏரிகள் எல்லாம் வறண்டு கொண்டு இருக்கிறது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று இந்த தண்ணீர் பிரச்சினை பற்றி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 110 விதியின் கீழ் கடல்நீரை குடிநீராக்கி மக்களுக்கு வழங்கக்கூடிய 4 திட்டங்களை அறிவித்தார். ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தினோம். அதனை விரிவாக்கும் திட்டத்தை 2013-ல் அறிவித்தார்கள். அந்த திட்டத்துக்கு நேற்று முன்தினம் தான் அடிக்கல் நாட்டி இருக்கிறார்கள். இதில் உலக அளவில் டெண்டர் என்று சொல்லி முறைகேடு நடந்திருக்கிறது என்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறோம்.

    அதேப்போல் பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ராமநாதபுரத்தில் குதிரை மொழி என்கிற இடத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், 4-வதாக தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றையும் 2013-ல் ஜெயலலிதா அறிவித்தார் அந்த திட்டங்களெல்லாம் என்ன ஆச்சு, சட்டமன்றத்தில் இதைப்பற்றியெல்லாம் கேட்கத்தான் போகிறோம். கலைஞர் ஆட்சியில் குடிநீருக்கு முக்கியத்துவம் அளித்து குடிநீர் வடிகால் வாரியத்தை உருவாக்கிக்கொடுத்தோம். ராமநாதபுரம், தர்மபுரி என பல்வேறு மாவட்டங்களில் கூட்டுக்குடிநீர் திட்டங்களை கொண்டு வந்தோம்.

    ஆனால் இந்த ஆட்சியாளர்கள் 8 ஆண்டுகளாக எதுவுமே செய்யவில்லை. இவர்கள் கவலையெல்லாம் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது எப்படி? என்பதாகவே இருந்தது. இப்போது சட்டமன்றம் கூடியிருக்கிறது. அதனால் எந்த எம்.எல்.ஏ. நம்மிடம் இருப்பார், எந்த எம்.எல்.ஏ. நம்மை விட்டு தாவுவார் என்பதை கண்காணிப்பதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு ஒற்றர்களை காவலுக்கு வைத்திருக்கிறார்கள். அந்த ஒற்றர்களுக்கே நாங்கள் ஒற்றர்களை வைத்திருக்கிறோம். இன்னும் எடப்பாடியை ஆளவிட்டால் நாடு தாங்காது, நாட்டு மக்களும் பொறுக்கமாட்டார்கள். உங்களை நாட்டு மக்கள் முன் நிறுத்தி உரிய தண்டனை வாங்கித்தருவோம். இதற்கு முன்னோட்டமாகத்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவு வந்து உள்ளது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
    Next Story
    ×